October 16, 2012

இயேசு கிறிஸ்து-திருமூலர்-யாவர்க்குமாம்-பதிவு-55



              இயேசு கிறிஸ்து-திருமூலர்-யாவர்க்குமாம்-பதிவு-55

         “”பதிவு ஐம்பத்துஐந்தை விரித்துச் சொல்ல   
                          ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””     

இயேசு கிறிஸ்து :
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது ; அவன் தன் திராட்சத் தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான் .
                                                -------மத்தேயு - 20 : 1
வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி பேசி , அவர்களைத் தன் திராட்சத் தோட்டத்துக்கு அனுப்பினான்.”
                                                -------மத்தேயு - 20 : 2
மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய் , கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு :
                                                 -------மத்தேயு - 20 : 3
நீங்களும் திராட்சத் தோட்டத்துக்குப் போங்கள் , நியாயமானபடி உங்களுக்குக் கூலிகொடுப்பேன் என்றான் ; அவர்களும் போனார்கள் .
                                                 -------மத்தேயு - 20 : 4
மறுபடியும் , ஆறாம் ஒன்பதாம் மணி வேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான் .
                                                 -------மத்தேயு - 20 : 5
பதினோராம் மணிவேளையிலும் அவன் போய் , சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு : நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்ன என்று கேட்டான் . “
                                                 -------மத்தேயு - 20 : 6
அதற்கு அவர்கள் : ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். .அவன் அவர்களை நோக்கி : நீங்களும் திராட்சத் தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
                                                  -------மத்தேயு - 20 : 7
சாயங்காலத்தில் , திராட்சத் தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து , பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்தி வந்தவர்கள் வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான்.
                                               -------மத்தேயு - 20 : 8
அப்பொழுது பதினோராம் மணி வேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
                                                -------மத்தேயு - 20 : 9
முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து , தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள் , அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
                                              -------மத்தேயு - 20 : 10
வாங்கிக் கொண்டு , வீட்டெஜமானை நோக்கி :
                                              -------மத்தேயு - 20 : 11
பிந்தி வந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள் ; பகலின் கஷ்ட்த்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
                                          -------மத்தேயு - 20 : 12
அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக : சிநேகிதனே நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை ; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?”
                                         -------மத்தேயு - 20 : 13
உன்னுடையதை நீ வாங்கிக் கொண்டு போ , உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம் .
                                         -------மத்தேயு - 20 : 14
என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால்  , நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான் .
                                         -------மத்தேயு - 20 : 15

சமுதாயத்தின் பார்வை ஒரே மாதிரியாக இருப்பதில்லை ;
ஆளைப் பொறுத்தும் , அவருடைய நிலையைப் பொறுத்தும் ,
சமுதாயத்தின் பார்வை இரண்டு நிலைகளில்

இயங்கிக் கொண்டிருக்கிறது :
ஒன்று        : பணக்காரர்களைப் பார்க்கும் பார்வை
மற்றொன்று : ஏழைகளைப் பார்க்கும் பார்வை

வறுமையின் பிடியில் சிக்குண்ட ஓர்  ஏழைப் பெண்
எண்ணெய் வாங்கி தலையில் தேய்க்க பணம் இல்லாமல்
தலையில் எண்ணெய் தேய்க்காமல் விட்டு விட்டதால்
செம்பட்டையான முடியைக் கண்டு ,
செம்பட்டையாக மாறிப்போன
ஏழையின் முடியைக் கண்டு ,
இந்த சமுதாயம் ஏளனப் பார்வை பார்க்கிறது ;
ஏழ்மையின் நிலையைக் கண்டு நகைக்கிறது ;
எட்ட நின்று கைதட்டி பரிகாசம் செய்கிறது ;

பணக்காரப் பெண் பணத்தின் மிகுதியால் பணத்தை செலவழித்து
தலை முடியை அழகு என்ற பெயரால்
அலங்காரம் என்ற பெயரால்
தலை முடியை செம்பட்டை அடித்துக் கொண்டால் ,
அந்த பெண்ணை , அந்த பணக்காரப் பெண்ணை ,
இந்த சமுதாயம் அழகின் உதாரணம் என்று
பார்த்து மயங்குகிறது ;
முன்னால் நின்று புகழ்கிறது ;
பின்னால் நின்று ரசிக்கிறது ;
பக்கவாட்டில் நின்று வர்ணிக்கிறது ;
தள்ளி நின்று மகிழ்கிறது ;

ஏழ்மையின் தாக்குதலில் இயற்கையில் உருவான
செம்பட்டையை இந்த சமுதாயம் இகழ்கிறது .
பணத்தின் மிகுதியில் செயற்கையில் உருவான
செம்பட்டையை இந்த சமுதாயம் புகழ்கிறது .
இல்லாதவனுக்கு ஒரு பார்வையும் , உள்ளவனுக்கு ஒரு பார்வையும்
என்ற இரு வேறுபட்ட நிலைகளை சமுதாயம்

தன்னுள் கொண்டிருக்கிறது .

