January 26, 2012

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-காடே திரிந்தென்ன-பதிவு-2




            இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-பதிவு-2
      
                     “”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                                                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இந்த அவனியில் வாழும் மக்கள் அனைவரும்
அறிவில் விளக்கம் அடைந்து ஆன்ம ஒளி பெற்று வாழ ,
இல்லறத்தில் இல்லாமையை நீக்கி இனிமையுடன் வாழ ,
துன்பங்கள் , கவலைகள் ஆகியவற்றை விலக்கி மகிழ்ச்சியுடன் வாழ ,
பாவங்களை கழித்து உயர்ந்த பண்புகளைப் பெற்று சுகமுடன் வாழ ,
எந்தவிதமான குறைகளும் இன்றி நலம் பல பெற்று வளமுடன் வாழ ,
பல்வேறு கருத்துகளை உவமைகளாகக் கூறிய இயேசு ,

ஜெபம் பண்ணும் பொழுது ,
எவ்வாறு செய்ய வேண்டும் ,
எந்த விதத்தில் செய்ய வேண்டும் ,
எந்த முறையில் செய்ய வேண்டும் ,
எந்த வழிமுறைகளைப் பின் பற்றி செய்ய வேண்டும் ,
என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார்:

நீயோ ஜெபம் பண்ணும் போது , உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி , அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு ; அப்பொழுது , அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். “
                                                                                     மத்தேயு – 6: 6

வாழ்வில் ஆற்றொணாத் துயரை அளித்துக் கொண்டு இருக்கும் மனக்குறைகள் ,
வாழ்க்கைக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் அத்தியாவசிய தேவைகள்,
நிறைவேற்றத் துடிக்கும் விலக்க முடியாத , கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் ,
பெற வேண்டிய இன்பங்கள் , துறக்க துடிக்கும் துன்பங்கள்,
ஆகியவற்றை பெற வேண்டும் என்றால்
ஆண்டவனிடம் ஜெபம் பண்ண வேண்டும்.
கோரிக்கை வைக்க வேண்டும் .
தன் கோரிக்கையை நிறைவேற்ற சொல்ல வேண்டும்.
அவ்வாறு ஜெபம் பண்ணும் பொழுது எவ்வாறு பண்ண வேண்டும் என்று இயேசு கீழ்க்கண்டவாறு சொல்கிறார் :

ஜெபம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் , ஜெபம் செய்பவர் ஜெபம் செய்வதற்காக , தன்னுடைய வீட்டுக்குள் சென்று தன்னுடைய வீட்டுக்குள் இருந்த படியே ஜெபம் பண்ண வேண்டும் .
தன்னுடைய வீட்டினுள் ஜெபம் பண்ணுவதற்கு என்று தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட அறைக்குள்ளோ அல்லது தனிமையுடன் அமைதியாக இருக்கும் அறைக்குள்ளோ அல்லது ஜெபம் செய்வதற்கு என்று ஒதுக்கி வைக்கப் பட்ட அறைக்குள்ளோ  சென்று ஜெபம் செய்ய வேண்டும் .


அமைதியாக இருக்கும் அறைக்குள் தனிமையாக எந்த விதமான ஆள் அரவமும் இல்லாத அறைக்குள் செல்ல வேண்டும்.
அந்த அறைக் கதவைப் பூட்டிக் கொள்ள வேண்டும் .

இந்த உலகை இயக்க ஒழுங்கு மாறாமல் நடத்திக் கொண்டிருக்கும் ,
இந்த பிரபஞ்சத்தைப் படைத்து , காத்து , அழித்துக் கொண்டிருக்கும் ,
இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவனை நோக்கி இறைவனை நினைத்து ,
தன் தேவைகளை தன் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி ஜெபம் பண்ண வேண்டும் .

ஜெபம் செய்பவருடைய தேவைகள் நியாயமானதாக இருந்தால் ,
துhய்மையானதாக இருந்தால்,
மற்றவர்களை பாதிப்பு அடையச் செய்யாமல் இருந்தால் ,
தீயவைகளை விளைவிப்பதாக இல்லாமல் இருந்தால் ,
நன்மைகளை தருவதாக இருந்தால்,
ஜெபம் செய்பவருக்கு அத்தேவைகள் பயன் அளிக்கக் கூடியதாக இருந்தால்,
இறைவனாகிய பிதா ஜெபம் செய்பவருடைய தேவையை நிறைவேற்றுவார் என்கிறார்  இயேசு .



