February 04, 2012

இயேசு கிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-காட்டானை-பதிவு-5

  


    இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-பதிவு-5
                     “”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                                                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்

இயேசு கிறிஸ்து :
பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளைப் பற்றி பல்வேறு வசனங்கள் மூலம் விளக்கிய இயேசு ,
பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதைப் பற்றி ,
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதைப் பற்றி ,
பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான வழி முறைகள் எவை என்பதைப் பற்றி ,
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் இயேசு விளக்குகிறார்:

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகா விட்டால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
                                                                  மத்தேயு  - 18 : 3

குழந்தை என்னும் நிலையை அடைந்தால் ஒழிய ,
குழந்தையின் மனநிலையைப் பெற்றால் ஒழிய ,
குழந்தையின் குணநலன்களால் நிரப்பப் பட்டால் ஒழிய ,
குழந்தையின் களங்கமில்லாத ,
          அசுத்தமில்லாத ,
          தீயவை நினைக்காத ,
          இன்பம் கண்டு வெறி பிடித்து ஆடாத ,
          துன்பம் கண்டு துவழாத ,
          பிறருக்கு கெடுதல்களை நினைக்காத ,
          இறந்த காலத்தை நினைத்து வருத்தப்படாத ,
          எதிர்  காலத்தை நினைத்து பயப்படாத ,
          கணத்திற்கு கணம் வாழ்ந்து கொண்டிருக்கும்
          குழந்தையின் தன்மையை ,
          அடைந்தவர்கள் மட்டுமே
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்கிறார் இயேசு .
அதாவது நீங்கள் குழந்தையாக மாறினாலொழிய பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்கிறார்  இயேசு.



மனதின் தன்மைகள் :
ஓருவன்
தான் என்னும் அதிகாரப் பற்று
தனது என்னும் பொருட் பற்று - ஆகிய
இரண்டு தன்மைகளைத் தன்னுள் கொண்டு இருப்பதால் ,

அறியாமை  , அலட்சியம்  , உணர்ச்சி வயப்படுதல் - ஆகிய
மூன்று விதமான நிலைகளில் தவறுகளைச் செய்கிறான் .

இதனால்
இன்பம் , துன்பம் , அமைதி , பேரின்பம் - ஆகிய
நான்கின் - நாலறிவின்
உற்பத்தி ஸ்தானம் எழும் இடம் எது என்று அறிய முடியாமல்  தவிக்கிறான் .

இதன் காரணமாக
பொய் , சூது , கொலை , கொள்ளை , கற்பு நெறி பிறழ்தல்
ஆகிய ஐந்து விதமான
பஞ்சமா பாதகங்களை,

தன்னுள் எழும்
பேராசை , சினம் , கடும்பற்று , முறையற்ற பால் கவர்ச்சி , உயர்வு - தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் - ஆகிய
ஆறுவகையான குணங்களைக் கொண்டு தவறுகளைச் செய்கிறான் .

இதன் காரணமாக
ஏழேழு ஜென்மங்களாக
கர்ம வினையில் மாட்டிக் கொண்டு துன்பச் சகதியில் நீந்துவதால்,

பிறப்பு - இறப்பு அறுத்து ,
முக்தி என்னும் நிலையை அடைவது என்பது ,

எட்டும் கனியாக இருக்க வேண்டியது,
எட்டாக் கனி ஆகி விடுகிறது .

மனம் தெளிவு பெற்று
ஒன்பது ஓட்டைகளை , 
அடைக்கும் திறன் அறியப் பெறும் போது மனிதன் ,

பத்தாவது வாசலைத் திறந்து ,
அமுதத்தை உண்டு முக்தி அடைகிறான்.



மனந்திரும்புங்கள் :
மனதை அடக்க நினைத்தால் அலையும் ,
அறிய நினைத்தால் அடங்கும்.
மனதை அடக்கி நாம் எந்த செயலையும் நமக்கு தேவையானவற்றையும் சக்திகளையும் பெற முடியாது.
மனம் சாதாரண நிலையிலேயே அதன் பலன் அதிகம் .
மனதை மேலும் அடக்க அடக்க அதன் சக்தியானது அதிகரித்துக் கொண்டே போகும் .
மனதை ஒரு அளவுக்கு மேல் அடக்க முடியாது , அப்படியே அடக்கினாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அடங்காது வெளிக்கிளம்பி விடும் .

