November 08, 2019

பரம்பொருள்-பதிவு-80


            பரம்பொருள்-பதிவு-80

அர்ஜுனன்:
"அண்ணா நாம் நமக்குள்
வகுத்துக் கொண்ட
விதிமுறைகளின் படி;
மேற்கொண்ட
ஒப்பந்தங்களின்படி ;
செய்து கொண்ட
சத்தியத்தின்படி ;
பின்பற்றப்பட வேண்டிய
சட்டங்களின் படி;
நான் 12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்ல
முடிவு எடுத்து விட்டேன்;
என்னை ஆசிர்வதித்து
எனக்கு விடை கொடுத்து
வழியனுப்பி வையுங்கள்;”

தர்மர் :
"அர்ஜுனா! நீ என்ன
தவறா இழைத்து
விட்டாய்? - உன்
கடமையைத்
தானே செய்தாய்!
நீதியை நிலை நாட்ட
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ஆயுதங்களை
எடுப்பதற்காக
ஆயுத சாலைக்குள்
வந்தாய் இது
எப்படி குற்றமாகும்?
இந்த நிகழ்வில்
சம்பந்தப்பட்டிருக்கும்
நானே நீ செய்தது
தவறு என்று
சொல்லவில்லை
அப்படி இருக்கும் போது
நீ ஏன் வனவாசம்
போக வேண்டும்."

அர்ஜுனன்:
"சட்டத்தை வகுத்தக்
கொண்ட நாமே
சட்டத்தை மீறலாமா?
அண்ணா"

தர்மர் :
"தவறு இழைத்தவர்களைத்
தான் தண்டிக்க
வேண்டும் என்று சட்டம்
சொல்கிறதே தவிர - தவறு
இழைக்காதவர்களை அல்ல
அப்படியிருக்கும் போது
தவறு இழைக்காத உன்னை
நான் எவ்வாறு
தண்டிக்க முடியும்”

அர்ஜுனன்:
"நான் தவறு இழைத்தவன்
அதனால் தான் எனக்கு
தண்டனை
அளியுங்கள் என்கிறேன்"

தர்மர்:
“நிகழ்வுடன்
சம்பந்தப்பட்டவன்
நான் தான்;
நீ தவறு இழைத்தாய்
என்று நான் தான்
சொல்ல வேண்டும்,
நான் தான் அவ்வாறு
சொல்லவேயில்லையே
அப்படி இருக்கும் போது
நீ எவ்வாறு தவறு
இழைத்தவன் ஆவாய்”

அர்ஜுனன்:
“நீங்கள் சொல்ல
மாட்டீர்கள் என்று
எனக்குத் தெரியும் ;
என் மேல் உள்ள
அளவு கடந்த பாசத்தால்
எனக்கு தண்டனை
அளிக்க மாட்டீர்கள்
என்று எனக்கு தெரியும்;
நான் செய்த செயலை
நியாயப்படுத்துவீர்கள்
என்று எனக்கு தெரியும்;”

தர்மர் :
“சட்டம் என்பது நாம்
வகுத்துக் கொண்டது தானே !
நமக்கு தேவைப்படும் போது
அதில் திருத்தங்கள் செய்து
கொள்வதில் தவறு
ஒன்றும் இல்லையே!
காலத்திற்கு ஏற்றாற்போல்
நாம் ஏன் அதில்
சில மாற்றங்களைச்
செய்து கொள்ளக் கூடாது”

அர்ஜுனன்:
“சட்டத்தை உருவாக்கிய
நாமே நமக்கு பாதகமாக
இருக்கிறது என்ற
காரணத்திற்காக  
சட்டத்தை மாற்றலாமா?
சட்டத்தை பின்பற்ற
முடியவில்லை என்ற
காரணத்திற்காக
சட்டத்தை திருத்தலாமா ?
நாம் உருவாக்கிய
சட்டமே நம்மை
பாதிக்கிறது என்ற
காரணத்திற்காக
சட்டத்தில்
திருத்தங்களைச்
செய்யலாமா?”

“நம்முடைய குடும்பம்
எந்தவிதமான பிரச்சினையும்
இல்லாமல் சுமூகமாக
நடக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
நமக்கு நாமே உருவாக்கிக்
கொண்ட சட்டத்தை நாமே
மதித்து பின்பற்றவில்லை
என்றால் - நாட்டிற்காக
மக்களுக்காக உருவாக்கப்பட்ட
சட்டத்தை மக்கள்
எவ்வாறு பின்பற்றுவார்கள்”

“முன்னுதாரணமாக இருக்க
வேண்டிய நாமே சட்டத்தை
மதித்து பின்பற்றவில்லை
என்றால் - சட்டத்தை மீறி
மக்கள் தவறு செய்யும்
போது மக்களை
கேள்விகள் கேட்கவும்
மக்களை தண்டிக்கவும்
நம்மால் எவ்வாறு முடியும்”

“சட்டம் என்பது
அனைவருக்கும்
பொதுவானதாக
இருக்க வேண்டும் ;
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
என்ற வேறுபாடு
இருக்கக் கூடாது ;
பணக்காரர் ஏழை
என்ற பாகுபாடு
இருக்கக் கூடாது ;
இல்லை என்றால்
ஆளும் வர்க்கமும்
அதிகார வர்க்கமும்
முதலாளி வர்க்கமும்
சட்டத்தை தங்களுக்கு
ஏற்றாற் போல்
வளைத்துக் கொள்ளக்கூடிய
நிலை ஏற்படும் ;
இத்தகைய ஒரு
தவறான நிலை,
வருத்தப்படக்கூடிய நிலை
நாளை நம்முடைய
நாட்டில் ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்றால் கண்டிப்பாக
நான் 12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக வனவாசம்
போய்த்தான் ஆக வேண்டும்”

தர்மர் :
“சட்டத்தை…………………………?”
.       
-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------08-11-2019
//////////////////////////////////////////