February 15, 2020

பரம்பொருள்-பதிவு-132


            பரம்பொருள்-பதிவு-132

தர்மர் :
“அப்படி சொல்லாதீர்கள்
பரந்தாமா ! “

“பாலகனான அரவானை
களப்பலி கொடுக்காமல்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறுவதற்கு
வேறு ஏதேனும்
உபாயம் இருக்கிறதா  
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவே கேட்டேன் ? “

கிருஷ்ணன் :
“நீங்கள் என்னைப் பற்றி
முழுமையாக தெரிந்து
வைத்துக் கொண்டு
இருப்பீர்கள் என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்கு ஒப்புதல்
அளித்து இருப்பீர்கள்  ;
ஆனால் நீங்கள்
என்னைப்பற்றி முழுமையாக
தெரிந்து வைத்துக் கொள்ளாத
காரணத்தினால் தான்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்கு ஒப்புதல்
அளிக்கவில்லை “

தர்மர் :
“பரந்தாமா உங்களைப் பற்றி
எங்களுக்கு எதுவும் தெரியாது
என்று சொல்லாதீர்கள் “

"பரந்தாமா நீங்கள்
எங்களை ஒரு விஷயத்தை
செய்யச் சொன்னால் - அது
எங்களுடைய நன்மைக்காகத்
தான் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

" நீங்கள் இந்த உலகத்திற்காக
ஒரு செயலைச் செய்தால்  
அந்த செயல் இந்த
உலகத்தின் நன்மைக்காகத்
தான் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் ஒரு செயலை
முயற்சி எடுத்து செய்தால்  
அந்த செயல் தோல்வியில்
முடியாது என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் ஒரு செயலை
வெற்றிகரமாக முடிக்க
வேண்டும் என்று முடிவு
எடுத்து செயலில் இறங்கி
விட்டால் - அந்த செயலில்
உங்களை எதிர்த்தவர்கள்
அனைவரும் தோல்வியையே
தழுவார்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் எந்த ஒரு
தேவையற்ற விஷயத்தையும்
பேச மாட்டீர்கள் என்பதும் ;
எந்த ஒரு தேவையற்ற
செயலையும் செய்ய
மாட்டீர்கள் என்பதும் ;
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் பேசும் பேச்சில்
மட்டுமல்ல - நீங்கள்
செய்யக்கூடிய ஒவ்வொரு
செயலிலும் ஆயிரம்
அர்த்தங்கள் இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் இல்லாமல்
செய்யப்படும் - எந்த ஒரு
செயலும் சுமூகமாக
முடியாமல் பிரச்சினையில்
தான் முடியும் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"நீங்கள் யார் பக்கம்
இருக்கிறீர்களோ - அவர்கள்
வெற்றியைத் தவிர வேறு
எதையும் சுவைக்க
மாட்டார்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"யாருக்கு வெற்றியை
அளிக்க வேண்டும்  ;
யாருக்கு தோல்வியை
அளிக்க வேண்டும் ;
என்பதை நிர்ணயிக்கக்கூடிய
மிகப்பெரும் சக்தியாக
நீங்கள் இருக்கிறீர்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"உங்களை நம்பி
வந்தவர்களை - எந்த
காலத்திலும் கைவிடாமல்
அவர்களுக்காக எதையும்
செய்யத் துணிவீர்கள் என்பது
எங்களுக்குத் தெரியும் ! "

"அதனால் தான் சொல்கிறேன்
பரமாத்மா - உங்களைப் பற்றி
எங்களுக்கு எதுவும் தெரியாது
என்று சொல்லாதீர்கள்
உங்களைப் பற்றி எங்களுக்கு
நன்றாகவே தெரியும் ! "

கிருஷ்ணன் :
"தெரிந்து என்ன பயன்
நான் சொன்னவைகளுக்குத்
தான் நீங்கள் ஒப்புதல்
அளிக்கவில்லையே ”

தர்மர் :
"அரவான் பாலகன் என்ற
காரணத்தினால் தான்
நான் ஒப்புதல்
அளிக்கவில்லை - ஆனால்
நீங்கள் பேசியவைகளில்
உள்ள உண்மைகளைத்
தெரிந்து கொண்டேன் ;
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுக்காவிட்டால்
பாண்டவர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
முடியாது என்பதையும்
தெரிந்து கொண்டேன் ; "

