March 07, 2019

மகளிர் தின வாழ்த்து மடல்


                   மகளிர் தின வாழ்த்து மடல்
                            08-03-2019 

அன்பிற்கினியவர்களே,

“ பெண் புத்தி -
பின் புத்தி (பழமொழி)”

புத்தியை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்.

     ஒன்று  : முன்புத்தி
     இரண்டு : பின்புத்தி

முன்பு நடந்த
செயல்களுடைய
விளைவுகளின் நன்மை,
தீமைகளைக் கண்டு
அதனை
நினைவில் கொண்டு
அதனடிப்படையில்
தற்போது செயல்களைச்
செய்வதற்கு பயன்படுத்தும்
புத்திக்கு பெயர் முன்புத்தி.

தற்போது செய்யப்படும்
செயல்களால்
பிற்காலத்தில்
என்னவிதமான
விளைவுகளின் நன்மை,
தீமைகள் ஏற்படும்
என்பதை யோசித்து
அதனடிப்படையில்
செயல்களைச் செய்வதற்கு
பயன்படுத்தும்
புத்திக்கு பெயர் பின்புத்தி.

முன்புத்தி என்பது
முன்னால் நடந்த
செயல்களின் விளைவுகளை
மனதில் வைத்து தற்போது
செயல்களைச் செய்வது.
இது நடந்த நிகழ்வுகளை
அடிப்படையாகக் கொண்டு
செய்வது.

பின்புத்தி என்பது
பின்னால் நடக்கப்போகும்
விளைவுகளை மனதில்
வைத்து - தற்போது
செயல்களைச் செய்வது.
இது நடக்கப்போகும்
நிகழ்வுகளை
அடிப்படையாகக்
கொண்டு செய்வது.

முன்புத்தியில் செயலும்,
விளைவும் தெரியும்.

பின்புத்தியில் விளைவு
அனுமானமாகத் தான்
தெரியும்

இந்த பின்புத்தியை
அனைவராலும் பயன்
படுத்த முடியாது. - இதை
பெண்கள் அதிகமாக
பயன்படுத்துகிறார்கள்.

தனக்கு முன்னால்
காதலித்து திருமணம்
செய்து கொண்டு
இன்பமாக இருப்பவர்களின்
வாழ்க்கையை பார்க்கும்
ஒரு ஆண் நாமும்
ஒரு பெண்ணை
காதலித்து திருமணம்
செய்து கொண்டால்
இன்பமாக இருக்கலாம்
என்று நினைக்கிறான்.
தான் விருப்பப்படும்- ஒரு
பெண்ணை காதலிக்க
அவள் விருப்பத்தைக்
கேட்கிறான் - இது
முன்னால் நடந்த
செயல், விளைவுகளை
மனதில் வைத்து தற்போது
செயல்களைச் செய்வது
இது முன்புத்தி.

ஆனால் ஒரு பெண்
நாம் இப்போது
காதலித்தால்
பிற்காலம் நம் குடும்பம்
பாதிக்கப்படும் குடும்பத்தில்
அமைதி குலையும்
வருத்தங்கள் ஏற்படும்
என்ற நிலைகளை
மனதில் யோசித்து
காதலை தவிர்க்கிறார்.
இது பின்னால் நடக்கும்
விளைவை மனதில்
வைத்து தற்போது
செயல்களைச் செய்வது
இது பின்புத்தி,

கடன் வாங்கி
சொந்த வீடு கட்டி
இருப்பவர்களை பார்க்கும்
கணவன் தானும்
கடன் வாங்கி சொந்த
வீடு கட்ட வேண்டும்
என்று நினைத்து
செயல்களைச் செய்கிறான்.
இது முன்னால் ஒருவர்
செய்த செயல்,
விளைவுகளை மனதில்
வைத்து தற்போது
செயல்களைச் செய்வது.
இது முன்புத்தி.

கடன் வாங்கி
வீடு கட்டினால்
பிற்காலம்
கடனை அடைப்பது
கடினமாக இருக்கும்
கடனை அடைக்க
முடியாமல்
வருத்தப்பட
வேண்டியிருக்கும்
பல்வேறு இன்னல்களை
சந்திக்க நேரிடும்
என்று யோசித்து
தற்போது கடன் வாங்கி
வீடு கட்ட வேண்டாம்
என்று முடிவெடுப்பது
இது தற்போது
செய்யப்படும் செயலால்
பின்னால் ஏற்படும்
விளைவுகளை
மனதில் வைத்து
செயல்களைச் செய்வது.
இது பின்புத்தி

ஒரு பெண்
காதலியாக இருந்தாலும்,
மனைவியாக இருந்தாலும்,
எந்த ஒரு நிலையில்
இருந்தாலும் - தற்போது
ஒரு செயலைச்
செய்யும் போது பின்னால்
ஏற்படும் விளைவுகளின்
நன்மை, தீமைகளை
உணர்ந்து –
அதற்கேற்றவாறு
செயல்களைச் செய்வதால்
பெண்புத்தி பின்புத்தி
என்றார்கள்.

பெண்களின் பெருமையை
உயர்த்துவதற்காக
சொல்லப்பட்ட பழமொழி
இன்று பெண்களை
இழிவு படுத்தும்படி
அமைந்து விட்டது
என்பதை - நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்.

எந்த ஒன்றையும் நுணுகி
ஆராய்ந்து தொலை
நோக்கு பார்வையுடன்
செயல்படும் பெண்களை
பிறந்தது முதல்
இந்த உலகத்தில்
வாழும் காலம் வரை
தனக்காக இல்லாமல்
பிறருக்காகவே வாழும்
மனித தெய்வங்களான
பெண்களை
போற்றுவோம்- அவர்கள்
மதிப்புணர்ந்து அவர்களை
வணங்குவோம் !

08-03-2019 - மகளிர்
தின வாழ்த்துக்கள்.!!

என்றும் அன்புடன்,
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////////////////