August 28, 2012

இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-முத்து- பதிவு-51



           இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-முத்து-பதிவு-51  

          “”பதிவு ஐம்பத்துஒன்றை விரித்துச் சொல்ல  
                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு , மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
                                                -------மத்தேயு - 25 : 1
அவர்களில் ஐந்துபேர்  புத்தியுள்ளவர்களும் , ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
                                                -------மத்தேயு - 25 : 2
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டு போகவில்லை.
                                                -------மத்தேயு - 25 : 3
புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள்.
                                                -------மத்தேயு - 25 : 4
மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து துhங்கிவிட்டார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 5
நடுராத்திரியிலே : இதோ , மணவாளன் வருகிறார் . அவருக்கு எதிர் கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று .”
                                                -------மத்தேயு - 25 : 6
அப்பொழுது , அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து , தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 7
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி : உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள் , எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 8
புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக : அப்படியல்ல எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி , நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய் உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 9
அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்து விட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் ; கதவும் அடைக்கப்பட்டது .
                                                -------மத்தேயு - 25 : 10
பின்பு , மற்றக் கன்னிகைகளும் வந்து : ஆண்டவரே , ஆண்டவரே எங்களுக்குத் திறக்க வேண்டும் என்றார்கள் .
                                                -------மத்தேயு - 25 : 11
அதற்கு அவர்  : உங்களை அறியேன் என்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .”
                                                -------மத்தேயு - 25 : 12
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் .
                                                -------மத்தேயு - 25 : 13

பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு
மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட
பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது . அதில் ,
ஐந்து பேர்  புத்தியுள்ளவர்கள்
ஐந்து பேர்  புத்தியில்லாதவர்கள் .

நிகழ்காலத்தை கணக்கில் கொண்டு
நிகழ்கால செயல்முறைகளை கருத்தில் கொண்டு
நிகழ்கால செயல்முறைகளின் அடிப்படையில்
எதிர்காலத்தை சங்கடமின்றி ஏற்படுத்திக் கொள்ள
எதிர்காலத்தை துன்பமின்றி அமைத்துக் கொள்ள
எதிர்காலத்தை தனக்கு ஏற்றபடி உருவாக்கிக் கொள்ள
தனக்கு உகந்தபடி , தன் எண்ணப்படி ,
தன் குறிக்கோள்படி நிறைவேற்ற ,
செயல்களை வகுத்து அதன் வழி செயல்படுபவன் புத்தியுள்ளவன்
அவ்வாறு செயல்படாதவன் புத்தியில்லாதவன் .

நிகழ்காலத்தை கருத்தில் கொண்டு
எதிர்காலத்தை கணிப்பவன் புத்தியுள்ளவன் .
நிகழ்காலத்தை கருத்தில் கொள்ளாமல்
எதிர்காலத்தை கணிக்காமல் விடுபவன் புத்தியில்லாதவன் .

அறிவாளிக்கும் , புத்திசாலிக்கும் வேறுபாடு இருக்கிறது
சொல்வதை அப்படியே ஏற்பவன் அறிவாளி
அதனை பரிட்சித்து பார்த்து ஏற்பவன் புத்திசாலி .

நெருப்பு சுடும் என்று சொன்னால்
அதனுடைய தன்மைகளை மனதில் கொண்டு
கற்ற விளக்கங்களை நெஞ்சில் கொண்டு
அது அப்படித்தான் நெருப்பு
சுடும் தன்மையை தன்னுள் கொண்டுள்ளது
நெருப்பு சுடும் என்று ஏற்றுக் கொள்பவன் அறிவாளி .

ஆனால் , புத்திசாலி நெருப்பு சுடும் என்று சொன்னால்
அதை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள மாட்டான் .
நெருப்பிடம் சென்று கையை நீட்டுவான்
நெருப்பு சுட்டவுடன் ஆம் நெருப்பு சுடும்
என்பதை ஏற்றுக் கொள்வான் .