                               அதன் ஆவேசத்தில் ,
                               அதன் அக்னிப் பிரவாகத்தில் ,
                               அதன் உணர்ச்சி துடிப்பில் ,
நாம் பல வித துன்பங்களை இழப்புகளை சோதனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே மனதை அடக்க நினைக்கக் கூடாது .
மனதை அறிய வேண்டும்.
மனம் எங்கிருந்து கிளம்புகிறதோ அங்கேயே திருப்ப வேண்டும்

பூமியிலிருந்து வானத்தை நோக்கி மேலே எறியப்பட்ட கல் , மீண்டும் பூமியை நோக்கி கண்டிப்பாக வந்தே தீரும் .பூமியில் வந்து விழுந்ததும் அது அமைதி அடைகிறது .
பூமியிலிருந்து மேலே துhக்கி எறியப்பட்ட கல் மீண்டும் பூமிக்கே வந்த பிறகு அமைதி நிலையை அடைகிறது .
எந்த இடத்திலிருந்து , எங்கிருந்து கிளம்பி சென்றதோ , மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்து விட்ட பிறகு அந்த பொருள் அமைதி நிலையை அடைகிறது  .

அதைப் போல் ,
மனம் எங்கிருந்தோ கிளம்பியதோ அந்த இடத்தைக் கண்டு பிடித்து இணைத்து விட்டால் மனம் அமைதி பெறும் அலையாது சுற்றித் திரியாது .
உயிரின் படர்க்கை நிலை தான் மனம் .
உயிர்  விரிந்து படர்க்கை நிலை அடைந்து இயங்கும் போது மனமாக மாற்றம் அடைகிறது .
மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு மனமானது அதாவது உயிருக்கே திரும்பும் போது மனம் அமைதி அடைகிறது .
இதைத் தான் இயேசு மனந் திரும்புங்கள் என்கிறார் .



துhய்மையடையும் நிலை :
மனம் உயிருடன் இணைத்து விட்ட முறை அறிந்த பின் மனதை உயிருடன் இணைத்து உயிரைத் துhய்மைப் படுத்த வேண்டும் .

உயிர்  துhய்மை பெற வேண்டுமென்றால் ,
                                 களங்கமில்லா உள்ளம் ,
                                கவலைப் படாத நெஞ்சம் , 
                                எதற்கும் அஞ்சாத துணிவு ,
                                தோல்வி கண்டு துவழா மனம் ,
                                வெற்றி கண்டு ஆடா செயல் ,
                                   பிறரை மதிக்கும் பண்பு,

மற்றவரை வருத்தப்பட வைக்காத சிந்தனை ,
ஏழ்மையை துhற்றாத சொல் ,
அறியாமையை பயன்படுத்தாத மனிதத் தன்மை ,
ஆகியவற்றை தன்னுள் கொண்டு,

கயமைத்தனமான எண்ணங்களும் ,
பொய் பித்தலாட்டங்களைக் கொண்ட பேச்சுக்களும் ,
கொலை வெறி பாதகங்களும் ,
வேசித் தன்மை கொண்ட சூழ்ச்சிகளும் ,
ஜாதி ,மத ,இன ,மொழி வேறுபாடுகளும் ,
உயர்வு -  தாழ்வு மனப்பான்மை கொண்ட வெறியாட்டங்களும் ,
களைந்து துhய்மை பெறும் பொழுது ,
உயிரானது சுத்தமாகி படர்க்கை நிலை அடையும் பொழுது ,
குழந்தைத் தனமாகி விடுகிறது.
பிள்ளைகளுக்குரிய குணநலன்களைப் பெற்று விடுகிறது .


அத்தகைய தன்மையை அடைந்து விட்டால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .
இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெற்றால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .

இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெறாதவர்கள் .
இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெற முடியாதவர்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது .
என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார்  இயேசு .



அழுகுணிச் சித்தர் :

      “””””காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
               நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ
               நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
               காட்டானை மேலேறி என்கண்ணம்மா
                                   கண்குளிரப் பாரேனோ””””””
                                                     -------அழுகுணிச் சித்தர் -------

 “””காட்டானை””””
கடவுள் இந்த உலகத்தில் பல்வேறு வடிவங்கள் கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கிறான் .
நீக்கமற நிறைந்து இருக்கிறான் .
இறைவன் அறிவாக இருக்கிறான் .
இறைவன் அன்பாக இருக்கிறான் .
இறைவன் கருணையாக இருக்கிறான் .

இவ்வாறு பல்வேறு வடிவங்கள் கொண்டு தன்மைகள் கொண்டு இறைவன் இருந்தாலும்,
மனிதர்களால் அவனை எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது,
இறைவனை அறிந்து கொள்ள முடியாது ,
இறைவனை புரிந்து கொள்ள முடியாது,

காட்டானை என்றால் கடவுள் தான் யார் என்பதையும் ,
               தன்னுடைய சிறப்புகள் என்ன என்பதையும் ,
               தன்னுடைய சக்திகள் எவை என்பதையும் ,
வெளிக் காட்டாதவன் வெளியில் காட்டிக் கொள்ளாதவன் என்று பொருள்.




“””””காட்டானை மேலேறி “””””
காட்டானை மேலேறி என்றால்
சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக
குண்டலினி சக்தியை மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது என்று பொருள் .



