November 29, 2011

ஐயப்பன்- சபரிமலை- பதிவு-8



                ஐயப்பன் - பதிவு-8

“”பதிவு எட்டை விரித்துச் சொல்ல
                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - சபரிமலை
ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக விரதம் இருந்து சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே வருகிறது இந்த எண்ணிக்கையை உலகம் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும்
உலகம் முழுவதும் இருந்து சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கையை தோராயமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சுமார்  50 மில்லியன் முதல் 55 மில்லியன் மக்கள் என்று சொல்லலாம்
இந்த எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம்
எண்ணிக்கை எப்படி இருந்தாலும் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையை சிந்தித்து பார்த்தோமானால் ஐயப்பனின் மகிமையை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் ;பக்தர்கள் ஐயப்பன் மேல் வைத்திருககும் பக்தி எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ளலாம் ;
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ,அதிகமான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் புண்ணியத் தலங்களில் ஒன்றாக சபரிமலை கருதப் படுகிறது

ஐயப்பன் - சமத்துவம்
சாதி ,மதம் ,இனம் ,மொழி , கலாச்சாரம் ,பண்பாடு ,சமூக அந்தஸ்து ,பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், போன்ற எந்த ஒரு  ஏற்றத் தாழ்வுகளையும் வெளிப்படுத்தாமல் ஐயப்பன் ஒருவரே கடவுள்; ஐயப்பன் நாமத்தை உச்சரிப்பதே நம் பிறவிக் கடனைக் கழிக்க வழி; என்பதை மனதில் கொண்டு விரதம் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதே சபரிமலையின் தனிச்சிறப்பு மட்டுமில்லாமல்
        “”””ஒன்றே குலம் ஓருவனே தேவன்”””””
என்ற திருமூலரின் தாரக மந்திரத்தை இந்த சமுதாயம் உணர்ந்து கொள்ளச் செய்யும் படி ஐயப்பனின் வழிபாட்டு முறை உள்ளது. மேலும் சபரிமலை யாத்திரை இதில் ஒரு அங்கமாக உள்ளது.

அனைவரும் சமம் என்பதை இந்த சமுதாயம் உணர்ந்து கொள்ளும் படியும் ,ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகவும், எத்தனையோ சமுதாய இயக்கங்கள் பாடுபட்டாலும் தன் வழிபாட்டு முறையிலேயே மறைமுகமாக சமத்துவ ,சமதர்ம ,சமுதாயத்தை உருவாக்கி வருகிறது சபரிமலை புனித யாத்திரை  .

ஐயப்பன் - பெண்கள்
ஐயப்பனின் வழிபாட்டு முறையில் ஒரு முக்கியமான நடைமுறை பின்பற்றப் படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் :
10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கப் படுதில்லை .சமூக ரீதியான காரணங்களுக்காகவும், ஐயப்பனின் வழிபாட்டு முறையில் உள்ள விதிமுறைகளின் படியும் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கப் படுவதில்லை.
ஐயப்பனின் வரலாற்றை சொல்லும் ஐயப்ப கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தாலும் ,பல்வேறு காரணங்களாலும் ,10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள  சபரிமலை யாத்திரைக்கு வருவதில்லை.
மேலும் ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற காரணங்களாலும் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

சபரிமலை - அமைவிடம்
சபரிமலை அமைந்துள்ள நாடு               -  இந்தியா
சபரிமலை அமைந்துள்ள மாநிலம்      -  கேரளா
சபரிமலை அமைந்துள்ள மாவட்டம்    -  பத்தனம்தித்தா மாவட்டம்

சபரிமலை என்பது கேரளா மாநிலத்தில் உள்ள மேற்கு மலைத் தொடரில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த புண்ணியத்தலம் ஆகும்
ஐயப்பன் மகிஷி என்ற கொடிய செயல்களைச் செய்த பலம் வாய்ந்த அரக்கியை கொன்று அழித்த பிறகு ஐயப்பன் சென்று தியானம் செய்த இடமே சபரிமலை என்று வரலாறு கூறுகிறது

18 மலைகளுக்கு இடையே ஐயப்பனின் கோயில் இருக்கிறது .இந்தக் கோயில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மலையின் உச்சியில் உள்ளது .மேலும் இதன் உயரத்தை சராசரியாக கூறும் பொழுது கடல்மட்டத்துடன் ஒப்பிடும் பொழுது 914 மீட்டர் உயரத்தில் உள்ளது என்று கூறலாம்.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு கோயிலாகவும் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலையை சூழ்ந்து  உள்ள ஒவ்வொரு மலையிலும் பல்வேறு தெய்வங்களுக்கான கோயில்கள் உள்ளன.

கரிமலை ,காளகெட்டி ,நிலக்கல் போன்ற இடங்களில் இன்றும் நடைமுறை வழிபாட்டில் உள்ள கோயில்கள் உள்ளன என்று சொல்லப் படுகிறது .மேலும் பழங்காலத்து கோயில்களில் இயற்கை சீற்றத்தால் பிழைத்துக் கொண்ட எஞ்சிய பாகங்கள் கொண்ட கோயில்களும் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.

ஐயப்பன் - யாத்திரை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் சபரிமலை யாத்திரையை எருமேலியில் இருந்தே தொடங்குகிறார்கள் .
எருமேலியில் இருந்து தொடங்கி காட்டு வழிப்பாதை வழியாக சுமார்  45 கிலோ மீட்டர்  துhரம் கொண்ட மலைப் பாதைகளில் காலணிகள் ஏதும் அணியாமல் நடந்து செல்லும் சபரிமலை யாத்திரையையே விரும்புகின்றனர் .