அறிவு கற்றதினால் வருவது .
புத்தி செயல்படுத்துவதால் வரும் அனுபவம்.
நிறைய படிப்பதை விட நிறைய அனுபவமே முக்கியம் .
அனுபவமே சிறந்த ஆசான் .
அனுபவமே ஒருவனுடைய
வாழ்க்கையை உயர்த்தும் ;
நேர்வழிக்கு செலுத்தும் ;
நல்வழிக்கு திருப்பும் ;
உயர்  நெறிக்கு செதுக்கும் ;

அறிவாளியாக இருப்பதை விட
புத்திசாலியாக இருப்பதே முக்கியம் .

எல்லாவற்றையும் பரிட்சித்து பார்க்க வேண்டும்
என்று எண்ணக் கூடாது .
எல்லாவற்றையும் பரிட்சித்து பார்க்க முடியாது .
எதை பரிட்சித்து பார்க்க வேண்டுமோ ?
எதை பரிட்சித்து பார்க்க முடியுமோ ?
எதை பரிட்சித்தால் தவறான
விளைவுகளை உண்டு பண்ணாதோ ?
அவைகளை மட்டுமே பரிட்சித்துப் பார்க்க வேண்டும் .
எதை பரிட்சித்துப் பார்க்க வேண்டும்
எதை பரிட்சித்து பார்க்கக் கூடாது என்ற
வேறுபாட்டை உணர்ந்து செயல்படுபவனும்
புத்திசாலிக்குள் அடக்கம் .

புத்தியுள்ளவர்கள் நிகழ்காலத்தில் ஒரு செயலைச் செய்யும் போது
எதிர்காலத்துடன் அச்செயல் எவ்வாறு தொடர்பு கொள்கிறது ;
நிகழ்காலத்தில் செய்யப்படும் செயல்
எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது  ;
நிகழ்கால செயலுக்கும் , எதிர்கால விளைவிற்கும்
தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து
அதற்கேற்றபடி புத்தியுள்ளவர்கள்
நிகழ்காலத்தில் தங்கள் செயல்களை செய்வார்கள் .

புத்தியில்லாதவர்கள் எதையும் தீர்மானிக்காமல் ,கணிக்காமல் ,
விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் ,
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ,
நிகழ்கால செயலுக்குரிய விளைவு எதிர்காலத்தில்
எப்படி பிரதிபலிக்கும் என்பதை உணராமல் ,
நிகழ்காலத்தில் செய்யும் செயலுக்குரிய விளைவு
எதிர்காலத்தில் எத்தகைய முடிவைக் கொண்டு வரும் என்பதை
நினைவில் கொள்ளாமல் செயல்படுவார்கள்.

அத்தகைய நிலையில் , அத்தகைய தன்மை கொண்ட ,
புத்தியில்லாத ஐந்து பேர்  தீவட்டி கொண்டு போகும் போது
அதனுடன் எண்ணெயை கூட எடுத்துக் கொண்டு போகவில்லை .
புத்தியுள்ள ஐந்து பேர்   தீவட்டி எடுத்துக் கொண்டு போகும் போது
அதனுடன் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள்.

புத்தியில்லாதவர்கள் எண்ணெய் தீர்ந்தால் தீவட்டி எரியாதே
அதனால் தீவட்டிக்கு எண்ணெய் கொண்டு செல்ல வேண்டுமே
என்று அவர்கள் நினைக்கவில்லை .
புத்தியுள்ளவர்கள் தீவட்டியில் உள்ள எண்ணெய் தீர்ந்தால்
தீவட்டி அணைந்து விடும் .
தீவட்டி அணையாமல் தொடர்ந்து
எரிய எண்ணெய் வேண்டும் என்பதை
தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து
நிகழ்கால செயலை எதிர்கால விளைவுடன் தொடர்பு படுத்தி
எண்ணெய் கொண்டு சென்றனர்.