கடைத்தெரு
கடைத்தெரு என்றால் கடைசி நிலையான இறை நிலை , இருப்பு நிலை, பரம்பொருள் என்று பொருள்
மனிதர்கள் உயிர்  வாழ்வதற்கு ,
வாழ்க்கையை நடத்துவதற்கு ,
பொருட்களை பரிமாறி கொள்வதற்கு ,
அன்றாட தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு ,
ஊரின் கடைசியில் ஒரு தெரு வைத்திருந்தனர் .
அந்தத் தெருவில் பொருட்களை மாற்றிக் கொள்வதற்கும் பண்டங்களை மாற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்தினர் .

இந்த பிரபஞ்சம் நிலம் , நீர் , நெருப்பு, காற்று ,விண் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது .
இந்த பஞ்ச பூதங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளது ,
மூல நிலையாக உள்ளது, இயக்க நிலையான விண் என்ற உயிர்  ஆகும் .

இந்த இயக்க நிலையான விண் என்ற உயிர்  இருப்பு நிலையான இறை நிலையிலிருந்து எழுச்சி பெற்றது என்ற சொல்லும் போது பஞ்சபூதங்களுக்கு முடிவாக உள்ளது பரம்பொருள் என்ற இருப்பு நிலை ஆகும் .
அதனால் தான் பஞ்சபூதங்களுக்கு கடைசியாக உள்ள இறைநிலையை, இருப்பு நிலையை பரம்பொருளை கடைத்தெரு என்றனர்  அதாவது கடைசியாக உள்ள நிலை என்று பொருள் .



“””””காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
         நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ”””””””
தான் யார்  என்று வெளிக்காட்டாமல் இருப்பவனை அறிந்து கொள்வதற்காக ,
ரகசியங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர்ந்து கொள்வதற்காக ,
குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி சஹஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் வைத்து தவங்கள் இயற்றி ,
ஐந்து புலன்களில் இயங்கிப் பெற்ற அனுபவங்களைத் தன்னுள் கொண்டு ,
வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை மனதில் நிறுத்தி ,
இறுதி நிலையான கடை நிலையான இறுதி நிலையாக உள்ள ,
                               இறை நிலையை நோக்கி   ,
                               இருப்பு நிலையை நோக்கி ,
                               சுத்த வெளியை நோக்கி ,
வெட்ட வெளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது ,

உலக வாழ்க்கையின் மூலம் நாம் அடைந்த அனுபவங்கள் பெற்ற கர்ம வினைகள் ஒவ்வொன்றும் ,
நாம் அந்த இறை நிலையை அடைய விடாமல் தடுக்கின்றன .

கர்ம வினையின் முழுத்தாக்கங்கள் -
                           கழிக்க முடியாத சோகங்கள் ,
                           மாற்ற முடியாத துன்பங்கள் ,
                           ஆற்ற முடியாத கவலைகள் ,
                           தோல்வியின் துயர ரேகைகள் ,
                            துன்பங்களின் நிலைகள் ,
நம்மை ஆட்டி வைத்து இரத்த கண்ணீரை வரவழைத்து -
                            இன்பத்தின் இதய வீணைகள் ,
                             மகிழ்ச்சியின் சுகபோகங்கள் ,
                             வெற்றியின் தாலாட்டுகள் ,
                             முன்னேற்றத்தின் அருஞ்சுவைகள் ,
ஆகிய இன்பங்களின் நிலைகளையும் கொடுத்து ,

இறை நிலையை நீ அடைந்து விடுவாயா ? என்று அதை அடையும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று ,
எள்ளி நகையாடி சிரித்து மகிழ்ந்து நம்மைப் பார்ப்பர் .
ஏளனம் செய்வர் .



      “”””நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
            காட்டானை மேலேறி என்கண்ணம்மா
                                   கண்குளிரப் பாரேனோ””””””
நம்மை இறை நிலையை அடைய விடாமல் தடுத்தாலும் ,
வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளித்தும் ,
வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளிக்காது ,
தடுத்து நம்மிடையே விளையாடினாலும் ,
குண்டலினி சக்தியை மேலேற்றி தவங்கள் பல இயற்றி ,
தடைகள் பல வென்று ,
சூழ்ச்சிகள் பல கொன்று ,
இறுதி நிலையான அந்த இறை நிலையை இருப்பு நிலையை அடைவேன் என்கிறார்  அழுகுணிச் சித்தர் .



