April 10, 2013

இயேசு கிறிஸ்து-திருமூலர்-தன்னை-பதிவு-62


இயேசு கிறிஸ்து-திருமூலர்-தன்னையறிந்திடும் - பதிவு-62

                        “””பதிவு அறுபத்திஇரண்டை விரித்துச் சொல்ல
                                                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
          
இயேசு கிறிஸ்து :

பின்பு , அவர்கள் பிரயாணமாய்ப் போகையில் , அவர்  ஒரு கிராமத்தில் பிரவேசித்தார்.  அங்கே மார்த்தாள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள்.”
-----லுாக்கா -  10 : 38
அவளுக்கு மரியாள் எனப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள் ; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து , அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.”
-----லுாக்கா -  10 : 39
 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து : ஆண்டவரே , நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும் படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.”
-----லுாக்கா -  10 : 40
 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக : மார்த்தாளே , மார்த்தாளே , நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப் பட்டுக் கலங்குகிறாய்.”
-----லுாக்கா -  10 : 41
 தேவையானது ஒன்றே ,மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள் என்றார்.”
-----லுாக்கா -  10 : 42

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் ;
இந்த உலகத்தில் உள்ள உயிர்களைப் படைத்தார் ;
உயிர்கள் உயிர்  வாழ்வதற்கு தேவையானவைகளைப் படைத்தார் ;
உயிர்கள் ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருந்து
தன் தேவைகளை பூர்த்தி செய்து
கொள்ளும் நிலைதனைப் படைத்தார் ;
இந்த சமூகத்தில் தனக்கு தேவையானவைகளைப்
பெற்றுக் கொள்ளும் செயல்தனைப் படைத்தார் ;
உயிர்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து உறவாடி வாழும்
முறைதனைப் படைத்தார் ;
எல்லா உயிர்களும் எல்லா வகை தேவைகளையும்
நிறைவு செய்யும் வழிதனைப் படைத்தார் ;
உயிர்களுக்கு தேவையானவைகள் எங்கே எப்பொழுது
எப்படி கிடைக்கும் என்ற
கால மாற்றத்தின் கணக்கைப் படைத்தார் ;
செயல்களின் விளைவுகளை உணர்ந்துகொள்ளும்
மதி தன்னைப் படைத்தார் ;
பாவ - புண்ணிய நிகழ்வுகளின் மறை பொருள்களை படைத்தார் ;
உயிர்கள் துன்பமற்று வாழ்வதற்கு உரிய
ஒழுக்கக் கோட்பாடுகளைப் படைத்தார் ;
உயிர்கள் உண்மையை உணர்வதற்கும்
உயர்வுகளை அடைவதற்கும்
உரிய தத்துவக் கோட்பாடுகளைப் படைத்தார் ;
மனிதன் தன்னை அறிவதற்கும்
தன்னை படைத்தவனை உணர்வதற்கும்
உரிய அறிவை படைத்தார் ;

இத்தகைய
எல்லா இடங்களிலும் ,
எல்லா பொருட்களிலும் ,
நீக்கமற நிறைந்திருக்கும் வல்லமை மிக்க இறைவனை
நாம் அணு அளவும் மறக்காமல் என்றும் நினைக்க வேண்டும்
அவரை துதிக்க வேண்டும்
அவரின் வல்லமையின் தன்மையை பறை சாற்ற வேண்டும்
அவர்  புகழை துதித்து போற்ற வேண்டும் .

இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான்
இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான்
இறைவன் எல்லா உயிர்களையும் வழி நடத்துகிறான்
இறைவன் எல்லா உயிர்களுக்கும் தேவையானவைகளை
தேவைப்படும் சமயத்தில் அளிக்கிறான்
இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் சமம்
இறைவன் முன் அனைவரும் சமம் .

எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பேதம் நீக்கி
ஒற்றுமை உணர்வுடன் ஒருவருக்கொருவர்
ஒத்தும் உதவியும் வாழ வேண்டும் - என்று
ஆன்மீகத்தில் சொல்லப்பட்டால் அது பக்தி .

அண்டத்தில் கடவுளாக உள்ளவன்
பிண்டத்தில் உயிராக இருக்கிறான்
அண்ட சராசரங்களை படைத்து காத்து
வழி நடத்தி வரும் இறைவன்
அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கிறான்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் .

அனைத்து மனிதருக்குள்ளும் இறைவன் இருக்கும் போது
ஒருவன் மற்றவருக்கு செய்யும் தீங்கு
அந்த இறைவனுக்கு செய்யும் தீங்கு
என்பதை உணர வேண்டும் .

இறைவன் அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறான்
என்று மனிதன் உணரும் போது தான் ,
மனிதன் எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல்
தன்னைப் போல் பிற உயிர்களை நேசிப்பான் .

