April 27, 2012

இயேசு கிறிஸ்து-பாம்பாட்டிசித்தர்-பூசை-பதிவு-36




  இயேசு கிறிஸ்து-பாம்பாட்டிசித்தர் -பூசைசெய்த-பதிவு-36

           “”பதிவு முப்பத்திஆறை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் , என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
                                                                           -----மத்தேயு - 7:21

அந்நாளில் அநேகர்  என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
                                                                        -------மத்தேயு - 7:22

அப்பொழுது , நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை ; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
                                                                 ------------மத்தேயு - 7:23

பிதா என்பவர்  யார்  என்றும்
பிதாவின் இயல்புகள் எவை என்றும்
பிதாவிடம் அருள் பெறுவது எவ்வாறு என்றும்
பிதாவிடம் ஆசி பெறுவது எந்த முறையில் என்றும்
பிதாவிடம் இணைவது எப்படி என்றும்
தெரியாத நிலையில்
பிதாவின் சித்தத்தின் படி எவ்வாறு நடக்க முடியும்
பிதாவின் சித்தம் எது என்றும்
அவர்  நம்மிடையே எதை எதிர்பார்க்கிறார் என்றும்
நாம் எந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும்  என்று
அவர்  எதிர்பார்க்கிறார்  என்றும்

நம்முடைய நடவடிக்கை முறைகள் ;
செயல்படுத்தும் நடவடிக்கை செயல்கள் ;
எண்ணப்படும் மனதின் ஆழங்கள் ;
உதிரப்படும் வார்த்தையின் அர்த்தங்கள் ;
சிந்தப்படும் சொற்களின் தெளிவுகள் ;
பகிரப்படும் உண்மையின் உருவங்கள் ;
காட்டப்படும் கருத்துக்களின் விளக்கங்கள் ;
செய்யப்படும் செயல்களின் முழுமைகள் ;

எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும்
எதை பின்பற்றி இருக்க வேண்டும் என்றும்
எந்த குறிக்கோளை உடையதாக இருக்க வேண்டும் என்றும்
எந்த இலக்கை அடைவதாக இருக்க வேண்டும் என்றும்
நமக்குத் தெரியாது .

ஆனால் பிதாவை அறிந்து
பிதாவை உணர்ந்து
பிதாவின் ஆசி பெற்று
பிதாவுடன் இரண்டறக் கலந்து
பிதாவின் குமாரனாக இந்த அவனியில் அவதரித்த
பிதாவின் குமாரனான இயேசுவுக்கு
பிதாவையும் தெரியும்
பிதாவின் சித்தம் எது என்றும் தெரியும் .

பிதாவின் குமாரரான இயேசுவை அடைந்து
அவரை உணர்ந்தால் மட்டுமே
பிதாவையும் , பிதாவின் சித்தத்தையும்
நம்மால் உணர முடியும் - ஏனென்றால்
பிதா வேறு அல்ல ; இயேசு வேறு அல்ல ;

பிதாவுக்குள் இயேசு இருக்கிறார் ;
இயேசுவுக்குள் பிதா இருக்கிறார் ;

பிதாவை உணர்ந்தால் இயேசுவை உணர முடியும் ;
இயேசுவை உணர்ந்தால் பிதாவை உணர முடியும் ;

        உலகத்தை ரட்சிக்க வந்தவர் ;
        பாவத்தை தீர்க்க வந்தவர் ;
        மடமைகளை கொளுத்த வந்தவர் ;
        மனதை மாற்ற வந்தவர் ;
       இரக்கத்தை அளிக்க வந்தவர் ;
       கருணையை கொடுக்க வந்தவர் ;
       உண்மையை உணர்த்த வந்தவர் ;
        சமுதாயத்தை சீர்படுத்த வந்தவர் ;
        சமதர்மத்தை விதைக்க வந்தவர் ;
       ஏழ்மையை நீக்க வந்தவர் ;
       ஏற்றத்தை உருவாக்க வந்தவர் ;
       துன்பங்களை கொளுத்த வந்தவர் ;
       துயரங்களை அழிக்க வந்தவர் ;
       கவலைகளை தீர்க்க வந்தவர் ;
       மாற்றத்தை உருவாக்க வந்தவர் ;
      பொய்மையை புதைக்க வந்தவர் ;
     முன்னேற்றத்தை எழுப்ப வந்தவர் ;
     மூடதனத்தை சாய்க்க வந்தவர் ;

எல்லாம் வல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
உண்மையாக உணராமல்
நம்பிக்கை வைக்காமல்
நம்மை காக்க வந்தவர்  என்ற நம்பிக்கை இல்லாமல்
இயேசுவின் பின்னால் செல்வதாலும்

கர்த்தாவே! கர்த்தாவே! என்று இயேசுவை
அழைப்பதாலும் ஒரு பயனும் இல்லை .

