December 08, 2013

இயேசுகிறிஸ்து-அழுகணிசித்தர்-தாயை-பதிவு-65



இயேசு கிறிஸ்து-அழுகணிசித்தர்-தாயைச்சதமென்றே - பதிவு - 65

“”””பதிவு அறுபத்துஐந்தை விரித்துச் சொல்ல
         ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””””

இயேசு கிறிஸ்து :

"பின்பு அநேக  ஜனங்கள் அவரோடே கூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து : "
                                               ------லூக்கா - 14 : 25
"யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும்  சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்."
                                              ------லூக்கா - 14 : 26
"தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்."
                                              ------லூக்கா - 14 : 27
"உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,"
                                              ------லூக்கா - 14 : 28
"அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:"
                                              ------லூக்கா - 14 : 29
"இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ? "
                                              ------லூக்கா - 14 : 30
"அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிற போது, தன் மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனை பண்ணாமலிருப்பானோ? "
                                            ------லூக்கா - 14 : 31
"கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாதிபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே."
                                          ------லூக்கா - 14 : 32
"அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்."
                                        ------லூக்கா - 14 : 33
"உப்பு நல்லது தான், உப்பு சாரமற்றுப் போனால் எதினால் சாரமாக்கப்படும்? "
                                         ------லூக்கா - 14 : 34
"அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது,  அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றார். "
                                        ------லூக்கா - 14 : 35


மனிதனுடைய வாழ்க்கையில்  எதிர்ப்படும் உறவுகளை
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்.
ஒன்று              :    அத்தியாவசியத் தேவை உறவுகள்
மற்றொன்று  :   அரவணைக்கத் தேவை உறவுகள்

தாய், தந்தை இந்த இரண்டு உறவுகளும் அத்தியாவசியத் தேவை உறவுகள்.
இதனைத் தவிர்த்து உலகில் உள்ள மற்ற அனைத்து உறவுகளும்
அரவணைக்கத் தேவைப்படும் உறவுகள்.

நாம் இந்த உலகத்திற்கு
வரக்காரணமான உறவு,
அடிப்படையான உறவு,
அடித்தளமான உறவு,
ஆதாரமான உறவு,
எதனுடனும் ஒப்பிட்டு நோக்க முடியாத உறவு,
அத்தியாவசியத் தேவை உறவு.
அதனால் தான் தாய்,தந்தை உறவு
அத்தியாவசியத் தேவை உறவு.

அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் ;
வாழ்க்கைக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் ;
இன்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் ;
துன்பங்களை களைந்து கொள்ளவும் ;
தேவைப்படும் உறவுகள் மற்றும்
அதனுடன் ஒட்டிய அனைத்து உறவுகளும்
அரவணைக்கத் தேவைப்படும் உறவுகள்.

நாம் இந்த உலகத்திற்கு வரக்காரணமான உறவு
அத்தியாவசியத் தேவை உறவு.

நாம் இந்த உலகத்திற்கு வந்த பின்பு
நம்முடன் இணைந்த உறவு ,
பாசத்தால் பிணைக்கப்பட்ட உறவு ,
நம்முடைய தேவைகளை நிறைவேற்ற காரணமாக இருக்கும் உறவு ,
அரவணைக்கத் தேவைப்படும் உறவு.

அத்தியாவசியத் தேவை உறவு மாறாதது
மாற்றத்திற்கு  உட்படாதது
அரவணைக்கத் தேவைப்படும் உறவு
மாற்றத்திற்கு உட்பட்டது
மாறிக்கொண்டே இருப்பது.
அத்தியாவசியத் தேவை உறவு
எதிர்பார்ப்புகளை தன்னுள் கொண்ட உறவல்ல ;
அரவணைக்கத் தேவைப்படும் உறவு
ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பை தன்னுள் கொண்ட உறவு.

அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில் சில உறவுகள்
எல்லா காலங்களிலும் அரவணைப்பதில்லை ;
சில காலங்களில் அரவணைப்பதில்லை ;
அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில் சில உறவுகள்
காரியவாதியாக இருபபதால் ,
சுயநலவாதியாக இருப்பதால் ,
அரவணைப்பு தேவைப்படும் சமயங்களில் அதாவது
இக்கட்டான சூழ்நிலைகளில்
உதவி தேவைப்படும் சமயங்களில் ;
கவலைகள் கண்களில் இரத்தத்தை வரவழைக்கும் சமயங்களில் ;
உதவ ஒரு கரம் நமக்கு கிடைக்காதா
என்று தவிக்கும் தருணங்களில் ;
வாழ்வு வெறுத்து போகும் நேரங்களில் ;
வாழ்வதை விட இறப்பே மேல் என்று நினைக்கும் நேரங்களில் ;
அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில் சில உறவுகள்


ன்பு காட்டாமல்
தரவு கொடுக்காமல்
ழந்த இன்பத்தை பெற்று
யாமல்
ள்ளத்தை வாட விட்டு விட்டு
ரே
ள்ளி நகையாடும் விதத்தைப் பார்த்தும்
ற்றத்தை கொடுக்காமல் உறவை
யப்பட வைத்து விட்டு
ன்றாக இருந்து ஏற்பட்ட துன்பத்தை போக்காமல்
டி ஒளிந்து கொள்வது - என்பது

அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில்
சில உறவுகள் சுயநல உறவுகள் என்றும் ,
துரோகத்தை வெளிப்படுத்தும் உறவுகள் என்றும்,
இக்கட்டான சூழ்நிலையில் ஓடி ஒளியும் உறவு என்றும்,
போலி வேடம் போட்டு
நம்முடன் இணைந்திருக்கும் உறவு என்றும்,
தன்னுடைய தேவையை தீர்த்துக் கொள்வதற்கு
இணைந்த உறவு என்றும் கொள்ளலாம்.