இயேசு கிறிஸ்து - அழுகுணிச் சித்தர் :
இயேசு நம்மிடமுள்ள தீயவைகளை விலக்கி குழந்தையாக மாறினால் பரலோக ராஜ்ஜியத்தை அடையலாம் என்கிறார்  
( பாவங்களை நீக்கி இறைவனை அடையலாம் )

அவ்வாறே
அழுகுணிச் சித்தரும் கர்ம வினைகளின் மூலம் பெறப்பட்டவைகளை நீக்கிய பிறகு இறை நிலையை அடையலாம் என்கிறார்  
( கர்ம வினைகளை நீக்கி இறைவனை அடையலாம் )  


                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”

February 01, 2012

இயேசு கிறிஸ்து-ஔவையார்-பரமாய-பதிவு-4




        இயேசு கிறிஸ்து-ஔவையார்-பதிவு-4
      
                           “”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                                                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
பரலோக ராஜ்யத்தைப் பற்றியும் , அதன் மகிமையைப் பற்றியும் , அதன் தன்மைகளைப் பற்றியும் , அதன் சிறப்புகளைப் பற்றியும் இயேசு கிறிஸ்து பல்வேறு உவமைகள் மூலம் விளக்குகிறார்.

பரலோக ராஜ்யம் :
பரம் என்றால் நேர்  இல்லாதது ; உவமை இல்லாதது ;அதற்கு இணை என்ற ஒன்று இல்லாதது; என்று பொருள் .
பரலோக ராஜ்யம் என்றால் அதற்கு இணையான ஒன்று இல்லை என்று பொருள் .


 வசனங்கள்-1:
இத்தகைய சிறப்பு மிக்க பரலோக ராஜ்யத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் விளக்குகிறார்:

பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது;.அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
                                                                                  மத்தேயு-13:31

பரலோக ராஜ்யத்தைப் பற்றி பல்வேறு நிலைகளில் , பல்வேறு விதங்களில், பல்வேறு வசனங்களின் மூலம் உவமைகளாக விளக்கிக் கூறிய இயேசு,
பரலோக ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு உவமையாக கூறுகிறார்.


பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளை நேரடியாக கூறாமல் ,மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு அந்த பொருளின் தன்மைகளை அறிந்து , உணர்ந்து விளங்கிக் கொள்வதன் மூலம்,
பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளை உணர முடியும் என்ற காரணத்திற்காகவே பரலோக ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்.

ஒப்பிடுதல் என்பது தமிழ் இலக்கணத்தில் உவமைத் தொகை எனப்படுகிறது. உவமைத் தொகை என்றால் என்ன என்பதையும் அது எதை விளக்குகிறது என்பதையும் பார்ப்போம் .

உவமைத் தொகை:
ஒரு பொருளை அப்படியே கூறின் சிறப்பன்று . அதனோடு ஒத்த இன்னொரு பொருளோடு சேர்த்துக் கூறின் அப் பொருளுக்குச் சிறப்பு ஏற்படும். பொருளும் நன்கு விளங்கும்.
சிறப்புப் பொருளும் தெளிவாக அமைவதற்காகத் தொடர்புடைய பொருளை உவமையாக்கிக் காட்டி விளக்குவர்.
உவமைக்கும் , உவமிக்கப்படும் பொருளுக்கும் , இடையில் போல , போன்ற,  நிகர , அன்ன என்னும் உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத் தொகை எனப்படும்.

எடுத்துக் காட்டு:
மலர்ப்பாதம்
மலர்ப்பாதம் என்றால் மலரைப் போன்ற பாதம் என்று பொருள் .

                        மலர்----------------உவமை
                     போன்ற-------உவம உருபு
                        பாதம்---------உவமேயம்

மலர்  என்பது அதன் தன்மையில் எப்படி மென்மையாக இருக்குமோ, அதைப் போன்றே பாதங்களும் மலரைப் போல மென்மையாக இருக்கின்றன .

மலரைப் பற்றி முதலில் கூறி , மலரின் சிறப்புக்களைப் பற்றி , மலரின் தன்மைகளைப் பற்றி முதலில் கூறி , மலரைப் பற்றி விளக்கி விட்டு , பிறகு மலருடன் பாதங்கள் ஒப்பிட்டு விளக்கப் படுகிறது .
இதுவே உவமைத் தொகை எனப்படும்.

அதைப் போல் இயேசுவும் முதலில் கடுகு விதையின் பண்புகளை , அதன் தன்மைகளை , அதன் சிறப்புகளை நேரடியாக விளக்கி விட்டு பிறகு கடுகு விதையுடன் பரலோக ராஜ்யத்தை ஒப்பிட்டு விளக்குகிறார்.


அறிவில் முதிர்ச்சி அடைந்து , ஆன்மீக விளக்கம் பெற்று , தெளிவான மனநிலையை அடைந்து,
ஞான விளக்கத்தைப் பெற்றவர்கள் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் மறை பொருளாக மறைத்து வைத்து இருக்கின்றனர்.

உண்மை உணர்ந்தவர்கள் இந்த ரகசியங்களை நேரடியாக இந்த சமுதாயத்திற்கும் மக்களுக்கும் உணர்த்தாமல்,
உவமைகளாகவும் , வார்த்தை ஜாலங்களையும் பயன்படுத்தித் தான் எழுதி வைத்து இருக்கின்றனர் , பேசி இருக்கின்றனர்.
தாங்கள் உணர்ந்தவைகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பிரபஞ்ச ரகசியங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூட்சும ரகசியங்களாக எழுதி வைத்து விட்டு சென்று விட்டனர்.