மணவாளன் வர தாமதமானதால் அவர்கள் துhங்கி விட்டார்கள் .
நடுராத்திரியிலேயே மணவாளன் வருகிறார் ;
எதிர்கொண்டு வருகிறார்  ; எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் ;
என்ற சத்தம் உண்டாயிற்று .
சத்தம் கேட்டு விழிப்புற்ற கன்னிகைகளில்
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள்
புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளை நோக்கி ,
எங்கள் தீவட்டிகள் அணைந்து போகும் நிலையில் உள்ளது
உங்களிடமுள்ள எண்ணெயில்
எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள் என்றனர்.

புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் எங்களிடமுள்ள எண்ணெயில்
உங்களுக்கு கொஞ்சம் கொடுத்து இருவரும் எண்ணெயை
தேவைக்கேற்றபடி செயலுக்கு உகந்த படி
பயன்படுத்துவது என்பது இயலாத காரியம் .
ஆகவே உங்கள் தேவைக்கேற்ற படி
விற்கிறவர்களிடத்திற் போய்
உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள்

என்றனர் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள்


புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்க போன போது
மணவாளன் வந்து விட்டார் .
ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் நிகழ்கால செயலை
எதிர்கால விளைவுடன் ஒப்பிட்டு செயல்படுத்தியவர்கள்
ஆராய்ந்து செயல்பட்டவர்கள் ;
இந்த செயலுக்கு இந்த விளைவு தான் ஏற்படும்
என்பதை உணர்ந்தவர்கள் ;
புத்தி தெளிந்தவர்கள் ;
சாதுர்யம் நிறைந்தவர்கள் ;
அறிவு விளக்கமடைந்தவர்கள் ;
யோசித்து செயல்பட்டவர்கள் ;
ஆகியவற்றை தன்னுள் கொண்ட
என்ற தன்மைகளை தன்னுள் அடக்கிய
புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளும்
மணவாளனோடே கூடக்
கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் .
கதவும் அடைக்கப்பட்டது .

எதிர்காலச் சிந்தனையை தன்னுள் கொள்ளாத
செயலுக்குரிய விளைவை ஆராயாத
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும்
கதவு திறக்க வேண்டும்
ஆண்டவரே எங்களுக்காக கதவு திறக்க வேண்டும் என்று கூக்குரலிட
அதற்கு அவர்  உங்களை நான் அறியேன் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்றார் .

நம்மில் பலர்  புத்தியுள்ளவர்களாகவும்
புத்தியில்லாதவர்களாகவும் இருக்கிறோம்

ஆண்டவரை விசுவாசித்து
ஆண்டவர்  மேல் நம்பிக்கை கொண்டு
ஆண்டவர்  மேல் அன்பு கொண்டு
ஆண்டவர்  வரவை எதிர்  நோக்காமல்
ஆண்டவருடன் இணைந்து செல்லக் கூடிய
ஆண்டவர்  வழி நடக்கக் கூடிய
ஆண்டவர்  காட்டும் பாதை வழி பயணிக்காமல்
அறிவை இழந்து
உள்ளம் தடுமாறி
கற்பனைக் கோட்டையில் மிதந்து
பிறருக்கு தீங்கிழைக்கும் செயல்களைச் செய்து
மற்றவர்  மனதை வாட்டி
எளியோரை வதைத்து ;
வறியோரை மிதித்து ;
ஏழ்மையை அவமதித்து ;
நல்லோரை அழித்து ;
நாணயமுள்ளோரை சிதைத்து ;
கருணையுள்ளோரை புதைத்து ;
இரக்கமுள்ளோரை எரித்து ;
அன்பு பாராட்டாமல்
யாரையும் அரவைனைத்துச் செல்லாமல்
அகம்பாவம் பிடித்து
ஆணவ மிகுதியில்
சிற்றின்ப சகதியில் புரண்டு
பாவங்களை உற்பத்தி செய்து
பாவங்களை சுமந்து கொண்டு

செல்கின்றனர் புத்தியில்லாதவர்கள்


செயலுக்குரிய விளைவை பகுத்து ஆராய்ந்து ,
நிகழ்காலத்தை எதிர்காலத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்து ,
தற்கால செயல்களை எதிர்கால விளைவுடன்
ஒப்பிட்டு ஆராய்ந்து ,
செயல்களை வகுப்பதால் பாவம்
மீள முடியாத நரகத்தையும் ,
ஆற்ற முடியாத ரணத்தையும் ,
தாங்க முடியாத துயரத்தையும் ,
சொல்ல முடியாத துன்பத்தையும் ,
காட்ட முடியாத வேதனையையும் ,
கொண்டு வரும் என்பதை மனதில் நிறுத்தி
அல்லவைகளை நீக்கி , நல்லவைகளை செய்து
புண்ணியத்தை சேர்த்து
வாழ்க்கையை நடத்துகின்றனர்  புத்தியுள்ளவர்கள்.

புத்தியுள்ளவர்கள் புண்ணியம் சேர்க்கின்றனர் ;
புத்தியில்லாதவர்கள் புண்ணியம் சேர்ப்பதில்லை;

ஆண்டவர்  வரும் நாளிலே ,
நியாயத் தீர்ப்பு வழங்கும் வேளையிலே ,
புண்ணியம் சேர்த்து வைத்த புத்தியுள்ளவர்களை
ஆண்டவர்  தம்முடன் அழைத்துச் செல்வார் .

புத்தியில்லாதவர்கள் புண்ணியம் செய்யாதவர்கள் ஆண்டவரே
எங்களையும் ஏற்றுக் கொள்ளும் என்றால்
எங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கூக்கூரலிட்டால்
எங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கதறி அழுதால்
உங்களை அறியேன் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்று ஆண்டவர்  
புத்தியில்லாதவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்

புத்தியுள்ளவர்களை மட்டும் தன்னுடன் ஏற்றுக் கொள்வார்.
.

ஆண்டவர்  எப்பொழுது வருவார்
எந்த நேரத்தில் வருவார்
எந்த காலத்தில் வருவார்
என்பது ஒருவருக்கும் தெரியாது ஆகையால்
ஆண்டவர்  வரவை எதிர்பார்த்து
எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள்
நல்லதே நினைத்து நல்லதே சொல்லி
நல்லதே செய்து வாருங்கள்
நல்வழி சென்று நேர்வழி நின்று
புண்ணியத்தை சேர்த்து வைப்பதன் மூலம்
ஆண்டவரின் அன்பை
ஆண்டவரின் அருளைப் பெறமுடியும்
என்கிறார்  இயேசு .



அழுகணிச் சித்தர் :

“”“முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பி பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை அடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
                கோலமிட்டுப் பாரேனோ !””“
                   ------அழுகணிச்சித்தர்---பெரியஞானக் கோவை-----

அனைத்தும் ஒன்றாக இருந்தது ;
அனைத்தும் ஒன்றுக்குள் இருந்தது ;
அனைத்தும் ஒன்றாக இணைந்திருந்தது ;
அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்திருந்தது ;
அந்த ஒன்று இரண்டாகப் பிரிந்தது .

பேருயிரிலே கலந்து நின்ற சிற்றுயிரானது
பேருயிரிலேயிருந்து பிரிந்து தனியே வந்தது .
பேருயிர் , சிற்றுயிர்  என இரண்டானது .
இதுவே ஜீவாத்மா , பரமாத்மா என அழைக்கப்படுகிறது .
அமைதி நிலையான - இருப்பு நிலை
இயக்க நிலையாக மாற்றம் பெறும் போது
பேருயிர் , சிற்றுயிர்  என்ற
இரு நிலைகளைக் கொண்டதாக இருக்கிறது .

