January 28, 2012

இயேசு கிறிஸ்து- திருவள்ளுவர்-தீயினாற்-பதிவு-3




       இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பதிவு-3
      
                              “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
 இயேசு கிறிஸ்து:
 வசனங்கள்-1
இயேசு ஜனங்களை வரவழைத்து , அவர்களை நோக்கி , மனுஷனைத் தீட்டுப்படுத்தக் கூடியவை எவை என்பதையும் , தீட்டுப் படுத்தாதவை எவை என்பதையும் கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப் படுத்தாது ,  வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப் படுத்தும் என்றார் .“
                                                                      மத்தேயு - 15 : 11

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை மனிதனை களங்கப்படுத்தாது, அவனை அசுத்தப் படுத்தாது ,
வாய்க்குள்ளே செல்பவைகள் மனிதனுடைய பசியைத் தீர்ப்பதற்காகத் தான் உள்ளே செல்கிறதே தவிர ,
அவைகளால் மனிதனுக்கு எந்த விதமான கெட்ட பெயர்களையும் , அவமானத்தையும் ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தாது ,  
சூழ்நிலையை உருவாக்காது .

ஆனால் மனிதனுடைய வாயிலிருந்து வெளிவருபவை அதாவது மனிதனுடைய வார்த்தைகள் ,
அவன் பேசும் பேச்சுக்கள் ,அவன் வெளிவிடும் சொற்கள்,
அவைகள் தவறானவைகளாக இருந்தால் ,
தீய சொற்களைக் கொண்டவைகளாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை வருத்தப்பட வைக்கக் கூடியதாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை புண்படுத்துவதாக இருந்தால்,
தன்னுடைய சொற்களால் , தன்னுடைய வார்த்தைகளால் , தன்னுடைய பேச்சுக்களால் , தனக்கே அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாக இருந்தால் ,
அவைகள் தான் மனிதனுக்கு கெட்ட பெயரையும்,
தீர்க்க முடியாத களங்கத்தையும் உண்டாக்கி விடும் என்கிறார்  இயேசு .



 வசனங்கள்-2 
மனிதனை களங்கப் படுத்துபவை எவை என்றும் , மனிதனை களங்கப் படுத்தாதவை எவை என்றும் கூறிய இயேசு கிறிஸ்து,
வாய்க்குள்ளே செல்பவை எந்த காரணங்களுக்காக மனிதனை களங்கப்படுத்தாது என்பதைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார்:


வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசன வழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? ”
                                                                      மத்தேயு - 15 : 17

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை அதாவது மனிதன் சாப்பிடும்  எல்லா உணவுப் பொருட்களும் அவனுடைய வயிற்றுக்குள் சென்று ஜீரணம் ஆகி விடும்.

அவ்வாறு ஜீரணம் ஆகிய உணவானது ஏழு தாதுக்களாக மாற்றம் அடைகிறது,
அவைகளாவன : இரசம் , இரத்தம்,  சதை , கொழுப்பு,  எலும்பு,  மஜ்ஜை ,
ஆண்-சுக்கிலம்; பெண்-சுரோணிதம் ஆகியவை ஆகும்

ஜீரணமானவை தவிர ஜீரணமாகாதவை அதாவது தேவையற்றவை கழிவு பொருட்களாக ஆசனவாய் வழியாக வெளியே சென்று விடும் என்ற உண்மையை ,

நீங்கள் அறிந்தும் , அறியாதது போல் இருக்கிறீர்களா ,
உணர்ந்தும் , உணராதது போல் இருக்கிறீர்களா ,
தெரிந்தும் , தெரியாதது போல் இருக்கிறீர்களா ,
என்று ஜனங்களை நோக்கி இயேசு கேட்கிறார்



 வசனங்கள்-3 :
வாயிலிருந்து வெளிப்படுபவை எவ்வாறு மனிதனை களங்கப்படுத்தும் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் இயேசு விளக்குகிறார்:

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இதயத்திலிருந்து புறப்பட்டு வரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும்.”
                                                                                                மத்தேயு - 15 : 18
 மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் அவனுடைய வாயிலிருந்து நேரடியாக வெளிவருவது இல்லை.
அந்த சொற்களுக்குரிய அதாவது,
                    அதனுடைய மூலம்,
                    அதனுடைய ஆதாரம்,
                    அதனுடைய வேர்,
                    அதனுடைய அடிப்படை,
                    எங்கே இருக்கிறது என்றால்
                     இருதயத்தில் இருக்கிறது.