இந்த சமுதாயத்தில்
அன்பு தழைக்க வேண்டுமானால் ,
கருணை பிறக்க வேண்டுமானால் ,
இரக்கம் தவழ வேண்டுமானல் ,
ஈகை பெருக வேண்டுமானால் ,
பொறுமை வளர வேண்டுமானால் ,
நிதானம் உருவாக வேண்டுமானல் ,
அமைதி செழிக்க வேண்டுமானால் ,
சமாதானம் தழைக்க வேண்டுமானால் ,
சமதர்மம் மலர வேண்டுமானால் ,
சினங்கள் தவிர்க்கப்பட வேண்டுமானால் ,
பேராசை குறைய வேண்டுமானால் ,
உயர்வு- தாழ்வு மனப்பான்மை அகல வேண்டுமானால் ,
வஞ்சம் மறைய வேண்டுமானால் ,
தவறுகள் திருத்தப் பட வேண்டுமானால் ,
உண்மைகள் உயர வேண்டுமானால் ,
மறுமலர்ச்சி அடைய வேண்டுமானால் ,
உறவுகள் புரிய வேண்டுமானால் ,
பாசங்கள் தெரிய வேண்டுமானால் ,
உணர்வுகள் விழிக்க வேண்டுமானால் ,
இறைவன் அனைத்துள்ளும் அனைத்து உயிர்களுக்குள்ளும்
இறைவன் இருக்கிறான் என்பதை உணர வேண்டும் .

அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான்
என்பதை உணரும் போது தவறுகள் நிகழ வாய்ப்பில்லை .
இறைவன் அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன்
இருக்கிறான் என்பதை உணராததே
சமுதாயத்தில் தவறுகள் நிகழ காரணம் .

சமுதாயத்தில் தவறுகள் , குற்றங்கள் ஆகியவை
நிகழாமல் இருக்க வேண்டுமானால் ,
அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான்
என்பதை அனைத்து உயிர்களும் உணர வேண்டும் -  என்று
ஆன்மீகத்தில் சொல்லும் போது அதற்குப் பெயர்  ஞானம் .

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சமம்
எல்லா உடம்பில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு
எல்லோருக்கும் உடம்பில் கீறினால் இரத்தம் வரும்
எல்லோருக்கும் காயம் ஏற்பட்டால் வலிக்கும்
எல்லா உயிர்களுக்கும் பசிக்கும்
பசித்தால் சாப்பிடத்தான் முடியும் .
பணம் இருக்கிறது  ; வசதி இருக்கிறது ;
அதிகாரம் இருக்கிறது ,
என்ற நினைப்பில் தங்கத்தையும் , வைரத்தையும் சாப்பிட முடியாது
பசித்தால் அவரவர்  தேவைக்கேற்ப சாப்பாட்டைத் தான்
சாப்பிட முடியுமே ஒழிய
தங்கத்தையும் , வைரத்தையும் அரைத்து சாப்பிட முடியாது .
வெள்ளியை கரைத்து குடிக்க முடியாது .
பசித்தால் பசிக்கு உணவைத் தான் சாப்பிட முடியும்
மற்ற எதையும் சாப்பிட முடியாது .

அப்படியிருக்க ,
சமுதாயத்தில் ஒரு பிரிவினரை அடிமையாக்கி
அறியாமை நிலையை உருவாக்கி
கோடி கோடியாக சொத்து சேர்த்து என்ன பயன்
அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் .
சமத்துவ நிலையை உருவாக்க வேண்டும் ;
ஆண்டான் அடிமை நிலை விலக வேண்டும் ;
ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும் ;
பிளவுகள் எரிக்கப் பட வேண்டும் ;
வேற்றுமைகள் அகல வேண்டும் ;
எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் ;
என்ற நிலை உருவாக வேண்டும்
என்று சமுதாயத்தில் ஒருவர்  சொல்லும் போது
அவருக்குப் பெயர்  
சமூக சீர்திருத்தவாதி
சமூக புரட்சியாளர் .

பக்தி நிலையில் இருந்து சொல்லும் போதும் ;
ஞான நிலையில் இருந்து சொல்லும் போதும் ;
சமூக சீர்திருத்த நிலையில் இருந்து சொல்லும் போதும் ;
மூன்று வெவ்வேறு நிலையில் இருந்து சொல்லும் போதும்
அவர்கள் சொல்லும் கருத்து ஒன்று தான்
மனிதர்கள் ஒருவரை ஒருவர்  நேசிக்கணும் .

பக்தி நிலையில் இருந்து சொல்வது என்பது
சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டால் நன்மை பயக்கும்
ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உன் பொறுப்பு - என்று
கருத்தை சமுதாயத்திற்கு சொல்லி விட்டு சென்று விடுவது .

ஞான நிலையில் இருந்து சொல்வது என்பது
கருத்தை ஏற்றுக் கொண்டால்
உனக்கு நன்மை உண்டாகும் என்று வலியுறுத்தி சொல்லுவது .

சமூக சீர்திருத்த்தில் இருந்து சொல்வது என்பது
கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் என்றும்
எந்த விதமான எதிர்  விளைவுகளையும் பற்றிக் கவலைப்படாமல்
தொடர்ந்து துணிந்து கருத்துக்களைக் கூறி
சமுதாய மாற்றத்திற்கான செயல்களை வகுத்து
சமுதாயத்தை குறிப்பிட்ட கருத்தின் பின்னால்
வலியுறுத்தி அழைத்துச் செல்லுவது .

பக்தி நிலை என்பது அமைதியான நிலை ;
ஞான நிலையும் , சமுதாய சீர்திருத்த நிலையும் புரட்சிகரமான நிலை ;
அமைதியான நிலை சமுதாயத்தை பார்க்க வைக்கும்
ஞான நிலையும் , சமுதாய சீர்திருத்த நிலையும்
சமுதாயத்தை செயல்பட வைப்பதற்கான செயல்முறைகளை உருவாக்கும் .

அதிகார வர்க்கமும் , ஆதிக்க வர்க்கமும்
அமைதியான நிலையைத் தான் விரும்பும் .
ஞான நிலையையும் , சமுதாய சீர்திருத்த நிலையையும் விரும்பாது .

