June 04, 2019

பரம்பொருள்-பதிவு-21


                         பரம்பொருள்-பதிவு-21

7.கும்பஸ்தாபனம்

“கும்பஸ்தாபனம்
என்றால் கும்பத்தை
நிறுவுதல்
என்று பொருள்”

“அதாவது
எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுள்
சிலைக்குரிய சக்தியை;
கும்பமானது
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிப்பதற்கு
ஏற்ற வகையில்
எத்தகைய முறைகளை
கும்பத்திற்கு செய்ய
வேண்டுமோ ?
அத்தகைய முறைகளை ;
கும்பத்திற்கு செய்து ;
கும்பத்தை தயார்
செய்வதற்கு ;
கும்பஸ்தாபனம்
எனப் பெயர் “

“கும்பத்தை
நிறுவும் இந்த
நிகழ்வு தான்
கும்பாபிஷேகத்தின்
போது நடைபெறும்
மிக முக்கியமான
நிகழ்வு ஆகும்”

“கும்பமானது
தங்கம், வெள்ளி
தாமிரம், மண்
ஆகியவற்றில்
ஏதேனும் ஒன்றைக்
கொண்டு செய்ததாக
இருக்க வேண்டும் ;
கும்பத்திற்கென்று
நிர்ணயிக்கப்பட்ட
நீளம், அகலம்
கொண்டதாக கும்பம்
இருக்க வேண்டும் ;”

“எந்தவிதமான
குறைபாடும் இல்லாமல்
இருக்கும்படி செய்யப்பட்ட
கும்பத்தையும் ;
பார்ப்பதற்கு
அழகான விதத்தில்
இருக்கும்படி
அமைந்ததாக இருக்கும்
கும்பத்தையும் ;
எத்தனை கும்பம்
தேவைப்படுகிறதோ
அத்தனை
கும்பத்தையும் ;
தேர்ந்து எடுத்துக்
கொள்ள வேண்டும் ;”

“கும்பத்தின் சிற்பதோஷம்
நீங்குவதற்காக
மந்திரத்தால் மந்திரித்து ;
கும்பத்தை
நெருப்பில் காட்டி ;
செம்மண்ணை
கும்பத்தின் மேலே பூசி ;
கும்பத்தை
நூலால் சுற்றி ;
பரிசுத்தமாக இருக்கும்
ஆற்று நீர் அல்லது
ஊற்றுநீரால்
கும்பத்தை
நிரப்ப வேண்டும் ; “

“கும்பத்திற்குள்
மாவிலைகளைச் செருகி ;
அதன் மீது
நல்லதாக இருக்கும்
ஒரு தேங்காயை
தேர்ந்தெடுத்து அந்த
தேங்காயை
கும்பத்தின் மேலே
வைக்க வேண்டும் ; ‘

“கும்பத்தின் மேலே
இருக்கும் தேங்காயை
சற்று மேலே தூக்கி
நவரத்தினம்
தங்கம், வெள்ளி
ஆகியவற்றை
கும்பத்திற்குள்
இட்ட பிறகு ;
மீண்டும் தேங்காயை
கும்பத்திற்கு மேலே
வைக்க வேண்டும் ; “

“கும்பத்திற்கு
வஸ்திரம் அணிவித்து ;
மலர், சந்தனம் ,
விபூதி , குங்குமம் ,
முதலியவைகளை
இட வேண்டும் ; “

“தானியங்களைப்
பரப்பி அதன் மீது
கும்பத்தை வைக்க
வேண்டும்”

“கும்பத்தை இறைவனின்
வித்யா தேகமாகக்
கருத வேண்டும் ;
எந்த கடவுள் சிலைக்கு
கும்பாபிஷேகம் செய்ய
இருக்கின்றோமோ
அந்த கடவுள்
சிலையின்
வித்யா தேகமாகக்
கும்பத்தைக் கருத
வேண்டும் ; ”

“கும்பத்தின் மேல்
வைக்கப்படும்
தேங்காய் இறைவனின்
தலையாகும் ;
மாவிலை தலையில்
உள்ள சிகையாகும் ;
கும்பத்தைச்
சுற்றி கட்டப்படும்
துணி தோலாகும் ;
கும்பத்தின் மேல்
பூசப்படும் செம்மண்
இரத்தமாகும் ;
கும்பத்தின் உலோகம்
சதைப்பகுதியாகும் ;
கும்பத்தில் சுற்றப்பட்ட
நூல் நரம்பாகும் ;
கும்பத்தில் இடப்பட்ட
நவரத்தினங்கள்
சுக்கிலமாகும் ;
நியாசம் செய்யப்பட்ட
மந்திரம் உயிராகும் ;
கும்பத்திற்கு அடியில்
இடப்படும் தானியம்
இறைவன் அமர்ந்திடும்
ஆசனமாகும் ;
என்பதை உணர்ந்து
கொண்டால்
கும்பமானது
இறைவனின்
வித்யா தேகமாக
இருக்கிறது என்பதை
உணர்ந்து கொள்ளலாம் ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-06-2019
/////////////////////////////////////////////////////