இருதயத்தைப் பாதித்த நிகழ்வுகள்,
வருத்தப் பட வைத்த துன்பங்கள்,
கனன்று கொண்டிருக்கும் எரிமலைகள் ,
நீக்க முடியாத கவலைகள்,
அடக்கி வைக்கப்பட்டு இருதயத்தில் கொதித்து கொண்டிருக்கும் விஷயங்கள்,
ஆகியவை
இருதயத்திலிருந்து நேராக புறப்பட்டு வெளியே வாய் வழியாக வந்து,
எதிரே இருப்பவரை பாதிக்கும் விதத்திலும்,
எதிரே இருப்பவரை மனம் வருத்தப்பட வைக்கும் விதத்திலும்,
போன்ற செயல்களைச் செய்வது மட்டுமில்லாமல்,
தனக்கும் அவமானத்தை உண்டாக்கும் வகையிலும் இருக்கும்.

இவ்வாறு வாயிலிருந்து ஆவேசமாக வெளிப்படும் வார்த்தைகள் ,மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் அறிவில்லாமல் சொற்களாக வெளிப்படும் .
அவைகளே மனிதனை களங்கப்படுத்தும் என்கிறார்  இயேசு.



 வசனங்கள்-4 
இருதயத்திலிருந்து வாய்வழியாக வெளிப்படும் வார்த்தைகள் எத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்கும் என்று சொன்ன இயேசு ,
அவைகள் எத்தகைய விதத்தில் களங்கப்பட்டு இருக்கும் ,அசுத்தமடைந்து இருந்தும் ,தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும், என்பதை பின்வரும் வசனங்களில் கூறுகிறார்:

எப்படியெனில் ,இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும் , விபசாரங்களும் , வேசித் தனங்களும் , களவுகளும், பொய்ச் சாட்சிகளும், துhஷணங்களும் புறப்பட்டு வரும்.”
                                                                                மத்தேயு - 15 : 19
இருதயத்தில் வைக்கப்பட்டிருப்பவை ,
புதைத்து வைக்கப் பட்டிருப்பவை,
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருப்பவை ,
எவைகள் என்று கணக்குப் பார்ப்போமாகில்,

இழிவுகளைத் தன்னகத்தே கொண்ட பொல்லாத சிந்தனைகள்,
இரக்கத் தன்மைகள் அற்ற எதற்கும் அஞ்சாத கொலை பாதகங்கள் ,
களங்கங்களைப் பற்றிக் கவலைப் படாத வேசித் தனங்கள்,
நல்லவை , கெட்டவை ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்காத களவுகள் ,
பாதிப்பு யாருக்கு என்று நினைத்துப் பார்க்காத பொய்ச் சாட்சிகள்,
அருவெறுக்கத் தக்க நினைவுகளைச் சுமந்த துhஷணங்கள்,
ஆகியவை இதயத்தில் இருக்கும் .இவை வெளியே சொற்களாக வெளி வரும் பொழுது,

மற்றவருடைய மனதை பாதிக்கும் வகையில் வெளி வரும்.
மற்றவருடைய மனதை துன்பப் படுத்தும் வகையில் வெளிவரும்.
இவைகள் தான்  , இந்த சொற்கள் தான்,
வாயிலிருந்து வெளிப்படும் கொடூரத் தன்மைகள் கொண்ட இவைகள் தான்,
சொல்பவரையும் , கேட்பவரையும் மனது வருத்தப்பட வைக்கும் என்கிறார் இயேசு  .