எருமேலியில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை யாத்திரை கீழ்க்கண்டவாறு அமைகிறது:
முதலில் எருமேலியில் இருந்து தொடங்கும் சபரிமலை யாத்திரை அழுதா நதி வரை செல்கிறது .பிறகு அழுதா மலையை கடந்து கரியம் தோடினை அடைகிறது .இப்பொழுது புனிதமான மலையாகக் கருதப்படும் கரிமலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
அதைக் கடந்த பின் செறியன வட்டம் ,வலியன வட்டம் ஆகிய இடங்களைக் கடக்க வேண்டும் இந்த இடங்களை எல்லாம் கடந்து முடித்த பின் பம்பா நதியை அடைய வேண்டும் .

புனித பயணம் மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து பல விதமான வழிகளைப் பயன்படுத்தி பம்பா நதிக்கரையை அடைகின்றனர்.
இவ்வாறாக இரண்டு விதமான நிலைகளில் ஐயப்ப பக்தர்கள் பம்பா நதிக்கரையை அடைகின்றனர்.


பம்பா நதிக்கரையை அடைந்த ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சுமார்  4 கிலோ மீட்டர்  துhரம் கொண்ட செங்குத்து நிலை கொண்ட நீலிமலை காட்டுப் பாதையில் ஏற வேண்டும் .இந்த பாதையில் நடந்து கடந்து சென்றே இந்த மலையில் ஏறியே சபரிமலையை அடைய வேண்டும்

ஒரு காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் காட்டுப் பாதையாகவும் ,இருள் சூழ்ந்த நிலையிலும், இருந்த ஒற்றை வழிப் பாதை தற்பொழுது சீரமைக்கப் பட்டு பலவிதமான வசதிகள் செய்யப்பட்டு, ஒற்றை வழிப் பாதையின் இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட ஒரு சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐயப்ப பக்தர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு சபரிமலையை அடைகின்றனர்.

அடுத்து 18 படிகளைப் பற்றியும் ஐயப்ப தரிசனத்தைப் பற்றியும் பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                போற்றினேன் பதிவுஎட்டும் தான்முற்றே “”





November 28, 2011

ஐயப்பன்-இருமுடி-பதிவு-7



                                ஐயப்பன் - பதிவு-7

“”பதிவு ஏழை விரித்துச் சொல்ல
                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் -பள்ளிக்கட்டு -இருமுடி :
பண்டைக் காலம் - இருமுடி
ஐயப்பனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தலையில் வைத்து சுமந்து செல்லும் இருமுடி பருத்தித் துணியால் கைகளால் தைக்கப் பெற்ற இறைவனுக்கு உரிய இறைவனுக்கு படைப்பதற்கான பொருட்களை வைப்பதற்கு என்று தனிப்பட்ட முறையில் உருவாக்கப் பட்ட இரு அறைகளைக் கொண்ட பை ஆகும்
இருமுடியின் முன்னால் உள்ள அறை முன்முடி என்றும் இருமுடியின் பின்னால் உள்ள அறை பின்முடி என்றும் அழைக்கப் படுகிறது .இருமுடி மையத்தில் திறக்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது
இருமுடியின் முன்னால் உள்ள அறை இறைவனுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது வணங்கச் செல்லும் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய பக்தி பொருட்கள் அனைத்தும் அதில் நிரப்பப் பட்டிருக்கும்
இருமுடியின் பின்னால் உள்ள அறை புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது .அதில் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் தேவையை நிறைவு செய்வதற்குத்  தேவையான அனைத்து விதமான பொருட்களும் அதில் நிரப்பப் பட்டிருக்கும்.

மேற்கண்ட முறையில் உருவாக்கப் பட்ட இருமுடியானது பண்டைக் காலங்களில் சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களால் பயன் படுத்தப்பட்டு வந்தது.
இதற்கான காரணங்கள் என்ன என்று இப்பொழுது பார்ப்போம்,

இருமுடி நிலை
பண்டைக் காலங்களில் ஐயப்பனுக்காக விரதம் இருந்து இருமுடியை சுமந்து செல்லும்  ஐயப்ப பக்தர்கள் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் செல்ல வேண்டி இருந்தது.
வனப் பகுதியில் உள்ள கோயில் என்பதால் வனங்களில் இருள் நிறைந்த பகுதிகளிலும், கரடு முரடான பகுதிகளிலும் செல்ல வேண்டி இருந்தது . உணவுக்கான வசதி கிடைக்காது என்பதால் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பொருட்களுடன் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.
இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களும் ,ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டையும் தனித் தனியாகப் பிரித்து பையில் கட்டி கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது .


இரண்டு பொருட்களையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பையின் முன் பகுதியில் இறைவனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களையும், பையின் பின்பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.

இறைவனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்கள் நிரப்பப் பட்ட பையின் முன்பகுதி முன்முடி என்றும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் நிரப்பப் பட்ட பையின் பின்பகுதி பின்முடி என்றும் பெயர்கள் கொடுக்கப் பட்டு இருமுடி என்று அழைக்கப் படுகிறது.