பிரிந்து வந்த ஒன்று , தான் இணைந்து நின்ற ஒன்றை
நாடுவது இயற்கையின் இயல்பு .
பிரிந்து வந்த சிற்றுயிர்  தான் இணைந்து இருந்த பேருயிரை
நாடிச் செல்வது இயல்பு .
இணைந்த இரண்டு பிரிந்து போய்
மீண்டும் , மீண்டும் இணைவதற்காக
சிற்றுயிர் ,  பேருயிருடன் இணைவதற்காக
மேற்கொள்ளும் முயற்சியே ,
தவிக்கின்ற தவிப்பே ,
மெய்ப்பொருள் நாட்டம் .
பிரிந்த சிற்றுயிருக்குள்ளே உட்கலந்து நிற்கிறது
அந்த மெய்ப்பொருளாகிய பேருயிர்  என்னும் சோதி ;
பேருயிரில் எப்படி சிற்றுயிர்  இருந்ததோ அவ்வாறே
சிற்றுயிரிலும் பேருயிர்  உட்கலந்து நிற்கிறது ;

பேருயிரிலிருந்து சிற்றுயிர்  பிரிந்த பின்பும்
சிற்றுயிரில் பேருயிர்  கலந்து நிற்கிறது .
பேருயிரிலிருந்து சிற்றுயிர்  பிரிந்த பின்பும்
பேருயிர்  சிற்றுயிரில் உட்கலந்து நின்ற போதும்
சிற்றுயிர்  பேருயிரை உணர முடியாமல் தவிக்கிறது .

சிற்றுயிரை அறியாமை இருளானது
சூழ்ந்து மறைப்பதால் ,
மாயை சூழ்ந்திருப்பதால் ,
இருளானது கவ்வி இருப்பதால் ,
பேருயிரிலிருந்து பிரிந்த சிற்றுயிரானது
தான் எதிலிருந்து பிரிந்து வந்ததோ
அந்த பேருயிரை உணர முடியாமல் தவிக்கிறது .

பேருயிரை உணர்வதற்கும், அறிவதற்கும் ,அடைவதற்கும்,
நாடுவதற்கும் ,இணைவதற்கும் ,பிணைவதற்கும்
சிற்றுயிர்  பேருயிருடன் இணைந்து
பழைய நிலையை அடைவதற்கும் ;
ஆதி நிலையை தொடுவதற்கும் ;
முதல் நிலையை உணர்வதற்கும் ;
பல , பல ஜென்மங்களாக பிறவி பல எடுத்து ,
கர்ம வினையில் சிக்கி ,
பிறப்பு - இறப்பு சூழலில் மாட்டி ,
துன்பச் சகதியில் சிக்குண்டு ,
சிற்றுயிர்  பேருயிருடன் இணைவதற்காக
மேற்கொள்ளும் முயற்சியே
போராடும் நிலையே
மெய்ப்பொருள் நாட்டம் - இதனையே
சிற்றுயிர்  பேருயிரை நாடுவது ,
ஜீவாத்மா பரமாத்மாவை நாடுவது ,
ஜீவாத்மா பரம்பொருளை நாடுவது,
ஜீவாத்மா மெய்ப்பொருளை நாடுவது ,
அடைவது இணைவது ஒன்றாவது என்று சொல்லலாம் .

எதில் இருந்ததோ ,
எதில் கலந்திருந்ததோ ,
எதிலிருந்து வந்ததோ ,
எதிலிருந்து பிரிந்ததோ ,
அதிலே இணைவது
ஒன்றாவது என்பதே இயற்கை நீதி .
இதை உணர்வதே பிரம்மஞானம்
அதை அடைவதே முக்தி .

எல்லா சிற்றுயிரும் பேருயிரை நாடும்
என்று சொல்லமுடியாது .
சிற்றுயிரின் ,
கர்ம வினைப் பதிவுகளுக்கேற்ப ;
ஊழ்வினையின் உந்துதலுக்கேற்ப ;
பயிற்சியின் தாக்கத்திற்கேற்ப ;
முயற்சியின் உயர்வுக்கேற்ப ;
அறிவின் தெளிவிற்கேற்ப ;
சிந்தனையின் தாக்கத்திற்கேற்ப ;
பிறப்பின் கடமைக்கேற்ப ;
விதியின் செயலுக்கேற்ப ;
மதியின் துhண்டுதலுக்கேற்ப ;
அனுபவத்தின் விளக்கேத்திற்கேற்ப ;
செயல்களின் நடைமுறைக்கேற்ப ;
தேடுதலின் விளைவுக்கேற்ப ;
கடமையின் உழைப்புக்கேற்ப ;
நாட்டத்தின் தன்மைக்கேற்ப ;
ஒழுக்கத்தின் நடத்தைக்கேற்ப ;
சிற்றுயிர்  பேருயிரை நாடிச் செல்லும் .