திருவள்ளுவர்:

     “”””தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
            நாவினாற் சுட்ட வடு “””
                                                                ----திருவள்ளுவர்----திருக்குறள்----
உடம்பின் மேல் புறத்தில் நெருப்பினால் ஏற்படக் கூடிய காயங்களையும், வடுக்களையும் , மருத்துவ உதவிகள் பெற்று , மருந்துகள் போடுவதன் மூலம்  உடம்பின் மேல் ஏற்படும் காயங்களைச் சரிப் படுத்திக் கொள்ளலாம்.
அதாவது உடம்பின் புறத்தே ஏற்படக் கூடிய காயங்களை சரி செய்து கொள்ளலாம்.

அதைப் போல் அந்தக் காயத்தினால் ஏற்பட்ட வலிகளும் ,மனத்திற்கு ஏற்பட்ட கவலைகளும் , துன்பங்களும் வெளியில் உண்டாகிய காயங்கள் மறையும் பொழுது ஆறும் பொழுது உள்ளுக்குள் வலியும் ஆறிவிடும். துன்பங்களும் கரைந்து விடும்.

ஆனால் ஆறாத ஒன்று உண்டு ,ஆற்ற முடியாத ஒன்று உண்டு. அது என்னவெனில் , அது வாயிலிருந்து வெளிப்படும் சொற்களே ஆகும்.
அத்தகைய வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் ,தேவையற்ற சொற்கள், துன்பத்தை விளைவிக்கக் கூடிய சொற்கள் ,மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கக் கூடிய சொற்கள் வெளிப்படும் பொழுது,
மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கும் பொழுது ,துன்பப் பட வைக்கும் பொழுது, அவைகள் ஆற்ற முடியாத துன்பத்தை மற்றவர்  மனதில் உண்டாக்கி விடும்.

நம் வாயிலிருந்து வெளிப்பட்டவை யாரை வருத்தப் பட வைக்க பேசப்பட்டதோ  அவரை வருத்தப் பட வைக்கும்.
பிறகு நமது மனது குழப்பம் நீங்கி , தெளிவு பெற்று , அமைதி பெறும் பொழுது, யோசித்துப் பார்த்தால் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்வோம் .
அந்த நிலையில் ,அந்த கால கட்டத்தில்  நம்முடைய மனதிலும் ஆற்ற முடியாத கவலைகளும், துன்பங்களும் உண்டாக்கி விடும் .
வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் , தன்னையும் பிறரையும் மனது வருத்தப்பட வைப்பதோடு மட்டுமில்லாமல் ஆற்ற முடியாத துன்பத்தையும் கொடுத்து விடும் என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்:
வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப்படுத்தும் என்றார்  இயேசு.

அவ்வாறே
திருவள்ளுவரும் வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப் படுத்தும் என்கிறார்.


இயேசு போதனைகளில் சிறப்பான போதனை ஒன்றை அடுத்துப் பார்ப்போம்.


                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”

January 26, 2012

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-காடே திரிந்தென்ன-பதிவு-2




            இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-பதிவு-2
      
                     “”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                                                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இந்த அவனியில் வாழும் மக்கள் அனைவரும்
அறிவில் விளக்கம் அடைந்து ஆன்ம ஒளி பெற்று வாழ ,
இல்லறத்தில் இல்லாமையை நீக்கி இனிமையுடன் வாழ ,
துன்பங்கள் , கவலைகள் ஆகியவற்றை விலக்கி மகிழ்ச்சியுடன் வாழ ,
பாவங்களை கழித்து உயர்ந்த பண்புகளைப் பெற்று சுகமுடன் வாழ ,
எந்தவிதமான குறைகளும் இன்றி நலம் பல பெற்று வளமுடன் வாழ ,
பல்வேறு கருத்துகளை உவமைகளாகக் கூறிய இயேசு ,

ஜெபம் பண்ணும் பொழுது ,
எவ்வாறு செய்ய வேண்டும் ,
எந்த விதத்தில் செய்ய வேண்டும் ,
எந்த முறையில் செய்ய வேண்டும் ,
எந்த வழிமுறைகளைப் பின் பற்றி செய்ய வேண்டும் ,
என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார்:

நீயோ ஜெபம் பண்ணும் போது , உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி , அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு ; அப்பொழுது , அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். “
                                                                                     மத்தேயு – 6: 6