அதனால் தான் அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில்
சில உறவுகள் எதிர்பார்ப்புடன் கூடிய உறவாக இருக்கின்றன.

எதிர்பார்ப்புடன் கூடிய இத்தகைய உறவுகள்
எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை இருப்பதும்,
தன் தேவை முடியும் வரை இருப்பதும்,
தன் தேவை முடிந்தவுடன் விலகுவது என்பதும் இயல்பு.

அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளை
இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்:
ஒன்று               :   எதிர்பார்ப்புடன் நம்முடன் இணைந்த உறவு
மற்றொன்று  :   எதிர்பார்ப்பில்லாமல் நம்முடன் இணைந்த உறவு

ஒன்றாக நட்புறவு கொண்ட இரண்டு நண்பர்களில்
ஒரு நண்பருக்கு நல்ல வேலை கிடைத்து - அவர்
குடும்பத்தாரால் பாராட்டப்பட்டு ;
சமுதாயத்தால் பாராட்டப்பட்டு ;
சுற்றத்தாரால் புகழப்பட்டு ;
நல்ல நிலையை அடைந்தால்
இது எதுவும் கிடைக்காத இன்னொருவர்
தன் நண்பனின் உயர்வைக் கண்டு மனம் மகிழ்ந்தால்
அவருடைய நிலையைக் கண்டு பெருமிதம் கொண்டால்
அது உன்னதமான நட்பு.
இது அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில்
எதிர்பார்ப்பில்லாமல் நம்முடன் இணைந்த உறவு.

நண்பனின் ஏற்றத்தைக் கண்டு பொறாமைப் பட்டாலோ?
உயர்வைக் கண்டு மனம் கொதித்தாலோ?
இவனுக்கெல்லாம் இந்த உயர்வு
கிடைத்திருக்கிறதே என்று வேதனைப்பட்டாலோ?
உழைப்பில்லாமல் அதிர்ஷ்டம் மூலம்
கிடைத்த உயர்வு என்று ஏளனம் செய்தாலோ?
ஏற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் வார்த்தைகளால்
ஏளனங்கள் அள்ளி வீசினாலோ?
தெரிந்து கொள்ளலாம் - இது
அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில்
எதிர்பார்ப்புடன் நம்முடன் இணைந்த உறவு என்று.

அத்தியாவசியத் தேவை உறவு களங்கமில்லாதது
அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளில் சில உறவுகள்
எதிர்பார்ப்புடன் போலித் தன்மையுடன் இருப்பதால்
களங்கமுடையதாக இருக்கிறது.

அத்தியாவசியத் தேவை உறவாக இருந்தாலும் சரி,
அரவணைக்கத் தேவைப்படும் உறவாக இருந்தாலும் சரி,
எந்த உறவாக இருந்தாலும்
ஒருவருடைய வாழ்வின் இறுதி வரை வருவதில்லை.
உறவுகள் என்பது நித்தியமில்லாதது.

பின்பு அநேக ஜனங்கள் அவரோடே 

கூடப் பிரயாணமாய்ப் போகையில் 

அவர்களிடமாய் திரும்பிப் பார்த்து,
யாதொருவன் என்னிடத்தில் வந்து,
தன் தகப்பனையும்; தன் தாயையும்;
தன் மனைவியையும்; தன் பிள்ளைகளையும்;
தன் சகோதரர்களையும்; தன் சகோதரிகளையும்;
தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால்
எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்.
இவைகள் அனைத்தையும் வெறுக்கிறவனே
எனக்கு சீஷனாயிருப்பான்.

அத்தியாவசியத் தேவை உறவுகளையும்
அரவணைக்கத் தேவைப்படும்
அனைத்து உறவுகளையும் புரிந்து கொண்டு
உறவுகள் என்பவை
அநித்தியமானவை நித்தியமில்லாதது.
நேற்று இருந்தது ;
இன்று இருக்கும் ;
நாளை இருக்காது .

அழிந்து போகும் இந்த அநித்திய உறவுகளுக்காக
அல்லல்பட்டு அலைக் கழிக்கும்
வாழ்வில் அல்லலுறும் மனித இனம்
சிற்றின்பத் தேவைகள் சில பொழுது தான் இருக்கும்
பேரின்பப் பெருமழை
பெய்து கொண்டே இருக்கும் பொய்த்து விடாது
என்பதை உணரும்போது தான்
பிறப்பெடுத்ததன் பெரும்பயன்
இறைவனின் அருளாசியைப் பெறுவது
இறைவனின் அருட்பார்வையைப் பெறுவது
அடையக்கூடிய வழியை ஆராய்ந்து
அந்த வழியைப் பின்பற்றி
இறைவனிடம் சேர்வது
என்பதை உணர முடிகிறது.

