January 22, 2020

பரம்பொருள்-பதிவு-116


             பரம்பொருள்-பதிவு-116

தர்மர் :
“என்ன வார்த்தை
சொல்லிவிட்டாய்
கிருஷ்ணா ?”

“இப்படி ஒரு
வார்த்தையை சொல்ல
உனக்கு எப்படி
மனம் வந்தது “

“எங்களைப் பற்றி
முழுவதும்
தெரிந்திருந்தும் இப்படி
ஒரு வார்த்தையை
எப்படி சொன்னாய் “

“என்னை களப்பலியாகக்
கொடுங்கள் என்று
நீ சொன்ன
வார்த்தைகளைக் கேட்டு
என்னுடைய இதயம்
வெடித்து நான்
இன்னும் இறக்காமல்
இருக்கிறேனே - என்று
வேதனைப் படுகிறேன்
கிருஷ்ணா ! “

“கிருஷ்ணா! கிருஷ்ணா!
என்ற நாமத்தை
நான் என்னுடைய
நாவினால்
சொல்லும் போது
வேறு எந்த ஒரு
வார்த்தையும் என்னுடைய
காதில் விழுந்து
விடக்கூடாது என்பதற்காக
என்னுடைய காதுகளை
மூடிக் கொண்டு
கிருஷ்ணா! கிருஷ்ணா!
என்று உன்னுடைய
நாமத்தை  
அனுதினமும்
உச்சரிப்பவன்  நான்;
ஆனால் , இன்றோ
கிருஷ்ணனாகிய
நீயே சொன்ன
வார்த்தைகளைக் கேட்டு
என்னுடைய காதுகளை
மூடிக்கொள்ளும்படி செய்து
விட்டாயே கிருஷ்ணா !”

“எங்களுக்குள்
இருப்பவன் நீ !”

“எங்களுக்குள் இயங்கிக்
கொண்டிருப்பவன் நீ !”

“எங்களை இயக்கிக்
கொண்டிருப்பவன் நீ !”

“எங்களுக்கு துன்பம்
என்ற ஒன்று
வரும் போதெல்லாம்
ஓடோடி வந்து
துன்பத்தை துடைப்பவன் நீ!”

“நாங்கள் அனைவரும்
நீயே கதி என்று
உன்னுடைய பாதங்களில்
சரணாகதி அடைந்து
விழுந்து கிடக்கிறோம் ;
என்பதை உணர்ந்தும்
இப்படி ஒரு வார்த்தையை
உன்னால் எப்படி சொல்ல
முடிந்தது கிருஷ்ணா ! “

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதின் மூலம்
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்
நாங்கள் நாட்டை 
ஆள முடியும் என்றால்
அப்படி ஒரு வெற்றியும்
தேவையில்லை ;
அப்படி ஒரு நாட்டை
ஆளவும் நாங்கள்
விரும்பவில்லை ;”

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதின் மூலம்
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்
என்னுடைய தம்பிகள்
மற்றும் பாஞ்சாலி
ஆகியோர் தங்களுடைய
சபதத்தை
நிறைவேற்றிக் கொள்ள
முடியும் என்றால்
அப்படி ஒரு
சபதத்தை அவர்கள்
நிறைவேற்றிக்
கொள்ளாமலேயே
போகட்டும் ;”

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதின் மூலம்
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்
துரியோதனனை
இந்த நாட்டை
ஆளவிடாமல்
தடுக்க முடியும்
என்றால் - அப்படி
ஒரு வெற்றி
எங்களுக்கு
தேவையே இல்லை
துரியோதனனே
நாட்டை ஆளட்டும் ;”

“நீ இல்லாத ஒரு
வாழ்க்கையை
எங்களால் நினைத்து
கூடப் பார்க்க
முடியவில்லை  என்ற
நிலை இருக்கும் போது
எங்களுக்கு
வெற்றி எதற்கு ?
நாடு எதற்கு
கிருஷ்ணா ? “

அர்ஜுனன் :
“கிருஷ்ணனை களப்பலி
கொடுக்க வேண்டிய
அவசியமே இல்லை ;

“களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடைய மூவரில்
நான் ஒருவன்
இங்கு இருக்கிறேன்
என்பதையே
மறந்து விட்டீர்களா ?”

“என்னை களப்பலியாகக்
கொடுங்கள்
நான் தயாராகவே
இருக்கிறேன் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------22-01-2020
//////////////////////////////////////////