வாழ்வில் ஆற்றொணாத் துயரை அளித்துக் கொண்டு இருக்கும் மனக்குறைகள் ,
வாழ்க்கைக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் அத்தியாவசிய தேவைகள்,
நிறைவேற்றத் துடிக்கும் விலக்க முடியாத , கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் ,
பெற வேண்டிய இன்பங்கள் , துறக்க துடிக்கும் துன்பங்கள்,
ஆகியவற்றை பெற வேண்டும் என்றால்
ஆண்டவனிடம் ஜெபம் பண்ண வேண்டும்.
கோரிக்கை வைக்க வேண்டும் .
தன் கோரிக்கையை நிறைவேற்ற சொல்ல வேண்டும்.
அவ்வாறு ஜெபம் பண்ணும் பொழுது எவ்வாறு பண்ண வேண்டும் என்று இயேசு கீழ்க்கண்டவாறு சொல்கிறார் :

ஜெபம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் , ஜெபம் செய்பவர் ஜெபம் செய்வதற்காக , தன்னுடைய வீட்டுக்குள் சென்று தன்னுடைய வீட்டுக்குள் இருந்த படியே ஜெபம் பண்ண வேண்டும் .
தன்னுடைய வீட்டினுள் ஜெபம் பண்ணுவதற்கு என்று தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட அறைக்குள்ளோ அல்லது தனிமையுடன் அமைதியாக இருக்கும் அறைக்குள்ளோ அல்லது ஜெபம் செய்வதற்கு என்று ஒதுக்கி வைக்கப் பட்ட அறைக்குள்ளோ  சென்று ஜெபம் செய்ய வேண்டும் .


அமைதியாக இருக்கும் அறைக்குள் தனிமையாக எந்த விதமான ஆள் அரவமும் இல்லாத அறைக்குள் செல்ல வேண்டும்.
அந்த அறைக் கதவைப் பூட்டிக் கொள்ள வேண்டும் .

இந்த உலகை இயக்க ஒழுங்கு மாறாமல் நடத்திக் கொண்டிருக்கும் ,
இந்த பிரபஞ்சத்தைப் படைத்து , காத்து , அழித்துக் கொண்டிருக்கும் ,
இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவனை நோக்கி இறைவனை நினைத்து ,
தன் தேவைகளை தன் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி ஜெபம் பண்ண வேண்டும் .

ஜெபம் செய்பவருடைய தேவைகள் நியாயமானதாக இருந்தால் ,
துhய்மையானதாக இருந்தால்,
மற்றவர்களை பாதிப்பு அடையச் செய்யாமல் இருந்தால் ,
தீயவைகளை விளைவிப்பதாக இல்லாமல் இருந்தால் ,
நன்மைகளை தருவதாக இருந்தால்,
ஜெபம் செய்பவருக்கு அத்தேவைகள் பயன் அளிக்கக் கூடியதாக இருந்தால்,
இறைவனாகிய பிதா ஜெபம் செய்பவருடைய தேவையை நிறைவேற்றுவார் என்கிறார்  இயேசு .



ஜெபம் செய்யும் பொழுது எந்த வழிமுறைகளைப் பின் பற்றி ஜெபம் செய்ய வேண்டும் என்று சொன்ன இயேசு ,
ஜெபம் செய்யும் பொழுது எந்த வார்த்தைகளைப் பயன் படுத்தி செய்ய வேண்டும் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார் :

அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது , அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள் , அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப் படுமென்று நினைக்கிறார்கள்.”
                                                                                                  மத்தேயு - 6 : 7

நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது ,
அறிவற்ற வீணர்களைப் போல,
அறியாமை நெஞ்சம் உடையவர்களைப் போல ,
ஒன்றும் தெரியாத முட்டாள்களைப் போல ,
ஜெபம் பண்ணும் பொழுது வீண் வார்த்தைகளை , தேவையற்ற வார்த்தைகளை , ஒன்றுக் கொன்று தொடர்புகள் இல்லாத வார்த்தைகளை, அருவெறுக்கதக்க வார்த்தைகளை ,மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன் படுத்தி ஜெபம் செய்யாதீர்கள் .

அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி , சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி ,
மாயஜால வார்த்தைகளைப் பயன்படுத்தி , மற்றவர்களை வசியப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ,
ஜெபம் பண்ணினால் தன்னுடைய தேவைகளை இறைவன் ஏற்றுக் கொண்டு செயல் படுத்துவார்  என்று தவறாக நினைத்து கொண்டு ,
தவறான முடிவை மனதில் இருத்திக் கொண்டு ஜெபம் செய்கிறார்கள் என்கிறார்  இயேசு .



ஜெபம் பண்ணும் பொழுது , தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி , ஜெபம் பண்ணாமல் எந்த வார்த்தைகளைப் பயன் படுத்தி , ஜெபம் செய்ய வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனத்தில் இயேசு கூறுகிறார்:

அவர்களைப் போல் நீங்கள் செய்யாதிருங்கள் ; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர்  அறிந்திருக்கிறார்.”
                                                                                           மத்தேயு - 6 : 8

தங்கள் தேவையை நிறைவேற்றச் சொல்லி தேவையற்ற வார்த்தைகளைப் பயன் படுத்தி , முறையற்ற விதத்தில் ஜெபம் பண்ணுகிறவர்களைப் போல, நீங்கள் தவறான முறையில் ஜெபங்களைப் பண்ணாதீர்கள் .

நீங்கள் ஜெபம் பண்ணி , உங்களுடைய தேவையை நிறைவேற்றச் சொல்லி, இறைவனிடம் கேட்க வேண்டிய அவசியம் என்பது இல்லை .
ஏனென்றால் நீங்கள் ஜெபம் பண்ணுவதற்கு முன்பாகவே உங்களுடைய தேவைகள் என்ன தேவை என்பதை இறைவன் அறிந்து இருக்கிறார்.
உங்களுக்கு தேவையானது என்ன என்றும் ,அவைகள் உங்களுக்கு அத்தியாவசியமான தேவை தானா என்றும் ,அவைகள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கக் கூடியவைகள் தானா என்றும் ,அவைகளை எந்த காலத்தில் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் ,
போன்ற அனைத்து காரணங்களையும் ,இறைவன் அறிந்திருக்கிறார். அவற்றை தக்க காலத்தில் உங்களுக்கு அவைகளை அளிப்பார்  என்கிறார்  இயேசு .



பட்டினத்தார் :
               “காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
                ஓடே எடுத்தென்ன உள்ளன்பிலாதவர் ஓங்கு விண்ணோர்
                நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர்  நாரியர்பால்
                வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே
                                                                            --------------பட்டினத்தார்-------------

                  “””””காடே திரிந்தென்ன”””””     
துன்பம் நீக்கி இன்பம் பெற வேண்டும் .
கவலை நீக்கி மனது அமைதி நிலையை அடைய வேண்டும் .
வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் .
ஞானத்திற்கான திறவு கோலைப் பெற வேண்டும் .
பிறப்பு , இறப்பற்ற நிலையை அடைய வேண்டும் .
என்பதை மனதில் நிறுத்தி ,

வீட்டைத் துறந்து,
குடும்பத்தைத் துறந்து ,
சுற்றத்தைத் துறந்து ,
வாழ்க்கையைத் துறந்து ,
ஊர்  ஊராகச் சுற்றுவது ,
காடுகள் பலவற்றை தேடி அலைந்து ,
காட்டில் அமர்ந்து தவம் இயற்றினால் , சக்திகள் பலவற்றைப் பெறலாம் என்பதை மனதில்  நினைத்துக் கொண்டு ,
காட்டில் உள்ள குகைகளில் அமர்ந்து தவம் இயற்றுகிறார்கள் .


                       “””””காற்றே புசித்தென்ன”””””
அன்னத்தை மறந்து,
விரதம் இருந்து உடலை வருத்திக் கொண்டு ,
காற்றையே உணவாக உட்கொண்டு தவம் இயற்றி சக்திகளைப் பெறலாம் என்ற கருத்தை மனதில் இருத்திக் கொண்டு தவம் இயற்றுகின்றனர் .