பாவத்தால் நிரப்பப்பட்ட இந்த ஜீவனை பெற்ற மனிதன்
பாவப்பட்ட ஜீவனாக இந்த பூமியில்
பிறந்ததற்காக வெட்கப்படாவிட்டால்
வேதனைப்படா விட்டால்
துக்கப்படா விட்டால்
துயரப்படா விட்டால்
அவன் பிறந்ததால் ஒரு பயனும் இல்லை.

இந்த உலகத்தில் பாவத்தால்
நிரப்பப்பட்டு பிறக்கும் மனிதன்
பாவத்தை இறைவனிடம் இணைவதின் மூலம்
தான் கழிக்க முடியும் என்பதை உணர்ந்து
இறைவனின் மகிமையை உணர்ந்து கொள்பவன்
இறைவன் மிகப் பெரியவன் என்பதை
அறிந்து கொள்பவன் மட்டுமே
எனக்கு சீஷனாயிருக்க முடியும்
மற்றவர்கள் எனக்கு சீஷனாயிருக்க முடியாது.

மனிதனுடைய பாவங்களை ஏற்றுக் கொள்பவர்
இறைவன் மட்டுமே என்பதை உணர்ந்து
அவரை தேடிச் செல்பவன் மட்டுமே
என் பின்னால் செல்லத் தக்கவன்
எனக்கு சீஷனாயிருக்க தகுதியுடையவன்.

இத்தகைய நிலைகள் இல்லாதவன்;
இத்தகைய தன்மைகளைப் பெறாதவன்;
தன் பாவங்களைச் சுமந்து கொண்டு
எனக்குப் பின்னால் செல்லத் தகுதி இல்லாதவன்;
இத்தகைய தன்மைகளை,
உண்மைகளை உணராதவன்
எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.
உங்களில் ஒருவன்
ஒரு கோபுரத்தை கட்ட வேண்டும் என்று
நீண்ட நாட்கள் கனவில் மிதந்து கொண்டு
அதற்கான சந்தர்ப்பம் வரும் போது
அதைப் பயன்படுத்தி
அஸ்திபாரம் போட்டு
அதைக் கட்டத் தொடங்கிய பின்பு
அதைக் கட்டி முடிப்பதற்குரிய
வாய்ப்புகள் ஏதும் அமையாமல்
தடங்கல் ஏற்பட்டால்,
இடையூறு ஏற்பட்டால்,
அதைக் கட்டி முடிப்பதற்குரிய
சக்தி தனக்கு அமையாவிட்டால்,
இதனை பார்க்கிற அனைவரும்
இந்த மனுஷன் இதனைக் கட்டத் தொடங்கி
முடிக்கத் திராணியில்லாமற் போனான் - என்று
தன்னைப் பார்த்து ஏளனம் செய்யும் ;
தன்னைப் பார்த்து எள்ளி நகையாடும் ;
தன்னை ஏளனப் பார்வை பார்க்கும் ;
தன் துயர நிலையைக் கண்டு மனதுக்குள் சிரிக்கும் ;
என்பதை உணர்ந்து
அத்தகைய ஒரு நிலை தனக்கு ஏற்படாத படி
அதனைக் கட்டி முடிப்பதற்கு உரிய
தகுதி, திறமை, வசதி ஆகியவை
தனக்கு இருக்கிறதா என்று
இந்த கோபுரத்தை கட்டத் தொடங்குவதற்கு முன்
அவன் உட்கார்ந்து ஆகும்
செலவுகளைக் கணக்கு பாராமலிருப்பானோ
செய்யும் செயலுக்குரிய விளைவை யோசிக்க மாட்டானா?
ஒன்றை தொடங்கும் போதும்;
அதை வெற்றிகரமாக முடிக்கும் போதும்;
வயிறு எரியும் இந்த சமுதாயம்
அது முடியாமல் பாதியில் நின்றால்
இந்த உலகம் மகிழ்ச்சியில் கூத்தாடும்
என்பதை உணராமலிருப்பானோ?

தொடங்கிய செயல்
வெற்றிகரமாக முடிந்தால் பரவாயில்லை
பாதியில் நின்று விட்டால்
தோல்வியில் முடிந்தால்
இந்த சமுதாயம் ஏளனம் செய்யும் என்பதை
அறியாமல் இருப்பானா
அதைப் போல்
தன் பாவங்களை நீக்கி
துன்பங்களை போக்கி
இன்பங்களை அளிக்கக்கூடிய
உண்மை இறைவனை அறிந்து
உண்மை வழியைப் பின்பற்றி
இறைவனை அடைய முயற்சி செய்து
இறைவனை அடைந்து
அவருடைய அருளாசியைப் பெற்று
பாவங்களைப் போக்கி
இறைவனின் அருளைப் பெறுகிறவனை மட்டுமே
இந்த உலகம் பின்பற்றுகிறது.
தவறான நிலையை உண்மை நிலை
என்று உணர்ந்து
அதனைப் பின்பற்றி செல்லுபவன்
தன் பாவங்களை நீக்க முடியாமல்
துன்பத்தில் தள்ளாடுவதைப் பார்த்து
இந்த உலகம் மனதிற்குள் சிரிக்கிறது.