இயேசுவும் அவ்வாறே மிக உயர்ந்த , மதிப்புமிக்க , ஈடு இணையற்ற, ஒப்பிட்டுக் காட்ட முடியாத, பரலோக ராஜ்யத்தை உவமைகளாக சொல்லி மறைபொருள்களை வெளிப்படுத்துகிறார்.

முதலில் இயேசு பரலோக ராஜ்யத்தை கடுகு விதையுடன் ஒப்பிடுகிறார். பிறகு இயேசு கடுகு விதையின் சிறப்புகளை தன்மைகளை விளக்குகிறார்.
அதாவது கடுகை வைத்து என்ன செயல் செய்யப்படுகிறது என்பதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
கடுகை எடுத்து ஒருவன் நிலத்தில் விதைத்தான் என்கிறார்  இயேசு.



 வசனங்கள்-2:
எந்த காரணத்திற்காக கடுகை அவன் நிலத்தில் விதைத்தான், அதில் உள்ள தத்துவம் என்ன , அதில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன , இதன் மூலம் இயேசு சொல்ல வரும் கருத்து என்ன , என்பதை இயேசு அடுத்த வசனத்தில் சொல்கிறார்:

அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும் , வளரும் போது,  சகல பூண்டுகளிலும் பெரிதாகி , ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து அடையத் தக்க மரமாகும் என்றார்
                                                                                மத்தேயு-13:32

கடுகு விதையானது எல்லா விதைகளுடன் , மற்ற விதைகளுடன் ஒப்பிடும் பொழுது சிறிய அளவில் இருக்கிறது.
ஆனால் அது வளரும் பொழுது பெரியதாகி , மரமாகி , கிளைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டு , இலைகள் பலவற்றை பெற்று , ஓங்கி வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது.
அதன் தன்மையை அறிந்து,
அதன் இயல்புகளை உணர்ந்து,
அதன் வளர்ச்சியால் கவர்ந்து,
அதன் வசீகரத்தால் இழுக்கப்பட்டு,
பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்குகின்றன.


இத்தகைய சிறப்பு மிக்க நிலையை சிறிய கடுகானது மரமான பின்பு அடைகிறது.
கடுகு விதை என்று பார்க்கும் பொழுது அது மிகச் சிறியதாக இருக்கிறது.
ஆனால் அது விதைக்கப்பட்டு வளரும் பொழுது , பெரியதாகி , மரமாகி, கிளைகள் இலைகள் கொண்டு, பறவைகள் வந்து தங்கும் அளவுக்கு பெரியதாகிறது .
இவைகள் அனைத்தும் அந்த கடுகு விதைக்குள் மறைந்து இருக்கிறது. பார்த்தால் தெரிவதில்லை.
கடுகு விதை வளர்ந்து , முதிர்ச்சி அடையும் பொழுது , கடுகு விதைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ,அனைத்தும் காலத்திற்கு தகுந்தவாறு பருவகாலத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுகிறது.

அதாவது சூட்சும விஷயங்கள் அனைத்தும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
காலம் வரும் பொழுது வெளிப்படுகிறது.


அதைப் போல்,
பரலோக ராஜ்யம் - பிரபஞ்சம் , பிரபஞ்சத்தின் இயக்க நிலைகள் , உயிர்கள், உயிர்களின் மாற்ற நிலைகள் , போன்ற பல்வேறுபட்ட நிலைகளை
தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது.

காலம் வரும் பொழுது இறைவன் பரலோக ராஜ்யத்தின் வாசல்களைத் திறந்து படைப்புகளை உருவாக்குகிறார்.

கடுகு எவ்வாறு தன்னுள் இருக்கும் சூட்சும ரகசியங்களை காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறதோ அதைப் போலவே,
பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை இறைவன் காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறார்  என்கிறார் இயேசு.



ஓவையார்:
      “”பரமாய சக்தியுட் பஞ்சமாபூதந்
         தரமாறிற் றோன்றும் பிறப்பு”””
                                -----------ஔவையார்--------ஔவைக்குறள்-------
பரம் என்று சொல்லப் படுகின்ற ஆதிநிலை,  முதல்நிலை , மூல நிலை,  இருப்பு நிலை , இயக்க நிலையாக மாற்றம் அடைந்து , பரிணாமம் அடையும் பொழுது விண் என்ற முதல் பூதமும் அதனைத் தொடர்ந்து வரிசையாக,
விண் , காற்று , நெருப்பு,  நீர்,  நிலம் என்று வரிசையாக ஐந்து பூதங்களாக பஞ்ச பூதங்களாக தோன்றுகிறது .

