August 03, 2019

பரம்பொருள்-பதிவு-50


            பரம்பொருள்-பதிவு-50

 “இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
பதிகம் பாடத் தொடங்கினார் “

பதிகம் – 1
“மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“ மயிலாகித் தவம்
செய்த உமாதேவியாரை
ஆட்கொண்டு
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து
அருள் புரிந்து
கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
புரட்டாசி மாதத்தில்
கொண்டாடப்படும்
திருநாளான
சிவபெருமானுடைய
அடியவர்களுக்கு
அமுதூட்டும் திருநாளைக்
காணாமல் போனாயோ ?
பூம்பாவை என்று
திருஞான சம்பந்தர்
முதல் பதிகத்தை பாடி
முடித்த பின் பூம்பாவை
உருவம் பெற்றாள் “

பதிகம் – 2
“மைப்பயந்த ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண
விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே
போதியோ பூம்பாவாய் “

பொருள் விளக்கம் :
“மைப்பூசிய அழகிய
கண்களை உடைய
மகளிர் வாழும்
மாமயிலையில்
கேட்டவர்களுக்கு எல்லாம்
கைமேல் பலன் தந்து
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் திருநீற்றை
அணிந்தவனாய்
அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
ஐப்பசி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஓண விழாவினையும்
சிவபெருமானால்
வழங்கப்படும்
அருளாசியினையும்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார்”

பதிகம் – 3
“வளைக்கை மடநல்லார்
மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான்
தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“அழகிய வளையல்களை
அணிந்து கொண்டு
காண்போரை
கவர்ந்திழுத்துக் கொண்டு
அழகிய மகளிர் வாழ்ந்து
கொண்டு இருக்கும்
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
கார்த்திகை மாதத்தில்
கொண்டாடப்படும்
கார்த்திகைத் திருநாளில்
பெண்கள் விளக்குகளை
ஏற்றி வைத்து
ஏற்றி வைத்த விளக்குகளை
வரிசையாக அடுக்கி
வைத்து கொண்டாடும்
அழகான காட்சியைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 4
“ஊர்திரை வேலை
யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார்
கொற்றங்கொள் சேரிதனில்
கார்திரு சோலைக்
கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“அழகிய அலைகள்
கொஞ்சி விளையாடும்
மாமயிலையில்
கூர்மையான வேலைக்
கொண்டு மீன்களைக்
கொன்று வெற்றிகாணும்
நெய்தற்சேரியில்
மழைவளம் மிகுந்ததால்
வளர்ந்த சோலைகள்
நிறைந்த கபாலீச்சரம்
என்னும் கோயிலில்
அமர்ந்து அருள் செய்து
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
மார்கழி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஆதிரை நாளைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார்”

பதிகம் – 5
“மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்பூசும் ஒண்புழுக்கல்
நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“மைப்பூசிய அழகிய
கண்களை உடைய
அழகிய மகளிர்
வாழும் மாமயிலையில்
திருநீறை அணிந்து
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து
அருள் செய்து
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
தை மாதத்தில்
கொண்டாடப்படும்
தைப்பூச திருநாளைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  03-08-2019
//////////////////////////////////////////////////////////