"அதனால் நான்
சம்மதிக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
அரவானைக் களப்பலியாகக்
கேட்டு வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானைக் களப்பலி
கொடுக்க சம்மதிக்கிறேன் "


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-02-2020
//////////////////////////////////////////

February 14, 2020

பரம்பொருள்-பதிவு-131


             பரம்பொருள்-பதிவு-131

கிருஷ்ணன் :
"மனிதர்கள் தங்களுக்கு
ஏற்பட்ட கஷ்டங்களைப்
போக்கிக் கொள்வதற்காக
ஆடு மாடுகளை
பலியிடுகின்றனர் "

"இதைப்போன்ற சிறிய
விஷயங்களுக்குத் தான்
ஆடு மாடுகளை
பலியிட முடியுமே தவிர
குருஷேத்திரப் போர்
போன்ற பெரிய
போர்களில்
வெற்றி பெறுவதற்கு
ஆடு மாடுகளை
பலியிட முடியாது "

"பாண்டவர்களாகிய
உங்களிடமிருந்து
நிலத்தை அபகரித்துக்
கொண்ட துரியோதனன் ;
அதைத் திருப்பி
தரமாட்டேன் என்று
சொன்ன துரியோதனன் ;
அதைத் தானே
வைத்துக் கொண்டு
அனுபவிக்க வேண்டும்
என்றால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்பதை
அறிந்து கொண்ட
துரியோதனன் ;
போரில் வெற்றி
பெறுவதற்காக
அரவானை
களப்பலியாகக்
கொடுக்கத் தீர்மானித்து
எதிரியான அரவானின்
பாசறைக்கே சென்று
அரவானை சந்தித்து
தான் போரில்
வெற்றி பெறுவதற்காக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்று
அரவானிடம் பேசி
துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்று
ஒப்புதல்
பெற்று விட்டான் "

" இதைத் தெரிந்து
கொண்டதால்
அதை மாற்றி
அமைப்பதற்காக - நான்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் "

"ஆனால் நிலத்தை
இழந்த நீங்கள்
நிலத்தை மீட்க
வேண்டும் என்ற
எண்ணம் இல்லாமல் ;
நிலத்தை மீட்பதற்கு
எந்தவிதமான
முயற்சியும் எடுக்காமல் ;
அன்பு ; பாசம் ;
கருணை ; இரக்கம் ;
என்று பேசிக்கொண்டு
சரியான முடிவு
எதுவும் எடுக்காமல் ;
நான் பேசியதில்
ஏதாவது அர்த்தம்
இருக்குமே என்று
ஆராய்ந்து கூட
பார்க்காமல்;
அரவானை களப்பலி
கொடுக்காமல்
போரில் வெற்றி
பெறுவதற்கு
ஏதேனும் உபாயம்
இருக்கிறதா ? - என்று
யோசித்துப் பார்த்துச்
சொல்லுங்கள்
என்கிறீர்கள்  "

"குருஷேத்திரப்போர்
பகைவர்களுக்கிடையே
நடைபெறப்போகும்
போர் அல்ல
உறவுகள்
பகையானதால்
நடைபெறப்போகும் போர் "

"அரவானை
யார் களப்பலி
கொடுக்கிறார்களோ
அவர்கள் தான்
குருஷேத்திரப்
போரில் வெற்றி
பெற முடியும் "

"அதனால் தான்
அரவானின் களப்பலி
பாண்டவர்களுக்காக
நடக்க வேண்டும்
என்று முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் "

"நீங்கள் அனைவரும்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்க ஒப்புதல்
அளிக்கவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலி
கொடுப்பதற்காக
நான் செய்து கொண்டு
வரும் அனைத்து
முயற்சிகளையும்
நிறுத்தி விடுகிறேன் "

"பாண்டவர்கள் சார்பாக
அரவானை
களப்பலி கொடுப்பது
நிறுத்தப் பட்டால் ;
துரியோதனன்
அரவானை
களப்பலி கொடுத்து
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விடுவான் ;
அரவானை களப்பலி
கொடுக்காமல்
பாண்டவர்கள்
போரில் வெற்றி பெற
முடியாது என்ற
நிலை இருக்கும் போது
நீங்கள் ஏன் போர்
செய்ய வேண்டும்;
நீங்கள் போரிலிருந்து
விலகி காட்டிற்கு
சென்று விடுங்கள் "