எந்த ஒன்றையும் ஆராயாமல் தொடங்கினால்
உண்மை நிலையை அறியாமல் தொடங்கினால்
பின்பற்றினால் இழிவான நிலையைத் தான்
அடைய முடியும் என்கிறார்

ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே
யுத்தஞ் செய்ய போகிற போது
தன்னிடம் உள்ள பதினாயிரம் சேவகரைக் கொண்டு
இருபதினாயிரம்  சேவகரைக் கொண்டு
போருக்கு வருகிற ராஜாவோடு மோதினால்
தான் வெற்றி பெற
முடியுமா? முடியாதா? என்பதை
முன்பே இதனைப் பற்றி
ஆலோசனைப் பண்ணாமலிருப்பானோ?
அப்படி பண்ணி இருந்தால்
போருக்கு போவதால்
ஏற்படக்கூடிய இழப்புகளையும்
தோல்வியையும் கணக்கில் கொள்ளாமலிருப்பானா?

தான் வெற்றி பெற முடியாது என்பதை
முன்பே யோசித்து உணர்ந்திருப்பானேனேயானால்
பகை அரசன் தூரத்திலிருக்கும் போதே
ஸ்தானாதிபதிகளை அனுப்பி
சமாதானத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வானே.

ஒரு செயலை செய்வதற்கு
முன் அதில் உள்ள
நல்லவைகள் கெட்டவைகள் எவை என ஆராய்ந்து
உண்மை வழியை ஆராய்ந்து
அதனைப் பின்பற்றி செல்பவரால் மட்டுமே
உண்மை நிலையை அடைய முடியும்
வெற்றி பெற முடியும்
இதனைப் பின்பற்றாதவன் அல்லல் பட நேரும்
என்கிறார் இயேசு.

அத்தியாவசிய உறவுகளான
தாய், தந்தை உறவு - மற்றும்
அரவணைக்கத் தேவைப்படும் உறவுகளான
மற்ற உறவுகள் அனைத்தும் நித்தியமில்லாதது
அநித்தியமானது என்பதை உணர்ந்து
உண்மையினை உணர்ந்து
உங்களில் எவனாகிலும்
பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டவை எல்லாம்
தனக்காக படைக்கப் பட்டவை
உறவுகள் அனைத்தும் தன்னைச் சார்ந்தவை
என்று தவறாக எண்ணிக்கொண்டு,
தன் தலைமுறைகளை பாதுகாக்க
தன் குடும்பத்தை பாதுகாக்க
செல்வத்தை சேர்த்து வைப்பதால் என்ன பயன்
அவைகள் அவர்களை பாதுகாக்குமா
என்பதற்கு என்ன உத்தரவாதம்
என்று உணராமல்
அழியக்கூடிய செல்வத்திற்காகவும்
மறையக்கூடிய உறவுகளுக்காகவும்
அதன் பின்னால் செல்வதால்
ஒரு பயனும் ஆகப்போவதில்லை.

நித்தியமில்லாதது
ஒரு நாள் அழிந்து போகப்போகிறது;
நித்தியமுள்ளதே என்றும்
அழியாத நித்தியமாய் இருக்கும்;
என்பதை உணர்ந்து
என்றும் இருக்கும்
நித்தியமாய் இருக்கும்
இறைவனைத் தேடி
அநித்தியமானவைகளை விட்டு விட்டு
நித்தியமான இறைவனைத் தேடி செல்பவன் மட்டுமே
எனக்கு சீஷனாயிருப்பான் அப்படி இல்லாதவன்
எனக்கு சீஷனாயிருக்க மாட்டான் என்கிறார்.

உப்பு சேர்க்க வேண்டிய உணவுப் பொருளில்
உப்பு சேர்க்க வேண்டும்
உப்பு சேர்க்கப்பட்ட உணவே சாப்பிடும் தன்மையைப் பெறுகிறது
உப்பானது தன் தன்மையை இழந்தால்
அதனை எப்படி பயன் படுத்த முடியும்

தன் தனித்தன்மையை இழந்த
உப்பைப் பயன்படுத்த முடியாது.
உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்
உப்பானது அதிற்குரிய தனித்தன்மையை இழந்துவிட்டால்
உப்பின் தனித்தன்மையை உப்புக்கு நம்மால்
எவ்வாறு கொடுக்க முடியும்.

அது நிலத்துக்காகிலும், எருவுக்காகிலும் உதவாது
அது உபயோகமற்றது என்று
அதை வெளியே கொட்டிப் போடுவார்கள்.

உப்பானது எப்படி தன் தனித்தன்மையை இழந்தால்
பயனற்றதாகி விடுகிறதோ அதைப்போல,
நம் ஜீவனில் கலந்துள்ள பாவங்கள்
இறைவனின் அருளாசி பெற்று
இறைவனுடன் கலப்பதால்
பாவங்கள் கழிந்து போய்
ஜீவன் தூய்மையாகி
புண்ணிய நிலையை அடைந்து
உயர்நிலை அடைவதற்கான
தகுதியைப் பெற்று விடுகிறது.
இவ்வுலக வாழ்க்கையில் விழுந்து
துயர்பெறும் நிலையை அடையாமல்
ஜீவன் நிம்மதி பெறும்
நிலையை அடைகிறது.

உப்பு சாரமற்றுப் போனால்
எப்படி பயனற்று போய் விடுகிறதோ?
அதைப்போல
ஜீவனில் கலந்துள்ள
பாவங்கள் கழிந்து விட்டால்
பாவங்களை கழிப்பதன் மூலம்
இறைவனுடன் சேர்ந்து உயர்வு பெற முடியும்
இல்லையென்றால் பாழும் நரகத்தில் வீழ்ந்து
தள்ளாட வேண்டியது தான்.

நான் சொல்லும் இந்த உண்மைகளை உணர்ந்தவன்;
என் வார்த்தைகளில் உள்ள அர்த்தங்களைத் தெரிந்தவன்;
என் உவமைகளில் உள்ள சூட்சுமங்களைப் புரிந்தவன்;
இறைவனின் அருளைப் பெறுவான்
உயர்வான நிலையை அடைவான்.

நான் சொன்னவைகளை மதித்து
கேட்கக் கூடியவன் கேட்கட்டும்
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன்
என்கிறார் இயேசு.


அழுகணிச்சித்தர் :

""""தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
  மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
  மாயக் கலவிவிட்டு மதிமயக்கந் தீர்ந்தக்கால்
  தாயுஞ் சதமாமோ என்கண்ணம்மா
                 தந்தையரு மொப்பாமோ.""

                                -------அழுகணி சித்தர்---பெரியஞானக்கோவை---

சமுதாயத்தில் புழக்கத்தில் இருக்கும் சில வார்த்தைகள்
ஒரு குறிப்பிட்ட இனத்தை,
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை,
ஒரு குறிப்பிட்ட மொழியை,
இழிவு படுத்தும் நிலையில் உள்ளதா?
அல்லது
அவர்களை உயர்த்தும் வகையில் உள்ளதா?
என்பதை மக்களால் தீர்மானிக்க முடியாமல்
அறிவை இயக்கத்திற்கு கொண்டு வர விடாமல்
மக்களை அடிமை நிலையில் வைத்திருக்கிறது
சுகபோகத்தில் திளைத்துக் கொண்டு இருக்கும்;
இன்பத்தை சுவைத்துக் கொண்டு இருக்கும்;
மகிழ்ச்சியில் நனைந்து கொண்டு இருக்கும்;
களிப்பில் களித்து கொண்டு இருக்கும்;
சமுதாயத்தில் சுயநலமுள்ள ஒரு கூட்டம்.

அவர்களுக்கு தேவை       
மக்கள் சிந்தனையற்று இருக்க வேண்டும்
செயல்படமுடியாமல் இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் தான்
தங்களால் செயல்பட முடியும்;               
மக்கள் சிந்தனை பெற்று
செயல்பட ஆரம்பித்து விட்டால்
தங்களால் செயல்பட முடியாது;
என்பதை உணர்ந்ததால் தான்

மக்கள் அடிமையாக இருந்தால் தான்
ஏன் என்று கேட்க மாட்டார்கள்.
மக்கள்
அறிவு விளக்கம் பெற்று விட்டால்
சிந்தனை வளம் பெற்று விட்டால்
அடிமையாக இருக்க மாட்டார்கள்
என்பதை உணர்ந்ததால் தான்

மக்கள் சிந்தனையை
மழுங்க வைப்பதன் மூலம் தான்
அடக்கி ஆள முடியும்
இல்லையென்றால் அடக்கி ஆள முடியாது
என்பதை உணர்ந்ததால் தான்

அடிமையாக வைத்து
மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது
சுகபோகத்தில் திளைத்துக் கொண்டு இருக்கும்
சமுதாயத்தில் சுயநலமுள்ள ஒரு கூட்டம்.

போர்க்களத்தில் பெறப்படாத
எந்த வெற்றியும் வெற்றியல்ல
பிச்சை கேட்டு பெறப்படும் வெற்றி
போர்க்களத்தில் போரிட்டு
பெறப்படும் வெற்றிக்கு ஈடாகாது
பிச்சை கேட்டு பெறப்பட்ட வெற்றி தான் ஒருவரை
அடிமை நிலையிலேயே வைத்திருக்கிறது.

போர்க்களத்தில் போரிட்டு பெற்ற வெற்றி
ஒருவரை அடிமை நிலையில்
வைத்து இருக்க முடியாது;
மற்றவரை அடிமை நிலையில்
வைக்க வேண்டும் என்ற
எண்ணத்தையும் உண்டு பண்ணாது;

வெற்றி பெறுவது
பிச்சை கேட்டு பெறுவதல்ல
போரிட்டு பெறுவது;
அடிமை நிலையில் இருந்து
அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு
சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு
ஏழ்மையிலும், வறுமையிலும்,
துன்பத்திலும், கவலையிலும்,
வாடி வதங்கிப் போன இதயம்;
சுற்றத்தாரால் ஏளனப் பட்டுப் போன இதயம்;
நண்பர்களால் கசங்கிப் போன இதயம்;
கவலைகளால் கண்ணீர் விட்ட இதயம்;
தன் நிலை கண்டு,
தன் ஏழ்மை கண்டு,
வருந்தி துயருற்று
சமுதாயத்தில் தானும் முன்னேற வேண்டும்;
மனிதனாக சுயமரியாதையோடு வாழ வேண்டும்;
வாழ்வில் உயர்நிலை அடைய வேண்டும்;
தன்னை ஏளனப்படுத்திய இச்சமுதாயத்தில்
தான் எவ்வளவு
உயர்ந்தவன், சிந்தனையாளன், உழைப்பாளி
என்பதை நிரூபிக்க வேண்டும்
என்பதை கருத்தில் கொண்டு
உழைத்து முன்னேறி
உயர்நிலை அடைந்து
பணக்காரன் என்ற நிலையை அடையும் போது
இந்த சமுதாயம் அவருக்கு இடும் பெயர் புதுப்பணக்காரன்

பணக்காரர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது:
ஒன்று                : பரம்பரை பணக்காரன்
மற்றொன்று    : புதுப்பணக்காரன்
பரம்பரை பணக்காரன் என்றால்
முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்தை
பாட்டன், தாத்தா, அப்பா என்று பரம்பரை, பரம்பரையாக
அனுபவித்து பெருக்கிக் கொண்டு வருவதைக் குறிக்கும்;
புதுப்பணக்காரன் என்றால்
தான் கஷ்டப் பட்டு உழைத்து
சுயமாக முன்னேறி
மேல் நிலைக்கு வருபவனைக் குறிக்கும்;

பரம்பரை பணக்காரன் என்றால்
ஒருவர் சம்பாதித்து வைத்த சொத்தை
பரம்பரை பரம்பரையாக அனுபவித்து
வருபவரைக் குறிக்கும்;
புதுப்பணக்காரன் என்றால்
தானே சுயமாக உழைத்து சம்பாதித்து முன்னேறி
சம்பாதித்த சொத்தை அனுபவிப்பதை குறிக்கும்;

பரம்பரை பணக்காரன் என்றால்
மற்றவர் கால்களில் நிற்பவன்;
புதுப்பணக்காரன் என்றால்
சொந்தக் கால்களில் நிற்பவன் என்று பொருள்;
இவ்வாறாக சமுதாயத்தில் பலபேர்
அவரவர் சிந்தனைக்கு ஏற்றவாறு விளக்கம் தருகின்றனர்.

பரம்பரை பணக்காரன் என்ற சொல்
சமுதாயத்தில் தவறான நிலையில் பார்க்கப்பட வேண்டும்
ஆனால் அது தவறான நிலையில் பார்க்கப்படுவது இல்லை
நல்ல நிலையில் வைத்து பார்க்கப்படுகிறது.
புதுப்பணக்காரன் என்ற சொல் சமுதாயத்தில்
உயர்வான நிலையில் பார்க்கப்பட வேண்டும்
ஆனால் அது உயர்வான நிலையில் பார்க்கப்படுவது இல்லை
தவறான நிலையில் வைத்து பார்க்கப்படுகிறது.

உண்மையான உழைப்பாளியை தவறாகவும்
புதுப்பணக்காரன் என்றும்
ஏளனமாகப் பார்க்கிறது சமுதாயம்
உண்மை உழைப்பாளியை உழைத்து முன்னேறியவனை
புதுப்பணக்காரன் என்ற சொல்லால்
அவமானப்படுத்துகிறது ஏளனப்படுத்துகிறது இந்த சமுதாயம்.

எந்த சொல் சமுதாயத்தில் தவறாக கருதப்பட வேண்டுமோ
அந்த சொல் தவறாக கருதப்படவில்லை
எந்த சொல் சமுதாயத்தில் தவறாகக் கருதப்படக்கூடாதோ
அந்த சொல் சமுதாயத்தில் தவறாகக் கருதப்படுகிறது.

தவறாகக் கருதப்படக்கூடியது உயர்வாகவும்
உயர்வாகக் கருதப்படக் கூடியது தவறாகவும்
வேறுபட்ட நிலையில் கருதிக் கொண்டிருக்கிறது
இச் சமுதாயத்தில் ஒரு பிரிவு.

தவறுகள் உணரப்படாமல் திருத்தங்கள் ஏற்படாது;
திருத்தங்கள் ஏற்படாமல் மாற்றங்கள் உருவாகாது;
மாற்றங்கள் உருவாகாமல் முன்னேற்றங்கள் கிடைக்காது;
முன்னேற்றங்கள் கிடைக்காமல் வளர்ச்சி உருவாகாது;

வளர்ச்சி எந்த நிலையில் ஏற்பட்டாலும்,
தனிப்பட்ட நிலையில் ஏற்பட்டாலும்,
சமுதாய அளவில் ஏற்பட்டாலும்,
அதற்கு அடிப்படை காரணம்
தவறுகள் திருத்தப்பட்டவையாகத் தான் இருக்கும்.
தவறுகள் திருத்தப்பட்டதன் அடிப்படையில் தான்
வளர்ச்சி உண்டானதாக இருக்கும்
தவறுகள் திருத்தப்படவில்லை எனில்
வளர்ச்சி ஏற்படாது.
வளர்ச்சி ஏற்பட தவறுகள் திருத்தப்படத்தான் வேண்டும்
தவறுகள் திருத்தப்படாமல் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.

பரம்பரை பணக்காரன்
புதுப் பணக்காரன்
என்ற சொற்களிலேயே
எத்தனையோ அர்த்தங்கள் இருக்கும் போது
புரிந்து கொள்ள முடியாத நிலைகள் இருக்கும் போது
சமுதாயத்தில் நிலவும் எத்தனையோ சொற்களுக்கு
நம்மால் என்ன அர்த்தம் கொடுக்க முடியும்
சொற்களிலேயே எவ்வளவு
ஆழமான சிந்திக்கத் தகுந்த அர்த்தங்கள்.

போர்க்களத்தில் போராடிப் பெற்ற வெற்றியை இகழ்ந்தும்
பிச்சை கேட்டு பெற்ற வெற்றியை புகழ்ந்தும்
மாறுபட்ட நிலையில் இச்சமுதாயம் இருப்பதால்
உண்மையான வெற்றி எது என்றும்,
உண்மையான உழைப்பு எது என்றும்,
தெரியாமல் தள்ளாடுகிறது சமுதாயம்.
உண்மையான வெற்றி எது என்றும்
உண்மையான உழைப்பு எது என்றும்
இச்சமுதாயம் உணரும் போது தான்
உண்மைத் தன்மையும்,
உண்மை வெற்றியும்,
உழைப்பின் தன்மையும்,
இச்சமுதாயத்திற்கு புரியும்.

நாம் ஒன்றை அடைய நினைத்தால்
அது நேர்வழியில் இருக்கலாம் அல்லது
தவறான வழியில்இருக்கலாம்
வெற்றி என்பது ஒன்று தான்
அதன் வழிகள் தான் வேறு.

வெற்றி பெற நினைப்பவர்
தன்னைப் பற்றியும்,          
தன் குடும்பத்தைப் பற்றியும்,
தன்னைச் சார்ந்தவர்கள் பற்றியும்,
நினைப்பார்.

தான் செய்யும் செயல்கள் வெற்றி பெற வேண்டும்
மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றி பெற வேண்டும்
அப்படி நடந்தால் தான்
தன்னையும் தன் குடும்பத்தையும்
காப்பாற்ற முடியும்
அடுத்த தலைமுறைக்கு சொத்து
சேர்த்து வைக்க முடியும் என்று
வெற்றியை நோக்கி ஓடுகிறது இச்சமுதாயம்.

வெற்றி என்பது எளிதாகக் கிடைப்பதல்ல
போர்க்களத்தில் பெறுவது;
போராடிப் பெறுவது;
வியர்வை சிந்தி பெறுவது;
இரத்தம் சிந்தி பெறுவது;

தான் நித்தியம்
தன் தாய், தந்தை நித்தியம்
தன் குடும்பத்தார் நித்தியம்
என்ற நினைப்பில்
அவர்கள் கவலையற்று இருக்க
சொத்து சேர்த்து வைக்க வேணடும் - என்று
செய்யும் காரியங்கள்
மேற்கொள்ளும் முயற்சிகள்
அனைத்தும் வெற்றி பெற வேண்டும்
என்று போராடிக் கொண்டிருக்கிறது இச்சமுதாயம்.

நிலையில்லாத ஒன்றுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது;
நித்தியமில்லாத ஒன்றுக்காக போராடிக் கொண்டிருக்கிறது;

நித்தியத்தை தேடாமல்
அழியும் அநித்தியத்தை தேடி
ஓடிக்கொண்டிருக்கிறது இச்சமுதாயம்.
அழியக்கூடியதற்கும்; அழிவில்லாததற்கும்;
வேறுபாடு தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறது இச்சமுதாயம்.

தேடலின் பயணம்
தேடியது கிடைத்த பின் தான் முடியும்;
தேடல் கிடைக்க வில்லை எனில்
தேடுதல் வேட்டை தொடரும்;
இத்தகைய வெற்றியை நோக்கியே தேடலே
ஆசையின் உந்துதலால் ஏற்பட்ட தேடலே
பாதுகாப்பு கருதி செய்யப்பட்ட தேடலே
பாதுகாப்பு கருதி செய்யப்படும் தேடலே
கர்ம வினைகளை உண்டு பண்ணி விடுகிறது.

ஒவ்வொரு செயலிலும்
அதற்குரிய விளைவு அதிலேயே இருக்கிறது
செயல்வேறு விளைவுவேறு அல்ல
செயலுக்குரிய விளைவு செயலுக்குள்ளேயே இருக்கிறது
விளைவுக்குள்ளேயே செயல் இருக்கிறது
செயல்வேறு விளைவுவேறு என்று
தனித்தனியாக இல்லை
இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்திருக்கிறது
ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்திருக்கிறது.

நாம் எந்த செயல் செய்தாலும்
அதற்குரிய விளைவு அதிலேயே இருக்கிறது
நல்ல செயல் செய்தாலும் நல்ல விளைவும்
தீய செயல் செய்தால் தீய விளைவும்
செயலுக்கு ஏற்றபடி விளைவுகள்
அதற்குள்ளேயே இருக்கிறது.

நம் செயல் வேறாகவும்
விளைவு வேறாகவும் பார்ப்பதால்
இந்த செயலுக்குரிய விளைவு இது தான்
என்று நம்மால் கணிக்க முடியவில்லை.

இந்த செயலுக்கு இந்த விளைவு என்று
அந்தந்த செயலுக்குள்ளேயே
விளைவுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
தவறான செயல்களைச் செய்யும்போது
துணிந்து பயப்படாமல் செய்யும் நாம்
இரக்கத்தைப் பற்றிக் கவலைப்படாத நாம்
கருணையைக் கொன்று செயலைச் செய்யும் நாம்
அன்பைப் புதைத்து செயலைச் செய்யும் நாம்
அதற்குரிய விளைவு வரும்போது
துன்பத்தை கொடுக்கும்போது
மனம் கலங்குகிறோம்;
வாழ்க்கையில் திண்டாடுகிறோம்;
என்ன செய்வது என்று தெரியாமல்
வருந்துகிறோம்; அழுகிறோம்; கதறுகிறோம்;
என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறோம்;
கவலையில்தத்தளிக்கிறோம்;
சோகத்தில் தள்ளாடுகிறோம்;
தவறான செயலைச் செய்யும் போது அஞ்சாத நாம்
அதற்குரிய விளைவு வரும் போது அஞ்சுகிறோம்
இந்த செயலுக்குரிய விளைவுகள் தான்
கர்மவினைப் பதிவுகளாக உருவெடுக்கிறது.

அநித்தியத்தை சேமித்து வைக்க
அநித்தியத்தை காப்பாற்ற
நாம் செய்யும் செயல்களின் விளைவுகளே
கர்மவினைகளாக மாறி
பிறவிப் பெருங்கடலை நீளவைக்கிறது
பிறப்பு இறப்பு என்று
வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழல வைக்கிறது.

செயலுக்குரிய விளைவே அதன் தன்மைக்கேற்ப
பாவப்பதிவுகளாகவும்; புண்ணிய பதிவுகளாகவும்;
மாறி பிறவிப்பெருங்கடலை நீள வைக்கிறது
என்ற உண்மை தெரிய வரும்போது
அனைத்தும் அநித்தியமே
அழியக்கூடியவை அனைத்துமே அநித்தியமே
நித்தியமான ஒன்றே அழிவில்லாதது
என்ற உணர்வு ஏற்படும்.

நித்தியத்தை நோக்கி நாம் போனால்
கர்மவினைகளை அகற்றி
பிறவிப் பெருங்கடலை கடக்க முடியும்
பிறப்பு இறப்பு சுழற்சியை நிறுத்த முடியும்
என்ற விளக்கம் கிடைக்கும்.

தான் நித்தியம்
தன் தாய், தந்தை நித்தியம்;
குடும்பத்தார் நித்தியம்;
சுற்றத்தார் நித்தியம்;
இந்த உலகம் நித்தியம்;
செல்வங்கள் நித்தியம்;
சொத்துக்கள் நித்தியம் - என்று
செல்வங்களை சேர்த்து வைக்க
உறவுகளை காதுகாப்பாக வைக்க
செயல்கள் பல செய்து
செயல் விளைவின் மூலம்
கர்மவினைகளைத் தேடிக் கொண்டேன்.

அழியக்கூடிய அநித்தியத்தை
அழிவில்லாத நித்தியம் என்று நினைத்து
நான் செயல்பட்டதால்
கர்மவினைகளைப் பெருக்கி
பிறவிப் பெருங்கடலை
நீள வைத்து விட்டேன்.

அனைத்தும் அநித்தியமே
அழியக் கூடியதே
அழியாதது ஒன்றே
அந்த அழியாத ஒன்றை நோக்கி செல்வதின் மூலமே
இறைவனை நோக்கி செல்வதின் மூலமே
இறைவனுடன் இணைவதின் மூலமே
இறைவனுடன் இரண்டறக் கலப்பதன் மூலமே
நித்தியமான வாழ்வை அடைய முடியும்;
கர்மவினைகளைக் கழிக்க முடியும்;
பிறப்பு இறப்பை அறுக்க முடியும்;
வாழ்க்கை சுழற்சியை நிறுத்த முடியும்;
என்ற உணர்வு வந்து விட்டால்,
என்ற விளக்கம் பெற்று விட்டால்,
என்ற உண்மை விளங்கி விட்டால்,
தாய் தந்தை உறவுகள் அநித்தியமே
செல்வங்கள் சொத்துக்கள் அநித்தியமே
குடும்பத்தார் அநித்தியமே
அனைத்தும்அநித்தியமே
அந்த ஒன்றைத் தவிர 
அதாவது அந்த இறைவனைத் தவிர
என்ற உணர்வு வந்து விடும்
என்கிறார்
அழுகணிச் சித்தர்.


இயேசு கிறிஸ்து - அழுகணிச்சித்தர்:
இயேசு,
உலகில் உள்ளவை அனைத்தும்
உறவுகள் உட்பட
உயர்திணை, அஃறிணை அனைத்தும்
நித்தியமில்லாதது; அழியக்கூடியது; என்ற
உண்மையை உணர்ந்து என்னைப் பின்பற்றுவபவன் மட்டுமே
என்பின் செல்லத் தகுதியுடையவன்
என் சீஷனாயிருக்கும் தகுதி படைத்தவன்
அப்படி இல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க
தகுதி இல்லாதவன்
என்கிறார் இயேசு.

அவ்வாறே,
அழுகணிச்சித்தரும்,
தாய், தந்தை, செல்வங்கள், சொத்துக்கள்
இந்த உலகம் உட்பட அனைத்தும் அநித்தியமே
அழியக்கூடிய இவைகளுக்காக வாழ்பவன்
அநித்திய நிலையை அடைவான்.
அழியாத நித்தியமான ஒன்றை நோக்கி செல்பவன்
அதனுடன் கலப்பவனால் மட்டுமே
கர்மவினைகளைக் கழித்து
பிறப்பு இறப்பை அறுத்து
உயர்நிலை அடைய முடியும்
என்கிறார்.


“””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                             போற்றினேன் பதிவுஅறுபத்துஐந்துந் தான்முற்றே””””