ஓர்  ஏழை தன் வசதிக்கேற்றபடி ; தன் நிலைக்கு உகந்த படி ;
தன் பொருளாதார வசதிப்படி ; தன் தேவைக்கு தகுந்தபடி ;
எளிமையாக ஆடை உடுத்தும் போது ,
குறைந்த செலவில் வாங்கப்பட்ட ஆடையை உடுத்தும் போது ,
ஆடம்பரத்தின் சாயல் இல்லாமல் பணத்தின் மிகுதியை
காட்ட முடியாத தன் நிலைக்கேற்றபடி ஆடையை உடுத்தும் போது ,
இந்த சமுதாயத்தின் பார்வை ஏழ்மையின் நெஞ்சை
வருத்தப்பட வைக்கும் விதத்திலும் ,
அவமானப்படுத்த வைக்கும் விதத்திலும் ,
மன உளைச்சலை கொடுக்கும் விதத்திலும் ,
மன நிம்மதியை குலைக்கும் விதத்திலும் ,
தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் விதத்திலும் ,
செயல்படுகிறது ; ஏளனப் பார்வை வீசுகிறது ;

பணக்காரன் தன் பண மிகுதியை வெளிக்காட்டாமல்
எளிமையாக உடை உடுத்தும் போது
எளிமையாக உடை அணிந்து விழாக்களுக்கு செல்லும் போது
எவ்வளவு பெரிய பணக்காரர்  இவர்
பணக்காரன் என்ற ஆணவம் சிறிது கூட இல்லாமல்
தான் எவ்வளவு பெரிய பணக்காரன் என்பதை வெளிக்காட்டாமல்
எவ்வளவு எளிமையாக உடை அணிந்திருக்கிறார்  என்று
பணக்காரர்களின் மீது இந்த சமுதாயத்தின் 

பார்வை உயர்வாக இருக்கிறது ;
அவர்களை உயர்த்தும் படி இருக்கிறது ;               
புகழும் படி இருக்கிறது ; பாராட்டும் படி இருக்கிறது ;
அவரது செயலை அங்கீகரிக்கும் படி இருக்கிறது ;
இயற்கையின் விளைவால் எளிமையாக உடை உடுத்தியவனை
இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையும் ,
செயற்கையின் உந்துதலால் எளிமையாக உடை உடுத்தியவனை
இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையும் வேறுபடுகிறது .

ஏழ்மைத் தன்மையை பரிகாசப் பார்வையுடனும் ,   
பணக்காரத் தன்மையை புகழ்ச்சி பார்வையுடனும் ,
இந்த சமுதாயம் பார்க்கிறது .
இயற்கையான விளைவை இகழ்ந்தும் ;

செயற்கையான விளைவை புகழ்ந்தும்,
இயற்கையான நிகழ்வை தாழ்த்தியும் ;

செயற்கையான நிகழ்வை உயர்த்தியும் ,
ஏழையை வசை பாடியும் ; பணக்காரனை துதி பாடியும் ,
இல்லாதவனிடம் நகைத்தும் ; உள்ளவனிடம் வழிந்தும் ,
என்ற இரு வேறுபட்ட நிலைகளைக் கொண்ட
பார்வைகளைக் கொண்டுள்ளது இந்த சமுதாயம் .

ஒவ்வொருவரிடமும்
சமதர்ம சிந்தனை உதிக்கா விட்டால் ,
அன்பு தழைக்கா விட்டால் ,
கருணை பிறக்கா விட்டால் ,
இரக்கம் வளரா விட்டால் ,
சமதர்மம் சமுதாயத்தில் மலராது .
சமதர்மம் சமுதாயத்தில் மலராவிட்டால்,
ஒவ்வொருவரும் மற்றவரிடத்தில் வேற்றுமை பாராட்டுவர் .
பகைமை பாராட்டுவர் ; விரோதம் வளர்ப்பர் ; ஏற்றத்தாழ்வு கடைப்பிடிப்பர்;
சமதர்மம் இந்த சமுதாயத்தில் மலராவிட்டால்

இந்த நிலை தான் ஏற்படும்.

ஒரு மனுஷன் தன் திராட்சைத் தோட்டத்துக்கு
வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலேயே புறப்பட்டான் .
வேலையாட்களுடன் பேசி ஒரு நாளைக்கு ஒரு பணம் கூலி பேசி
அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தான்.
மூன்றாம் மணி வேளையிலும் , ஆறாம் மணி வேளையிலும் ,
ஓன்பதாம் மணி வேலையிலும் கடைத் தெருவிலே
சும்மா நிற்கிறவர்களைக் கண்டு
நீங்கள் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்
நியாயமான கூலியை நான் உங்களுக்குக் கொடுப்பேன் என்றான் .
பதினோராம் வேளையிலும் சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு
பகல் முழுவதும் நீங்கள் ஏன் இங்கே சும்மா இருக்கிறீர்கள்
வேலையில்லையா? என்ற கேள்விக்கு வேலையில்லை என்று
அங்கு இருந்தவர்கள் பதில் தந்த காரணத்தினால்
அவன் அவர்களை நோக்கி நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்கு
சென்று வேலை செய்யுங்கள் .
நியாயமான கூலியைப் பெற்றுக் கொள்வீர்கள் என்றான் .
அவர்களும் சென்று வேலை செய்தார்கள் .

அவன் யாரை யாரை எல்லாம் திராட்சை தோட்டத்திற்கு சென்று
வேலை செய்யச் சொன்னானோ அவர்கள் அனைவரும்
திராட்சை தோட்டம் சென்று வேலை செய்தனர்.      