"நானும் என்னுடைய
வழியில் சென்று
விடுகிறேன்
போர் தேவையில்லை "

"குருஷேத்திரப்போர்
என்ற ஒன்று
தேவையேயில்லை "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------14-02-2020
//////////////////////////////////////////


February 13, 2020

பரம்பொருள்-பதிவு-130


            பரம்பொருள்-பதிவு-130

(கிருஷ்ணன்
பாண்டவர்களை
சந்திக்க செல்கிறார்
பாண்டவர்கள்
கிருஷ்ணனை
வரவேற்று உபசரித்து
அவரிடம் பேசத்
தொடங்குகின்றனர்)

பீமன் :
“எல்லாம்
நல்லபடியாக
முடிந்ததா பரந்தாமா ?”

கிருஷ்ணன் :
“நல்லது எது
என்பதை புரிந்து
கொள்ள முயற்சி
செய்யாதவர்கள்
இருக்கும் போது
எப்படி அனைத்தும்
நல்லபடியாக முடியும் ?”

பீமன் :
“நல்லதை
சொல்வதற்கு நீங்கள்
இருந்துமா
இப்படி நடக்கிறது “

கிருஷ்ணன் :
“நல்லது சொல்வதற்கு
நான் எப்போதும்
தயாராகத் தான்
இருக்கிறேன்
ஆனால் - அதைக்
கேட்டு நடப்பதற்கத்
தான் யாரும்
தயாராக இல்லை.”

பீமன் :
“அரவானை
சந்தித்தீர்களா  ?”

கிருஷ்ணன் :
“சந்தித்தேன்”

பீமன்:
“துரியோதனனுக்காக
களப்பலி ஆக
வேண்டாம் என்று
சொன்னீர்களா  ? “

கிருஷ்ணன் :  
“துரியோதனனுக்காக
களப்பலி ஆகாதே
என்று நான் எப்படி
சொல்ல முடியும்  ?  “

“அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக வாக்கு
கொடுத்திருக்கிறான்
அரவானால்
கொடுத்த வாக்கை
மீற முடியாது  ;
நானும் கொடுத்த
வாக்கை மீறச்
சொல்ல முடியாது ;”

“அதனால் அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியானான்
என்றால் எத்தகைய
விளைவுகள் ஏற்படும்
என்பதையும்  ;
பாண்டவர்களுக்காக
களப்பலியானான்
என்றால் எத்தகைய
விளைவுகள் ஏற்படும்
என்பதையும் ;
எடுத்துச் சொன்னேன் “

“நான் சொன்னதில்
உள்ள நியாய
தர்மங்களைப்
புரிந்து கொண்ட
அரவான்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
அரவானைக்
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று எனக்கு வாக்கு
கொடுத்திருக்கிறான் “

தர்மர் :
“ஏதேனும் ஒரு
செயலைச் செய்து
பச்சிளம் பாலகனான
அரவானை
களப்பலியாகக்
கொடுக்காமல்
இருப்பதற்குரிய
செயலைச் செய்ய
முடியாதா பரந்தாமா ? “

“போரில் வெற்றி
பெறுவதற்காகத்
தானே களப்பலி
கொடுக்கிறோம்
அதற்கு காட்டெருமை
யானை பன்றி
குதிரை ஆடு
கோழி மான்
போன்றவைகளை
பலி கொடுக்கலாமே ?”

“எதற்காக அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“ஆடு மாடுகளை
பலியாகக்
கொடுப்பதற்கு
இந்த போரை என்ன
சாதாரணமான போர்
என்று நினைத்து
விட்டாயா ? - தர்மா
நடைபெறப்போவது
குருஷேத்திரப் போர் “

“போரின் முடிவு
எப்படி இருக்கும்
என்பதை யாராலும்
கற்பனை செய்து கூட
பார்க்க முடியாத
குருஷேத்திரப் போர் “

“இந்த உலகம்
இதுவரை கண்டிராத
இனியும் காண
முடியாத
மிகப்பெரிய
குருஷேத்திரப் போர் “

“உலகமே
இரண்டாகப் பிரிந்து
கெளரவர்கள் அணி
ஒரு புறமாகவும் ;
பாண்டவர்கள் அணி
ஒரு புறமாகவும்
நின்று போர்
செய்யப் போகும்
மிக உக்கிரமான
குருஷேத்திரப் போர் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------13-02-2020
//////////////////////////////////////////