April 21, 2024

ஜபம்-பதிவு-954 மரணமற்ற அஸ்வத்தாமன்-86 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-954

மரணமற்ற அஸ்வத்தாமன்-86

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

துரோணர் : பிரம்மாஸ்திரம் சாதாரண விஷயம் கிடையாது

 

அஸ்வத்தாமன் : அதனால் தான் உங்களைப் போன்ற சக்தி படைத்தவர்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்

 

துரோணர் : பிரம்மாஸ்திரம் கற்றுக் கொள்வதற்கு அமைதி, பொறுமை, நிதானம் தேவை, உன்னைப் போன்று கோபம் கொள்பவர்கள், எதிரியை அழிக்க நினைப்பவர்கள் கற்றுக் கொள்ள முடியாது.

 

அஸ்வத்தாமன் : அர்ஜுனனுக்கு எப்படி கற்றுக் கொடுத்தீர்கள்?

 

துரோணர் : அவன் கோபப்பட மாட்டான்.

 

அஸ்வத்தாமன்: துரியோதனன் மேல் பகையாக இருக்கும் அர்ஜுனன் கோபப்பட மாட்டான் என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.

 

எனக்கு பிரம்மாஸ்திரம் கற்றுக் கொடுக்க மாட்டேன் என்பதை சுற்றி வளைத்துச் சொல்கிறீர்கள்.

 

குரு என்ற முறையில் எனக்கு கற்றுக் கொடுக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் மகன் என்ற முறையில் கற்றுக் கொள்வதற்காக வந்தேன்.

 

துரோணர் : கற்றுக் கொடுக்கவில்லை என்றால்

 

அஸ்வத்தாமன்:  பிரம்மாஸ்திரம் தெரிந்த வேறு ஒருவரிடம் சென்று கற்பேன்

 

துரோணர் : இது என்னை இழிவு படுத்தும் செயல் அல்லவா?

 

அஸ்வத்தாமன்: குரு என்ற முறையில் சீடனுக்கு கற்றுக் கொடுக்காமல் இருப்பது தங்களுக்கு இழிவாகத் தெரியவில்லை.

 

தந்தை என்ற முறையில் மகனுக்கு கற்றுக் கொடுக்காமல் இருப்பது தங்களுக்கு இழிவாகத் தெரியவில்லை.

 

நான் வெளியே சென்று கற்பது தான் தங்களுக்கு இழிவாகத் தெரிகிறது

 

துரோணர்: பிரம்மாஸ்திரம் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது தெரியுமா?

 

அஸ்வத்தாமன்: அதனால் தான் மகத்துவம் நிறைந்த பிரம்மாஸ்திரத்தை, மகத்துவம் நிறைந்த தங்களிடம் கற்றுக் கொள்வதற்காக வந்தேன்.

 

துரோணர்: வற்புறுத்தி எந்த ஒன்றையும் பெற்று விட முடியாது

 

 

அஸ்வத்தாமன்: நான் வற்புறுத்தவில்லை மகன் என்ற முறையில் கேட்டேன். தந்தை என்ற முறையில் நீங்கள் தான் இன்னும் பதில் சொல்லவில்லை. எனக்கு பிரம்மாஸ்திரத்தை கற்றுத் தருவீர்களா மாட்டீர்களா? எனக்கு இறுதியாக ஒரு முடிவைச் சொல்லுங்கள்.

 

துரோணர்: இது தான் கர்மா என்றால் அதை மாற்ற முடியாது. நான் பிரம்மாஸ்திரம் சொல்லித் தருகிறேன். ஆனால் ஒன்று பிரம்மாஸ்திரத்தை பாதி தான் சொல்லித் தருவேன்

 

அமைதி, பொறுமை, நிதானம் கொண்டவனாக நீ மாறிய பிறகு, உன் நடத்தையில் நல்லவைகள் வெளிப்பட்ட பிறகு மீதி பிரம்மாஸ்திரத்தைச் சொல்லித் தருவேன்

 

இதற்கு சம்மதம் என்றால் நான் உனக்கு பிரம்மாஸ்திரம் சொல்லித் தருகிறேன்

 

அஸ்வத்தாமன்: நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.

 

துரோணர்: பொதுவாக ஒரு தெய்வீக அஸ்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு நான்கு வழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

அஸ்திரத்தை வரவழைக்கும் மந்திரம்

அஸ்திரத்தை செலுத்தும் மந்திரம்

அஸ்திரத்தை திருப்பி வரவழைக்கும் மந்திரம்

அஸ்திரத்தை மறைய வைக்கும் மந்திரம்

ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.

 

ஆனால், பிரம்மாஸ்திரம் இதிலிருந்து மாறுபட்டது

 

பிரம்மாஸ்திரம் இது பிரம்மாவினுடைய அஸ்திரம். இது பிரம்மாவினுடைய அஸ்திரமாக இருந்தாலும், இதில் மும்மூர்த்திகளுடைய சக்தியின் ஒரு பகுதி அடங்கி இருக்கிறது.

 

பிரம்மாஸ்திரம் அம்பாகவோ, வேலாகவோ, ஈட்டியாகவோ எந்த ஒரு வடிவத்திலும் இருக்காது. இதற்கு தனிப்பட்ட வடிவம் என்ற ஒன்று கிடையாது. எந்த ஒரு சாதாரணப் பொருளையும் பிரம்மாஸ்திரமாக மாற்ற முடியும்

 

பிரம்மாஸ்திரத்தை பிரயோகிப்பதற்கு என்று தனிப்பட்ட ஒரு முறை இருக்கிறது. பிரயோகிக்கும் முறையைத் தெரிந்து கொண்டால் தான் அவர் பிரம்மாஸ்திரத்தை கற்றுக் கொண்டதாக அர்த்தம். அதனால் முதலில் அதை பிரயோகிக்கும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

பிரயோகிக்கும் முறையை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லித் தர முடியாது. கற்றுக் கொடுக்க முடியாது.

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment