November 25, 2011

ஐயப்பன்- வழிபடும்முறை-பதிவு- 4

                     

                                     ஐயப்பன்- பதிவு- 4
“”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - வழிபடும் முறை :
ஐயப்பனை வழிபடும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை வழிபட மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளான விரத முறைகள், பூஜை முறைகள் ,செய்யும் சடங்குகள் ,பிரார்த்தனை முறைகள் ,தியான முறைகள் ஆகியவை தாங்கள் அறிந்தோ ,அறியாமலோ (அல்லது) உணர்ந்தோ ,உணராமலோ  கிரியா என்னும் மார்க்கத்தைப் பின்பற்றி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிரியா மார்க்கம் எனப்படுவது இறைவனை அகத்தேயும், புறத்தேயும் வைத்து வழிபாடு செய்யும் முறையைக் குறிக்கிறது
இறைவனை அகத்தே வைத்து வழிபடும் பக்தர்கள் அகத்தே வழிபடுவதற்கான முறைகளையும் ,இறைவனை புறத்தே வைத்து வழிபடும் பக்தர்கள் புறத்தே வழிபடுவதற்கான முறைகளையும் பின்பற்றி வழிபாடு செய்வார்கள்
இந்த இரணடு முறைகளையும் ஒன்றாக இணைத்து அதாவது இறைவனை அகத்தே வைத்து வழிபடுவதற்கான முறைகளையும் ,இறைவனை புறத்தே வைத்து வழிபடுவதற்கான முறைகளையும் ஒன்றாக்கி வழிபடும் முறைகளை கொண்டது தான் ஐயப்பனை வழிபடும் முறைகள் ஆகும்
இந்த முறையைத் தான் கிரியா மார்க்கம் என்று அழைக்கிறோம்

மார்க்கம்
மார்க்கம் என்றால் வழி என்று பொருள்
இறைவனை அடைவதற்கு, அதாவது முக்தி அடைவதற்கு உரிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றி உயர்வு அடைவதையே மார்க்கங்கள் குறிப்பிடுகின்றன

முக்தி அடைவதற்கு உரிய மார்க்கங்களை நான்காகப் பிரித்து வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்
நான்கு விதமான மார்க்கங்கள் எனப்படுபவை சரியை ,கிரியை, யோகம், ஞானம் ஆகியவை ஆகும்
சரியை  - இறைவனை புறத்தே வைத்து வழிபாடு செய்வது;
கிரியை  - இறைவனை அகத்தேயும் புறத்தேயும் வைத்து வழிபாடு செய்வது;
யோகம்  - இறைவனை அகத்தே கண்டு வழிபாடு செய்வது;
ஞானம்  -  எங்கும் இறைவனது காட்சியைக் கண்டு களிப்பது;


ஐயப்பனை கிரியா மார்க்கத்தில் வழிபடும் பொழுதே மேலும் இரண்டு மார்க்கங்களான சரியை மார்க்கமும், யோக மார்க்கமும் ஒன்றுக்குள் ஒன்றாக அடங்கி விடுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

இறைவனை புறத்தே வைத்து வழிபடும் சரியை மார்க்கமும் ,
இறைவனை அகத்தே வைத்து வழிபடும் யோக மார்க்கமும்,
இரண்டையும் ஒன்றாக்கி வழி படும்  அதாவது இறைவனை அகத்தேயும், புறத்தேயும் வைத்து வழிபடும் கிரியை மார்க்கமும் ஆக மூன்று மார்க்கமும் கொண்ட ஒரு வழிபாட்டு முறையாக ஐயப்பனின் வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது

மூன்று மார்க்கத்தின் சாராம்சம் அனைத்தையும் தன்னுள் கொண்ட ஐயப்பனின் வழிபாட்டு முறைகள் இறுதியில் நான்காவது மார்க்கமான ஞான மார்க்கத்தை அடையக் கூடிய திறவு கோலை பெறுவதற்குரிய ஒரு ரகசியமான சூட்சுமமான வழிபாட்டு முறையாக ஐயப்பனின் வழிபாட்டு முறை இருந்து வருகிறது

மொத்தமாக ஐயப்பனின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து பார்த்தால் நான்கு மார்க்கங்களின் சாராம்சத்தைத் தன்னுள் கொண்ட ஒரு வழிபாட்டு முறையாகவே ஐயப்பனின் வழிபாட்டு முறைகள் இருந்தது இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்

இந்த  நான்கு மார்க்கங்களை  முறையே தாஸ மார்க்கம் ,சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம் ,சன் மார்க்கம் எனவும் அழைக்கப் படுகிறது
இவைகள் முறையே கர்மம் ,பத்தி ,யோகம், ஞானம் எனவும் அழைக்கப் படுகிறது