மனிதன் முதலில் நிலத்தைக் கண்டான் .
பிறகு நிலத்தை தோண்டும் பொழுது நீரைக் கண்டான்.
அதனுள் மறைந்து கொண்டு இருந்த நெருப்பு வெளிப்படும் பொழுது நெருப்பைக் கண்டான் .
மேலும் ஆராய்ந்து நோக்கும் பொழுது அவற்றில் காற்று ஊடுருவி நிரம்பி இருப்பதைக்  கண்டான்.
இவைகள் அனைத்தும் விண்ணிலிருந்து தோன்றுகிறது என்பதை உணர்ந்தான்.
விண் என்ற முதல் பூதம் தான் இந்த பஞ்ச பூதங்கள் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் என்பதை உணர்ந்து கொண்டான்.

ஆனால் மனிதன் எவ்வாறு , எந்த நிலையில் , பஞ்ச பூதங்களை உணர்ந்து கொண்டானோ , அதே நிலையிலேயே பஞ்ச பூதங்களை வரிசைப் படுத்தி விட்டான்.
நிலம் , நீர் ,  நெருப்பு , காற்று ,விண்
என்ற நிலையில் ஐந்தாக வரிசைப் படுத்தி விட்டான்.


இந்த பஞ்ச பூதங்கள் தான் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கூடி ,கால மாற்றத்திற்கு ஏற்றவாறு உயிரினம் உருவாக காரணம் ஆகிறது.
உயிர்கள் தோற்றம் உருவாக காரணம் ஆகிறது ,ஆதாரம் ஆகிறது, அடிப்படையாக இருக்கிறது. அதாவது,

இருப்பு நிலை அசைந்து,
விண் என்ற இயக்க நிலையாகி,
விண் பஞ்சபூதங்களாகி ,
உயிரினங்களாக பரிணாமம் அடைகிறது.

ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றம் அடைகிறது.
அதாவது ஒன்று அதன் இயல்பில் மாற்றம் அடைந்து மற்றொன்றாக உருமாற்றம் அடைகிறது.
இதனையே ஔவையார்  தரம் மாறுதல் என்கிறார்.

தரம் மாறுதல் என்றால் இயல்பில் அமைப்பில் வடிவத்தில்  என்று பல்வேறு தரப்பட்ட நிலைகளில் மாற்றம் அடைகிறது என்று பொருள்.
                      இருப்பு நிலையில் - தான்
                     இயக்க நிலையாகிய விண்,
                    விண்ணின் கூட்டாகிய பஞ்சபூதம் ,
                     பஞ்சபூத கூட்டாகிய உயிரின மாற்றம்,
ஆகியவை அடங்கி இருக்கிறது.

இருப்பு நிலை என்று சொல்லப்படுகின்ற பரம் , அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது.

காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறது. ஒவ்வொன்றாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

அதனால் தான் ஔவையார்,
           “”””பரமாய சக்தியுள்”””””
இருப்பு நிலையான பரத்தில் மறைந்திருக்கும் இயக்க நிலையாகிய விண் என்ற சக்தி,

             “”””பஞ்சமா பூதம்”””””
பஞ்ச பூதங்களாக உருவாகி,

         “”””தரம் மாறித் தோன்றும் பிறப்பு””””
உயிரினமாக பிறப்பெடுக்க பரம் பல்வேறு தரப்பட்ட நிலையில் மாற்றம் அடைகிறது என்கிறார்.




இயேசு கிறிஸ்து – ஔவையார்:
பரலோக ராஜ்யத்தில் உள்ளவைகளை இறைவன் எவ்வாறு காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறாரோ,

அவ்வாறே
ஔவையாரும் இருப்பு நிலை காலம் வரும் பொழுது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.

இயேசு போதனைகளில் சிறப்பான போதனை ஒன்றை அடுத்துப் பார்ப்போம்

                                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                         போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”

January 28, 2012

இயேசு கிறிஸ்து- திருவள்ளுவர்-தீயினாற்-பதிவு-3




       இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பதிவு-3
      
                              “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
 இயேசு கிறிஸ்து:
 வசனங்கள்-1
இயேசு ஜனங்களை வரவழைத்து , அவர்களை நோக்கி , மனுஷனைத் தீட்டுப்படுத்தக் கூடியவை எவை என்பதையும் , தீட்டுப் படுத்தாதவை எவை என்பதையும் கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப் படுத்தாது ,  வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப் படுத்தும் என்றார் .“
                                                                      மத்தேயு - 15 : 11

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை மனிதனை களங்கப்படுத்தாது, அவனை அசுத்தப் படுத்தாது ,
வாய்க்குள்ளே செல்பவைகள் மனிதனுடைய பசியைத் தீர்ப்பதற்காகத் தான் உள்ளே செல்கிறதே தவிர ,
அவைகளால் மனிதனுக்கு எந்த விதமான கெட்ட பெயர்களையும் , அவமானத்தையும் ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தாது ,  
சூழ்நிலையை உருவாக்காது .

ஆனால் மனிதனுடைய வாயிலிருந்து வெளிவருபவை அதாவது மனிதனுடைய வார்த்தைகள் ,
அவன் பேசும் பேச்சுக்கள் ,அவன் வெளிவிடும் சொற்கள்,
அவைகள் தவறானவைகளாக இருந்தால் ,
தீய சொற்களைக் கொண்டவைகளாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை வருத்தப்பட வைக்கக் கூடியதாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை புண்படுத்துவதாக இருந்தால்,
தன்னுடைய சொற்களால் , தன்னுடைய வார்த்தைகளால் , தன்னுடைய பேச்சுக்களால் , தனக்கே அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாக இருந்தால் ,
அவைகள் தான் மனிதனுக்கு கெட்ட பெயரையும்,
தீர்க்க முடியாத களங்கத்தையும் உண்டாக்கி விடும் என்கிறார்  இயேசு .



 வசனங்கள்-2 
மனிதனை களங்கப் படுத்துபவை எவை என்றும் , மனிதனை களங்கப் படுத்தாதவை எவை என்றும் கூறிய இயேசு கிறிஸ்து,
வாய்க்குள்ளே செல்பவை எந்த காரணங்களுக்காக மனிதனை களங்கப்படுத்தாது என்பதைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார்:


வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசன வழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? ”
                                                                      மத்தேயு - 15 : 17

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை அதாவது மனிதன் சாப்பிடும்  எல்லா உணவுப் பொருட்களும் அவனுடைய வயிற்றுக்குள் சென்று ஜீரணம் ஆகி விடும்.

அவ்வாறு ஜீரணம் ஆகிய உணவானது ஏழு தாதுக்களாக மாற்றம் அடைகிறது,
அவைகளாவன : இரசம் , இரத்தம்,  சதை , கொழுப்பு,  எலும்பு,  மஜ்ஜை ,
ஆண்-சுக்கிலம்; பெண்-சுரோணிதம் ஆகியவை ஆகும்

ஜீரணமானவை தவிர ஜீரணமாகாதவை அதாவது தேவையற்றவை கழிவு பொருட்களாக ஆசனவாய் வழியாக வெளியே சென்று விடும் என்ற உண்மையை ,

நீங்கள் அறிந்தும் , அறியாதது போல் இருக்கிறீர்களா ,
உணர்ந்தும் , உணராதது போல் இருக்கிறீர்களா ,
தெரிந்தும் , தெரியாதது போல் இருக்கிறீர்களா ,
என்று ஜனங்களை நோக்கி இயேசு கேட்கிறார்



 வசனங்கள்-3 :
வாயிலிருந்து வெளிப்படுபவை எவ்வாறு மனிதனை களங்கப்படுத்தும் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் இயேசு விளக்குகிறார்:

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இதயத்திலிருந்து புறப்பட்டு வரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும்.”
                                                                                                மத்தேயு - 15 : 18
 மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் அவனுடைய வாயிலிருந்து நேரடியாக வெளிவருவது இல்லை.
அந்த சொற்களுக்குரிய அதாவது,
                    அதனுடைய மூலம்,
                    அதனுடைய ஆதாரம்,
                    அதனுடைய வேர்,
                    அதனுடைய அடிப்படை,
                    எங்கே இருக்கிறது என்றால்
                     இருதயத்தில் இருக்கிறது.

இருதயத்தைப் பாதித்த நிகழ்வுகள்,
வருத்தப் பட வைத்த துன்பங்கள்,
கனன்று கொண்டிருக்கும் எரிமலைகள் ,
நீக்க முடியாத கவலைகள்,
அடக்கி வைக்கப்பட்டு இருதயத்தில் கொதித்து கொண்டிருக்கும் விஷயங்கள்,
ஆகியவை
இருதயத்திலிருந்து நேராக புறப்பட்டு வெளியே வாய் வழியாக வந்து,
எதிரே இருப்பவரை பாதிக்கும் விதத்திலும்,
எதிரே இருப்பவரை மனம் வருத்தப்பட வைக்கும் விதத்திலும்,
போன்ற செயல்களைச் செய்வது மட்டுமில்லாமல்,
தனக்கும் அவமானத்தை உண்டாக்கும் வகையிலும் இருக்கும்.

இவ்வாறு வாயிலிருந்து ஆவேசமாக வெளிப்படும் வார்த்தைகள் ,மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் அறிவில்லாமல் சொற்களாக வெளிப்படும் .
அவைகளே மனிதனை களங்கப்படுத்தும் என்கிறார்  இயேசு.