                     “”””கந்தை சுற்றி””””””
உடலில் ஆடைகள் ஏதும் அணியாமல் ,
மானத்தை மறைப்பதற்கு மட்டும் கந்தை ஆடை அணிந்து எளிமையாக இருக்கிறேன் , எல்லாவற்றையும் துறந்த நிலையில் இருக்கிறேன் என்ற கருத்துக்களை மனதில் இருத்தி தவம் இயற்றுகின்றனர் .


              “”””””ஓடே எடுத்தென்ன”””””””
தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்காக , தன்னுடைய பசியை தீர்த்துக் கொள்வதற்காக , கைகளில் ஓடுகளை ஏந்திக் கொண்டு வாழ்க்கையை நடத்தி தவம் இயற்றுகின்றனர் .

அதாவது காட்டில் இருந்து கொண்டு உணவை உண்ணாமல் காற்றையே உணவாகக் கொண்டு , கந்தை ஆடைச் சுற்றிக் கொண்டு கைகளில் ஓட்டை எடுத்துக் கொண்டு , இந்த உலகத்தில் அலைந்து திரிந்து கொண்டு , தவம் இயற்றி வாழ்க்கை நடத்துக்கின்றனர் .  


            “”””உள்ளன்பிலாதவர்  ஓங்கு விண்ணோர்””””
உள்ளத்திலே அன்பு இல்லாமல்,
கருணை இல்லாமல்,
பிறர்  துன்பம் கண்டு வருந்தும் மனது இல்லாமல் ,
பிறரை வருத்தப்பட வைக்கும் செயல் இல்லாமல் ,
தவம் செய்தால் மட்டும் தான் தவம் செய்தலின் உண்மை பலன் கிடைக்கும் .
தன் தேவையை வலியுறுத்தி செய்யப்பட்ட செயலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும் .
இத்தகைய பண்புகள் இல்லாதவர்களுக்கு தவத்தின் பலன் கிடைக்காது. 


      “”நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர்  நாரியர்பால்
         வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே”””””
நாட்டிலே இருந்து மனைவியுடனும் , குழந்தைகளுடனும் இருந்து கொண்டு, குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டு, தவத்தை செய்வதால் தவத்தின் பலன் கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு, அனைத்தையும் துறந்து விட்டு காட்டிற்குள் அமர்ந்து தவம் செய்கின்றனர்.

வீட்டிற்குள் இருந்த படியே குடும்பம் , மனைவி , மக்கள், நட்பு , சுற்றம் என்ற நிலையில் இருந்து கொண்டு தவங்கள் செய்வதில்லை.
இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது என்னவெனில்,
தவங்கள் செய்து அதன் சக்திகளை , பலன்களைப் பெற வேண்டுமானால் முக்கியமாக பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இடம் பெறக் கூடாது என்று நினைக்கின்றனர்.

அதற்கு ஏற்றாற் போல் ஆதி காலம் முதல் பெண்ணின் பால் மனதை செலுத்தினால் தவத்தின் பலன் பெற முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.
தன் மனைவியிடம் மட்டும் தான் தன் உயிர் , உடல் இரண்டையும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டதே ஒழியே ,
பிற பெண்களை நினைவால் கூட தொடக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டதே ஒழிய ,
பெண்களையே நினைக்கக் கூடாது , தொடக் கூடாது என்று கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

நாரியர் பால் என்றால் தவறான பெண்களிடம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
மனைவியைத் தவிர்த்து பிற பெண்களிடம் உறவு கொள்ளக் கூடாது என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.


வீட்டினுள் இருந்து கொண்டே,
இல்லற சுகங்களை அனுபவித்துக் கொண்டே,
இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே ,
தவங்கள் இயற்றி மெய்ஞ்ஞான நிலையை ,
ஞானத்திற்கான திறவு கோலைப் பெற முடியும் என்ற நிலை இருக்கும் பொழுது,
ஏன் வீட்டைத் துறந்து வெளியில் சென்று அலைந்து திரிந்து ,
குகைகளில் வாழ்ந்து கொண்டு,
பிச்சை எடுத்து வாழ்க்கை ஓட்ட வேண்டும்.
வீட்டில் இருந்த படியே , ஞானத்தை அடையும் வழிமுறைகளை முறையாக அறிந்து கொண்டு , வீட்டில் இருந்த படியே தவங்கள் இயற்றி அதன் பலன்களைப் பெற வேண்டும்  என்கிறார் பட்டினத்தார்.



இயேசு கிறிஸ்து - பட்டினத்தார் :
இயேசு கிறிஸ்து எவ்வாறு மக்கள் தங்கள் தேவைகளை வீட்டில் இருந்த படியே ஜெபம் செய்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்கிறாரோ,

அவ்வாறே,
பட்டினத்தாரும் வீட்டில் இருந்த படியே தவங்கள் இயற்றி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்   .
   
இயேசு கிறிஸ்துவின் கருத்தாழம் மிக்க வசனங்களில் நமக்கு தேவைப்படும் வாழ்க்கைக்கு உபயோகப்படும் ஒரு வசனத்தை அடுத்து பார்ப்போம்.


                           “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                        போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”

January 22, 2012

இயேசு கிறிஸ்து-சிறப்புகள்-பதிவு-1




                   இயேசு கிறிஸ்து-சிறப்புகள்-பதிவு-1
      

                         “”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                                                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


மத நிலையில் ஆண்டவனாக ,
ஆன்மீக உணர்வில் மகானாக ,
நாத்திக விளக்கத்தில் சீர்திருத்தவாதியாக ,

பல்வேறு கோணங்களில் ,
பல்வேறு நிலைகளில் ,
பல்வேறு பெயர்களில் ,
அடையாளம் காணப்பட்டு ,

இந்த அவனியின் சுவாசக் காற்றாக ,
உயிர்களில் கலந்திருக்கும் ஆண்டவனாக ,
துயரத்தைத் துடைக்கும் காவலனாக ,
கேட்டதைக் கொடுக்கும் கொடையாளியாக ,
இருக்கும் ,



                                                 இளமை நாதம்
                                                இசைத்த
                                                இன்பத்தின்
                                                இன் சுவையே !

               புதிய ராகம் மீட்ட
              புதிய வழி கண்ட
              புதியதின்
              புது மணமே !

                                              அன்பின்
                                             அரவணைப்பில்
                                             அழிக்க முடியாத
                                             அமுதமே !

              கண்ணின் கருவிழியில்
              கட்டி வைக்கப்பட்ட
              கழட்ட முடியாத
              கவிதையே !

                                         ஒளிச்சுடரில்
                                         ஒளிய முடியாத
                                         ஒளியின்
                                          ஒப்பற்ற ஞாயிறே !

             பாசத்தின்
             பாசறையில்
            பாடப்பட்ட
            பாடலின் புரட்சி வரியே !

                                       சிந்தனையின்
                                      சிரிப்பொலியில்
                                      சிந்தப்பட்ட
                                      சிதையாத வரலாறே !

            பன்னீரில் பகுக்கப்பட்ட
            பண்பின் பற்ற முடியாத
            பல்லவியின்
            பாடாத வார்த்தையே !

                                    காலத்தால்
                                   காட்ட முடியாத
                                   காவியத்தின்
                                   காந்த ஓவியமே !



நீங்கள் புதிய ராகம் மீட்டிய போதெல்லாம்
புயல் கூட புல்லாங்குழல் வாசித்தது ,

நீங்கள் எழுச்சி கீதம் இசைத்த போதெல்லாம்
எரிமலை கூட எழுந்து நாட்டியமாடியது ,

உங்கள் கரம்பட்டு பூகம்பம் கூட
பூச்சுட்டிக் கொண்டது ,

விடியல் கூட
விதியின் ரேகையை
பார்த்துக் கொண்டிருக்கவில்லை -உங்கள் விழி
அசைவுக்குத் தான் காத்துக் கொண்டிருந்தது ,

பாவங்கள் கூட பாவத்தைப் போக்க - உங்கள்
பாதத்தைத் தேடித்தான் அன்று வந்தது ,
இன்றும் வந்து கொண்டிருக்கிறது ,
நாளையும் வரும்,
என்றும் வந்து கொண்டிருக்கும் .