பேருயிரான பரம்பொருள்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கு இருக்கிறான் ; எப்படி இருக்கிறான் ;
எந்த விதத்தில் இருக்கிறான் ;
எத்தகைய தன்மையை தன்னுள் கொண்டிருக்கிறான் ;
என்பதை முதலில் அறிய வேண்டும் .



“”“முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே”””
முத்து முகப்பு என்றால்
முத்தை அடையக் கூடிய வாசல் என்று பொருள்.
முத்து எங்கே இருக்கிறது சிப்பிக்குள் இருக்கிறது ;
முத்து எதற்குள் இருக்கிறது சிப்பிக்குள் இருக்கிறது ;
சிப்பிக்குள் முத்து இருக்கிறது என்ற விவரம்
முதலில் நமக்குத் தெரிய வேண்டும் .
முத்து எங்கே இருக்கிறது ;
எதற்குள் இருக்கிறது ;
எந்த நிலையில் இருக்கிறது ;
அதனைக் காணும் வழியாது ;
அதனை எடுக்கும் முறையாது ;
அதனை துய்க்கும் நிலையாது ;
என்ற விவரங்கள் தெரிந்தால் மட்டுமே
அதாவது முத்து சிப்பிக்குள் இருக்கிறது
என்ற விவரங்கள் தெரிந்தால் மட்டுமே ,
சிப்பியின் வாசலை திறந்து சென்று
முத்தை அடைய முடியும் .
முத்தை கைப்பற்றி அவரவர்  நிலைக்கேற்ப
அதைக் கையாள முடியும் .
தன் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்திக்
கொள்ள முடியும் .
அதைப்போல கடவுள் எங்கு இருக்கிறார் ;
எந்த இடத்தில் இருக்கிறார் ;
அவரை அடையும் வழி எது என்று தெரிந்தால் மட்டுமே
கடவுளை அடைய முடியும் .
இறைவன் இருக்குமிடத்தை அறிந்து ,
இறைவனை அடையக்கூடிய வழிமுறைகளைத் தெரிந்து ,
இறைவன் இருக்கும் வாசலைத் திறந்து ,
சென்றால் மட்டுமே இறைவனை அடையலாம் .

முச்சந்தி வீதி என்றால்
மூன்று வீதிகள் சந்திக்கும் இடம் என்று பொருள் .
மூன்று வீதிகள் நம் உடலில்
எங்கு சந்திக்கின்றன ;
எந்த விதத்தில் சந்திக்கின்றன ;
என்பதை முதலில் அறிய வேண்டும் .

இரண்டு கண்களுக்கு இடையில் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து
அதாவது தலையின் முன்பக்கத்திலிருந்து நேராக உள் நோக்கி
தலையின் பின் பக்கம் வரை ஒரு கோடு வரைய வேண்டும்
இதுவே ஒன்றாவது வீதி .

தலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி
ஒரு கோடு வரைய வேண்டும்
இதுவே இரண்டாது வீதி .

ஒரு காதிலிருந்து மற்றொரு காதுக்கு உள்நோக்கி
ஒரு கோடு வரைய வேண்டும்
இதுவே மூன்றாவது வீதி.

இந்த மூன்று கோடுகளும்
அதாவது மூன்று வீதிகளும் சந்திக்கும் புள்ளி
முச்சந்தி வீதி என்று அழைக்கப்படும்.
இறைவன் இருக்குமிடம் இந்த முச்சந்தி வீதியில் தான்.