அதனால் தான் இயேசு என்னை உள் மனதில் நம்பாமல்
ஆழ்மனதில் நம்பிக்கை கொள்ளாமல்
உண்மையாக விசுவாசம் இல்லாமல்
வெளியே போலித்தனமாக பக்தி
இருப்பது போல் காட்டிக் கொண்டு
நயவஞ்சக நடிப்பு நடிக்கும் போலித்தனம் கொண்ட
குற்றங்களை தன்னுள் கொண்ட
ஆணவ உள்ளங்கள் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே!
என்று சொல்வதும்
என்னை பின்பற்றுவது போல் நடிப்பதும்
என்னை வழிபடுவது போல் நாடகம் ஆடுவதும்
சமுதாயம் பார்க்கும் படி போலி வேடம் போடுவதும்
போன்ற செயல்களைச் செய்வதன் மூலம்
ஒருவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது .
               
என்னை உண்மையாக உணராமல் ;
நான் வகுத்த நெறிப்படி நடக்காமல்     ;
என்னுடைய வசனங்களைக் கைக்கொள்ளாமல் ;
என்னுடைய பாதை வழியே போகாமல் ;
என்னுடைய எண்ணப்படி செயல்படாமல் ;
என்னுடைய வசனங்களை வெளிப்படுத்தாமல் ;
நான் சொன்ன கடமைகளை நிறைவேற்றாமல் ;
உண்மையை உலகுக்கு உணர்த்தாமல் ;

கால மாற்றத்தால் கருத்திழந்து
கடமையைத் தவறவிட்டு
தன்னை வளர்த்துக் கொள்ள ;
தன் உயர்வை நிலை நிறுத்திக் கொள்ள ;
தன் புகழை பெருக்கிக் கொள்ள ;
தன் தேவைகளை அடைந்து கொள்ள ;
தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ள ;
தன் தலைமுறையை பாதுகாத்துக் கொள்ள ;
தன் ஆசைகளை தீர்த்துக் கொள்ள ;
தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள ;
தன் கற்கனைகளை செயல்படுத்திக் கொள்ள ;
தன் பெருமையை வலுபடுத்திக் கொள்ள ;
தன் பெயரை வளர்த்துக் கொள்ள ;

பொய்மையை இதயத்தில் வைத்து
போலித்தனத்தை முகத்தில் வைத்து
கபடநாடகத்தை வார்த்தையில் வைத்து
உண்மை இல்லாதவர்கள்
நெறி தவறியவர்கள்
தவறான வழி செல்பவர்கள்
பாவத்திற்கு அஞ்சாதவர்கள்
தவறுக்கு கலங்காதவர்கள்

என்னை நோக்கி
உம்முடைய பெயரைச் சொல்லித் தான்
தீர்க்க தரிசனம் உரைத்தோம்
பிசாசுகளைத் துரத்தினோம்
அநேக அற்புதங்களைச் செய்தோம் என்பார்கள்
அவர்கள் தவறானவர்கள்
தவறான வழி நோக்கி செல்பவர்கள்
என்கிறார்  இயேசு .

இத்தகைய தவறான வழி நின்று
பொய் வேடம் போட்டு
தன்னை உயர்வாக காட்டிக் கொள்பவர்கள் ;
தன்னை உயர்த்திக் கொள்பவர்கள் ;
தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர்கள் ;
இவர்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ;
இவர்கள் செயல்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ;
இவர்கள் செயல்களை நான் அங்கீகரிக்க மாட்டேன் ;
இவர்களை நான் ஆசிர்வதிக்க மாட்டேன் ;
அன்பு செலுத்த மாட்டேன் ;
அவரவணைத்து காக்க மாட்டேன் ;

அக்கிரமங்களை  செய்துவாழும்
பாழ் நெஞ்சம் கொண்ட கொடுமைக்காரரே தள்ளிப் போங்கள்
என் அருகே வராதீர்கள் விலகிச் செல்லுங்கள்
அப்பால் போ சாத்தானே தள்ளி நில்
என்னை விட்டு போங்கள் என்று
அவர்களுக்குச் சொல்லுவேன் என்கிறார்  இயேசு .