மேற்கண்ட நெறிகளை பின்பற்றி உயர்வடைந்த ஆன்மாக்கள் சாலோக்கியம் ,சாமீப்பியம் ,சாரூப்பியம், சாயுச்சியம் என்ற பதவிகளை அடைகிறது

சாலோக்கியம்
இந்த உலகத்தை ஒட்டி அதாவது இந்த பூமியை ஒட்டி இயக்கத்தில் இருக்கும் இந்த உலகத்தை ஒட்டி இயங்கிக் கொண்டிருக்கும் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட ஒரு களத்தை சாலோக்கியம் என்பர்

சாமீப்பியம்
பூமியைக் கடந்த பிறகு அடுத்து உள்ளது சூரியன் சூரியனைச் சுற்றி உள்ள களம் சூரிய களம் எனப்படுகிறது இந்த சூரிய களத்தை சாமீப்பியம் என்பர்

சாரூப்பியம்
இந்த சூரிய களத்தை கடந்து போனால் அதற்கு அப்பால் 12வீடுகள் 27 நட்சத்திரங்கள் மற்றும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கும் இயக்க மண்டல களத்தை சாரூப்பியம் என்பர்

சாயுச்யம்
இவை அனைத்தையும் கடந்து போனால் முடிவாக இருப்பது அதாவது இயக்க மற்று இருப்பது சுத்தவெளி இந்த சுத்த வெளியைத் தான் சாயுச்யம் என்பர்

ஆன்மாக்கள் தாங்கள் பெற்ற கர்ம வினைகளின் பதிவுகளுக்கு  ஏற்ப மேற்கண்ட ஏதேனும் ஒரு நிலையை அடையும்

சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம் ஆகிய மூன்று பதவிகளும் பதமுத்தி என்று அழைக்கப் படுகிறது
நான்காவதாகிய சாயுச்சியம் ஞானத்தால் அடையும் பதவி ஆகும் எனவே ஞானத்தால் அடையும் முத்தி பர முத்தியாகும்

தாயுமானவர்  இந்த நால்வகை மார்க்கங்களையும் அரும்பு, மலர்,  காய், கனி இவற்றிற்கு ஓப்பிடுகிறார்
”””””விரும்பும் கரியை முதல்மெய்ஞ் ஞானம்நான்கும்
        அரும்புமலர்  காய்கனிபோல் அன்றோ பராபரமே”””””
                     -----தாயுமானவர்----
அரும்பு இன்றி மலரும்  ,மலர்  இன்றி காயும் ,காய் இன்றி கனியும் உண்டாகாது அதைப் போல் சரியை இன்றி கிரியையும் ,கிரியை இன்றி யோகமும், யோகம் இன்றி ஞானமும், உண்டாகாது என்கிறார்  தாயுமானவர்.
சரியை, கிரியை ,யோகம், ஞானம் போன்ற மார்க்கங்களை ஆன்மாவானது மேற்கொண்டு ஒழுகி முக்தியைப் பெறுகிறது
இறைவனை அடைவதற்கு முக்தி அடைவதற்கு ஞானம் அடைவதற்கு இந்த நான்கு வகையான மார்க்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்பற்றி அல்லது ஒன்றுக்குள் ஒன்றாக பின்பற்றி உயர்வடைய வேண்டும்  என்கிறார் தாயுமானவர்

நாம் தெரிந்து கொண்ட விவரங்களை கீழ்க்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்

நாலு மார்க்கங்கள்                                           பதவி                           அடையும் நிலை உவமை 
 சரியை                 தாஸ மார்க்கம்             சாலோக்கியம்          பத முத்தி                      அரும்பு
கிரியை                சற்புத்திர மார்க்கம்     சாமீப்பியம்               பத முத்தி                       மலர்
யோகம்               சக மார்க்கம்                   சாரூப்பியம்             பத முத்தி                       காய்
ஞானம்               சன்மார்க்கம்                     சாயுச்யம்                    பர முத்தி                       கனி

இத்தகைய சிறப்பு வாய்ந்த நான்கு விதமான மார்க்கங்களையும்  சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டு இருக்கும் ஒரு வழிபடும் முறையே ஐயப்பனின் வழிபடும் முறை என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்


சபரி மலை யாத்திரைக்கு செல்பவர்  மேற்கொள்ள வேண்டிய விரத முறைகளையும் பூஜை முறைகளையும் பற்றி இப்பொழுது பார்ப்போம்
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
     போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”