சாயங்காலத்தில் எஜமான் தன் காரிய காரனை அழைத்து
அவனிடம் அனைவருக்கும் ,
வேலை செய்த அனைவருக்கும் கூலியைக் கொடு .
எந்த வரிசையில் கொடுக்க வேண்டுமென்றால்
பிந்தி வந்தவர்கள் தொடங்கி
முந்தி வந்தவர்கள் வரை என்ற வரிசை முறையில்
வேலை செய்தவர்களுக்கு வேலைக்கான கூலியைக் கொடு என்றான் .

பதினோராம் மணி வேளையில்
வேலைக்கு அனுப்பப்பட்டு ,
வேலைக்கு அமர்த்தப்பட்டு ,
வேலை செய்தவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு
அதாவது தலைக்கு ஒரு பணம் வாங்கினார்கள் .

பிந்தி வந்தவர்களுக்கே ஆளுக்கு ஒரு பணம் கிடைக்கிறதென்றால்
முந்தி வந்த தங்களுக்கு அதிக பணம் கிடைக்கும்
என்று எண்ணினார்கள் முந்தி வந்தவர்கள் .
ஆனால் அவர்களுக்கும் ஒவ்வொரு ஆளுக்கும்
ஒவ்வொரு பணமே கிடைத்தது .
சம்பளமாக கூலியாக ஒரு பணமே வாங்கினார்கள் .

இச் செயலைக் கண்டு வெறுப்படைந்தவர்கள்
ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்  .
முந்தி வந்தவர்களுக்கும் , பிந்தி வந்தவர்களுக்கும் ஒரே கூலியா ?
அதிக மணி நேரம் உழைத்தவருக்கும் , குறைவான மணி நேரம்
உழைத்தவருக்கும் ஒரே கூலியா ?
ஆரம்ப நிலையில் இருந்து வேலை செய்தவருக்கும்
முடியும் தருவாயில் வந்து வேலை செய்தவருக்கும் ஒரே கூலியா?
ஏன் இத்தகைய மாறுபட்ட நிலை .
உழைப்பவர்களை கேலி செய்யும் இழிநிலை .
உழைப்பவர்களை மதிக்காத இழிநிலை என்று
கோபம் கொண்டு எஜமானனிடம்
பிந்தி வந்தவர்களாகிய இவர்கள்
குறைவான மணி நேரமே வேலை செய்தார்கள்
வெயிலின் உஷ்ணத்திலும் , கடுமையான களைப்பினிலும் ,
அயராது கடினப்பட்டு , கஷ்டப்பட்டு ,
வியர்வைத் துளிகளை உழைப்பாக்கி உழைத்த எங்களை
வேலை முடியும் தருவாயில் வந்த இவர்களை
எங்களுடன் சமம் ஆக்கினீரே என்று
தங்கள் ஆதங்கத்தை மன வருத்தத்துடன் கொட்டினார்கள் .

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தன்னைப் போல்
மற்றவரை சமமாகப் பார்ப்பதில்லை .
தான் கஷ்டப்பட்டு கவலைப்பட்டு கண்ணீர்  சிந்தி ,
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி ,
துன்பத்தில் உழன்று ,
கவலையில் தோய்ந்து ,
வருத்தத்தில் காய்ந்து ,
தோல்வியில் வீழ்ந்து ,
சோகத்தில் மாய்ந்து ,
தடை பல வென்று , துரோகம் பல கொன்று , பெற்ற ஒன்றை
மற்றவர்  எந்த வித இழப்பும் இல்லாமல் ;
காலத்தை வீணாக்காமல் ; பொருளாதாரத்தை செலவழிக்காமல் ;
எளிதாக பெற்று விடுவதா? அவ்வாறு பெறக் கூடாது .
தான் கஷ்டப்பட்டு பெற்ற ஒன்றை
மற்றவர் கஷ்டமில்லாமல் எளிதாகப் பெறுவதா? என்று
சுய நல நோக்கம் கொண்டிருக்கின்றனர் .
தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கின்ற
சுயநல விரும்பிகளாக இருக்கின்றனர் .      

நாம் தான் கஷ்டப்பட்டோம் மற்றவரும் கஷ்டப்பட வேண்டுமா?
நாம் தான் கஷ்டப்பட்டோம் .
மற்றவராவது கஷ்டப்படாமல் இன்பங்களைப் பெறட்டுமே
என்ற எண்ணம் வர வேண்டும் .

நான் ஒன்றை பெற்றுக் கொள்ள ,
நான் ஒன்றை கற்றுக் கொள்ள ,
நான் ஒன்றை அறிந்து கொள்ள ,
நான் ஒன்றை விளங்கி கொள்ள ,
நான் ஒன்றில் தெளிவு பெற்றுக் கொள்ள
அதை தெரிந்தவரிடம் அதை கற்றவரிடம்
அதை பெற்றவரிடம் சென்று அலைந்து திரிந்து
நடையாய் நடந்து காலத்தை வீணாக்கி , கடமையைத் தொலைத்து ,
இளமையை பலியாக்கி , பணத்தை விரயமாக்கி ,
அவர்  பின்னால் சென்று
அவர்  சொல்லும் வேலைகளைச் செய்து
அவர்  காட்டிய வழியில் நின்று
நான் எனக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொண்டேன் ;
பல்வேறு இன்னல்களுக்கு இடையே கற்றுக் கொண்டேன் ;
பல்வேறு இழப்புகளுக்கிடையே கற்றுக் கொண்டேன் ;
வாழ்க்கையை இழந்து , இன்பத்தை தொலைத்து ,
ஆசைகளை வெறுத்து , கனவுகளை கலைத்து ,
மகிழ்வுகளை மறந்து , கற்றுக் கொண்டேன் ;

அத்தகைய ஒன்றை , அத்தகைய உயர்வான ஒன்றை ,
பல்வேறு சிறப்புகள் பலவற்றை தன்னுள் கொண்ட அத்தகைய ஒன்றை ,
நான் எப்படி மற்றவருக்கு எளிமையாக
அவர்  கஷ்டப்படாமல் சொல்லிக் கொடுப்பேன் .

நான் பட்ட கஷ்டத்தை அவரும் பெற்று
கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால்,
அது தவறான பார்வை ; சமதர்மமற்ற எண்ணம் ;
நாம் தான் ஒன்றை கற்றுக் கொள்ள சிரமப்பட்டோம் ;
மற்றவராவது சிரமமில்லாமல் கற்றுக் கொள்ளட்டுமே
என்ற உயர்ந்த எண்ணம் வர வேண்டும் .   
நாம் தான் கஷ்டப்பட்டோம் மற்றவரும் கஷ்டப்பட வேண்டும்
என்ற தாழ்வான எண்ணத்தை விடுத்து ,                                                                          
என்ற இழிவான எண்ணத்தை விடுத்து ,
நாம் தான் கஷ்டப்பட்டோம்
மற்றவர்  தான் கஷ்டப்படாமல் பெறட்டுமே
என்ற உயர்வான எண்ணம் வர வேண்டும் .

இத்தகைய ஒரு உயர்வான பார்வை ; அன்பு பொழியும் பார்வை ;
கருணை வழியும் பார்வை ; இரக்கம் சொரியும் பார்வை ;
அனைவருக்கும் வர வேண்டும் .
இத்தகைய ஒரு நிலை , இத்தகைய ஒரு சமதர்ம பார்வை ,
அனைவரையும் சமமாகப் பார்க்கும் பார்வை வந்தாலே
சமுதாயத்திலே சமதர்மம் பூத்துக் குலுங்கும் .

இத்தகைய ஒரு சமதர்ம பார்வை
வேலையாட்களிடையே இல்லாத காரணத்தினால் ,
நாங்கள் கஷ்டப்பட்டு பெற்றதை மற்றவர்களுக்கு ,
அதாவது கஷ்டப்படாமல் இருந்தவர்களுக்கு ,
குறைவான நேரம் உழைத்தவர்களுக்கு ,
கொடுத்து விட்டீர்களே என்று எஜமானனை கேட்டார்கள் .

அவர்களில் ஒருவனுக்கு எஜமான் ,
நான் உன்னை ஏமாற்றவில்லை
நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை
நீ வேலைக்கு ஒரு பணம் கேட்டாய்
அதை நான் கொடுத்து விட்டேன் .
நீ செய்யும் வேலைக்கு எவ்வளவு பணம் கேட்டாயோ
நீ செய்யும் வேலைக்கு எவ்வளவு பணம் பேசப்பட்டதோ
அவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது.

உழைத்தவர்களை நான் ஏமாற்ற வில்லை
உழைத்தவர்களுக்கு ஏற்ற கூலியை
நான் கூறிய படி கொடுத்து விட்டேன் .
கடினமாக உழைத்தவர்களுக்கும் ,
உண்மையாக உழைத்தவர்களுக்கும் ,
அவர்களுடைய வேலைக்கு தகுந்த கூலியை
நான் கொடுத்து விட்டேன்.


உழைத்தவர்களை நான் ஏமாற்றவில்லை .
உழைத்தவர்களுக்கு கூலியை கொடுக்காமல்
உழைக்காதவர்களுக்கு கூலியை கொடுத்து விட்டு
உழைத்தவர்களை ஏமாற்றினால்
என் மேல் கோபப்பட்டிருக்கலாம் .
நான் சொல்லியதை சொல்லியபடி
செய்ய வேண்டியதை எப்படி செய்ய வேண்டுமோ ?
அப்படியே செய்து விட்டேன் .       
 
உனக்கு என்ன கொடுத்தேனோ அதை நீ வாங்கிக் கொள்

உனக்கு என்ன பேசப்பட்டதோ அதை நீ வாங்கிக் கொள்
முந்தி வந்தவனாகிய உனக்கு என்ன கொடுத்தேனோ
பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது
என்னுடைய இஷ்டம்   .
யாருக்கு என்ன கொடுக்க வேண்டும்
எவ்வளவு கொடுக்க வேண்டும்
எந்த அளவுக்கு கொடுக்க வேண்டும் என்று
தீர்மானிக்க வேண்டியது நான் தான்
அப்படியிருக்க நீ ஏன் கோபத்தை
என் மேல் வீசுகிறாய் .


நான் அனைவரையும் சமமாகப் பாவித்து
அனைவரையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்ற நோக்கில்
தயாள குணத்துடன் கூலியை தந்தால்
நீங்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல்
சுயநலத்தால் பாதிக்கப்பட்டு
மனதில் சமதர்ம பார்வை இல்லாத காரணத்தினால்
அனைவருக்கும் சமமான கூலி
ஏன் தந்தீர்  என்கிறீர்கள் என்றான் எஜமான் .
 
உழைத்தவனையும்  உழைக்காதவனையும் ,

குறைந்த நேரம் உழைத்தவனையும்
அதிக நேரம் உழைத்தவனையும் ,
வேறுபடுத்தி பார்க்காமல் ஒன்றாக நினைத்து
எஜமான் கூலி கொடுத்ததன் காரணம்
உழைத்தவன் பெற்ற கூலி நம் உழைப்புக்காக
கிடைத்த கூலி என்று மகிழ்வதற்காகவும் ,
உழைக்காதவன் பெற்ற கூலி -
குறைந்த நேரம் உழைத்தவன் பெற்ற கூலி
இனி உழைக்கும் போது
இனி வேலை கிடைத்து உழைக்கும் போது
நம்மை நம்பி வேலை கொடுத்தவர்களுக்காக
இனி உழைக்கும் போது
உண்மையாக உழைக்க வேண்டும் ;
அதிக நேரம் உழைக்க வேண்டும் ;
ஏமாற்றாமல் உழைக்க வேண்டும் ;
என்ற எண்ணத்தை மனதில் உண்டாக்குவதற்காகவும்
தன்னை நம்பி வேலை கொடுத்தவர்களை ஏமாற்றக் கூடாது.
உண்மையாக உழைக்க வேண்டும்
என்ற சிந்தனையை மனதில் ஏற்படுத்துவதற்காகவும்
எஜமான் அனைவரையும் சமமாக பாவித்து
உயர்ந்த நோக்கத்துடனும் ,
கருணை உள்ளத்துடனும் ,
தயாள குணத்துடனும் கூலி கொடுத்தார் .


எஜமானனுக்கு சமதர்ம பார்வை இருந்த காரணத்தினால்
எஜமானன் அனைவருக்கும் சமதர்ம கூலி தந்தான் .
எஜமானனுக்கு சமதர்ம பார்வை இருந்த காரணத்தினால்
எஜமானன் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்தான் .
வேலையாட்களுக்கு சமதர்ம பார்வை இல்லாத காரணத்தினால்
எஜமானனின் செயலை புரிந்து கொள்ளும்
அறிவு அவர்களுக்கு இல்லை .

எஜமானனிடம் சமதர்ம பார்வை இருந்தது ;
வேலையாட்களிடையே சமதர்ம பார்வை இல்லை .

சமதர்ம பார்வை கொண்டவன் உயர்ந்து நின்றான் ;
சமதர்ம பார்வை இல்லாதவன் தாழ்ந்து நின்றான் .

சமதர்ம பார்வை கொண்டவன் கொடுக்கும் நிலையில் இருந்தான் ;
சமதர்ம பார்வை இல்லாதவன் வாங்கும் நிலையில் இருந்தான்.

சமதர்ம பார்வை ஒருவரை உயர்த்தும் ;
சமதர்மம் அற்ற  பார்வை ஒருவரை தாழ்த்தும் .

சமதர்ம பார்வை ஒருவரை உயர்  நிலைக்கு கொண்டு செல்லும்
சமதர்மம்  அற்ற பார்வை ஒருவரை அதள பாதாளத்தில் தள்ளி விடும்

எனவே மனிதனை மனிதன் நேசித்து
ஒருவருக்கொருவர்  பேதம் நீக்கி
ஒத்தும் உதவியும் வாழ வேண்டும் என்கிறார்  இயேசு .



திருமூலர் :
               “ யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
           யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
           யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
           யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே  
                                              ---- திருமூலர்---திருமந்திரம்---

இறையோருக்கு பச்சிலையிடுதல் அனைவர்க்கும் அறமாம் ,
பசுவிற்குப் புல்லளித்தலும் ,
தாம் உண்ணும் போது வறியார்க்குப் ஒரு பிடி உணவளித்தலும்,
பிறர்க்கு இன்னுரை வழங்கலும்,
எளிமையில் இயற்றக்கூடிய அறங்களாகும் என்பது
மேலே சொல்லப்பட்ட பாடலுக்கு பொதுவாக சொல்லப்படும் கருத்து.
இந்தப் பாடலுக்கு இப்படியும் விளக்கம் அளிக்கலாம் .

மனிதனுடைய பார்வை இரண்டு நிலைகளில் இயங்குகிறது .
இரண்டு விதமான தன்மைகளைத் தன்னுள் கொண்டு இயங்குகிறது .
செயல் ஒன்றானாலும் பார்க்கும் பார்வை
இரண்டு வேறுபட்ட நிலைகளைக் கொண்டிருக்கிறது :
ஒன்று         : கருணைப் பார்வை
மற்றொன்று : கருணையற்ற பார்வை
           (அல்லது ) தகாத பார்வை
           (அல்லது ) அருவெறுக்கத் தக்க பார்வை
என்று கூட சொல்லலாம் .

ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலுhட்டும் செயல்
அன்பு வழிந்தோடும் ,
கருணை பரிமாறப்படும் ஒரு தெய்வீகமான செயல்       
அதை ஒருவர்  நல்ல எண்ணத்துடன்
கருணை வழிந்தோடும் கண்கள் கொண்டு பார்த்தால்
அது கருணைப் பார்வை .

அதையே ஒருவர்  காமமேலிட்டால்
காமத் தன்மை கொண்டு
காமம் வழிந்தோடும் கண்களைக் கொண்டு பார்த்தால்
அது கருணையற்ற பார்வை,
காமப் பார்வை , தகாத பார்வை ,

செயல் ஒன்று தான்
மனிதனின் பார்வைத் திறனைப் பொறுத்து
பார்க்கும் கணணோட்டத்தைப் பொறுத்து
பார்வை இரண்டு வேறுபட்ட தன்மைகளைத்
தன்னுள் கொண்டிருக்கிறது .