அன்பை இதயத்தில் விதைத்து ,
கருணையை செயலில் விதைத்து ,
பண்பை வார்த்தையில் விதைத்து ,
மரியாதையை உள்ளத்தில் விதைத்து ,
உண்மையை உலகத்தில் விதைத்து ,

தான் என்ற ஆணவம் நீக்கி
தன்னால் தான் நடக்கிறது 
நான் தான் செய்கிறேன்
என்ற எண்ணத்தை விடுத்து செயல் செய்பவர் .

நல்லவைகள் இறைவனால் செய்யப்படுகிறது
என் மூலமாக செய்யப்படுகிறது
நான் கருவியாக இருக்கிறேன் .

கடவுள் என்னை நல்லது செய்ய பயன்படுத்துகிறார்
நல்லது செய்ய வழி நடத்துகிறார்
நல்லவைகளை பரப்ப வழி நடத்துகிறார்
நல்லவைகளை செயல்படுத்த வழி நடத்துகிறார்
என்ற எண்ணம் கொண்டு

ஆண்டவரே உண்மை
ஆண்டவரைத் தவிர மற்றதெல்லாம் பொய்

ஆண்டவர்  இயக்குகிறார் ;  நான் இயங்குகிறேன் ;
ஆண்டவர்  பேசச் சொல்கிறார் ; நான் பேசுகிறேன் ;
ஆண்டவர்  செய்ய சொல்கிறார் ; நான் செய்கிறேன் ;
ஆண்டவர்  எழுதச் சொல்கிறார்  ;நான் எழுதுகிறேன் ;
ஆண்டவர்  விளக்கச் சொல்கிறார் ; நான் விளக்குகிறேன் ;
என்று எல்லாம் வல்ல ஆண்டவரை விசுவாசித்து

அவர்  வழி நடப்பவன்
தன்னால் ஒன்றும் நடக்கவில்லை
நடப்பவைகளுக்கு நான் ஒன்றும் காரணம் இல்லை ,
காரணத்தை அறியும் தெளிவு எனக்கு இல்லை ,
தெளிவை உணரும் சக்தி எனக்கு இல்லை ,
சக்தியின் இருப்பிடம் நான் அறியவில்லை ,
நானே யார்  என்று தெரியவில்லை ,
என்னை எனக்கே புரியவில்லை ,
என்னை புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை ,
புரியும் வழி நான் அறியவில்லை ,

என்று தன்னுள் உள்ள ஆணவத்தை விலக்கி
தன் முனைப்பை எரித்து
அகம்பாவத்தை ஒழித்து
எல்லாமே ஆண்டவர்
என்பதை மனதில் நிறுத்தி ,

அவரை விசுவாசித்து அவர்  வழி நடந்தால்
ஆண்டவர்  அவரை ஏற்றுக் கொள்வார்.

தான் என்னும் அதிகாரப் பற்று
தனது என்னும் பொருட்பற்று
ஆகியவற்றை நீக்கி
ஆண்டவரை ஏற்றுக் கொண்டவன் மட்டுமே
உண்மையானவன் மட்டுமே
பிதாவின் சித்தத்தின் படி நடக்கிறவன் மட்டுமே
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கத் தகுதியுடையவன் .

என்னை உண்மையாக உணர்ந்து
பின்பற்றுபவனால் மட்டுமே
பிதாவையும் , பிதாவின் சித்தத்தையும் அறிந்து
பரலோக ராஜ்யத்தில்  பிரவேசிக்க முடியும்
என்னை உண்மையாக உணர்ந்து பின்பற்றாமல்
போலியாக இருப்பவர்களால்
பொய்யர்களாக சுற்றுபவர்களால்
தவறான எண்ணம் கொண்டவர்களால்
பிதாவையும் அறிய முடியாது ,
பிதாவின் சித்தத்தையும் உணர முடியாது ,
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கவும் முடியாது ,
என்கிறார்  இயேசு .



பாம்பாட்டி சித்தர் :

“”பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
         பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
        ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
        அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே””
                              ----பாம்பாட்டிச் சித்தர்---பெரியஞானக் கோவை---

ஆசைக்கும் , பேராசைக்கும் வித்தியாசம் உண்டு
பசியால் வாடிக்கொண்டிருப்பவன் உணவு வேண்டும் என்று
நினைத்தால் அதற்கு பெயர்  ஆசை .
அறுசுவை உணவு வேண்டும்
என்று நினைத்தால் பேராசை

மானத்தை மறைக்க ஆடை வேண்டும் என்று
நினைத்தால் அதற்குப் பெயர்  ஆசை .
நவரத்தினங்களால் நெய்யப்பட்ட ஆடை வேண்டும்
என்று நினைத்தால் அதற்கு பெயர்  பேராசை .

வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்
என்று நினைத்தால் அதற்குப் பெயர்  ஆசை .
வாழ்க்கைத் தேவைக்கு மேல்
சேர்த்து வைக்க வேண்டும்
பதுக்கி வைக்க வேண்டும்
பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வைக்க வேண்டும்
என்று நினைத்தால் அதற்குப் பெயர்  பேராசை .

ஆசைக்கும் , பேராசைக்கும் வேறுபாடு தெரியாமல்
நம்மில் பலர்  வாழ்க்கையை , வாழ்க்கையாக நினைக்காமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும்
உயர்வானதையே எண்ண வேண்டும்
உயர்வானதையே சிந்திக்க வேண்டும்
அப்பொழுது தான் உயர்வுகள் கிடைக்கும் என்பர்  சிலர்.

எண்ணம் வலிவு பெற ,
எண்ணம் திணிவு பெற ,
எண்ணம் சக்தி பெற ,
எண்ணம் உயர்வு பெற ,
ஆழ்ந்து சிந்திக்கும் போது ,
மனம் வலிமை பெறுகிறது
அதன் விளைவு நாம் நினைத்தது
நடக்கும் என்கின்றனர்  சிலர் .

அப்படி நடந்தால் மனதை வலிமைப் படுத்தி
நமக்கு தேவையானதைப் பெற்றுக் கொள்ளலாமே !
உலகில் உள்ள அனைவரும்
தங்களுக்குத் தேவையானவைகளைப் பெற்று
இன்பமுடன் வாழலாமே ஏன் முடியவில்லை?

இதற்குப் பெயர்  தான் ஆணவம்
தான் என்ற தன்முனைப்பு
தன் வாழ்க்கையை தானே
மாற்றிக் கொள்ள முடியும் என்ற அறியாமை .

ஊழ்வினையின் உண்மை தெரியாமல்
பிதற்றுபவர்கள் இவர்கள் ;
கர்மவினையின் கனல் இதுதான் என்று அடையாளம்
காண முடியாதவர்கள் இவர்கள் ;
விதைக்கும் விதை தான் முளைக்கும்
என்று தெரியாதவர்கள் இவர்கள் ;
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
சொல்ல வேண்டும் என்றால்,
சாப்பிட்ட உணவைத் தான் வாந்தி எடுக்க முடியும்
புதிதாக எந்த ஒரு உணவையும் வாந்தி எடுக்க முடியாது .

அப்படி இருக்கையில்
கர்மவினையின் தாக்குதலுக்கேற்ப
பாவ-புண்ணிய நிகழ்வுகளுக்கேற்ப தான்
ஒருவருடைய வாழ்க்கை நடக்குமே தவிர
உயர்வான எண்ணத்தை நினைப்பதாலோ
மனனை வலிமைப் படுத்த
முயற்சிகள் மேற்கொள்வதாலோ

ஒருவன் தன் வாழ்க்கையில் புதியதாக ஒரு
ஊசியைக் கூட பெற முடியாது .

கர்மவினையிலிருந்து எப்படி தப்பிப்பது ;
பாவ-புண்ணியங்களை எப்படி கழிப்பது ;
காலத்தை எப்படி மாற்றி அமைப்பது ;
இயற்கை நியதியை எவ்வாறு உணர்வது ;
பிரபஞ்ச ரகசியங்களை எவ்வாறு அறிவது ;
மறைபொருள் விளக்கங்களை எவ்வாறு பெறுவது ;
வாழ்க்கையில் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது ;
முன்னேற்றத்தின் வாயிலுக்குள் எவ்வாறு புகுவது ;
இன்பத்தின் சாளரங்களை எவ்வாறு திறப்பது ;
வெற்றியின் விலாசத்தை எவ்வாறு கண்டறிவது ;
மடமை நெஞ்சை எவ்வாறு மாற்றுவது ;
ஞானத் திறவுகோலை எவ்வாறு பெறுவது ;
முக்திக்கு தேவையான வித்தை எங்கே விதைப்பது ;
முழுமுதற் பொருளை எங்கே காண்பது ;

போன்றவற்றில் தெளிவு பெற வேண்டும்
புத்தி உயர்வு பெற வேண்டும்

காலத்திற்குள் தான் நாம் இருக்கிறோம்
காலத்தை நாம் மாற்றி அமைக்க முடியாது
என்று உணர வேண்டும்
அதற்கு நாம் ஆசைக்கும் , பேராசைக்கும்
உள்ள வேறுபாடடை உணர வேண்டும் .