ஜெபம் செய்யும் பொழுது எந்த வழிமுறைகளைப் பின் பற்றி ஜெபம் செய்ய வேண்டும் என்று சொன்ன இயேசு ,
ஜெபம் செய்யும் பொழுது எந்த வார்த்தைகளைப் பயன் படுத்தி செய்ய வேண்டும் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார் :

அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது , அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள் , அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப் படுமென்று நினைக்கிறார்கள்.”
                                                                                                  மத்தேயு - 6 : 7

நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது ,
அறிவற்ற வீணர்களைப் போல,
அறியாமை நெஞ்சம் உடையவர்களைப் போல ,
ஒன்றும் தெரியாத முட்டாள்களைப் போல ,
ஜெபம் பண்ணும் பொழுது வீண் வார்த்தைகளை , தேவையற்ற வார்த்தைகளை , ஒன்றுக் கொன்று தொடர்புகள் இல்லாத வார்த்தைகளை, அருவெறுக்கதக்க வார்த்தைகளை ,மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன் படுத்தி ஜெபம் செய்யாதீர்கள் .

அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி , சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி ,
மாயஜால வார்த்தைகளைப் பயன்படுத்தி , மற்றவர்களை வசியப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ,
ஜெபம் பண்ணினால் தன்னுடைய தேவைகளை இறைவன் ஏற்றுக் கொண்டு செயல் படுத்துவார்  என்று தவறாக நினைத்து கொண்டு ,
தவறான முடிவை மனதில் இருத்திக் கொண்டு ஜெபம் செய்கிறார்கள் என்கிறார்  இயேசு .



ஜெபம் பண்ணும் பொழுது , தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி , ஜெபம் பண்ணாமல் எந்த வார்த்தைகளைப் பயன் படுத்தி , ஜெபம் செய்ய வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனத்தில் இயேசு கூறுகிறார்:

அவர்களைப் போல் நீங்கள் செய்யாதிருங்கள் ; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர்  அறிந்திருக்கிறார்.”
                                                                                           மத்தேயு - 6 : 8

தங்கள் தேவையை நிறைவேற்றச் சொல்லி தேவையற்ற வார்த்தைகளைப் பயன் படுத்தி , முறையற்ற விதத்தில் ஜெபம் பண்ணுகிறவர்களைப் போல, நீங்கள் தவறான முறையில் ஜெபங்களைப் பண்ணாதீர்கள் .

நீங்கள் ஜெபம் பண்ணி , உங்களுடைய தேவையை நிறைவேற்றச் சொல்லி, இறைவனிடம் கேட்க வேண்டிய அவசியம் என்பது இல்லை .
ஏனென்றால் நீங்கள் ஜெபம் பண்ணுவதற்கு முன்பாகவே உங்களுடைய தேவைகள் என்ன தேவை என்பதை இறைவன் அறிந்து இருக்கிறார்.
உங்களுக்கு தேவையானது என்ன என்றும் ,அவைகள் உங்களுக்கு அத்தியாவசியமான தேவை தானா என்றும் ,அவைகள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கக் கூடியவைகள் தானா என்றும் ,அவைகளை எந்த காலத்தில் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் ,
போன்ற அனைத்து காரணங்களையும் ,இறைவன் அறிந்திருக்கிறார். அவற்றை தக்க காலத்தில் உங்களுக்கு அவைகளை அளிப்பார்  என்கிறார்  இயேசு .



பட்டினத்தார் :
               “காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
                ஓடே எடுத்தென்ன உள்ளன்பிலாதவர் ஓங்கு விண்ணோர்
                நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர்  நாரியர்பால்
                வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே
                                                                            --------------பட்டினத்தார்-------------

                  “””””காடே திரிந்தென்ன”””””     
துன்பம் நீக்கி இன்பம் பெற வேண்டும் .
கவலை நீக்கி மனது அமைதி நிலையை அடைய வேண்டும் .
வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் .
ஞானத்திற்கான திறவு கோலைப் பெற வேண்டும் .
பிறப்பு , இறப்பற்ற நிலையை அடைய வேண்டும் .
என்பதை மனதில் நிறுத்தி ,

வீட்டைத் துறந்து,
குடும்பத்தைத் துறந்து ,
சுற்றத்தைத் துறந்து ,
வாழ்க்கையைத் துறந்து ,
ஊர்  ஊராகச் சுற்றுவது ,
காடுகள் பலவற்றை தேடி அலைந்து ,
காட்டில் அமர்ந்து தவம் இயற்றினால் , சக்திகள் பலவற்றைப் பெறலாம் என்பதை மனதில்  நினைத்துக் கொண்டு ,
காட்டில் உள்ள குகைகளில் அமர்ந்து தவம் இயற்றுகிறார்கள் .


                       “””””காற்றே புசித்தென்ன”””””
அன்னத்தை மறந்து,
விரதம் இருந்து உடலை வருத்திக் கொண்டு ,
காற்றையே உணவாக உட்கொண்டு தவம் இயற்றி சக்திகளைப் பெறலாம் என்ற கருத்தை மனதில் இருத்திக் கொண்டு தவம் இயற்றுகின்றனர் .