ஒரு இள வயது பெண் , ஒரு இள வயது ஆணுடன் ,
பேசிக் கொண்டிருப்பது என்பது ஒரு செயல் .
அங்கே நட்பு பரிமாறப்படுகிறது என்ற
எண்ணம் கொண்டு பார்ப்பது ஒரு பார்வை .
அங்கே காதல் பரிமாறப்படுகிறது என்ற
எண்ணம் கொண்டு பார்ப்பது மற்றொரு பார்வை .

அங்கே நிகழ்ந்து கொண்டிருப்பது ஒரு செயல் தான்
ஆனால் பார்க்கும் பார்வையில் உள்ள
தன்மைகள் வேறுபடும் போது ,
மாறுபாட்டை தன்னுள் கொண்டிருக்கும் போது ,
வேற்றுமைகளை தனனுள் வைத்திருக்கும் போது ,
பார்வையின் தன்மை வேறுபடுகிறது.
செயல் ஒன்று தான்
பார்க்கும் பார்வையின் தன்மை மனிதருக்கு மனிதர்  வேறுபடுகிறது .

ஒரு ஆணுக்கும் , ஒரு பெண்ணுக்கும் உள்ள நல்ல நட்பை ,
நல்ல தோழமையை , நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்காமல்
நல்ல எண்ணத்துடன் நோக்காமல் ,
தவறான பார்வையுடன் பார்த்து ,
தவறான எண்ணம் கொண்டு ,
தவறான சொல் சொல்லி ,
தவறான வார்த்தையை பிரயோகித்து ,
தவறாக அவர்களை உருவகப்படுத்தி ,
அவர்களுக்குள் உள்ள நல்ல உறவை கொச்சைப்படுத்தி ,
நட்புறவை களங்கப்படுத்தி , அவர்களை கேவலப்படுத்தி ,
அவர்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டு
அவர்களுக்கு மன உளைச்சலை அளித்து ;
நிம்மதியைக் கெடுத்து ;
அமைதியைக் குலைத்து ;
வாழ்வில் நிம்மதியை இழக்கச் செய்து ;
துயரங்கள் பெறச் செய்து ;
அவதிக்குள் மாட்ட வைத்து ;
கண்ணீருக்குள் புதைத்து வைத்து ;
தாங்க முடியாத கவலைக்குள் சிக்க வைத்து ;
அதைக் கண்டு ரசிக்கும் கருணையற்ற பார்வை தகாத பார்வை.

மனிதனுக்குள் இருக்கும் அருவெறுக்கத் தன்மையை
வெளிக்காட்டுவது தான் கருணையற்ற பார்வை .
மனிதனுக்குள் இருக்கும் இரக்கத்தின் மேன்மையை
அன்பின் தன்மையை ,
கருணையின் இருப்பிடத்தை ,
வெளிக் காட்டுவது தான் கருணையுள்ள பார்வை .

கருணையற்ற பார்வை கொண்டவர்கள் தான் அதிகம் ;
கருணையுள்ள பார்வை கொண்டவர்கள் குறைவு .

ஒரு நல்ல செயலை தவறான கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கும் போது
அந்த செயலை நாம் களங்கப் படுத்தியவர்களாகிறோம் .
அந்த செயலுக்குரியவர்களை , அந்த செயலை செய்தவர்களை ,
அந்த செயலுக்கு காரணமானவர்களை ,
நாம் களங்கமான பார்வை கொண்டு பார்க்கும் போது ,
நாம் களங்கப் பட்டவர்களாகிறோம்   .
நாம் களங்கப்படும் போது தப்பான எண்ணங்களால் தாக்கப்படும் போது
தப்பான எண்ணங்களால் துhண்டப்படும் போது
தப்பான எண்ணம் கொண்டு செயல்படும் போது
நாம் பாவம் செய்தவர்களாகிறோம் .

பாவத்தின் கணக்கு அதிகரிக்க
பிறவிச் சுழல் நீள்கிறது ;
கர்மவினை வளர்கிறது ;
பிறவிகள் பெருகிறது ;
ஜென்மங்கள் தொடர்கிறது ;
இதன் காரணமாக மனிதன் பிறவி பல எடுத்து
குடும்பச் சகதியில் சிக்கி
வாழ்க்கைச் சூறாவளியில் மாட்டி துன்பம் பல அடைந்து
ஆற்றொணாத் துயருக்குள் தள்ளப் படுகிறான் .
இந்த நிலை மாற வேண்டுமானால்
கர்ம வினையை எரித்து
பிறப்பு - இறப்பை அறுத்து
இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும்.
இறைவனுடன் இரண்டறக் கலக்கும் திறன்
பெற்றவர்களால் மட்டுமே பிறப்பு - இறப்பை அறக்க முடியும் .
ஜென்மங்களை துறக்க முடியும் .

இத்தகைய நிலையை அடைய
எத்தகைய வழி முறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து
அதில் உண்மையான முறை எது என்பதை உணர்ந்து
அதை கைக் கொண்டு பின்பற்றி செயலுக்கு கொண்டு வந்து
இறைவனை அடையக் கூடிய
இறைவனுடன் இரண்டறக் கலக்கத் தேவையான
உண்மை வழி முறையை பின் பற்றி செயல்படுத்த வெண்டும் .

