December 07, 2011

ராஜ ராஜேஸ்வரி-தியானம்-பதிவு-1



      ராஜ ராஜேஸ்வரி-தியானம்-பதிவு -1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

உலகில் வணங்கப் படும் தெய்வங்களில் மிக முக்கிய தெய்வங்களில் மிகச் சிறந்த தெய்வமாக நினைத்து வணங்கப் படும் தெய்வமாக இருப்பதும் ,
பெரும்பாலானவர்களால் பின்பற்றப் பட்டு அதிசய சக்திகள் பலவற்றைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தெய்வமாக இருப்பதும்,
கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பக்தர்களின் மனம் குளிரும் படி  அருளை வாரி வழங்கும்  தெய்வமாக இருப்பதும் ,
சித்துக்கள் பலவற்றை தன்னை தியானிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு இணங்க கொடுக்கும் தெய்வமாக இருப்பதும் ,
பக்தர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் அவர்களின் மனதின் தன்மையை அறிந்து பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் தெய்வமாக இருப்பதும் ,
அதிக அளவு சூட்சும ரகசியங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தெய்வங்களில் மிக முக்கியமான தெய்வமாக இருப்பதும் ,
சொற்களை வைத்துக் கொண்டு  சொல்ல வரமுடியாத , எழுத்திற்குள் எழுதிக் காட்ட முடியாத பல அதி அற்புத சக்திகளை தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மட்டுமே வெளிக் காட்டும் தெய்வமாக இருப்பதும் ,
ஆகிய பல்வேறு சிறப்புகளை தன்னுள் கொண்டிருக்கும் ராஜ ராஜேஸ்வரி அம்மனைப் பற்றித் தான்  நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம் .

இத்தகைய மகிமை வாய்ந்த ராஜ  ராஜேஸ்வரி அம்மனை எப்படி வணங்குவது ,எப்படி அம்மனை அழைத்து நமக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வது ,
அம்மனின் அருளைப் பெற்று நாம் எப்படி வாழ்க்கையை  மகிழ்ச்சிகரமாக அமைத்துக் கொள்வது, என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்;

ராஜ ராஜேஸ்வரி - தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1 எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.
2 எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.
3 ஏவல் ,பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது .
4 விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.
5 துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.
6 அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும் .
7 சித்து வேலைகள் கை கூடும்.
8 அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயிற் கதவை
     தட்டும் .
9 தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும் .
10 அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும் .

விரத நாட்களில் கடைபிடிக்க வேண்டியவை :
48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும் அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன .அவைகளைப் பற்றி பார்ப்போம்:

1.            புலால் உண்ணக் கூடாது.
2.            போதை வஸ்துகளை உபயோகிக்கக் கூடாது.
3.            விரதம் இருக்கும் நாட்களில் பெண்கள் மேல் மோகமும் ,பெண்களுடன் இணையும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
4.            காலையிலும் மாலையிலும் தேவியை நினைத்து மந்திரம் உச்சாடணம் செய்ய வேண்டும்.
5.            முடிந்தால் மூன்று வேளையிலும் அதாவது காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் அம்மனை மந்திரத்தால் தியானம் செய்ய வேண்டும்.
6.            48 நாட்கள் எந்த வீட்டில் விரதத்தை ஆரம்பிக்கிறோமோ அந்த வீட்டில் தான்  48 நாட்களையும் நிறைவு செய்ய வேண்டும்.
7.            இரவில் எந்த இடத்திலாவது தங்கி விட்டால் விரதம் பாதியிலேயே முடிந்து விட்டதாகக் கருதப் படும்.
8.            48 நாட்களில் ஒரு லட்சம் மந்திரங்களையும் முடித்து விட்டால் சிறந்தது அப்படி செய்தால் நாம் விரதம் இருந்த பலன் தெரியும்.
9.            48 நாட்கள் விரதம் முடிந்த பிறகும் தினமும் அம்மன் மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்து கொண்டு வர அதிசய சக்திகளை நாம் பெறலாம்.
10.          அனுதினமும் வாழ்க்கையில் நமக்கு துணையாக அம்மன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்
11.          நாம் விரதத்தின் மூலம் மிக உயர்வான சக்திகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் என்பதை விரதம் இருக்கும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம்
12.          எவ்வளவு சுத்தமாக இருந்து அம்மனை நினைத்து தியானம் செய்கிறோமோ கேட்டதை விட அதிகமாக வரங்களை அளிப்பாள் ராஜ ராஜேஸ்வரி என்று தியானிக்கும் பொழுதே  தெரிந்து கொள்ளலாம்

விரதத்திற்கான பூஜை பொருட்கள் :
48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பவர்கள் விரத பூஜையை ஆரம்பிக்கும் முன்னர் முதல் நாள் அன்று செய்ய வேண்டிய பூஜை முறைகள் :

48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  ராஜ ராஜேஸ்வரி படம் வாங்கி பிரேம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான யந்திரத்தை கைகளால் வரைந்து பிரேம் போடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பிரேம் போட்ட படம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பிரேம் போடாத யந்திரம்,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம்
ஆகிய மூன்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பூஜையில் பயன்படுத்தப் பட வேண்டிய மிக முக்கியமான மூன்று சூட்சுமமான ரகசியங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும் .

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”




No comments:

Post a Comment