                     “”””கந்தை சுற்றி””””””
உடலில் ஆடைகள் ஏதும் அணியாமல் ,
மானத்தை மறைப்பதற்கு மட்டும் கந்தை ஆடை அணிந்து எளிமையாக இருக்கிறேன் , எல்லாவற்றையும் துறந்த நிலையில் இருக்கிறேன் என்ற கருத்துக்களை மனதில் இருத்தி தவம் இயற்றுகின்றனர் .


              “”””””ஓடே எடுத்தென்ன”””””””
தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்காக , தன்னுடைய பசியை தீர்த்துக் கொள்வதற்காக , கைகளில் ஓடுகளை ஏந்திக் கொண்டு வாழ்க்கையை நடத்தி தவம் இயற்றுகின்றனர் .

அதாவது காட்டில் இருந்து கொண்டு உணவை உண்ணாமல் காற்றையே உணவாகக் கொண்டு , கந்தை ஆடைச் சுற்றிக் கொண்டு கைகளில் ஓட்டை எடுத்துக் கொண்டு , இந்த உலகத்தில் அலைந்து திரிந்து கொண்டு , தவம் இயற்றி வாழ்க்கை நடத்துக்கின்றனர் .  


            “”””உள்ளன்பிலாதவர்  ஓங்கு விண்ணோர்””””
உள்ளத்திலே அன்பு இல்லாமல்,
கருணை இல்லாமல்,
பிறர்  துன்பம் கண்டு வருந்தும் மனது இல்லாமல் ,
பிறரை வருத்தப்பட வைக்கும் செயல் இல்லாமல் ,
தவம் செய்தால் மட்டும் தான் தவம் செய்தலின் உண்மை பலன் கிடைக்கும் .
தன் தேவையை வலியுறுத்தி செய்யப்பட்ட செயலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும் .
இத்தகைய பண்புகள் இல்லாதவர்களுக்கு தவத்தின் பலன் கிடைக்காது. 


      “”நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர்  நாரியர்பால்
         வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே”””””
நாட்டிலே இருந்து மனைவியுடனும் , குழந்தைகளுடனும் இருந்து கொண்டு, குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டு, தவத்தை செய்வதால் தவத்தின் பலன் கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு, அனைத்தையும் துறந்து விட்டு காட்டிற்குள் அமர்ந்து தவம் செய்கின்றனர்.

வீட்டிற்குள் இருந்த படியே குடும்பம் , மனைவி , மக்கள், நட்பு , சுற்றம் என்ற நிலையில் இருந்து கொண்டு தவங்கள் செய்வதில்லை.
இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது என்னவெனில்,
தவங்கள் செய்து அதன் சக்திகளை , பலன்களைப் பெற வேண்டுமானால் முக்கியமாக பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இடம் பெறக் கூடாது என்று நினைக்கின்றனர்.

அதற்கு ஏற்றாற் போல் ஆதி காலம் முதல் பெண்ணின் பால் மனதை செலுத்தினால் தவத்தின் பலன் பெற முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.
தன் மனைவியிடம் மட்டும் தான் தன் உயிர் , உடல் இரண்டையும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டதே ஒழியே ,
பிற பெண்களை நினைவால் கூட தொடக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டதே ஒழிய ,
பெண்களையே நினைக்கக் கூடாது , தொடக் கூடாது என்று கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

நாரியர் பால் என்றால் தவறான பெண்களிடம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
மனைவியைத் தவிர்த்து பிற பெண்களிடம் உறவு கொள்ளக் கூடாது என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.


வீட்டினுள் இருந்து கொண்டே,
இல்லற சுகங்களை அனுபவித்துக் கொண்டே,
இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே ,
தவங்கள் இயற்றி மெய்ஞ்ஞான நிலையை ,
ஞானத்திற்கான திறவு கோலைப் பெற முடியும் என்ற நிலை இருக்கும் பொழுது,
ஏன் வீட்டைத் துறந்து வெளியில் சென்று அலைந்து திரிந்து ,
குகைகளில் வாழ்ந்து கொண்டு,
பிச்சை எடுத்து வாழ்க்கை ஓட்ட வேண்டும்.
வீட்டில் இருந்த படியே , ஞானத்தை அடையும் வழிமுறைகளை முறையாக அறிந்து கொண்டு , வீட்டில் இருந்த படியே தவங்கள் இயற்றி அதன் பலன்களைப் பெற வேண்டும்  என்கிறார் பட்டினத்தார்.



இயேசு கிறிஸ்து - பட்டினத்தார் :
இயேசு கிறிஸ்து எவ்வாறு மக்கள் தங்கள் தேவைகளை வீட்டில் இருந்த படியே ஜெபம் செய்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்கிறாரோ,

அவ்வாறே,
பட்டினத்தாரும் வீட்டில் இருந்த படியே தவங்கள் இயற்றி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்   .
   
இயேசு கிறிஸ்துவின் கருத்தாழம் மிக்க வசனங்களில் நமக்கு தேவைப்படும் வாழ்க்கைக்கு உபயோகப்படும் ஒரு வசனத்தை அடுத்து பார்ப்போம்.


                           “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                        போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”