January 18, 2012

மஞ்சள்-வேப்பமரம்- பதிவு-2



                         மஞ்சள்- வேப்பமரம்- பதிவு -2

                                          “”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                                                                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

வேப்பமரம் – சிறப்புகள் :
வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த  நம்முடைய முன்னோர்கள்,  
வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ,
ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் .

அதன் பலனை உணர்ந்தும் உணராமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வேப்பமரத்தை வளர்த்து வந்து இருக்கின்றனர்.

தற்காலத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் கூட வேப்ப மரத்தின் பயனை
உணர்ந்தும் , உணராமலும் - அறிந்தும் , அறியாமலும்
கிராமப் பகுதிகளில் வீட்டின் முன் பக்கத்திலோ அல்லது பின் பக்கத்திலோ வேப்ப மரத்தை வளர்த்து வருகின்றனர் .
வேப்ப மரம் வளர்க்கப் பட்டு வருவதைக்  காணலாம் .

பல ஊர்களில் விநாயகர்,   அம்மன் , காளி கோயில்களில் வேப்ப மரம் கண்டிப்பாக இருக்கும் .

வேப்பமரம்  நமது தேசத்தில் தான் எங்கும் காணப்படுகிறது. இமயம் முதல் குமரிவரை இந்த வேப்பமரத்தைக் காணலாம் .

ஆனால் மேல் நாடுகளிலும் , கீழ்நாடுகளிலும் வேப்பமரம் அவ்வளவாகச் செழித்து வளர்வதில்லை .
செழித்து வளர்வதற்கு உரிய காலநிலை அங்கே காணப்படுவதில்லை .



பாகங்கள்:
ஆலமரம் , அரசமரம் போன்ற வியக்கத்தக்க மரவகைகள் உள்ள நிலையில்  வேப்ப மரம் மட்டும் முக்கிய இடம் வகிப்பதற்குக் காரணம் அதனிடமுள்ள மருந்துக் குணமேயாகும் .

உச்சி முதல் அடி வரை அதாவது நுனிவேர்  வரை முழுவதும் மருந்துக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வேப்ப மரம் .
பேய் பிசாசுகளை ஓட்டும் மந்திரவாதிகளுக்கும் ,
விஷக்கடிகளின் விஷத்தைப் போக்கும் மருத்துவர்களுக்கும் ,
வேப்ப இலை பயன்படுகிறது .

வேப்ப மரத்தின் இலை , பூ , காய் , பழம்,  கொட்டை , பருப்பு , எண்ணெய் பட்டை , கட்டை என்ற எல்லா விதமான பாகங்களுமே வைத்திய முறைக்கு நன்கு பயன் பட்டு வருகிறது .



பார்வை -சுவாசம்:
பச்சைப் பசேல் என்று இருக்கும்  வேப்பமரத்தைத் தினசரி எழுந்தவுடன் கண் குளிரப் பார்த்து அதன் காற்றைச் சுவாசித்து வருபவர்களுக்கு ,
கண் சம்பந்தமான நோய்களும் ,சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோய்களும் வருவதில்லை .

சுவாச உறுப்புகள் சுத்தமடையும் .
கண் பார்வை தெளிவடையும் .

கண் பார்வை குறைந்தவர்கள் பசுமையான வேப்ப மரத்தைத் தினசரி  40 நாட்கள் வரை காலையிலும் ,மாலையிலும் அரை மணி நேரம் பார்த்து வருவார்களானால் அவர்கள் பார்வை தெளிவடையும் .



சர்வரோக நிவாரணி :
இத்தகைய சிறப்பு வாய்ந்த வேப்பமரத்தைப் புகழ்ந்து ஒரே வார்த்தைகளில் கூற வேண்டுமானால் ,
இதை ஓர்  சர்வரோக நிவாரணி எனலாம் .

சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள் .
ரோகம் என்றால் நோய் என்று பொருள் .
நிவாரணி என்றால் தீர்க்கக் கூடியது என்று பொருள் .
சர்வரோக நிவாரணி என்றால் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக் கூடியது என்று பொருள் .



தொற்று நோய்:
மூலிகை வர்க்கங்களிலேயே அனைத்து வகை நோய்களையும் தீர்க்கக் கூடிய சக்திவாய்ந்த ஒரு மூலிகை உண்டென்றால் அது வேப்ப மரமாகத்தான் இருக்கும் .


வேப்ப மரத்தைத் தெய்வமாக எண்ணி அதை வழிபட்டு வரும் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் இன்றளவும் இருந்து வருகிறது .
அதற்கு முக்கிய காரணம் அம்மரத்தினிடமுள்ள நோய் தீர்க்கும் சக்தியே ஆகும் .



பொதுவாக வேப்பமரம் இருக்கும் இடத்தில் எந்தவிதமான தொற்று நோயும் வருவதில்லை .


கிராமங்களில் அமைந்த வீடுகளின் முன்பக்கம் வேப்பமரமும் , பின்பக்கம் முருங்கை மரமும் இருப்பதைக் காணலாம் .
வேப்பிலையை வீட்டைச் சுற்றிலும் வீட்டு வாசலின் முன் பக்கமும் ,வீட்டின் பின்புறத்திலும் வைத்து இருந்தால் ,
வீட்டைச் சுற்றிலும் வைத்து இருந்தால் ,
அந்த வீட்டினுள் எந்தவிதமான தொத்துநோயும் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை .
தொத்து நோய் வருவதற்கான எந்தவிதமான காரணங்களும் அறிகுறிகளும் இருக்காது.



மந்திரவாதி:
சிலர்  தங்களுக்கோ , தங்கள் குழந்தைகளுக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரைத் தேடமாட்டார்கள் .மந்திரவாதியைத் தான் தேடுவார்கள் .
மந்திரவாதியிடம் சக்தி இருக்கிறதோ , இல்லையோ ஆனால் அவர் கையிலிருக்கும் வேப்பிலைக் கொத்துக்கு மட்டும் நோய் தீர்க்கும் சக்தி உண்டு .


வேப்பிலையிலிருக்கும் ஒருவித மருத்துவ குணம் கொண்ட சக்தி அந்த இலையை வீசும் பொழுது வெளிப்படும் .
இந்தச் சக்தி எந்த வியாதியையும் குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் மந்திரவாதி மந்திரித்த பின் வியாதி குணமாகிறது .



மனது:
மனதிற்கும் வேப்பமரத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் நெருங்கிய  அதிகமான பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு .
வேப்பமரத்தின் அடியில் காலை , மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் உட்கார்ந்து கொண்டே வந்தால் மனம் சாந்த நிலையை அடையும்.
மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும் .
மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகும் .
மனதில் ஒரு தெம்பு உண்டாகும் .

வேப்ப மரத்திற்கும் அம்மை நோய்க்கும் என்ன தொடர்புகள் உள்ளது என்பதைப் பற்றி அடுத்து பார்ப்போம் .


                                “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                  போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”