பேராசை விடுத்து ஆசைப்பட வேண்டும்
பேராசையுடன் இருக்கும் சிலர்  தன் நிலை
தாழாமல் இருக்க செயல் பல செய்வர் .

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள
பயன்படுத்தும் ஓர்  ஆயுதம் தான் மந்திரம் .
மந்திரங்கள் பஞ்ச பூதங்களுடன் இணைக்கப்பட்டு
இயங்கும் போது தான் நாம் நினைத்தது நடக்கும் .
அதற்கான வழிமுறைகளே பூசைகள் .

பூசைகள் பல செய்வதால்
நாம் வேண்டியவைகள் ,
நமக்கு தேவைப்படுபவைகள் ,
நாம் விருப்பப்படுபவைகள் ,
கிடைத்து விடுமா? கிடைக்காது?

பாவத்தை தீர்க்க ,
பாவத்தை போக்க ,
பாவத்தை கழிக்க ,
புண்ணியத்தை சேர்க்க ,
கடவுளை வணங்கி கோயில் பல சென்றாலும்
யாத்திரை பல மேற் கொண்டாலும்

இந்த புவி முழுவதும் அலைந்து
கோயில் பல சென்றாலும்
செய்த பாவம் போய் விடுமா
புண்ணியம் சேர்ந்து விடுமா
சேராது? எதுவும் மாறாது?
நாம் கொண்டு வந்ததை
நாம் தான் அனுபவிக்க வேண்டும் .

அப்படி இருக்கும் போது
உயர்வான எண்ணம் கொண்டால்
மட்டும் எவ்வாறு வாழ்க்கை மாறும் .

துன்பங்கள் நீக்கி
இன்பமாக வாழவும் வழி உண்டு
முதலில் பேராசையை நீக்கி
ஆசைக்கு வர வேண்டும்
பிறகு ஆசையையும் விட வேண்டும்
அதாவது அன்றாட தேவையையும் மறக்க வேண்டும் .

அதாவது அன்றாடத் தேவைகளைப் பற்றி
கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் .
இங்கே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்                
யார்  ஒருவர்  நிகழ்காலத்தில் வாழ்கிறாரோ
இறந்த காலத்தையும் , எதிர்  காலத்தையும் பற்றி நினைக்காமல் ,
நிகழ்காலத்தில் கணத்திற்கு கணம் வாழ்பவரை
கர்ம வினைகள் அண்டாது .

நிகழ்காலத்தில் வாழ்பவரால் மட்டுமே
ஆதி அந்தத்தை உணர முடியும் ;
பிறப்பு - இறப்பை அறுக்க முடியும்
கடவுளை  அறிய முடியும் ;
கடவுளை உணர முடியும் ;
கடவுளுடன் இணைய முடியும் ;
கடவுளாய் மாற முடியும் ;
தான் அவனாக மாறும் பேற்றினை அடைய முடியும் .

உலகில் நிலவி வரும்
தவறான கருத்துக்கள் ;
தவறான நடைமுறைகள் ;
தவறான வழி காட்டுதல்கள் ;
ஆகியவை பின் செல்லாமல்
உண்மை எது என்று உணர்ந்து
அறிவு தெளிவு பெற்று அதன் வழி செல்லும் போது தான்
எல்லாவற்றுக்கும் மூலமான
ஆதியாக விளங்கும் கடவுளை அடையலாம் என்கிறார்
பாம்பாட்டி சித்தர் .



இயேசு கிறிஸ்து - பாம்பாட்டி சித்தர்:
இயேசு , உண்மையாக இருப்பவரால் மட்டுமே
பிதாவை உணர முடியும் .
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்கிறார் .

அவ்வாறே,
பாம்பாட்டி சித்தரும் ,
உண்மையை அறிந்து கொண்டு
உண்மையாக இருப்பவரால் மட்டுமே
ஆதி நிலையான கடவுளை அடைய முடியும்
என்கிறார்.
                                             
     
              “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                               போற்றினேன் பதிவுமுப்பத்துஆறு  ந்தான்முற்றே “”