இருமுடி - உணவுப் பொருட்கள்
உணவு சமைப்பதற்கான அரிசி எண்ணெயுடன் கலந்து விடாமல் தனியாகப் பிரித்து வைத்தும்  உணவு சமைப்பதற்கான எண்ணெய் அரிசியுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக தேங்காயின் கண்களில் சிறு துளை போட்டு அதில் எண்ணையை ஊற்றிய பிறகு தேங்காயின் கண்களில் உள்ள துளையை சிறு மூடும் பொருள் மூலம் மூடி சமைப்பதற்கு கொண்டு சென்றனர்
அதனுடன் படுத்துக் கொள்வதற்குத் தேவையான விரிப்புகள் ,போர்த்திக் கொள்வதற்குத் தேவையான துணிகள் , வழிப்பயணத்திற்குத் தேவையான பொருட்களையும்  கொண்டு செல்வதற்கான முறைகளும் இருந்தது

இருமுடி - நிறங்கள்
பண்டைக் காலங்களில் இருமுடி சுமந்து முதன் முறையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதாவது கன்னி ஐயப்பன்மார்கள் சிவப்பு நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .அவர்களைத் தவிர்த்து மற்ற ஐயப்பமார்கள் வெள்ளை   நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .
ஐயப்ப பக்தர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை மக்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிற வேறுபாடு உருவாக்கப் பட்டிருந்தது.

தற்காலம் :
இருமுடிநிலை
தற்காலத்தில் ஐயப்பனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தலையில் வைத்து சுமந்து செல்லும் இருமுடி பருத்தித் துணியால் கைகளால் தைக்கப் பெற்ற இறைவனுக்கு உரிய இறைவனுக்கு படைப்பதற்கான பொருட்களை வைப்பதற்கு என்று தனிப்பட்ட முறையில் உருவாக்கப் பட்ட இரு அறைகளைக் கொண்ட பை ஆகும்
தற்காலத்தில் இருமுடியின் இரு அறைகளிலும் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்கள் மட்டுமே நிரப்பப் பட்டு கொண்டு செல்லப் படுகிறது.

ஐயப்பனுக்காக 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே இருமுடியை தலையில் வைத்து சுமந்து செல்லும் தகுதியைப் பெறுகிறார்கள் தலையில் இருமுடி இல்லாதவர்கள் பரிசுத்த படிகளான புனிதமான படிகளாகக் கருதப் படும் 18 படிகளை ஏற அனுமதிக்கப் படுவதில்லை


இருமுடி நிறங்கள்
முதன் முறையாக புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்;கள் அதாவது கன்னி ஐயப்பன்மார்கள் குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்து புனிதப் பயணம் மேற்கொள்ள  வேண்டும்  .
அவர்களைத் தவிர இதர புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் கருப்பு வர்ணத்தினாலான இருமுடியையோ அல்லது நீல வர்ணத்தினாலான இருமுடியையோ பயன்படுத்தி புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இருமுடி - வழிபாட்டுப்பொருட்கள்
இருமுடியில் வைக்கப்பட வேண்டிய வழி பாட்டுப் பொருட்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது;

2 தேங்காய்கள்  அல்லது 3 தேங்காய்கள் எடுத்துக் கொள்ளப் படுகிறது அதில் ஒரு தேங்காய் நெய் நிரப்பப் பட்டும் மற்ற இரண்டு தேங்காய்கள் வழிபாட்டிற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது
நெய் நிரப்பப் பட்ட தேங்காய் ஐயப்பனின் அபிஷேகத்திற்காகவும் மற்ற இரண்டு தேங்காய்கள் விடலை விடுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது . சிலர்  விடலை விடுவதற்காக 3 அல்லது 4 தேங்காய்களையும் கொண்டு செல்கின்றனர்.
காணிக்கை செலுத்துவதற்கு நாணயம் ;
முந்திரி ,சுக்கு, ஏலக்காய் ,பேரீச்சம்பழம் ,சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட தேன் ,மஞ்சள் பொடி ,குங்குமம், திருநீறு ,சந்தனம், சாம்பிராணி ,கற்பூரம் ,அகர்பத்தி ,பன்னீர் , எலுமிச்சை ,
காணிக்கை செலுத்துவதற்கு அரசியும் பருப்பும்;
 வெற்றிலை பாக்கு ,அவல்பொரி ,கற்கண்டு ,உலர்  திராட்சை , கதலிப் பழம் ,வறுத்த அரிசிப்பொடி ,நல்லமிளகு  ஆகியவைகளில் எவை தேவைப் படுகிறதோ அவை நிரப்பப் பட்டும் ,எவை தேவை இல்லையோ அவை நீக்கப் பட்டும் வழிபாட்டுப் பொருட்கள் இருமுடியில் நிரப்பப் படுகிறது

இருமுடியில் முன்னால்  உள்ள அறை
ஐயப்ப பக்தர்கள் இரு கைகளாலும் அரிசியை எடுத்துக் கொண்டு இருமுடியின் முதல் அறையில் இடுகின்றனர்  இதைப் போல தொடர்ந்து மூன்று முறை இடப்படுகிறது
ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அரிசியை இடும் முறையும் உள்ளது

அரிசியின் மேல் நெய் நிரப்பப்பட்ட தேங்காய் இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது
அரிசியின் மேல் நாணயங்களும் இடப்படுகிறது
கற்பூரம் ,திருநீறு ,சந்தனம், பன்னீர்  ஆகியவை இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது

இருமுடியில் பின்னால் உள்ள அறை
இரண்டு விடலைத் தேங்காய்கள் இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது .முதல் தேங்காய் 18 படி ஏறுவதற்கு முன்பு உடைத்து வலது காலை வைத்து 18 படியில் ஏறிச் செல்வதற்காக வைக்கப் படுகிறது ;இரண்டாவது தேங்காய் கோயிலை விட்டு வெளியே வந்த பிறகு உடைப்பதற்காக வைக்கப் படுகிறது;
குங்குமம், மஞ்சள் பொடி ஆகியவை இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட முறைகளில் சில முறைகள் சேர்த்தும் சில முறைகள் சேர்க்காமலும் இருமுடி உருவாக்கப் படுகிறது

ஒரு முறை இருமுடியை துhக்கி தலையில் வைத்து விட்டால் எக்காரணத்தைக் கொண்டும் கீழே வைக்கக் கூடாது .கீழே வைப்பதாக இருந்தால் துணியை அல்லது போர்வையை விரித்து அதன் மேல் தான் வைக்க வேண்டும்.

இருமுடியின் விவரங்களைப் பார்த்தோம் அடுத்து சபரிமலை மற்றும் சபரிமலை யாத்திரையைப் பற்றி பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுஏழும் தான்முற்றே “”

November 27, 2011

ஐயப்பன்- பூஜைமுறைகள்- பதிவு-6



                              ஐயப்பன்- பதிவு-6

“”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - பூஜை முறைகள்
சபரி மலை யாத்திரைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு செல்வதற்கு முன்பு விரத நாட்களில் யாரேனும் பசி என்று வந்தால் அவர்கள் பசியை தீர்க்க வேண்டும்
தங்களால்  முடிந்தால் குறைந்தது பத்து பேருக்காகவாவது அன்ன தானம் செய்ய வேண்டும் வசதி படைத்தவர்கள் விரத நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஐயப்பனுக்கு ஒரு பூசை செய்ய வேண்டும்
சபரி மலை யாத்திரைக்கு செல்வதற்கு முன்பு ஐயப்ப பக்தர்களால் செய்யப் படும் இந்த பூசைக்கு தாகம் வைப்பு (வெள்ளம் குடி) என்று பெயர்
இந்த வெள்ளம் குடி பூசையை ஒரு சுத்தமான இடத்தில் வைத்து துhய்மையான இடத்தில் வைத்துத் தான் செய்ய வேண்டும் ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்களை அழைத்து அவர்கள் மனம் குளிரும்படி  தகுந்த விருந்து வைத்து அனைவரின் மனமும் குளிரும் படிச் செய்ய வேண்டும்

பூஜை முறை :
பூஜை என்றால் என்ன என்ற விவரங்களைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்
பூஜை,
                            1. ஆத்மார்த்தம் பூஜை 
                            2. பரார்த்தம் பூஜை
என இரு வகைப்படும்
1. ஆத்மார்த்தம் பூஜை
பூஜை செய்பவர்  தனக்கு நன்மை உண்டாக வேண்டுமென்றும் தன் குடும்பத்திற்கு நன்மை உண்டாக வேண்டுமென்றும் தன்னுடைய வீட்டில் வைத்து தன்னுடைய வருமானத்திற்கு ஏற்ற விதத்தில் தன்னுடைய சக்திக்கு ஏற்ற விதத்தில் பூஜை செய்வது ஆத்மார்த்தம் பூஜை எனப்படும்
இந்த பூஜையில் பிம்பம் சக்கரம் ஆகியவை யந்திரமாக பயன்படுத்தப் பட்டு பூஜை செய்யப் படுகிறது இந்த பூஜை முறைக்கு உள்ள விதிமுறைகள் ஆலய பூஜை முறைக்கு உள்ள விதிமுறைகளை ஒத்து இருக்கும்
மந்திரம் யந்திரம் தந்திரம் ஆகியவை இந்த பூஜை முறையில் சூட்சும விஷயமாகப் பயன் படுத்தப் படுகிறது

2. பரார்த்தம் பூஜை
பரார்த்தம் பூஜை எனப்படுவது ஆலயத்தில் செய்யப்படும் பூஜை ஆகும் ஆலயத்தில் இருக்கும் கடவுள் சிலைகளுக்கு அதாவது ஆலய மூர்த்திகளுக்கு ஆகம முறைப்படி ஆச்சாரியர்களைக் கொண்டு செய்யப்படும் பூஜை ஆகும்

இந்த பூஜை முறையிலும் மந்திரம் யந்திரம் தந்திரம் ஆகியவை சூட்சும விஷயமாகப் பயன்படுத்தப் படுகிறது

பூஜை செய்பவர்  உடல் சுத்தமும், உளச் சுத்தமும் கொண்டவராக இருக்க வேண்டும்
உடல் சுத்தம் - பெற நீராடுதல் திருநீறு இட்டுக் கொள்ளுதல் உருத்திராட்சம் அணிந்து கொள்ளுதல் துளசி மணி மாலை அணிந்து கொள்ளுதல் ஆகியவை இன்றியமையாதது ஆகும்
உளச் சுத்தம் - பெற ஐம்பூலன்களை அடக்குதல் தீட்சை பெறுதல் ஆகியவை இன்றியமையாதது ஆகும்

பஞ்ச சுத்தி
பூஜை செய்பவர்  பஞ்ச சுத்தி எனப்படும்
                                1. ஆத்ம சுத்தி
                                2. ஸ்தான சுத்தி
                                3. திரவிய சுத்தி
                                4. மந்திர சுத்தி
                                5. இலிங்க சுத்தி
ஆகிய சுத்திகளை அறிந்து தான் எத்தகைய பூஜைகளையும் செய்ய வேண்டும்
கோயிலில் செய்யப்படும் இந்த பஞ்ச சுத்தியை அடிப்படையாக வைத்தே அந்த விதிமுறைகளை பின்பற்றியே வீட்டில் எந்த தெய்வத்திற்கு பூஜை செய்தாலும் ஐயப்ப பூஜை செய்தாலும் இந்த பஞ்ச சுத்தியை அடிப்படையாக வைத்தே இதன் விதிமுறைகளைப் பின்பற்றியே செய்யப் படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

பஞ்ச சுத்தி என்றால் என்னவென்றும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பொழுது பார்ப்போம்
1.ஆத்ம சுத்தி
கோயில்களில் உள்ள தெய்வ சிலைகள் எவ்வளவு துhய்மையாகவும் ஆகம விதிப்படி எவ்வளவு பரிசுத்தமாக வைக்கப் பட்டிருக்கிறதோ அதைப் போலவே  பூஜை செய்பவர்  உடல் சுத்தமும் உளச் சுத்தமும் ஆன்ம சுத்தமும் கொண்டவராக இருக்க வேண்டும்

2. ஸ்தான சுத்தி
பூஜை செய்யும் ஆலயமும் ஆலயத்தில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் தெய்வ சிலையும் ஆலயத்தில் உள்ள மற்ற தெய்வ சிலைகள் இருக்கும் இடங்களும் எப்பொழுதும் சுத்தமான நிலையில் இருக்க வேண்டும்  சுத்தமான நீரைக் கொண்டு கழுவி அனைத்து இடங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும்

3. திரவிய சுத்தி
பூஜைக்குரிய பாத்திரங்கள் பூஜைக்குரிய பொருட்கள் ஆகியவற்றை சுத்தமான நீரால் கழுவி வைக்க வேண்டும்

4. மந்திர சுத்தி
எந்த தெய்வத்திற்கு பூஜை செய்யப் போகிறோமோ அந்த தெய்வத்திற்குரிய பீஜாட்சர மந்திரத்தையோ மூல மந்திரத்தையோ பத்து முறை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்

5. இலிங்க சுத்தி
அபிஷேக பாத்திரத்தில் நீரை நிரப்பி புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரை அதில் ஆவாகனம் செய்து இலிங்கத்தின் மேல் ஊற்றி அபஷேகம் செய்ய வேண்டும் இலிங்கத்தை துhய்மை செய்து சுத்தமான ஆடை கொண்டு இலிங்கத்திற்கு ஆடையை கட்ட வேண்டும்

ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் விரத நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வீட்டில் செய்யப்படும் வெள்ளம் குடி என்ற பூஜையும் ஆலயத்தில் செய்யப்படும் இந்த பூஜை முறைகளைப் பின்பற்றியே இந்த விதிமுறைகளை அடிப்படையாக வைத்தே செய்யப் படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

அடுத்து சபரி மலை யாத்திரைக்கு செல்பவர்கள் சுமந்து செல்லும் இருமுடி பற்றிய விளக்கங்களைப் பற்றி பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
    போற்றினேன் பதிவுஆறும் தான்முற்றே “”

ஐயப்பன்- விரதமுறைகள்- பதிவு-5



                                         ஐயப்பன்- பதிவு-5

“”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
ஐயப்பன் - விரதமுறைகள்
சபரி மலை யாத்திரைக்கு அதாவது சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கோள்ளும் ஒவ்வொரு பக்தருக்கும்  பின்பற்ற வேண்டிய விரத முறைகள், செய்ய வேண்டிய பூஜை முறைகள், புனித யாத்திரையின் பொழுது கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றின் விவரங்கள், விதிமுறைகள் தெரிந்து இருக்க வேண்டும் அதில் உள்ள ரகசியங்கள் புரிந்து இருக்க வேண்டும்
அப்பொழுது தான் அதை முறையாக கடைபிடித்து செயலாற்றி இடையில் வரும் இடையூறுகளைக் களைந்து அடைய நினைக்கும் இலக்கை அடைந்து கொண்ட கொள்கையை முடித்து வெற்றி பெற முடியும்.

ஐயப்பன் விரதம் - விதிமுறைகள்
விரத நாட்கள்
சபரி மலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் கடினமான விரதம் மேற்கொள்ள வேண்டும் ஐயப்பனுக்காக மேற்கொள்ளப் படும் விரதத்தின் நாட்கள் 41 நாட்களாகவோ அல்லது 45 நாட்களாகவோ கணக்கில் கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்
41 நாட்களைக் கூட்டினால் 5 வருகிறது 5 என்பது பஞ்ச பூதங்களை குறிப்பதால் 41 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்
45 நாட்களைக் கூட்டினால் 9 வருகிறது 9 என்பது நவ கிரகங்களைக் குறிப்பதால் 45 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 45 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்
 
கழுத்தில் அணியும் மாலை
ஐயப்பனுக்காக விரதம் மேற்கொள்ளும் துவக்க நாளன்று ருத்ராட்சக் கொட்டைகளினால்  செய்யப் பட்ட மாலையையோ (அல்லது) துளசி மணிகளால் செய்யப் பட்ட மாலையையோ கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்
கழுத்தில் பெரிய மாலை சிறிய மாலை என்று இரண்டு விதமான மாலைகளை ஐயப்ப பக்தர்கள் அணிகிறார்கள் சிறிய மாலை துணைமாலை என்றும் அழைக்கப் படுகிறது

பெரிய மாலை 108 எண்ணிக்கை கொண்ட பெரிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ (அல்லது) 108 எண்ணிக்கை கொண்ட பெரிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ பெரிய மாலை இருக்கும்
சிறிய மாலையில் 108 எண்ணிக்கை கொண்ட சிறிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ (அல்லது) 108 எண்ணிக்கை கொண்ட சிறிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ சிறிய மாலை இருக்கும்
பெரிய மாலையிலும் சிறிய மாலையிலும் ஐயப்பனின் படமும், விநாயகரின் படமும் கொண்ட டாலர்  மாட்டப் பட்டிருக்கும்.

ஐயப்பனுக்காக மாலை அணிந்த நாள் முதல் விரத நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விடும் விரத நாட்கள் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் விரத நாட்களில் அனுசரிக்க வேண்டிய கடைபிடிக்க வேண்டிய முறைகள் இருக்கின்றன
இதை ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கண்டிப்பாக தன் விரத நாட்களில் பின்பற்றியே ஆக வேண்டும் அதை இப்பொழுது பார்ப்போம்

குளிப்பது
விரதம் இருக்கும் பக்தன் அதிகாலை சூரிய உதயத்திறகு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் .குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்  .தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்

பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்
ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்து விட்டு காலையில் எழுந்து செய்தது போலவே செய்ய வேண்டும்
பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்  தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும் பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்
ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


செல்ல வேண்டிய கோயில்
விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும் சிறிது நேரம் கோயிலிலேயே அமர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்
ஐயப்பன் கோயில் இருந்தால் அங்கு சென்று வணங்கலாம் ஐயப்பன் கோயில் இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒரு தெய்வம் உள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கலாம்
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஐயப்பன் கோயிலுக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

உணவு
விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் கையால் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் (அல்லது) வேறு ஒரு ஐயப்ப பக்தர்  செய்து கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டும் இதனைத் தவிர்த்து மற்றவர்கள் கையால் செய்யப் பட்ட உணவையும் உணவகங்களில் செய்யப்பட்ட உணவையோ சாப்பிடக் கூடாது

உறக்கம்
ஐயப்ப பக்தர்கள் காலையிலோ மத்தியானத்திலோ உறங்கக் கூடாது அப்படி உறங்கினால் உறங்கி எழுந்தவுடன் குளிக்க வேண்டும் குளித்து முடித்து விட்டுத் தான் மற்றைய வேலைகளைச் செய்ய வேண்டும்

செய்யக் கூடாதவை
செருப்பு போடக் கூடாது, முடி வெட்டக் கூடாது ,நகத்தை வெட்டக் கூடாது, ஷேவ் செய்யக் கூடாது ,அலங்காரம் செய்யக் கூடாது, வாசனைத் திரவியங்களைச் சூட்டிக் கொள்ளக் கூடாது.
மது அருந்துதல் ,சிகரெட், பீடி பிடித்தல் போன்ற எந்த விதமான போதையையும் உண்டாக்கக் கூடிய போதை வஸ்துகளைப் பயன்படுத்தக் கூடாது
உயிர் வதை செய்வது ,உயிர்களைக் கொல்லுவது ,புலால் உண்ணுவது ,அசைவ உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது 

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி ,உயர்வு தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் என்ற ஆறு வகை குணங்களும் நம்முள் வெளிப்படாதவாறும் செயல்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆறு வகை குணங்களும் கண்டிப்பாக வெளிப்படக் கூடாது
பொய் ,சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல் ஆகிய பஞ்சமா பாதகங்களை சிந்தையாலும் ,செயலாலும் தொடக் கூடாது
பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்; பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்; பெண்களை நினைவாலும் உடலாலும் தொடக் கூடாது

செய்ய வேண்டியவை
எண்ணம் சொல் செயலால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்
தன் வீட்டில் விருந்தாளியாக வருபவர்களுக்கு உணவு படைத்து உபசரிக்க வேண்டும்

நினைவு
சாதி மதம் இனம் மொழி கலாச்சாரம் பண்பாடு போன்ற வேறுபாடுகளை எந்த உயிர்களிடத்தும் காட்டாமல் மற்றவர்கள் மனம் வருத்தப் படக் கூடிய வார்த்தைகளையோ ,ஆபாசமான சொற்களையோ ,மற்றவர்களை இழிவு படுத்தும் வார்த்தைகளையோ உபயோகப் படுத்தாமல் , எண்ணம் ,சொல் ,செயலால் எப்பொழுதும் ஐயப்பனையே நினைக்க வேண்டும். ஐயப்பன் நாமத்தையே சொல்ல வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களையும் இறைவன் என்று நினைக்க வேண்டும்; அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த நினைப்பு ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் நினைவிலும் செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்க்கும் அனைத்து உயிர்களையும்     ""சாமி ""     என்று கூப்பிட வேண்டும் என்ற சடங்கு முறை உள்ளது

தரிசித்தல்
யோக நிலையில் உள்ள ஐயப்பனை தரிசிக்க முதல் 3 வருடம் செல்பவர்கள் குருவின் அடையாளமாக மஞ்சள் ஆடைகளை அணியலாம்
அதன்பின் 15 ஆண்டுகளுக்குக் கருநீல ஆடை அணிந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கலாம்
18 ஆண்டுகள் தரிசனத்தை முடித்தவர்கள் யோக நிலையில் இருக்கும் ஐயப்பனை தரிசிக்க முழுவதும் காவி உடை அணிந்து தரிசித்தால் சிறந்த பலனை அடையலாம்