 வசனங்கள்-4 
இருதயத்திலிருந்து வாய்வழியாக வெளிப்படும் வார்த்தைகள் எத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்கும் என்று சொன்ன இயேசு ,
அவைகள் எத்தகைய விதத்தில் களங்கப்பட்டு இருக்கும் ,அசுத்தமடைந்து இருந்தும் ,தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும், என்பதை பின்வரும் வசனங்களில் கூறுகிறார்:

எப்படியெனில் ,இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும் , விபசாரங்களும் , வேசித் தனங்களும் , களவுகளும், பொய்ச் சாட்சிகளும், துhஷணங்களும் புறப்பட்டு வரும்.”
                                                                                மத்தேயு - 15 : 19
இருதயத்தில் வைக்கப்பட்டிருப்பவை ,
புதைத்து வைக்கப் பட்டிருப்பவை,
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருப்பவை ,
எவைகள் என்று கணக்குப் பார்ப்போமாகில்,

இழிவுகளைத் தன்னகத்தே கொண்ட பொல்லாத சிந்தனைகள்,
இரக்கத் தன்மைகள் அற்ற எதற்கும் அஞ்சாத கொலை பாதகங்கள் ,
களங்கங்களைப் பற்றிக் கவலைப் படாத வேசித் தனங்கள்,
நல்லவை , கெட்டவை ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்காத களவுகள் ,
பாதிப்பு யாருக்கு என்று நினைத்துப் பார்க்காத பொய்ச் சாட்சிகள்,
அருவெறுக்கத் தக்க நினைவுகளைச் சுமந்த துhஷணங்கள்,
ஆகியவை இதயத்தில் இருக்கும் .இவை வெளியே சொற்களாக வெளி வரும் பொழுது,

மற்றவருடைய மனதை பாதிக்கும் வகையில் வெளி வரும்.
மற்றவருடைய மனதை துன்பப் படுத்தும் வகையில் வெளிவரும்.
இவைகள் தான்  , இந்த சொற்கள் தான்,
வாயிலிருந்து வெளிப்படும் கொடூரத் தன்மைகள் கொண்ட இவைகள் தான்,
சொல்பவரையும் , கேட்பவரையும் மனது வருத்தப்பட வைக்கும் என்கிறார் இயேசு  .



திருவள்ளுவர்:

     “”””தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
            நாவினாற் சுட்ட வடு “””
                                                                ----திருவள்ளுவர்----திருக்குறள்----
உடம்பின் மேல் புறத்தில் நெருப்பினால் ஏற்படக் கூடிய காயங்களையும், வடுக்களையும் , மருத்துவ உதவிகள் பெற்று , மருந்துகள் போடுவதன் மூலம்  உடம்பின் மேல் ஏற்படும் காயங்களைச் சரிப் படுத்திக் கொள்ளலாம்.
அதாவது உடம்பின் புறத்தே ஏற்படக் கூடிய காயங்களை சரி செய்து கொள்ளலாம்.

அதைப் போல் அந்தக் காயத்தினால் ஏற்பட்ட வலிகளும் ,மனத்திற்கு ஏற்பட்ட கவலைகளும் , துன்பங்களும் வெளியில் உண்டாகிய காயங்கள் மறையும் பொழுது ஆறும் பொழுது உள்ளுக்குள் வலியும் ஆறிவிடும். துன்பங்களும் கரைந்து விடும்.

ஆனால் ஆறாத ஒன்று உண்டு ,ஆற்ற முடியாத ஒன்று உண்டு. அது என்னவெனில் , அது வாயிலிருந்து வெளிப்படும் சொற்களே ஆகும்.
அத்தகைய வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் ,தேவையற்ற சொற்கள், துன்பத்தை விளைவிக்கக் கூடிய சொற்கள் ,மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கக் கூடிய சொற்கள் வெளிப்படும் பொழுது,
மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கும் பொழுது ,துன்பப் பட வைக்கும் பொழுது, அவைகள் ஆற்ற முடியாத துன்பத்தை மற்றவர்  மனதில் உண்டாக்கி விடும்.

நம் வாயிலிருந்து வெளிப்பட்டவை யாரை வருத்தப் பட வைக்க பேசப்பட்டதோ  அவரை வருத்தப் பட வைக்கும்.
பிறகு நமது மனது குழப்பம் நீங்கி , தெளிவு பெற்று , அமைதி பெறும் பொழுது, யோசித்துப் பார்த்தால் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்வோம் .
அந்த நிலையில் ,அந்த கால கட்டத்தில்  நம்முடைய மனதிலும் ஆற்ற முடியாத கவலைகளும், துன்பங்களும் உண்டாக்கி விடும் .
வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் , தன்னையும் பிறரையும் மனது வருத்தப்பட வைப்பதோடு மட்டுமில்லாமல் ஆற்ற முடியாத துன்பத்தையும் கொடுத்து விடும் என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்:
வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப்படுத்தும் என்றார்  இயேசு.

அவ்வாறே
திருவள்ளுவரும் வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப் படுத்தும் என்கிறார்.


இயேசு போதனைகளில் சிறப்பான போதனை ஒன்றை அடுத்துப் பார்ப்போம்.


                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”