முகப்படியோ முச்சந்தி வீதியிலே என்றால்
மூன்று வீதிகள் இணையும் இடத்தில் உள்ள
முச்சந்தியில் உள்ள இறைவனை அடைவதற்கான
முகப்பு வாசல் அடியில் இருக்கிறது
முச்சந்தி அடியில் இருக்கிறது என்று பொருள் .

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே என்றால்
சிப்பிக்குள் முத்து இருக்கிறது என்பதை உணர்ந்து ,
அதை அடையக்கூடிய வழிமுறைகளை ஆராய்ந்து ,
அதை அடைந்து தன் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதைப் போல
நம் உடலில் கடவுள் முச்சந்தி வீதியில் இருக்கிறான்
என்பதை உணர்ந்து ,
மூன்று வீதிகள் இணையும் இடத்தில் உள்ள
முச்சந்தியில் உள்ள இறைவனை அடைவதற்கான
முகப்பு வாசல் அடியில் இருக்கிறது
முச்சந்தி அடியில் இருக்கிறது என்பதை உணர்ந்து ,
அவனை அடையக்கூடிய வழிகளை
ஆராய வேண்டும் என்று பொருள் .



பத்தாம் இதழ்பரப்பி பஞ்சணையின் மேலிருத்தி””
பத்தாம் என்றால் பத்தாவது வாசல் என்றும்
குவிந்து என்றால் மூடியிருக்கிறது என்றும்
பரப்பி என்றால் விரிந்திருக்கிறது திறந்திருக்கிறது என்றும்
பொருள் கொள்ளலாம் .

பத்தாம் இதழ் பரப்பி என்றால்
பத்தாவது வாசலைத் திறந்து என்று பொருள் .

நமது உடலில் ஒன்பது ஓட்டைகள் உள்ளன :
இந்த ஒன்பது ஓட்டைகளை
ஒன்பது வாசல்கள் என்கிறோம் .
ஒன்பது வாசல்கள் எனப்படுபவை :
கண்கள் இரண்டு ,
மூக்கினுடைய துவாரங்கள் இரண்டு ,
காதுகள் இரண்டு ,
வாய் ஒன்று ,
மூத்திர துவாரமான ஒரு லிங்கம் ,
மலதுவாரமான ஒரு குதம்.

கழுத்துக்கு மேலே 7 வாசல் ,
கழுத்துக்கு கீழே 2 வாசல் ,
ஆக மொத்தம் 9 வாசல் .
நமது உடலில் 9 வாசல்கள் உள்ளது .
பத்தாவது வாசல் சூட்சும வாசல் ,
இறைநிலைக்கான நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது.

அணை என்றால் தடுத்து வைத்தல் என்று பொருள்.
தன்னை கடந்து செல்லாமல் தடுத்தல்
தன்னுள் உட்புகாமல் தடுத்தல் என்று பொருள்.

பஞ்சு +  அணை =  பஞ்சணை
பஞ்சணை என்றால் பஞ்சைப் போன்ற மெல்லிய அணை
அதாவது பஞ்சைப் போன்ற மெல்லிய சவ்வு என்று பொருள்.

பத்தாவது வாசலை மெல்லிய சவ்வுப் படலம் மூடி இருக்கிறது.
பத்தாவது வாசலை கடந்தால் இறைவனை அடையலாம்.
பத்தாவது வாசலை மூடியுள்ள , பஞ்சால் செய்யப்பட்ட ,
அணை போல் உள்ள ,மெல்லிய சவ்வு படலத்தை விலக்கி
உட்புகுந்து செல்ல வேண்டும் .

பத்தாவது வாசலை கடந்து உள்ளே செல்ல வேண்டுமானால்
கர்ம வினைகள் முழுவதும் கழிந்து இருக்க வேண்டும் .
கர்ம வினைகள் முழுவதும் கழிந்தால் மட்டுமே
பத்தாவது வாசலைத் திறந்து உட்புக முடியும்.
கர்ம வினைகள் கழிய வேண்டுமானால்
சிற்றின்பங்கள் புதைக்கப்பட வேண்டும் ;
பேரின்பங்கள் நுகரப்பட வேண்டும் ;
கர்மவினைகள் கழித்தவனால் மட்டுமே
கர்மவினையை கழிக்கும் திறமை உடையவனால் மட்டுமே
கர்மவினையை எரிக்கும் வல்லமை பெற்றவனால் மட்டுமே
பத்தாவது வாசலைத் திறந்து உட்புக முடியும் .
மற்றவர்களால் பத்தாவது வாசலைத் திறந்து உட்புக முடியாது .



“”அத்தை அடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே””
அத்தை அடக்கிநிலை என்றால்
பத்தாவது வாசலைத் திறப்பதற்கான
திறவுகோலான கர்மவினைகளை கழித்த நிலை
என்று பொருள் .

அத்தை அடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே என்றால்
பத்தாவது வாசலைத் திறக்கும் திறவுகோலான
கர்மவினைகளை கழித்த நிலையில்
ஆத்மாவானது எந்தப் பதிவுகளும் இல்லாமல்
துhய்மையாக இருக்கும் ஒரு நிலை என்று பொருள் .

கர்மவினைகளைக் கழித்து பத்தாவது வாசலை
எப்படி திறப்பது என்பதற்கான வழிமுறைகளை
அடுத்த அடிகளில் கூறுகிறார் .



“”குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
                கோலமிட்டுப் பாரேனோ !””“
குத்து விளக்கேற்றி என்றால்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும்
குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பி
மேலேற்றுதல் என்று பொருள் .

கோலமிட்டு என்றால்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும்
குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி ,
மேலே எழச் செய்து ஆதாரங்களைத் துளைத்து ,
சக்தியைப் பெற்று ,
ஆறாதாரங்களைக் கடந்து,
பத்தாவது வாசலை அடைதல் என்று பொருள் .

குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
           கோலமிட்டுப் பாரேனோ என்றால்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும்
குண்டலினி சக்தியை எழுப்பி மேலே எழச் செய்து ,
ஆதாரங்களைத் துளைத்து , சக்தியைப் பெற்று ,
ஆறாதாரங்களைக் கடந்து ,
பத்தாவது வாசலை அடைந்து ,
அதனைத் திறந்து உட்புகுந்து ,
ஜோதி வடிவமாக உள்ள , இறைவனை தரிசித்தல்
என்று பொருள் .

இறைவன் இருக்குமிடத்தை அறிந்து ,
இறைவனை அடையக்கூடிய வழிமுறைகளை உணர்ந்து ,
இறைவனை அடையக்கூடிய ,
வழிமுறைகளை பயன்படுத்தி ,
இறைவனை அடைந்து ,
தான் அவனாக மாறி ,
உயர்வான நிலையை அடைவேன்
என்கிறார்  அழுகணிச்சித்தர் .



இயேசு கிறிஸ்து - அழுகணிச்சித்தர் :
இயேசு ,
ஆண்டவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள்
சிற்றின்ப சகதியில் சிக்கி
பாவமூட்டைகளை சேர்க்காமல்
புண்ணியத்தை சேர்ப்பதன் மூலம்
உயிரினங்கள் ஆண்டவருடன் இணைய முடியும்
என்கிறார் .

அவ்வாறே ,
அழுகணிச்சித்தரும் ,
பேருயிரிலிருந்து பிரிந்து ,
மாயையில் விழுந்து ,
கர்மவினையில் சிக்கி ,
பிறப்பு - இறப்பு சுழற்சியில் மாட்டி ,
ஜென்மம் பல எடுத்து ,
சிற்றுயிரானது கர்மவினைகளைக் கழிப்பதன் மூலம்
மீண்டும் பேருயிரோடு இணைகிறது
என்கிறார் .


          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                               போற்றினேன் பதிவுஐம்பத்துஒன்று ந்தான்முற்றே “”