ஏனென்றால் சமுதாயத்தை மாற்ற
சமுதாயத்தை முன்னேற்ற பாதையில்
அழைத்துச் செல்ல பரட்சிகரமான நிலை தான் தேவை தவிர
அமைதியான நிலை அல்ல என்பதை உணர்ந்து இருக்கிறது .

பரட்சிரமான நிலை என்பது
ஆதிக்க வர்க்கத்தை எப்போதும் ஆட்டம் காணச் செய்யும்
அதிகார வர்க்கத்தை அலறச் செய்யும்
அதனால் புரட்சிகரமான நிலையை
சுகபோகத்தை அனுபவிக்கும்
வாழ்வில் மகிழ்ச்சியின்
உச்சத்தில் இருப்பவர்கள் விரும்ப மாட்டார்கள் .

ஆனால் மூன்று நிலைகளிலும்
அவ்வப்போது உயர்வான நிலை கொண்டவர்கள்
தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .
சிலர்  ஒரு நிலையிலோ
சிலர்  இரு நிலை கொண்ட மனதுடன் தான் இருப்பார்கள் .
மூன்று நிலைகளையும் தன்னுள் கொண்ட உயர்வானவர்கள்
உண்மையை உணர்ந்தவர்கள்
சமுதாயத்தில் தோன்றுவது அபூர்வம் .

அத்தகைய அபூர்வத்தில் ஒரு சிலர்
இந்த சமுதாயத்தில் தோன்றி இருக்கிறார்கள் .

இத்தகைய மூன்று நிலைகளைத் தன்னுள் கொண்டு
சமுதாயத்தில் தோன்றி
இச் சமுதாய மக்களுக்காக ,
சமுதாய முன்னேற்றத்திற்காக ,
சமுதாய மேன்மைக்காக ,
சமுதாய மாற்றத்திற்காக ,
சமுதாய விழிப்புணர்வுக்காக ,
செயல்களை வகுத்தவர்  தான் இயேசு கிறிஸ்து .

இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்
பக்தி நிலையிலும் ;
ஞான நிலையிலும் ;
சமூக சீர்திருத்த நிலையிலும் - என்று
மூன்று வெவ்வேறு நிலையில் இருந்தாலும்
அதனை உணர்ந்து கொண்டு
மனத்தெளிவு பெற்றவர்கள்
இயேசுவின் அருகில் இருந்தார்கள் .

இயேசுவின் வார்த்தையை
புரிந்து கொள்ளாமல்
மனத்தெளிவு பெறாமல் இருந்தவர்கள்
இயேசுவை விட்டு விலகி இருந்தார்கள் .

இயேசு தன் கருத்துக்களை அமைதியாக சொல்வதோடு
மட்டுமில்லாமல் ஆணித்தரமாகவும் சொன்னார் ;
உண்மைகளை சொன்னார் ;

அவர்  பிரயாணமாய்ப் போகையில்
ஒரு கிராமத்தில் பிரவேசித்தார் .

அங்கே மார்த்தாள் என்னும் ஸ்திரீ
அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள் .

அன்பை உணர்ந்தவர்கள்
அன்பின் உருவை ஏற்றுக் கொள்வார்கள் ;

நற்பண்பில் கரைந்தவர்கள்
நற்பண்பின் வழி காட்டுதலின்
உருவை ஏற்றுக் கொள்வார்கள் ;

இரக்கத்தில் உருகியவர்கள்
இரக்கத்தின் உருவை ஏற்றுக் கொள்வார்கள் ;

மார்த்தாள் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள் .

மார்த்தாளுக்கு மரியாள் என்ற சகோதரி இருந்தாள்
அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து
அவருடைய வசனங்களை ,
உவமைகளின் ஆழங்களை ,
உண்மைகளின் பொருள்களை ,
கேட்டுக் கொண்டு இருந்தாள் .

மார்த்தாள் பலவிதமான வேலைகளில் மூழ்கி இருந்தாள் ;
வேலையினால் களைத்தாள் ;
வேலைப் பளுவினால் உடல் வருந்தினாள் ;
மனம் உளைச்சலுற்றாள் ;
மன அழுத்தத்தினால் வேதனையுற்றாள் ;
வேலைப்பளு உடலை வருத்தியதோடு
மனதையும் வேதனைப் பட வைத்தது .

இதனால் ஏற்பட்ட மன பாதிப்பினால்  ,
அதிக வேலைப் பளுவினால் ,
ஏற்பட்ட மன உளைச்சலினால் ,
வேதனையுற்று வருத்தமடைந்து
இயேசுவினிடத்தில் வந்து ,
ஆண்டவரே நான் தனியே வேலை செய்கிறேன் .
வேலைப்பளு என்னை வாட்டுகிறது ;
உடல் களைப்பு என்னை வருத்துகிறது ;
நான் வேலை செய்ய என் சகோதரி
வேலை செய்யாமல் தனித்து இருக்கிறாள்
என் வேலையை குறைக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை .

என் வேலையில் பங்கெடுத்து
என் வேலைப்பளுவை குறைக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை .
வேலையை பகிர்ந்து செய்வதன் மூலம் வேலையை
குறைவான நேரத்தில் முடிக்கலாம் என்ற எண்ணம்
கூட அவளுக்கு இல்லை .
அவளுக்கு வேலை செய்யும் எண்ணம் இல்லை .
என் வேலைப்பளுவை குறைக்கும் மனதும் அவளுக்கு இல்லை .

என் நிலை இப்படியிருக்க என் என் சகோதரியை
என் வேலைப் பளுவை குறைக்கும் படி  ,
வேலையை பகிர்ந்து கொள்ளும் படி ,
வேலையில் பங்கெடுத்துக் கொள்ளும் படி ,
வேலையில் எனக்கு உதவிகள் செய்யும் படி ,
என் சகோதரிக்குச் சொல்லும் என்றாள் .

இயேசு அவளிடம் மார்த்தாளே  , மார்த்தாளே நீ
அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்
தேவையில்லாதவற்றுக்கு வருந்துகிறாய் .

உண்மை எது  - பொய் எது
என்பதை உணராமல் இருக்கிறாய்  ;
அழியக் கூடியது எது  - அழியாதது எது
என்பதை அறியாமல் இருக்கிறாய் ;
நித்தியமானது எது  - நித்தியமற்றது எது
என்பதை அறியாமல் இருக்கிறாய் ;
நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லப் போவது எது
நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லப் போகாதது எது
என்பதை அறியாமல் இருக்கிறாய் ;

நம்மை உண்மையுடன் இணைக்கப் போவது எது
நம்மை உண்மையுடன் இணைக்காமல் தடுப்பது எது

நம்மை பாவங்களிலிருந்து விடுவிக்கப் போவது எது
நம்மை பாவங்களிலிருந்து விடுவிக்காதது எது
என்பதை  அறியாமல் இருக்கிறாய் ;

நம்மை கடவுளை உணர்ந்து கொள்ள உதவுவது எது
கடவுளை உணர்ந்து கொள்ள உதவாதது எது

நம்மை கடவுள் அருகில் கொண்டு செல்வது எது
நம்மை கடவுள் அருகில் கொண்டு செல்லாமல் தடுப்பது எது

நம்மை கடவுளுடன் இணைப்பது எது
நம்மை கடவுளுடன் இணைய விடாமல் தடுப்பது எது
என்பதை நீ அறியாமல் இருக்கிறாய் ;

ஆனால் , உன் தங்கை அதை தெரிந்து கொண்டாள்
உண்மைக்கும் பொய்யுக்கும் உள்ள
வேறுபாட்டை தெரிந்து கொண்டாள் .
உண்மையை அறிந்து கொண்டாள் ;
நல்லவைகளை உணர்ந்து கொண்டாள் ;
வாழ்க்கையை புரிந்து கொண்டாள் ;

எதை ஏற்றுக் கொண்டால்
கடவுளின் அருகில் இருக்கலாம்
என்றும் ,
எதை ஏற்றுக் கொண்டால்
கடவுளின் ஸ்பரிசத்தை உணரலாம்
என்றும் ,
எதை ஏற்றுக் கொண்டால்
கடவுளின் வார்த்தைகளைக் கேட்கலாம்
என்றும் ,
அவள் அறிந்திருக்கிறாள் .

ஒருவர்  ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின் மேல்
பயணம் செய்ய முடியாது .
சிற்றின்பத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு
பேரின்பத்தின் நுழைவு வாயில் தெரியாது .

பேரின்பத்தில் திளைப்பவர்களுக்கு
சிற்றின்பத்தின் தழுவல்கள் அவசியமில்லை .

கடவுளை உணர்ந்தவனுக்கு மற்றவைகள் தேவையில்லை
மற்றவைகள் தேவைப்படுபவனுக்கு கடவுள் தேவையில்லை .

கடவுளை உணர்ந்தால் அனைத்தும் கிடைக்கும்
அனைத்தையும் வைத்துக் கொண்டு
நாம் கடவுளை எப்படி அடைய முடியும் .

கடவுளிடம் இணைந்து இருந்தால் அனைத்தும் கிடைக்கும்
அனைத்தும் கிடைக்க வேண்டுமானால்
கடவுளிடம் இணைந்து இருக்க வேண்டும் .

கடவுளுடன் இணைந்து
அவருடைய ஸ்பரிசத்தில் இருப்பவருக்கு
எதுவும் தேவையில்லை;
கடவுள் ஸ்பரிசத்தை உணராதவனுக்கு
அனைத்தும் தேவை .

இத்தகைய வேறுபாடுகளை ,
உண்மையின் தன்மைகளை  ,
அவள் உணர்ந்த காரணத்தினால்
தேவையானது எது என்பதையும்
தேவையற்றது எது என்பதையும்
அவள் அறிந்த காரணத்தினால் ,
அவள் என் அருகில் இருக்கிறாள் .
கடவுளின் ஸ்பரிசத்தில் இருக்கிறாள்
கடவுளின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டு இருக்கிறாள் .

அவள் என்னையும்
என் வார்த்தைகளையும் புரிந்து கொண்டாள் .
மனத்தெளிவு அடைந்ததுடன்
வாழ்வின் அர்த்தத்தையும்
தெரிந்து கொண்டாள் .

உண்மையை அவள்
உணர்ந்து கொண்ட காரணத்தினால்
என் அருகில் இருக்கிறாள்
என்கிறார்  இயேசு .



திருமூலர் :
தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே
                      -------திருமூலர்------திருமந்திரம்--------

வாழ்க்கை மூன்று நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது
ஒன்று     : நினைத்தது நடக்கும்
இரண்டு  : நினைத்தது நடக்காது
மூன்று     : நினைக்காதது நடக்கும்

வாழ்க்கையில் எதிர்ப்படும் செயல்களை ,
வாழ்க்கையை கடந்து செல்லும் நிகழ்வுகளை ,
வாழ்க்கையை பதம் பார்த்து விட்டு செல்லும் நினைவுகளை ,
வாழ்க்கையை சோகத்தில் ஆழ்த்தி விட்டு சென்ற வடுக்களை ,
வாழ்க்கையை கண்ணீர்  கடலில் மூழ்க வைத்த இழப்புகளை ,
வாழ்க்கையை வெறுக்க வைத்த துயரங்களை ,
வாழ்க்கையை முன்னேற விடாமல் தடுத்த தடைக்கற்களை ,
வாழ்க்கையை நெருப்பாற்றில் நீந்த வைத்த துன்பங்களை ,
காலம் நம் வாழ்க்கையை ஆட்டு வித்த சோகத்தின் சின்னங்களை ,
மட்டும் நினைவு கூர்வது மட்டுமில்லாமல் ,

மதிப்பின் உயர்வுகளை ;
உயர்வுகளின் அதிகாரங்களை ;
அதிகாரங்களின் அரியணைகளை ;
அரியணைகளின் அரசாட்சிகளை ;
அரசாட்சிகளின் ஆளுமைகளை ;
ஆளுமைகளின் இன்பங்களை ;
இன்பங்களின் சுவைகளை ;
சுவைகளின் மகிழ்வுகளை ;
மகிழ்வுகளின் நினைவுகளை ;
நினைவுகளின் அர்த்தங்களை ;

உணர்ந்து கொள்வோமாகில்
சிந்தித்து சீர்  துாக்கி பார்ப்போமாகில்
வாழ்க்கையில் சோகத்தின் ஆட்டங்கள் மட்டுமல்ல
இன்பத்தின் களியாட்டங்களும் நடை பெற்று இருப்பதை
உணர்ந்து கொள்ள முடியும் .

இன்னும் வாழ்க்கையை
நன்றாக ஆராய்ந்து பார்த்தோமாகில்
வாழ்க்கை மூன்று நிலைகளில்
இயங்கிக் கொண்டிருப்பதை ,
நடந்து கொண்டிருப்பதை ,
சுழன்று கொண்டிருப்பதை ,
உணர்ந்து கொள்ள முடியும் .

மற்ற அனைத்து நிகழ்வுகளும்
இந்த மூன்றுக்குள் தான்  அடங்கும் .

ஒன்று : நினைத்தது நடக்கும்
நாம் மருத்துவம் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் .
மருத்துவம் படிப்பதற்கான சீட்டும் கிடைத்து
மருத்துவம் படித்து மருத்துவராகி விடுகிறோம் .
இது நினைத்தது நடப்பது .

இரண்டு:  நினைத்தது நடக்காதது
நாம் அயல்நாடு சென்று
மருத்துவ பணி புரிய ஆசைப்படுகிறோம் .
அதற்காக முயற்சி செய்கிறோம் .
ஆனால் , நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும்
நாம் வெளிநாடு சென்று மருத்துவ பணி
புரிவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை ;
அந்த நிகழ்வு நடக்கவில்லை ;
இது நினைத்தது நடக்காதது .

மூன்று: நினைக்காதது நடப்பது
நான் இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறோம் ;
நிதானமாக செல்கிறோம் ;
சாலை விதிகளை கடை பிடித்து பயணிக்கிறோம் ;
அளவான வேகத்தோடு நிதானமாக கவனமாக செல்கிறோம் ;
ஆனால் லாரி ஒன்று நம் வாகனத்தில் மோதியதால்
வண்டியும் , நாமும் விபத்துக்குள்ளாகிறோம் .
அடிபபட்டு காலில் கட்டு போட்டு
எழுந்திருக்க முடியாமல் ,
நடக்க முடியாமல்  ,
படுக்கையில் படுத்திருக்கிறோம் .
நம் அன்றாட கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள
இன்னொருவர்  உதவியை நாடுகிறோம்
இயங்க முடியாமல் நம் கடமையை
செய்ய முடியாமல்  தவிக்கிறோம் .

நான் நினைத்து கூட பார்க்கவில்லை
இதெல்லாம் நடக்கும் என்று
மற்றவருடைய உதவியை நாடி
என் அன்றாட கடமைகளை முடிப்பேன் என்றும்
இது போன்ற ஒரு விபத்தில் சிக்கி
என் நிம்மதியை இழப்பேன் என்றும்
நான் நினைத்து கூட பார்க்கவில்லை  
என்று புலம்புகிறோம்
இது நினைக்காதது நடப்பது .

வாழ்க்கை இந்த மூன்றுக்குள் தான் நடந்து கொண்டிருக்கிறது
நினைத்தது நடந்தால்
அது என் முயற்சியால் கிடைத்தது என்றும் ;
அது என் கடின உழைப்பால் கிடைத்தது என்றும் ;
நினைத்தது நடப்பதற்கு
முயற்சி என்று பெயரிடுகிறோம் .

நினைத்தது நடக்க வில்லை எனில்
எவ்வளவு முயற்சி செய்தேன்
எவ்வளவு கஷ்டப் பட்டேன்
எவ்வளவு உழைத்தேன்
நான் விருப்பப்பட்டது கிடைக்கவில்லையே
எல்லாம் என் தலைவிதி என்று
விதியின் பெயரால்
நினைத்தது நடக்காததை
விதி என்று
பெயரிட்டு அழைக்கிறோம் .

நினைக்காதது நடந்தால்
அது நல்லதாக இருந்தால்
அதிர்ஷ்டம் என்றும் ,
அது கெட்டதாக இருந்தால்
துரதிர்ஷ்டம் என்றும்  ,
பெயரிட்டு அழைக்கிறோம் .

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை
மூன்று வெவ்வேறு பெயர்களில்
முயற்சி ,
விதி ,
அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம்
என்ற பெயர்களில் அழைக்கிறோம் .

நடக்கும் நிகழ்வுகளை நமக்கு ஏற்ற வகையில்
நமக்கு பொருந்தும் வகையில்
பெயரிட்டு அழைத்துக் கொள்கிறோம் .

நடக்கும் நிகழ்வு ஒன்று தான்
அதை நம்முடைய வசதிக்கு
ஏற்ற வகையில்
பெயரிட்டு அழைத்துக் கொள்கிறோம் .

நடக்க வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது ;
நிகழ வேண்டியது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ;
மலர வேண்டியது மலர்ந்து கொண்டே இருக்கிறது ;

நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய காலத்தில்
நடக்க வேண்டிய நேரத்தில்
நடந்து கொண்டே இருக்கிறது .

நடப்பது ஒன்று தான் ;
நிகழும் நிகழ்வும் ஒன்று தான் ;
செயல்படும் செயலும் ஒன்று தான் ;
அதை நாம் புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான்  ,
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை
நமக்கு ஏற்றவாறு பெயரிட்டு அழைத்து
சந்தோஷப் பட்டுக் கொள்கிறோம்
அல்லது
துக்கப்பட்டுக் கொள்கிறோம் .

நாம் மருத்துவராக வர வேண்டும்
என்று இருக்கிறது ,
அதை நினைத்ததால் நடந்து விட்டது என்கிறோம் .
நாம் வெளிநாடுசென்று மருத்துவ பணி ஆற்றும் நிகழ்வு
நம் வாழ்க்கையில் இல்லை
அதை நாம் நினைத்தது நடக்க வில்லை என்கிறோம் .

நாம் நினைக்காதது
அதிர்ஷ்டமாகவோ , துரதிர்ஷ்டமாகவோ வருகிறது
நாம் நினைக்கவில்லை நடந்தது என்கிறோம் .

வாழ்க்கையின் தத்துவத்தை ,
பிரபஞ்ச ரகசியத்தை ,
மறைபொருளின் சூட்சுமத்தை ,
கர்மவினையின் தாக்கத்தை ,
புரிந்து கொண்டால்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்வை புரிந்து கொள்ள முடியும் .

ஆறு ஓடுகிறது
ஆற்றத்தின் ஓட்டத்திலேயே பயணம் செய்தால்
நாம் பயணிக்க முடியும்
இது நாம் நினைத்தது நடப்பது .

ஆற்றின் ஓட்டத்திற்கு எதிர்  திசையில்
பயணிப்பது என்பது பயணத்தின்
குறிக்கோள் நிறைவடையாது
இது நாம் நினைத்தது நடக்காதது .

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவிக்கப்பட்டு
அதை பயன்படுத்தி நாம் பயணத்தை மேற்கொண்டால்
அது நினைக்காதது நடப்பது .

நாம் நினைத்தது நடக்கிறது என்றால்
நாம் நினைத்த அனைத்தும் நடந்திருக்க வேண்டும் ;
நாம் நினைத்தது நடக்க வில்லை என்றால்
நாம் நினைத்த அனைத்தும் நடவாது இருந்திருக்க வேண்டும்;
நாம் நினைக்காதது நடந்தது என்றால்
தொடர்ந்து அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ நடந்து
இருக்க வேண்டும் .

ஆனால் ,
நாம் நினைப்பது சில சமயங்களில் நடக்கிறது ;
நாம் நினைப்பது சில சமயங்களில் நடப்பதில்லை ;
நாம் நினைக்காதது  சில சமயங்களில்
அதிர்ஷ்டமாகவோ அல்லது துரதிர்ஷ்டமாகவோ நடக்கிறது .

இதலிருந்து ஒன்றை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்
அவ்வாறு நாம் யோசித்துப் பார்த்தோமாகில்
ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது
அதை நாம் புரிந்து கொள்ளாமல்
நாம் வாழ்க்கையில் தடுமாறுகிறோம்
தள்ளாடுகிறோம் .

அந்த ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்
மனம் தெளிவு பெற வேண்டும் என்றால்
உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் ;
இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் ;
இறைவனுடன் நெருங்கி இருக்க வேண்டும் ;
இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டும் ;

பிறப்பு - இறப்பு சுழற்சி நடப்பது என்பது
கர்ம வினையின் அழுத்தத்தை பொறுத்தது
கர்மவினை இல்லை என்றால் பிறப்பு இறப்பு இல்லை  .

கர்மவினை இருக்கும் வரைக்கும் பிறப்பு இறப்பு இருக்கும்
கர்மவினை இல்லை என்றால் பிறப்பு இறப்பு இருக்காது .

கர்மவினையை
சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம்
என்று மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள் .

முன் வினை :
முன் செய்த வினை என்பது  ,
பிறப்பதற்கு முன் செய்த வினை ஆகும் .
பிறப்பதற்கு முன் செய்த வினை
சஞ்சித கர்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது .
சஞ்சித கர்மம்
சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர்  முதல்
பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம்
கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள்
அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள்
சஞ்சித கர்மம் என்று அழைக்கப்படுகிறது .


பின் வினை:
பின் செய்த தீவினை என்றால்
பிறந்த பின் செய்த தீவினை என்று பொருள் .
பின் செய்த தீவனை என்பது பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம் ஆகிய
இரண்டு கர்ம வினைகள் ஆகும் .

பிராரப்த கர்மம்
நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள்
பிராரப்த கர்மம் என்று அழைக்கப்படுகிறது .
நாம் பிறந்து வாழும் காலத்தில் செய்யும்
செயல்களின் விளைவுப் பதிவு
தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை
நம் ஆன்மாவில் பதிந்து திரும்ப திரும்ப
ஆன்மாவுக்கு நினைவு ஊட்டி செயலுக்கு மாற்றும் விதியை
பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம் .

ஆகாம்ய கர்மம்
என்றால் ஆன்மா என்று பொருள் .
காம்யம் என்றால் இச்சை என்று பொருள் .
ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது
ஆகாம்ய கர்மம் எனப்படும் .

சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் ஆகிய
இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய
செயல்களின் பதிவுகளால்
இனி என்ன செய்ய வேண்டும் என்று
துாண்டப்படும் எண்ணங்களும் , செயல்களும்
ஆகாம்ய கர்மம் எனப்படும் .

சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம்
இந்த மூன்றும் சேர்ந்த கர்மவினையே
முன் வினை , பின் வினை என்று
சொல்லப்படக் கூடிய இந்த இருவினையே
நம் பிறப்பு - இறப்பு சுழற்சியை உண்டு பண்ணுகிறது .
இந்த கர்ம வினையை கழித்து
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுத்து
இறைவனுடன் இரண்டறக் கலந்து
இறைவனை உணர வேண்டும் .

ஆன்மாவை அறிந்து ,
ஆன்மாவின் பேராற்றலை அறிந்து ,
அதில் உள்ள இருப்பு நிலையை அறிந்து ,
தன்னை உணர்ந்து
தன் தலைவனை உணர்ந்தவனால் மட்டுமே
முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்க முடியும் .
முன்னை வினை என்றால்  ,
முன் வினை என்று பொருள் .
முன் வினை என்று அழைக்கப் படுவது சஞ்சித கர்மம் .

ஒரு அடி நீளமுள்ள கயிறுகள் 7 எடுத்துக் கொள்வோம் .
ஒவ்வொரு கயிறும்
ஒரு பிறவியாக கற்பனை செய்து கொள்வோம் .
ஒரு கயிறின் ஒரு முனை பிறப்பு என்றும் ,
மறுமுனை இறப்பு என்றும் முடிவு செய்து கொள்வோம் .
கயிறுகள் தனித்தனியாக இருக்கும் போது  ,
எதை குறிப்பிடுகிறது என்றால்
ஒருவர்  பிறக்கிறார்  இறக்கிறார்  என்பதைக் குறிக்கிறது .
இப்பொழுது 7 கயிறையும் முடிச்சு போட்டு இணைக்க வேண்டும்
எப்படி இணைக்க வேண்டும் என்றால் ,
ஒரு கயிறின் இறப்பு முனையுடன் மறு கயிறின்
பிறப்பு முனையுடன் இணைத்து முடிச்சு போட வேண்டும் .
இவ்வாறே 7 கயிறையும் ஒன்றாக இணைக்க வேண்டும்
இது எதைக் குறிப்பிடுகிறது என்றால்
பிறக்கிறோம் இறக்கிறோம் என்று தொடர்ச்சியாக
பிறவி பெருங்கடல் நீள்வதைக் குறிக்கிறது .

நாம் நான்காவது பிறவியில் இப்பொழுது இருக்கிறோம்
என்று முடிவு செய்து கொள்வோம் .
நான்காவது பிறவியுடன் நம் பிறவி முடிந்து விட வேண்டும்
என்று முடிவு செய்தால்  ,
நான்காவது கயிறின் இறப்பு முனையுடன்
முடிச்சு போடப்பட்டிருக்கும்
ஐந்தாவது கயிறின் பிறப்பு முனையை அவிழ்த்து விட வேண்டும் .

இதனால் ஐந்தாவது ,ஆறாவது , ஏழாவது என்ற
பிறவிகள் ஏற்படாமல் தடுத்து விடலாம் .
தொடர்ச்சியாக பிறவிப் பெருங்கடல் நீள்வதற்கு காரணம்
மூன்று கர்மங்களில் சஞ்சித கர்மம் முக்கிய
பங்கு வகிக்கிறது .

சஞ்சித கர்மம் தான் பிறவிப் பெருங்கடல்
நீள்வதற்கு காரணம் என்பதை உணர்ந்தவர்கள்
சஞ்சித கர்மத்தை கரைப்பார்கள்
அழிப்பார்கள் .

முன்வினை என்று சொல்லப்படக்கூடிய
சஞ்சித கர்மத்தை கழித்து விட்டால்
கயிறின் தொடர்ச்சி அறுபட்ட காரணத்தால்
முடிச்சு அவிழ்க்கப்பட்ட காரணத்தால்
பிறப்பு இறப்பு சுழற்சி அறுபடுகிறது .
பிறப்பு இறப்பு சுழற்சி தடைபடுகிறது .

நீளமான ஒரே கயிராக இருக்கும் போது
கயிறில் தொடர்ச்சி இருக்கும்
முடிச்சை அவிழ்த்து விட்டால்
கயிற்றில் தொடர்ச்சி இருக்காது
அறுந்த கயிறாக இருக்கும் .
அதைப் போல நீளமான
நம் பிறப்பு இறப்பு தொடர்ச்சியில்
முடிச்சை அவிழ்த்தால் நம்முடைய
பிறப்பு இறப்பு சுழற்சி இருக்காது  
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

சஞ்சித கர்மத்தை கழித்து விட்டாலும்
பின்வினை என்று சொல்லப்படக்கூடிய
பிராரப்த கர்மத்தால் , ஆகாம்ய கர்மத்தால்
மீண்டும் பிறப்பு இறப்பு நடைபெற வாய்ப்பு உண்டு .

இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்
அதனால் பின் வினை ஆராயப்பட வேண்டும்
பிராரப்த கர்மம் மற்றும்
ஆகாம்ய கர்மம் உணரப் பட வேண்டும் .

களிமண்ணால் செய்யப்பட்ட
ஒரு உருவத்தை எடுத்துக் கொள்வோம் .
அது உருவமாக இருக்கும் வரை தான் உருவம்
அதில் சிறிது தண்ணீர்  கலந்து பிசைந்து விட்டால
உருவம் இல்லாமல் போய் விடும் .
ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருமாறி விடும் .
அதைப்போல பிராரப்த கர்மத்தையும்
ஆகாம்ய கர்மத்தையும் கழித்து விட்டால்
அழித்து விட்டால் பிறப்பு இறப்பு சுழற்சியை
நிறுத்தி விடலாம் .

ஆக சஞ்சித கர்மம் , பிராரப்த கர்மம் , ஆகாம்ய கர்மம்
கொண்ட இருவினைகளை
அழிப்பதன் மூலம் ; கரைப்பதன் மூலம்  ;
பிறப்பு இறப்பு சுழற்சியை நிறுத்தி விடலாம் .

பிறப்பு இறப்பு சுழற்சியை அறுத்து
இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் .

இந்த நிலையை
எல்லோராலும் அடைய முடியாது
உண்மையை உணர முடியாது .

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்
குண்டலினி சக்தியை எழுப்பி
ஆறு ஆதாரங்களைத் துளைத்து
ஆறு ஆதாரங்களின் சக்தியைப் பெற்று
ஆறு ஆதாரங்களைக் கடந்து
ஓன்பது வாசலை அடைத்து
பத்தாவது வாசலை திறந்து
சக்தியை சிவனுடன் சேர்க்க வேண்டும்
அமிர்தம் பருக வேண்டும்
இறைவனுடன் கலக்க வேண்டும் .
இந்த நிலை அடைந்தால் மட்டுமே
உண்மையை  உணர முடியும்
வாழ்க்கையில் என்ன நடக்கிறது
என்பதில் தெளிவு பெற முடியும் .

வாழ்க்கையில் நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய காலத்தில்
நடந்து கொண்டிருக்கிறது .
அதை நாம் பல்வேறு கோணங்களில் பார்க்கிறோம்
என்பதை உணர்ந்து கொள்ள முடியும் .

நடந்து கொண்டிருக்கும் உண்மையின் சூட்சுமத்திற்கு
முயற்சி , விதி , அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம்
என்று பெயரிட்டு அழைக்கிறோம் என்பது புரியும் .

இல்லை என்றால்
நடக்கும் உண்மை புரியாவிட்டால்
நடக்கும் நிகழ்வுகளுக்கு
நாம் வெவ்வேறு பெயரிட்டு அழைத்து
கொண்டு தான் இருப்போம் .

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் அர்;த்தம்
நமக்கு தெரிய வேண்டும் என்றால்
உண்மையை உணர வேண்டும் ;

உண்மையை உணராதவர்களுக்கு வாழ்க்கையில்
நடக்கும் நிகழ்வுகளுக்கும் அர்த்தம் தெரியாது .

உண்மையை உணர்ந்தவர்களுக்கு
இறைவனை உணர்ந்தவர்களுக்கு
இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்களுக்கு
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அர்த்தம் தெரியும்
பிரபஞ்ச ரகசியம் வெளிப்படும்
என்கிறார்  திருமூலர் .



இயேசு கிறிஸ்துதிருமூலர் :
இயேசு ,
உண்மைக்கும் , உண்மை இல்லாதவைகளுக்கும்
உள்ள வேறுபாட்டை உணர்ந்து
உண்மையை கடைபிடிப்பவர்களே
கடவுளின் அருகில் இருக்க முடியும் என்றும் ,
அவர்களுக்கே வாழ்வின் அர்த்தம் தெரியும் என்றும் ,

கடவுளின் அருகில் இல்லாதவர்களுக்கு
கடவுளின் ஸ்பரிசத்தை உணராதவர்களுக்கு
வாழ்க்கையின் அர்த்தம் தெரியாது என்கிறார் .

அவ்வாறே ,
திருமூலரும் ,
இறைவனை உணர்ந்தவர்களுக்கே
இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்களுக்கே
வாழ்க்கையின் அர்த்தம் புரியும் .

இறைவனை உணராதவர்களுக்கு
இறைவனுடன் இரண்டறக் கலக்காதவர்களுக்கு
வாழ்க்கையின் அர்த்தம் புரியாது என்கிறார் .


         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
          போற்றினேன் பதிவுஅறுபத்தி இரண்டுந்தான்முற்றே”””