June 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-14


              ஜபம்-பதிவு-506
        (அறிய வேண்டியவை-14)

இந்திரன் :
“சித்திர சேனா ஊர்வசி
நடனம் ஆடும் போது
அவளுடைய அழகில்
மயங்கிய காரணத்தினால்
அர்ஜுனன் அவளை
கடைக்கண்ணால்
பார்த்தான் என்று
நினைக்கிறேன் ;
ஊர்வசியின் காதல்
வலையில் சிக்கி
காமத்தில் மூழ்கி
தடுமாறினான் என்று
நினைக்கிறேன் ;
அவனுக்குள்
ஏற்பட்ட காமத்தீயை
அணைப்பதற்கான
மருந்து ஊர்வசி
தான் என்று
நினைக்கிறேன் ;
அவன் இன்பம் என்னும்
கடலில் மூழ்கி முத்து
எடுக்க வேண்டும் ;
சொர்க்கத்தின் வாசலைத்
திறந்து ஆசையின்
எழிலுருவங்களை
அனுபவிக்க வேண்டும்;
இல்லை என்று
சொல்லாமல்
குறை என்ற
ஒன்று வைக்காமல்
காமத்தின் உச்சத்தை
தொட வேண்டும் ;
அதனை வழங்கக்
கூடியவள் ஊர்வசி
மட்டுமே ;
அவளால் மட்டுமே
அர்ஜுனன்
எதிர்பார்க்கும்
ஆசைகளை அள்ளி
வழங்க முடியும் ;
அர்ஜுனனின்
காம தாகத்தை தீர்க்கும்
நீராக இருப்பவள்
ஊர்வசி மட்டுமே ;
அர்ஜுனனின்
ஆசையை தீர்ப்பதற்காக
அர்ஜுனனுடன்
ஒன்றாக இணைந்து
இன்பம் அனுபவிக்க
வேண்டும் என்று
ஊர்வசிக்கு நான்
கட்டளை இட்டிருக்கிறேன்
என்று நான்
சொன்னதாக
ஊர்வசியை
அழைத்து வந்து
அர்ஜுனனுடன்
இணையச் சொல் ;
அர்ஜுனனும்
ஊர்வசியும் ஒன்றாக
இணைவதற்கான
செயல்களைச்
செய்வாயாக ;”

(சித்திர சேனன்  
ஊர்வசியின் மாளிகை
சென்றான் )

சித்திர சேனன் :
“அம்மா! அழகால்
மயக்கக் கூடியவனும் ;
வீரத்தால் ஆச்சரியப்பட
வைக்கக் கூடியவனும் ;
அவனுக்கு இணையாக
வீரன் யாரும் இந்த
உலகத்தில் இல்லை
என்று சொல்லத்தக்கவனும்;
தவத்தில் உயர்ந்தவனும் ;
பாசத்தில் சிறந்தவனுமாக;
திகழ்ந்து கொண்டிருக்கிற
அர்ஜுனனுடன் இன்று
இரவு ஒன்றாகக் கலந்து
சொர்க்கத்தின் சுகங்களை
அவனுக்குக் காட்டுவாய்  ;
இன்பத்தை அவன்
அனுபவிக்கும்படிச்
செய்வாய்; - காதலின்
ஆழம் என்றால் என்ன
என்பதையும்
காமத்தின் உச்சம்
என்றால் என்ன
என்பதையும்
அவனுக்கு
செயல்முறையில்
விளக்குவாய் ;
இதுவரை அவன்
காணாத மகிழ்ச்சியின்
காட்சிகளை அவன்
காணும்படிச் செய்வாய்  ;
இல்லை என்று
சொல்லாமல்
சந்தோஷத்திற்கு
எல்லை வகுக்காமல்
சந்தோஷத்தை வாரி
வழங்குவாய் ;
என்று இந்திரன்
கட்டளை
பிறப்பித்துள்ளார் ;
இச்செய்தியை
உங்களுக்கு
தெரிவிப்பதற்காக
நான் வந்தேன் ;
இந்திரன் உங்களுக்கு
இட்ட கட்டளையை
நிறைவேற்றுவீர்களாக ;”

(ஏற்கனவே
அர்ஜுனனுடைய
அழகில் மயங்கி
காதல் போதையில் சிக்கி
காமத்தீயில் கருகிக்
கொண்டிருந்த
ஊர்வசியின்
காதில் விழுந்த
இச்செய்தி தேனில்
விழுந்து மூழ்கிய
பலாச்சுளை நம்முடைய
வாயில் விழுந்தால்
எத்தயை இன்பமாக
இருக்குமோ அவ்வளவு
இனிமையாக இருந்தது
ஊர்வசியின் காதுகளுக்கு ;
இச்செய்தி ஊர்வசியின்
இதயத்தை குளிர்வித்தது ;
மனதை மகிழச் செய்தது ;
அனைவரையும்
மயக்கும்
அழகைக் கொண்ட
ஊர்வசி அழகுக்கு
அழகு சேர்ப்பது போல்
தன்னை நன்றாக
அலங்கரித்துக் கொண்டு ;
பல்வேறு வாசனை
திரவியங்களை
தன்னுடைய உடலில்
அள்ளி தெளித்துக் கொண்டு;
பட்டாடைகளை
அணிந்து கொண்டு ;
எங்கும் கிடைக்காத
அரிய வகை
கற்களால் செய்யப்பட்ட
அணிகன்களை
பூட்டிக் கொண்டு ;
அன்ன நடை நடந்து
தங்க மயிலென
காண்போரின்
இதயத்தை துடிக்க
வைக்கும் வண்ணம்
அழகு தேவதையாக
அர்ஜுனனுடைய
மாளிகையை
அடைந்தாள் ; “

“அர்ஜுனனின் எதிரில்
வந்து நின்றாள்
அந்த அழகு தேவதை ;
ஊர்வசியை மனதில்
எந்தவிதமான
சலனமும் இல்லாமல்
அமைதியாகப் பார்த்தான்  
அர்ஜுனன் ;
ஊர்வசியின் அழகில்
ஈரேழு உலகங்களும்
மயங்கினாலும் ;
ஊர்வசியின் அழகில்
மயக்கம் கொள்ளாமல்
அமைதியாகப் பார்த்தான்  
அர்ஜுனன் ;
தாயே என்று
அவளுடைய பாதங்களில்
விழுந்து வணங்கினான் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment