April 14, 2012

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-எத்தனைநாள்-பதிவு-33






       இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-எத்தனைநாள் - பதிவு - 33

       “”பதிவு முப்பத்திமூன்றை விரித்துச் சொல்ல
                           ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

என்னத்தை உண்போம் , என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் ; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்;  ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?”
                                                          -------மத்தேயு - 6:25

இந்த உலகத்தில் உள்ளவர்கள்
தனக்காக வாழ்வதில்லை பிறருக்காக வாழ்கிறார்கள் .
இதற்கு சுயநலத்தை விடுத்து பொது நல
எண்ணம் கொண்டு வாழ்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல .
தனக்காக வாழாமல் , தன் இன்பத்திற்காக வாழாமல்,
தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி வாழாமல்,
சுற்றத்தார்  தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் ;
உறவினர்கள் தன்னை மதிக்க வேண்டும் ;
குடும்பத்தார்  தன் நல்லெண்ணங்களைப் போற்ற வேண்டும் ;
என்பதைக் கருத்தில் கொண்டு ,
என்பதை நினைவில் கொண்டு ,
என்பதை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு
தன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தாமல் ;
தன் இயல்பான குணங்களை வெளிப்படுத்தாமல் ;
தன் சிறு சிறு இன்பங்களைக்கூட வெளிப்படுத்தாமல் ;
சமுதாயம் வரையறை செய்துள்ள ,
சமுதாயம் எழுதாத விதியாக வைத்துள்ள ,

           ஒழுக்கநெறி கோட்பாட்டுக்குள் ,
           ஒழுக்கநெறி கூண்டுக்குள் ,
           ஒழுக்கநெறி கட்டுப்பாட்டுக்குள் ,
           ஒழுக்கநெறி வலைக்குள் ,
           ஒழுக்கநெறி நியதிக்குள் ,
           ஒழுக்கநெறி மாயைக்குள் ,
சிக்குண்டு மனிதன் தன் இயல்பான மகிழ்ச்சியைக் கூட
அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான் .

இதனால் வாழ்க்கையை தனக்காக வாழாமல்
             மற்றவர்  விருப்பப்படி ;
             சமுதாய வரையறைப்படி ;
            கலாச்சார இலக்கணப்படி ;
            பண்பாட்டு நெறிப்படி ;
             ஒழுக்க விதிப்படி ;
             நாகரிக விளக்கப்படி ;
வாழ்வதால் நிகழ் காலத்தை தவறவிட்டு
எதிர்காலத்தில் மாட்டிக் கொள்கிறான் .

எதிர்காலத்தில் தன் நிலை
பாதுகாப்பானதாக இருக்க ;
மகிழ்ச்சியானதாக இருக்க ;
கவலையற்றதாக இருக்க ;
துன்பங்களற்றதாக இருக்க ;
ஏழ்மையற்றதாக இருக்க ;
செயல்களை வகுக்கிறான்;  சிந்திக்கிறான் ;
சீர்துhக்குகிறான் ;செயல்படுகிறான் ;
உடுத்த உடையையும், உண்ண உணவையும், தேடித் திரிகிறான் ;
அவைகள் எதிர்காலத்தில் தடையின்றி
கிடைக்க திட்டங்கள் தீட்டி சேமித்து வைக்கிறான் .

வாழ்க்கையை ஸ்திரப் படுத்திக் கொள்ள
உணவையும் , நீரையும் , உடையையும் தேடும் மனிதன்
உயர்ந்தவைகள் எவை என்று
உணராமல் மதி தடுமாறி அலைகிறான் .
உணவை விட ,உயிரும் உடையை விட, இந்த உடலும்
உயர்வானவைகள் அல்லவா?
கிடைக்கக் கூடியவைகளுக்காக தேடி அலையும் மனிதன்
அரிதாக கிடைத்த மானிடப் பிறப்பையும் , மானிடப் பிறப்பின்
நோக்கத்தையும் அறியாமல்

உடலையும் , உயிரையும் பேணிக் காத்து
இவைகளை துhய்மைப்படுத்தும் நிலைகளை அறியாமல் ;
துhய்மைப்படுத்தும் நிலைகளை பின்பற்றாமல் ;
உடலையும் , உயிரையும் பயன்படுத்தி
ஆண்டவனை உணராமல் ;
உண்ணும் உணவுக்காகவும் , உடுத்தும் உடைக்காகவும் ,
பருகும் நீருக்காகவும் அலைந்துதிரிந்து
எதிர்கால தேவையை நிறைவுசெய்ய ,
பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள ,
மனிதன் அலைந்து திரிகிறான் என்கிறார்  இயேசு .



ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள் ;அவைகள் விதைக்கிறதுமில்லை , அறுக்கிறதுமில்லை ,களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”
                                                      --------மத்தேயு - 6:26

ஆகையால் , என்னத்தை உண்போம் ,என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்.”
                                                     ---------மத்தேயு - 6:31

இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.”
                                                    ----------மத்தேயு - 6:32

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் , அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்.”
                                                 -----------மத்தேயு - 6:33

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் ;நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும் .அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.”
                                                     --------மத்தேயு - 6:34

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படக் கூடிய
நிலம் , நீர், நெருப்பு, காற்று ,விண் ஆகியவற்றில்
ஊடுருவி நிறைந்து இருக்கக் கூடிய காந்த ஆற்றல்
அழுத்தம் ,ஒளி ,ஒலி ,சுவை ,மணம் என்ற
பஞ்சதன் மாத்திரைகளாக தன் மாற்றம் அடைகிறது .
இந்த பஞ்சதன் மாத்திரைகள் புலன்கள்
வழியாக வெளிப்படும் நிலையைப்
பொறுத்து உயிரினங்கள் வகைப்படுத்தப் படுகின்றன .


தொடு உணர்ச்சியுள்ள ஓர்  அறிவு - தாவரம்
தொடு , சுவை உணர்ச்சியுள்ள ஈரறிவு - புழு
தொடு , சுவை,  நுகர்  உணர்ச்சியுள்ள
மூன்றறிவு- எறும்பு , தேனீ ,

தொடு, சுவை, நுகர், பார்வை உணர்ச்சியுள்ள
நான்காவது அறிவு-பாம்பு
இரு அறிவு உயிரினங்களுக்கும் , மூவறிவு உயிரினங்களுக்கும்
கண்களும், காதுகளும் கிடையாது.
பாம்பு போன்ற ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கு
கண்கள் உண்டு ; காதுகள் கிடையாது .

தொடு, சுவை ,நுகர், பார்வை ,கேட்கும் உணர்ச்சியுள்ள
ஐந்து அறிவு- பறவைகள் ,விலங்குகள்.

இவற்றுடன் , இந்த ஐந்துடன் மனதைப் பயன்படுத்தும்
ஆறாவது அறிவு உள்ளவன் மனிதன் மட்டுமே .

ஐயறிவு உயிரினங்கள் என்று நம்மால் சொல்லப்படும்
பறவைகள் தங்கள் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள
விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை
எதிர்கால தேவைக்காக தனக்காக சேமித்து வைப்பதும் இல்லை
எதிர்காலத்தில் தனக்கு உணவு கிடைக்குமா?
என்பதைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை .

ஐயறிவு கொண்ட உயிர்களையே  பரமபிதா
காப்பாற்றி வழி நடத்தும் போது
ஆறறிவு படைத்தவர்களல்லவா நாம் 
அவைகளை விட உயர்ந்தவர்களல்லவா நாம்
ஆதலால் நமக்கு உணவு கிடைக்குமா?
உடுத்த உடை கிடைக்குமா? - என்று
நாளைய தினத்தை நினைத்து கவலைப்பட்டு
இன்றைய தினத்தை இழக்காதீர்கள்
இன்றைய மகிழ்ச்சியை துறக்காதீர்கள்
இன்றைய இன்பம் நிறைந்த வாழ்வை
தவற விட்டு விடாதீர்கள்
உங்களுக்கு என்ன தேவை ?
எந்த காலத்தில் என்ன தேவை ?
எந்த விதத்தில்  தேவை ?
எந்த முறையில் தேவை ?
எதை எப்பொழுது ? எங்கே  ?எந்த விதத்தில் ?
எந்த காலத்தில்? எந்த தருணத்தில் ?
அளிக்க வேண்டும் என்பதை பரமபிதா அறிந்திருக்கிறார்.
உங்களுக்கு என்று பிதா கொடுப்பதை யாரும்
கவர்ந்து செல்ல முடியாது .
உங்களுக்கு என்று பிதா கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது .

வாழ்வென்றால் போராடும் போர்க்களம் என்று நினையாதீர்கள் .
போர்க்களமாக நினைத்து விட்டால் நீங்கள் உங்கள்
வாழ்க்கையில் எத்தகைய செயலுடனும்
வெற்றி பெறுவதற்காக சண்டை போடுவீர்கள்
சிந்திக்க மறந்து விடுவீர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு திருவிழா
அதை கொண்டாடி பாருங்கள் !

வாழ்க்கை என்பது ஒரு ஓவியம்
அதை ரசித்துப் பாருங்கள் !

வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சிக்கடல்
அதில் நீந்திப் பாருங்கள் !

வாழ்க்கை என்பது ஒரு கருணை மழை
அதில் நனைந்து பாருங்கள்!

வாழ்க்கை என்பது ஒரு ஐஸ்கிரீம்
அது உருகுவதற்கு முன் அதை சுவைத்துப் பாருங்கள் !

வாழ்க்கையை திருவிழாவாக நினைப்பவனால் மட்டுமே
வாழ்க்கையை மகிழ்ச்சியாக நிகழ்காலத்தில்
அந்த அந்த கணத்தில் வாழ்க்கையில் எதிர்ப்படும்
இடையூறுகளை ஊதித்தள்ளி முன்னேற முடியும் .

வாழ்க்கையை போர்க்களமாக நினைப்பவன்
இறந்த காலத்தில் புதையுண்டு ,
எதிர் காலத்தில் சிக்குண்டு ,
நிகழ் காலத்தை தவறவிட்டு ,
பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டு
களைய முடியாமல் சிந்தனை தடுமாறி
கவலையென்னும் குழியில் விழுந்து
துன்பத்தில் தள்ளாடுவான் .
ஆகவே எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட வேண்டாம் ;
தேவைகளை சேமித்து வைக்க போராட வேண்டாம் ;
மனதை கவலைக்குள் தள்ள வேண்டாம் ;

நீங்கள் தேட வேண்டியது எல்லாம் வல்ல ஆண்டவனை ,
கேட்டதை அளிக்கும் கொடையாளியை ,
துன்பத்தை நீக்கும் கருணை உள்ளத்தை ,
இன்பத்தை அளிக்கும் இரக்க சுபாவத்தை ,
அத்தகைய ஆண்டவனை தேடினால் ;
பரம பிதாவை நாடி ஓடினால் ;
பரம பிதாவுக்குள் அடைக்கலம் புகுந்தால் ;
பரலோக ராஜ்யத்தின் வழியை நாடினால் ;
பரமபிதாவின் நீதியை கடைபிடித்தால் ;
ஆண்டவரின் வசனங்களை கைக் கொண்டால் ;
ஆண்டவருடன் இணையும் பேறு பெற்றால் ;
ஆண்டவரின் ஆசி பெற்றால் ;
இந்த உலகத்தில் வாழ்வதற்குரிய வாழ்க்கைத் தேவைகள்
உங்களுக்குக் கிடைக்கும் ;
ஆண்டவரால் அளிக்கப்படும் ;
முக்காலும் ஆண்டவர்  உம்முடன் இருந்து உன்னை வழி
நடத்தி உன் தேவைகளை பூர்த்தி செய்வார்  என்கிறார்  இயேசு .

நாளைக்காக கவலைப்பட்டு
நாளை என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று
வருத்தப்பட்டு வேதனைப்பட்டு
இன்றைய நாளை வீணாக்கி விடாதேயுங்கள் ;
இன்று உள்ள இன்பத்தை அனுபவியுங்கள் ;
இன்று உள்ள வாழ்க்கையை அனுபவியுங்கள் ;
நாளைய தினத்தை , வருங்காலத்ததை
வருங்காலத்தில் பார்த்துக் கொள்வோம்
வருங்காலத்தில் ஏற்படக்கூடிய துன்பங்களையும்
இழப்புகளையும் மனதில் கொண்டு
இன்றைய நாளில் இன்றைய தினத்தில்
உள்ள இன்பத்தை நுகர தவறி விடாதீர்கள் .
கணத்திற்கு கணம் வாழுங்கள்
கணத்திற்கு கணம் வாழ்பவனால் இன்பமாக வாழ முடியும்
கணத்திற்கு கணம் வாழாதவனால் மட்டுமே வாழ்க்கையை
தொலைத்து விட்டு எதிர்கால கவலையில் மண்டையை குழப்பி
துன்பச் சேற்றில் மாட்டிக் கொள்ள முடியும் .

ஆகவே வாழ்க்கையை
போர்க்களாமாக பார்க்காமல்
பூந்தோட்டமாக பாருங்கள் - அதன்
        நறுமணத்தில் களித்திருங்கள் ;
        சுகத்தில் சுகித்திருங்கள் ;
        இன்பத்தில் களித்திருங்கள் ;
        மகிழ்ச்சியில் நனைந்திருங்கள் ;
         இறந்த காலத்தை மறந்திருங்கள் ;
         எதிர்காலத்தை துறந்திருங்கள் ;
          நிகழ்காலத்தில் வாழ்ந்திருங்கள் ;
         கனவுகளில் மிதந்திருங்கள் ;
        கற்பனைகளில் திளைத்திருங்கள் ;
        வாழ்க்கையை அனுபவித்திருங்கள் ;

காலத்தோடு போட்டி போட்டு காலத்திற்கு
முன்னால் ஓடாதீர்கள் ;வருத்தத்தை தேடாதீர்கள் ;
காலத்திற்கு பின்னால் சென்று துன்பத்திற்குள் மூழ்காதீர்கள்;
காலத்தோடு இணைந்து சென்று ஆண்டவன் அளித்த பெரும்
கொடையான இந்த மானிட வாழ்க்கையை மகிழ்ச்சியாக
நடத்தும் விதம் அறிந்து அறிவு தெளிவு பெறுங்கள் ;
நாளைக்காக வாழாதீர்கள் ;
எதிர்காலத்திற்காக வருந்தாதீர்கள் ;
வருங்காலத்திற்காக கலங்காதீர்கள் ;
ஆண்டவனிடம் வாழ்க்கையை முழுவதுமாக ஒப்படைத்து விட்டு
ஏதிர்காலத்தில் நிம்மதியாக இருங்கள்.

எல்லாம் வல்ல ஆண்டவர்  நமக்கு தேவையானவற்றை
தேவையான காலத்தில் வழங்குவார்
என்று உறுதி கொள்ளுங்கள் .

யார்  ஒருவர்  கடவுளை உணர்கிறாரோ அவர்
துன்பம் நீக்கிய இன்பமான வாழ்வை பெறுவார்
என்கிறார்  இயேசு.



பட்டினத்தார்:

   “”எத்தனைநாள் கூடி  யெடுத்த சரீரமிவை
       அத்தனையு மண்தின்ப தல்லவோ- வித்தகனார்
       காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே
       மேலைக் குடியிருப்போ மே””””
                -------பட்டினத்தார்----பெரியஞானக் கோவை----


“”எத்தனைநாள் கூடி  யெடுத்த சரீரமிவை
  அத்தனையு மண்தின்ப தல்லவோ”””
நாம் பிறந்த தாயின் கருவறையில் இருந்தது
10 மாதங்கள் , அதாவது 300 நாட்கள்
இத்தனை நாட்கள் தாயின் கருவறையில் உருவாகி
இந்த அவனியில் வாழ்வதற்காக
எத்தனை நாட்களை தாயின் கருவறையில் கழித்து
அணுவாகி , உடலாகி , உயிராகி , குழந்தையாகி ,
மனிதனாக இந்த அவனியில் வாழ பிறந்திருக்கிறோம் .

உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க இடம்
ஆகியவற்றிற்காக அல்லும் பகலும் ,அலைந்து ,தேய்ந்து
நம்மை காத்துக் கொள்ள துயர்படுகிறோம்

எதிர்காலத்தில் தேவைகள் தடையின்றி கிடைக்கவும்
தற்பொழுது உள்ள தேவையை விட வருங்கால தேவை
இடையூறின்றி கிடைக்கவும் முயற்சி செய்கிறோம் .
எதிர்கால வாழ்க்கை
இன்பத்தின் வாயிலாகவும் ;
மகிழ்ச்சியின் சாயலாகவும் ;
முன்னேற்றத்தின் அடிப்படையாகவும் ;
சுகத்தின் மாளிகையாகவும் ;
இருக்க ஆசைப்படுகிறோம் - அதற்காக

        உறக்கத்தை துறக்கிறோம் ;
       முயற்சியை விதைக்கிறோம் ;
       உழைப்பைத் துhவுகிறோம் ;
       உறுதியைப் பாய்ச்சுகிறோம் ;
       கடமையை நினைக்கிறோம் ;
       கருத்தாக உழைக்கிறோம் ;
        அறிவை தீட்டுகிறோம் ;
        செல்வத்தை பெருக்குகிறோம்;
வருங்கால கனவுகளுக்காக ,
நிகழ்கால சுகத்தை சுகிக்க மறக்கிறோம்.
நிகழ்காலத்தில் வாழ்வதை தவிர்க்கிறோம் .
கணத்திற்கு கணம் வாழும் நிலையை துறக்கிறோம்.

எதிர்காலத்தை நித்தியம் என்று எண்ணிக் கொண்டு
நிகழ்காலத்தில் வாழாமல் தவிர்க்கிறோம் .
எதிர்கால முன்னேற்றத்தை மனதில் கொண்டு
நிகழ் கால இன்பங்களை அனுபவிக்க முடியாமல் விடுகிறோம்.

நாளை என்ன நடக்கும் ?அடுத்து என்ன நடக்கும் ?
என்று யாருக்கும் தெரியாது.

பணக்காரன் ஏழையாகலாம் ;
ஏழை பணக்காரனாகலாம்;

உயர்ந்தவன் தாழ்ந்தவனாகலாம்;
தாழ்ந்தவன் உயர்ந்தவனாகலாம்;

அறிவாளி முட்டாளாகலாம்;
முட்டாள் அறிவாளியாகலாம் ;

சேர்ந்தவர்  பிரியலாம்;
பிரிந்தவர்  சேரலாம்;

நாளை நடப்பது , நாளை என்ன நடக்கும் ,
நடப்பது எது என்று யாருக்கும் தெரியாது .
அப்படி இருக்கும் போது
நாளைக்காக , எதிர்காலத்திற்காக , வருங்காலத்திற்காக,
எதற்கு கவலைப்பட வேண்டும் ;
எதற்கு வருத்தப்பட வேண்டும் ;
எதற்கு துன்பப்பட வேண்டும் ;
எதற்கு மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டும் ;
எதற்கு பிரச்சினையை இழுத்துக் கொள்ள வேண்டும் ;
எதற்கு நிகழ்கால சுகத்தை இழக்க வேண்டும் ;
எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துகிறோம் என்று சொல்லி
எதற்காக நிகழ்கால வாழ்க்கையை இழக்க வேண்டும்.

உடலில் இருந்து உயிர்  போனால்
பிணமாகி நாற்றத்தை உண்டு பண்ணி
புதைக்கப் பட்ட பின்பு மண்ணால்
அரிக்கப்படும் இந்த உடலுக்கா ?
எப்போது இந்த உடலை விட்ட உயிர்  போகும்
என்று விவரம் தெரியாத இந்த உடலுக்கா ?
நித்தியமில்லாத இந்த உடலுக்கா ?
அழிந்துபோகும் இந்த உடலுக்கா ?
நிகழ்காலத்தை விட்டு விட்டு
எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கிறோம் .
கணத்திற்கு கணம் இன்பமாக இருந்து வாழ்க்கையை
நடத்துவதோடு மட்டுமில்லாமல்
சிற்றின்பத்தை நிலை பெறச் செய்ய
சீர்துhக்கி செயல் செய்யாமல்
பேரின்பத்தின் நுழைவு வாயிலில் நுழையும் திறன் அறிந்து
எல்லாம் வல்ல இறைநிலையுடன் ஒன்றாகக் கலந்து
எல்லாவற்றையும் பெற்று வாழும்
முறையின் முறையின் தன்மையை பட்டினத்தார்
கீழ்க்கண்டஅடிகளில் கூறுகிறார்.



                                                                        “””- வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே
மேலைக் குடியிருப்போ மே””””

இந்த அடிகளுக்கு இரண்டு முறைகளில் விளக்கம் சொல்லலாம்

விளக்கம் - 1 :
வித்தகனார் - இந்த உலகத்தில் மனிதனாகப்
பிறக்க காரணமான ஆண்டவர் என்று பொருள்.

ஆண்டவருடைய திருவடிகளைப் பற்றி
அல்லும் பகலும் அவரையே சிந்தனையில் நிறுத்தி ,
அவருடைய நாமங்கள் அவருக்குரிய மந்திரங்களை ,
உச்சாடணம் செய்து இறை சிந்தனையுடன்
தெய்வ சிந்தனையுடன் வாழ்ந்தால்
உயர்ந்த நிலைகளை அடைந்து
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து
காலத்திற்கு தேவையானவைகளை
காலத்திற்கு உகந்தபடி பெற்று
உயர்நிலையான மோட்ச நிலை அடைவர்
என்பது ஒரு முறையில கூறப்படும் விளக்கம் .



விளக்கம் -2 :
வித்தகனார்- இந்த உடலுக்குள் உயிர்  இருப்பதற்கு
காரணமான காற்று என்று பொருள்.

இந்த உடலுக்குள் உயிர் இருப்பதற்கு
காரணமான காற்றை உணர்ந்து ,
காற்றின் செயல்முறை அறிந்து ,
காற்றின் அளவுமுறை சிந்தித்து ,
பிராண , அபான வாயுவை மோத விட்டு
உண்டான அக்கினி மூலம் காலையும் மாலையும்
தொடர்ந்து பயிற்சி செய்து அக்கினியை உருவாக்கி
குண்டலினி சக்தியை எழுப்பி
ஆறாதாரங்களைத் துளைத்து சக்தி பெற்று
ஏழாவது ஆதாரமான பிரம்மரந்திரத்தில் நுழைந்து
அமுதத்தை பருகி மேல் நிலையில் நின்று
ஒன்றாகக் கலந்து தான் அவனாக மாறும் போது
காலம் என்பதே கிடையாது .

அனைத்தையும் அளிக்கும் நித்திய

சன்மானம் கிடைத்து விட்டால்
அநித்திய அலங்கோலம் எதற்கு?
நிகழ்காலத்தை தவறவிடாது
கணத்திற்கு கணம் வாழ்ந்து அல்லும் பகலும்
இறைவனை நாடி நித்திய வாழ்வை
பெற நினைப்பவர்  வாழ்க்கை

தேடலின் போதும் ,
தேடிக் கொண்டிருக்கும் போதும் ,
தேடில் முடிந்த போதும் ,
தேடல் நிறைவடைந்த போதும் ,
தேடல் தேடலை முடித்த போதும் ,
தேடலின் கடமை முடிந்த போதும் ,
தேடலின் இலக்கு பூர்த்தியான போதும் ,

இறைவனால் அளிக்கப் பெறும்
துன்பம் நீக்கிய இன்ப நிகழ்வுகளை சுவைத்து
எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல்
வருங்காலத்தைப் பற்றி வருத்தப் படாமல்
நிகழ்கால நித்தியத்தில் நிம்மதியாக இருப்பர்.

ஆண்டவனை அறிய நினைப்பவர்க்கு
ஆண்டவனை உணர்ந்தவர்க்கு
நடக்க வேண்டியது நடக்க வேண்டிய காலத்தில்
நடந்தே தீரும் என்ற மனத் தெளிவைப் பெறுவர்.

நாளைய விடியலை இறைவனுக்கு அளித்து
நிகழ்கால வாழ்வை இன்பத்தில் நனைக்கும்
முறை அறிந்து செயல்பட வேண்டும் .

யார்  ஒருவர் கடவுளை உணர்கிறாரோ அவர்
துன்பம் நீக்கிய இன்பமான வாழ்வை பெறுகிறார்
என்கிறார்  பட்டினத்தார் .



இயேசு கிறிஸ்து- பட்டினத்தார் :
இயேசு,  யார்  ஒருவர்  கடவுளின் நியதியை புரிந்து கொள்கிறாரோ ,
கடவுளை உணர்ந்து கொள்கிறாரோ அவருடைய வாழ்க்கையானது
துன்பம் நீக்கிய இன்பமான வாழ்க்கையாக இருக்கும் என்கிறார்.


அவ்வாறே ,
பட்டினத்தாரும் , யார்  ஒருவர் கடவுள் வகுத்த சட்டங்களை
புரிந்து கொள்கிறாரோ , கடவுளை உணர்ந்து கொள்கிறாரோ ,
அவருடைய வாழ்க்கையானது துன்பம் நீக்கிய இன்பமான
வாழ்க்கையாக இருக்கும் என்கிறார்.

                    “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                            போற்றினேன் பதிவுமுப்பத்திமூன்று  ந்தான்முற்றே “”




No comments:

Post a Comment