அவ்வாறு செயல்படுத்தும் போது இறைவனை நோக்கி செல்லும் போது
இறைவனை அடையக் கூடிய வழி முறைகளை மேற்கொள்ளும் போது
இறைவனுடன் இரண்டறக் கலக்கும்
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
நாம் செய்த செயலுக்குரிய விளைவும் ,                                
நம் பதிவுக்குரிய விளைவும் ,
பாவ - புண்ணிய பதிவுகளுக்குரிய விளைவும் ,
கிடைத்துத் தான் தீரும் .
அதை அடைந்து அனுபவித்துத் தான் தீர வேண்டும்
இது அனைவருக்கும் பொதுவானது அனைவருக்கும் சமமானது .

பச்சிலை என்றால் மூலிகை என்று பொருள் .
நோயைத் தீர்க்கப் பயன்படுத்தப் படும் இலை என்று பொருள் .
உடலிலுள்ள நோய் குணமாக வேண்டுமானால்
மருந்து உட்கொள்ள வேண்டும் .
மருந்து உட்கொண்டால் மட்டுமே நோய் குணமாகும்  .
பெரிய நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யக் கூடிய நோய்களுக்கு
அறுவை சிகிச்சை செய்து தான் தீர வேண்டும் .
அறுவை சிகிச்சை செய்து கொள்ள மாட்டேன்  ;     
நோய் குணமாக மருந்து உட்கொள்ள மாட்டேன்;
என்று சொல்ல முடியாது .
மருந்து உட்கொள்ள மாட்டேன் என்று சொன்னால்
நோயுடனே தான் கஷ்டத்துடன் வாழ வேண்டி இருக்கும் .

அதைப் போல கர்ம வினை நம்முடன் இருக்கும் வரை
நாம் பிறப்பு - இறப்பு சுழற்சியில் சிக்கி அவதிப்பட வேண்டியிருக்கும் .
கர்ம வினையை கழித்து இறைவனுடன் சேரும் போது மட்டுமே
நாம் அமைதி பெற முடியும் .
நாம் அமைதி பெற கர்ம வினையை கழிக்க வேண்டும் .   
கர்ம வினையைக் கழிக்கும் போது அதற்குரிய பலனை
அனுபவித்துத் தான் ஆக வேண்டும் .
அதற்குரிய பலனை அனுபவிக்கும் போது
அதற்குரிய கஷ்டங்களை ஏற்றுத் தான் ஆக வேண்டும் .
கஷ்டங்களை ஏற்காமல் கர்ம வினைகளைக் கழிக்க முடியாது .
கர்ம வினைகளைக் கழிக்காமல் இறைவனை அடைய முடியாது .
நிம்மதியான வாழ்வு பிறப்பு - இறப்பற்ற வாழ்வு வேண்டுமானால் ,
கர்ம வினைகளைக் கழித்துத்தான் ஆக வேண்டும் .
கஷ்டங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும் .

நோய்கள் என்பது கர்ம வினைகள் .

நோய்க்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை என்பது
நாம் இறைவனை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகள் ,
கர்ம வினைகளை கழிக்க நாம் செய்யும் தவங்கள் ,தியானங்கள் .   

அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலிகள் என்பது
கர்ம வினைகளை கழிக்கும் போது நமக்கு ஏற்படும் துன்பங்கள் .

வலியைப் பொறுத்துக் கொள்பவனால் மட்டுமே
நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும் ;
வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனால்
நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது .

கஷ்டங்களை தாங்கிக் கொள்பவனால் மட்டுமே
இறைவனை அடைய முடியும் ;
கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதவனால்
இறைவனை அடைய முடியாது .
இந்தச் செயல் அனைவருக்கும் பொதுவானது .

இறைவன் என்பது பரமாத்வைக் குறிக்கும் .
பசுஎன்றால் ஆன்மா ஜீவாத்மா என்று பொருள் .
வாய்என்றால் நுழைவு வாயில் வாசல் என்று பொருள் .
உறைஎன்றால் மூடப்பட்டுள்ள நிலை என்று பொருள் .
வாயுறைஎன்றால் நுழைவு வாயில் மூடப்பட்ட
நிலையில் இருக்கிறது என்று பொருள் .
பசுவுக்கொரு வாயுறைஎன்றால்
ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான
நுழைவு வாயில் ஒன்று உண்டு .
அந்த நுழைவு வாயில் அடைக்கப் பட்டிருக்கிறது ,
மூடப்பட்டிருக்கிறது என்று பொருள் .

யாவர்க்கு மாம் பசுவுக்கொரு வாயுறைஎன்றால்
மனிதப் பிறவி எடுத்த அனைத்து ஜீவாத்மாக்களும்
பரமாத்மாவுடன் இணைய முடியாமல்
ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான நுழைவு வாயில்
அதாவது பத்தாவது வாசல் ,
சூட்சுமமான வாசல் அடைக்கப் பட்டிருக்கிறது ,
மூடப்பட்டிருக்கிறது என்று பொருள் .       

கர்ம வினைகள் கழிந்தால் மட்டுமே இந்த பத்தாவது வாசல் திறக்கும்
கர்ம வினைகளைக் கழிக்கும் அதே வேளையில்
கர்ம வினைகள் மீண்டும் உருவாகா வண்ணம்
பார்த்துக் கொள்ள வேண்டும் .
கர்ம வினைகள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால்
நல்லதையே செய்ய வேண்டும் ;
நல்ல பார்வை இருக்க வேண்டும் ;
அனைவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் .

ஏழை ஆனாலும் - பணக்காரன் ஆனாலும் ,
உயர்ந்தவன் ஆனாலும் - தாழ்ந்தவன் ஆனாலும்,
உள்ளவன் ஆனாலும் - இல்லாதவன் ஆனாலும் ,
அவன் உணவை உண்ண எடுக்கும் போது
அவன் தன் கையின் அளவால்
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் எடுக்க முடியும்
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும்
ஒரு பிடி அளவுக்கு மேல் உணவை
அள்ள முடியாது , எடுக்க முடியாது .

கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்தாலும் ,
எண்ணற்ற அளவில் செல்வங்களை குவித்து வைத்தாலும் ,
ஒன்றும் இல்லாத ஏழையாக இருந்தாலும் ,
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும் .
அதை உண்ணும் வகையில் தான்
இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.
இது அனைவருக்கும் பொதுவானது என்ற உண்மையை
ஒவ்வொருவரும் உணர வேண்டும் .

இந்த சிந்தனை வந்து விட்டால் ,
இறைவன் அனைவரையும் சமமாகப் படைத்திருக்கிறார்
கர்ம வினையின் தாக்கம் தான் வேறுபடுகிறதே தவிர
அனைவரும் சமம் என்ற உணர்வு வந்து விடும் .
அனைவரையும் சமமாகப் பாவிக்கும் எண்ணம் வந்து விட்டால்
நாம் கஷ்டப்படுவது போல் தானே மற்றவர்கள் கஷ்டப்படுவார்கள் ;
நாம் இழந்த இழப்பின் தாக்கத்தைப் போல் தானே
மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையில் இழப்பின்
தாக்கத்தை அனுபவித்திருப்பார்கள் ;
துன்பச் சூறாவளியில் சுழன்றிருப்பார்கள் ;
கவலைக் கணலில் தகித்திருப்பார்கள் ;
கண்ணீர்க் கடலில் வீழ்ந்திருப்பார்கள் ;
சோகத் தீயில் வெந்து இருப்பார்கள் ;
துன்பக் கடலில் மூழ்கியிருப்பார்கள் ;
வறுமை நோயில் வெந்திருப்பார்கள் ;
பசிக் கொடுமையில் செத்திருப்பார்கள் ;
வறுமை நிலையில் வாடியிருப்பார்கள் ;
என்ற எண்ணம் வந்து விடும் .
இத்தகைய எண்ணம் உதிக்கும் போது ,
மனதில் இரக்கம் பிறந்து விடும்
அன்பு உதித்து விடும்
கருணை வெளிப்பட்டு வெளிக் கிளம்பும்
இது அனைவருக்கும் பொதுவானது .

இத்தகைய ஒரு நிலையை நோக்கி செல்பவர்களால் மட்டுமே
இனிமையான வார்த்தைகளைப் பேச முடியும்
நல்ல விதமாக நடந்து கொள்ள முடியும் .
ஒரு செயலை நல்ல விதமாக பார்த்து
கருணை பொழியும் கண்களுடன் பார்த்து
மற்றவர்களை இழிவு படுத்தாமல் ,
மற்றவர்களை துன்பப்படுத்தாமல் ,
அவதுhறு செய்யாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் ,
தன் செயல்களால் நடந்து கொள்ள முடியும்
இது அனைவருக்கும் பொதுவானது .

அனைவரும் சமம் என்பதை உணர்ந்து
மற்றவருக்கு துன்பம் செய்யாமல்
நல்ல செயல்களை செய்வதன் மூலம் ,
தர்ம செயல்களை மேற்கொள்வதன் மூலம் ,
பிராயச் சித்தம் , மேல் பதிவு , அடியோடு அழித்தல்,
என்பதன் அடிப்படையில்
கர்ம வினைகளைக் கழித்து
கர்ம வினைகள் எழும்பா வண்ணம் செயல்களைச் செய்து
நல்லதையே சொல்லி , நல்லதையே செய்து வருவதன் மூலம்
ஜீவாத்மா , பரமாத்மாவை அடைவதற்கு
தடையாக உள்ள தடையை உடைத்து
பத்தாவது வாசலைத் திறந்து
பரமாத்மாவுடன் இணைய முடியும்
என்கிறார்  திருமூலர்.



இயேசு கிறிஸ்து - திருமூலர் :                         
இயேசு ,
அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டு
மனிதன் மனிதனாக இருந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்
ஒருவருக்கொருவர்  ஒத்தும் உதவியும் வாழ வேண்டும்
என்ற நிலை கொண்ட மனிதனால் மட்டுமே
உயர்  நிலை அடைய முடியும்
இறைவனின் அருளாசி பெற முடியும் என்கிறார்.

அவ்வாறே ,
திருமூலரும் ,
அனைவரும் சமம் என்பதை உணர்ந்து
பிறருக்கு தீங்கு செய்யாமல்
நல்ல எண்ணம் கொண்டு வாழ்பவரால் மட்டுமே
இறைவனின் அருளாசி பெற்று
இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்கிறார்
    

                “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஐம்பத்துஐந்து ந்தான்முற்றே “”