உணர வேண்டியது
மேலே சொல்லப்பட்ட விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்றவாறும் தனக்கு உகந்தவாறும் தன்நிலைக்கு எவையெல்லாம் சரியாக வருமோ அவற்றை மட்டும் பின்பற்றி ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிக்கின்றனர்
வேலையின் காரணமாகவோ தொழில் நிமித்தமாகவோ மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல்  இருப்பது ஐயப்பனை இழிவு படுத்துவது போலாகும் இதனை செய்ய முடியாதவர்கள் ஐயப்பனுக்கு விரதம் இருப்பதை தவிர்த்தல் நல்லது
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் தனக்கு பொருந்தக் கூடிய தனக்கு உகந்த தன்னால் முடிந்த அளவு பின்பற்றக் கூடிய விதிமுறைகளை மட்டும் பின்பற்றி விரதம் இருப்பவர்கள் உண்மையாகவே ஐயப்பனுக்காக விரதம் இருக்கவில்லை என்பதை அவரவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுவோம்
உண்மையாகவே ஐயப்பனுக்காக விரதம் இருப்போம் வாழ்வில் தேவையான நலன்களைப் பெற ஐயப்பனை வணங்குவோம் 


அடுத்து ஐயப்பனுக்காக செய்யப்படும் பூஜைமுறைகளின் விவரங்களைப் பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
   போற்றினேன் பதிவுஐந் தும்தான்முற்றே “”

November 25, 2011

ஐயப்பன்- வழிபடும்முறை-பதிவு- 4

                     

                                     ஐயப்பன்- பதிவு- 4
“”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - வழிபடும் முறை :
ஐயப்பனை வழிபடும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை வழிபட மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளான விரத முறைகள், பூஜை முறைகள் ,செய்யும் சடங்குகள் ,பிரார்த்தனை முறைகள் ,தியான முறைகள் ஆகியவை தாங்கள் அறிந்தோ ,அறியாமலோ (அல்லது) உணர்ந்தோ ,உணராமலோ  கிரியா என்னும் மார்க்கத்தைப் பின்பற்றி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிரியா மார்க்கம் எனப்படுவது இறைவனை அகத்தேயும், புறத்தேயும் வைத்து வழிபாடு செய்யும் முறையைக் குறிக்கிறது
இறைவனை அகத்தே வைத்து வழிபடும் பக்தர்கள் அகத்தே வழிபடுவதற்கான முறைகளையும் ,இறைவனை புறத்தே வைத்து வழிபடும் பக்தர்கள் புறத்தே வழிபடுவதற்கான முறைகளையும் பின்பற்றி வழிபாடு செய்வார்கள்
இந்த இரணடு முறைகளையும் ஒன்றாக இணைத்து அதாவது இறைவனை அகத்தே வைத்து வழிபடுவதற்கான முறைகளையும் ,இறைவனை புறத்தே வைத்து வழிபடுவதற்கான முறைகளையும் ஒன்றாக்கி வழிபடும் முறைகளை கொண்டது தான் ஐயப்பனை வழிபடும் முறைகள் ஆகும்
இந்த முறையைத் தான் கிரியா மார்க்கம் என்று அழைக்கிறோம்

மார்க்கம்
மார்க்கம் என்றால் வழி என்று பொருள்
இறைவனை அடைவதற்கு, அதாவது முக்தி அடைவதற்கு உரிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றி உயர்வு அடைவதையே மார்க்கங்கள் குறிப்பிடுகின்றன

முக்தி அடைவதற்கு உரிய மார்க்கங்களை நான்காகப் பிரித்து வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்
நான்கு விதமான மார்க்கங்கள் எனப்படுபவை சரியை ,கிரியை, யோகம், ஞானம் ஆகியவை ஆகும்
சரியை  - இறைவனை புறத்தே வைத்து வழிபாடு செய்வது;
கிரியை  - இறைவனை அகத்தேயும் புறத்தேயும் வைத்து வழிபாடு செய்வது;
யோகம்  - இறைவனை அகத்தே கண்டு வழிபாடு செய்வது;
ஞானம்  -  எங்கும் இறைவனது காட்சியைக் கண்டு களிப்பது;


ஐயப்பனை கிரியா மார்க்கத்தில் வழிபடும் பொழுதே மேலும் இரண்டு மார்க்கங்களான சரியை மார்க்கமும், யோக மார்க்கமும் ஒன்றுக்குள் ஒன்றாக அடங்கி விடுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

இறைவனை புறத்தே வைத்து வழிபடும் சரியை மார்க்கமும் ,
இறைவனை அகத்தே வைத்து வழிபடும் யோக மார்க்கமும்,
இரண்டையும் ஒன்றாக்கி வழி படும்  அதாவது இறைவனை அகத்தேயும், புறத்தேயும் வைத்து வழிபடும் கிரியை மார்க்கமும் ஆக மூன்று மார்க்கமும் கொண்ட ஒரு வழிபாட்டு முறையாக ஐயப்பனின் வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது

மூன்று மார்க்கத்தின் சாராம்சம் அனைத்தையும் தன்னுள் கொண்ட ஐயப்பனின் வழிபாட்டு முறைகள் இறுதியில் நான்காவது மார்க்கமான ஞான மார்க்கத்தை அடையக் கூடிய திறவு கோலை பெறுவதற்குரிய ஒரு ரகசியமான சூட்சுமமான வழிபாட்டு முறையாக ஐயப்பனின் வழிபாட்டு முறை இருந்து வருகிறது

மொத்தமாக ஐயப்பனின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து பார்த்தால் நான்கு மார்க்கங்களின் சாராம்சத்தைத் தன்னுள் கொண்ட ஒரு வழிபாட்டு முறையாகவே ஐயப்பனின் வழிபாட்டு முறைகள் இருந்தது இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்

இந்த  நான்கு மார்க்கங்களை  முறையே தாஸ மார்க்கம் ,சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம் ,சன் மார்க்கம் எனவும் அழைக்கப் படுகிறது
இவைகள் முறையே கர்மம் ,பத்தி ,யோகம், ஞானம் எனவும் அழைக்கப் படுகிறது

மேற்கண்ட நெறிகளை பின்பற்றி உயர்வடைந்த ஆன்மாக்கள் சாலோக்கியம் ,சாமீப்பியம் ,சாரூப்பியம், சாயுச்சியம் என்ற பதவிகளை அடைகிறது

சாலோக்கியம்
இந்த உலகத்தை ஒட்டி அதாவது இந்த பூமியை ஒட்டி இயக்கத்தில் இருக்கும் இந்த உலகத்தை ஒட்டி இயங்கிக் கொண்டிருக்கும் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட ஒரு களத்தை சாலோக்கியம் என்பர்

சாமீப்பியம்
பூமியைக் கடந்த பிறகு அடுத்து உள்ளது சூரியன் சூரியனைச் சுற்றி உள்ள களம் சூரிய களம் எனப்படுகிறது இந்த சூரிய களத்தை சாமீப்பியம் என்பர்

சாரூப்பியம்
இந்த சூரிய களத்தை கடந்து போனால் அதற்கு அப்பால் 12வீடுகள் 27 நட்சத்திரங்கள் மற்றும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கும் இயக்க மண்டல களத்தை சாரூப்பியம் என்பர்

சாயுச்யம்
இவை அனைத்தையும் கடந்து போனால் முடிவாக இருப்பது அதாவது இயக்க மற்று இருப்பது சுத்தவெளி இந்த சுத்த வெளியைத் தான் சாயுச்யம் என்பர்

ஆன்மாக்கள் தாங்கள் பெற்ற கர்ம வினைகளின் பதிவுகளுக்கு  ஏற்ப மேற்கண்ட ஏதேனும் ஒரு நிலையை அடையும்

சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம் ஆகிய மூன்று பதவிகளும் பதமுத்தி என்று அழைக்கப் படுகிறது
நான்காவதாகிய சாயுச்சியம் ஞானத்தால் அடையும் பதவி ஆகும் எனவே ஞானத்தால் அடையும் முத்தி பர முத்தியாகும்

தாயுமானவர்  இந்த நால்வகை மார்க்கங்களையும் அரும்பு, மலர்,  காய், கனி இவற்றிற்கு ஓப்பிடுகிறார்
”””””விரும்பும் கரியை முதல்மெய்ஞ் ஞானம்நான்கும்
        அரும்புமலர்  காய்கனிபோல் அன்றோ பராபரமே”””””
                     -----தாயுமானவர்----
அரும்பு இன்றி மலரும்  ,மலர்  இன்றி காயும் ,காய் இன்றி கனியும் உண்டாகாது அதைப் போல் சரியை இன்றி கிரியையும் ,கிரியை இன்றி யோகமும், யோகம் இன்றி ஞானமும், உண்டாகாது என்கிறார்  தாயுமானவர்.
சரியை, கிரியை ,யோகம், ஞானம் போன்ற மார்க்கங்களை ஆன்மாவானது மேற்கொண்டு ஒழுகி முக்தியைப் பெறுகிறது
இறைவனை அடைவதற்கு முக்தி அடைவதற்கு ஞானம் அடைவதற்கு இந்த நான்கு வகையான மார்க்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்பற்றி அல்லது ஒன்றுக்குள் ஒன்றாக பின்பற்றி உயர்வடைய வேண்டும்  என்கிறார் தாயுமானவர்

நாம் தெரிந்து கொண்ட விவரங்களை கீழ்க்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்

நாலு மார்க்கங்கள்                                           பதவி                           அடையும் நிலை உவமை 
 சரியை                 தாஸ மார்க்கம்             சாலோக்கியம்          பத முத்தி                      அரும்பு
கிரியை                சற்புத்திர மார்க்கம்     சாமீப்பியம்               பத முத்தி                       மலர்
யோகம்               சக மார்க்கம்                   சாரூப்பியம்             பத முத்தி                       காய்
ஞானம்               சன்மார்க்கம்                     சாயுச்யம்                    பர முத்தி                       கனி

இத்தகைய சிறப்பு வாய்ந்த நான்கு விதமான மார்க்கங்களையும்  சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டு இருக்கும் ஒரு வழிபடும் முறையே ஐயப்பனின் வழிபடும் முறை என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்


சபரி மலை யாத்திரைக்கு செல்பவர்  மேற்கொள்ள வேண்டிய விரத முறைகளையும் பூஜை முறைகளையும் பற்றி இப்பொழுது பார்ப்போம்
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
     போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”