பிரபஞ்சம் தன் இயக்க ஒழுங்கை
நிர்ணயித்துக் கொண்டாலும் ,

காலம் தன் கணக்கை
திருத்தி எழுதிக் கொண்டாலும் ,

இயற்கையின் விளையாட்டுக்களை
மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் ,



மத வெறியர்களின் ஆணவத்தை அடக்கிய வார்த்தை ,
ஜாதி வெறியர்களை சந்தி சிரிக்க வைத்த வார்த்தை ,
இன வெறியர்களின் முகத்திரையை கிழித்த வார்த்தை ,
அறியாமையை விலக்கி ஞான ஒளியை ஏற்றி வைத்த வார்த்தை ,
அறியாமையை வேரோடு அறுக்க முனைந்த வார்த்தை ,
உலகமே மனதில் நினைத்து வணங்கும் வார்த்தை ,
எளிமையை அடையாளம் காட்டிய வார்த்தை,


மடமையை எதிர்த்து புயலாக வீசிய வார்த்தை,
முட்டாள் தனத்தை நொறுக்கிய வார்த்தை,
மூடர்களின் கொட்டத்தை அடக்கிய வார்த்தை,



அ டிமைத் தனத்தை எதிர்த்து குரல் கொடுத்த வார்த்தை ,
ஆ ளும் வர்க்கத்தை அதிர வைத்த வார்த்தை ,
இ யலாதவர்களின் நிலையை உயர்த்திய வார்த்தை,
ஈ கையின் பெருமையை உலகத்திற்கு உணர்த்திய வார்த்தை ,
உ ண்மையை இந்த உலகத்திற்கு விளக்கிய வார்த்தை,
எ ங்கும் நீக்கமற நிறைந்து உயிர்;கள் உச்சரிக்கும் வார்த்தை,
ஏ ழ்மையை நீக்கி சமத்துவத்தை நிலை நாட்டிய வார்த்தை ,
ஐ யம் நீக்கி மனதை தெளிய வைத்த வார்த்தை,
ஒ ற்றுமையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய வார்த்தை,
ஓ ய்வின்றி தன் கருத்துக்களை விளக்கிய வார்த்தை,
ஓள ஷதத்தை தடவி கலங்கிய உயிர்களை சுத்தப்படுத்திய வார்த்தை,



                             அ றிவின் சாளரத்தில்,
                             ஆ சையின் எழிலகத்தில்,
                             இ ளமையின் பிருந்தாவனத்தில்,
                             ஈ கையின் இருப்பிடத்தில்,
                             உ வகையின் உயிரோட்டத்தில்,
                             ஊ ழ்வினையின் உத்தரவில்,
                             எ ளிமையின் ஏகாந்தத்தில்,
                             ஏ ற்றத்தின் உருவாக்கத்தில்,
                              ஐ யத்தின் சாட்சியத்தில்,
                             ஒ ற்றுமையின் நினைவகத்தில்,
                             ஓ சையின் உருவாக்கத்தில்,
                             ஓள ஷதம் புரட்சியில் - உதிக்கும்
                          அஃதே வெற்றி

என்பதை உணர்த்திய வார்த்தை ,



வார்த்தைகளால் எழுத முடியாத வார்த்தை,
சொற்களால் சொல்ல முடியாத வார்த்தை ,
உவமைகளால் விளக்க முடியாத வார்த்தை,
தெய்வீகத்தில் ஒப்புமை காட்ட முடியாத வார்த்தை,


அந்த வார்த்தை தான் “”””””இயேசு கிறிஸ்து”””””””



இந்த அவனி பயனுற அவர்  விட்டுச் சென்ற ,
போதனைகளின் விளக்கங்களையும்,

மானுடம் உயர்வு பெற அவர் திறந்து வைத்து விட்டுச் சென்ற
அறிவின் சாளரங்களையும்,

உவமைகளில் ஒளித்து வைத்து விட்டுச் சென்ற
சூட்சும ரகசியங்களையும்,

அறியப் போகிறோம்,
அறிவு விளக்கம் பெறப் போகிறோம்.
தெளிவு அடையப் போகிறோம்,

தொடர்ந்து படிப்போம்
மனது நிறைவு பெறுவோம்
                                               

                                                                --------கவிதைகள்--------
                                                  ------பாலகங்காதரன்-----



                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                       போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”