September 10, 2012

இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-எட்டாப்-பதிவு-52



         இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-எட்டாப்-பதிவு-52  

         “”பதிவு ஐம்பத்துஇரண்டை விரித்துச் சொல்ல         
                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது ; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே , உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
                                                       ----மத்தேயு - 6 : 9
உம்முடைய ராஜ்யம் வருவதாக ; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
                                                      ----மத்தேயு - 6 : 10
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
                                                      ----மத்தேயு - 6 : 11
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
                                                      ----மத்தேயு - 6 : 12
எங்களைச் சோதனைக்குட்பட பண்ணாமல் , தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், ராஜ்யமும் ,வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே ,ஆமென் , என்பதே.
                                                       ----மத்தேயு - 6 : 13
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் , உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்
                                                        ----மத்தேயு - 6 : 14
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.”
                                                         ----மத்தேயு - 6 : 15

குழந்தையானது தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு
வீதியில் நடந்து செல்லும் போது ,
தன் கண்ணில் பட்டவைகளில்,
தனக்கு பிடித்தவைகள் ,
தனக்கு விருப்பப்பட்டவைகள் ,
தன்னைக் கவர்ந்தவைகள் ,
மேல் மனம் செல்லும் போது
அதன் மேல் உள்ள ஈடுபாட்டால் ,
அதன் மேல் கொண்ட ஆசையின் வெளிப்பாட்டால்,
அதன் மேல் கொண்ட இன்பத்தின் உந்துதலால் ,
தான் பிடித்திருந்த தந்தையின்
கையை விட்டு விலகிச் செல்லும்
அதனை நாடிச் செல்லும் .
  
மாறாக தந்தை தன் குழந்தையின் கையைப் பிடித்து
வீதியில் அழைத்துச் சென்றால் ,
விருப்பப்பட்ட பொருட்களின் மீது
தன்னைக் கவர்ந்த பொருட்களின் மீது ஆவல் கொண்டு
அதை அடையும் நோக்கில் ,
குழந்தையானது தந்தையின் கையை விட்டுப் பிரிந்து சென்றால் ,
தந்தை குழந்தையின் மனநிலை உணர்ந்து
தன்னை விட்டு குழந்தை பிரிந்து சென்று விடாமல் இருக்க ,
பாதை மாறி விடாமல் இருக்க ,
வழி தவறி விடாமல் இருக்க ,
தவறான வழி நுழைந்து விடாமல் இருக்க ,
துன்பத்தை தரும் செயல்களில் மாட்டி விடாமல் இருக்க ,
அவப்பெயரை உண்டாக்கும் காரியங்களில்  
மாட்டிக் கொள்ளாமல் இருக்க ,
தந்தையானவர்  குழந்தையின் கைகளை விடாமல்
கெட்டியாகப் பிடித்துக் கொள்வார் .
பாதை மாறாமல் பார்த்துக் கொள்வார் .

குழந்தையானது தந்தையின் கையைப் பிடித்திருந்தால்
அது எப்பொழுது வேண்டுமானாலும் நினைத்த அளவில்
தந்தையின் கையைப் பிடியிலிருந்து விலகி வந்து விடும் .
தந்தை குழந்தையின் கையைப் பிடித்து இருந்தால்
குழந்தை நினைத்த அளவில் தந்தையின்
கைப்பிடியிலிருந்து விலகி வர முடியாது .
குழந்தை தன் கைப்பிடியிலிருந்து விலகாமல்
தந்தை பார்த்துக் கொள்வார் .  
ஏனென்றால், குழந்தைக்கு எது தேவை
குழந்தைக்கு எவைகளைச் செய்ய வேண்டும்
குழந்தைக்கு எவைகளைச் செய்தால் நல்லது
என்பதை மனதில் கொண்டே
நன்மை தீமைகளை எண்ணத்தில் கொண்டே
தந்தையானவர்  குழந்தையின் கையை விடமாட்டார்.

அதைப்போல ஆண்டவர்  கையை நாம் பற்றினால்
உண்மையான விசுவாசம் இல்லையெனில்
எப்பொழுது வேண்டுமானாலும்
இறைவனின் கையை விட்டு நாம் வந்து விடுவோம் .
ஆனால் , இறைவன் நம் கையைப் பிடித்து இருந்தால்
எக்காலத்தும் நம்மை துன்பத்தில் தள்ள மாட்டார்.
என்றும் நம்முடனே இருந்து
தவறான வழியில் செல்லாமல்
நேர்வழியில் நின்று இன்பம் நுகர்ந்து
சிறப்புடன் வாழ வழி அருள்வார்.

ஆண்டவர்  மேல் முழுவதும் நம்பிக்கை வைக்காமல்
அவருடைய கையை பிடித்திருந்தால்
சோதனை தாக்கும் போது
மனம் தடுமாறி அவரை பிடித்திருந்த கையை
விட்டு விலகி வந்து விடுவோம்.
அவர்  மேல் கொண்ட நம்பிக்கையை இழந்து
அவரை விட்டு விலகி பாதை மாறி பயணிப்போம் .

ஆண்டவர்  மேல் உண்மையான நம்பிக்கை வைத்தால்
துன்பச் சூறாவளி தன்னை தாக்கினாலும் ,
கவலை மேகங்கள் நம்மை சூழ்ந்தாலும் ,
சோகத்தின் பாரம் நம்மை அழுத்தினாலும் ,
துயரத்தின் வலிகள் மன அழுத்தத்தை உண்டு பண்ணிணாலும் ,
ஆண்டவர்  நம்மை காப்பாற்றுவார்
ஆண்டவர்  நம்மை கைவிட மாட்டார்
என்ற உறுதியான நம்பிக்கை கொண்டு
ஆண்டவரை விசுவாசித்தால்
நாம் போய் ஆண்டவர்  கையை பிடிக்க வேண்டியதில்லை
ஆண்டவரே நம் கையைப் பிடித்து நம்மை வழி நடத்துவார்.

ஆண்டவர்  நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்
ஏற்றுக் கொண்டு நம்மை வழி நடத்த வேண்டுமானால்
தன் அத்தியாவசிய தேவை எவை என்பதை உணர்ந்து
அவைகளை ஆண்டவரிடம் கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்.
ஜெபம் பண்ணும் போது எந்த வார்த்தைகளைப்
பயன்படுத்தி செய்ய வேண்டும்
எந்த முறைகளைப் பயன்படுத்தி செய்ய வேண்டும்
என்பதைப் பற்றி இயேசு கூறுகிறார்.

ஜெபம் பண்ணும் போது இந்த வார்த்தைகளைப்
பயன் படுத்தித் தான் பேச வேண்டும் ;
இதே கோரிக்கையை வலியுறுத்தித் தான் பேச வேண்டும் ;
இந்த வரிசை முறையைப் பின்பற்றித் தான் பேச வேண்டும் ;
என்று இயேசு கூறவில்லை.
இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித் தான்
ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
இந்த வழியில் செய்ய வேண்டும் என்று
ஒரு பாதையைத் தான் காட்டுகிறார் .
அந்த பாதையைப் பின்பற்றி
அந்த பாதையைப் புரிந்து
நீயே உனக்கு ஏற்ற வகையில்
ஒரு ஜெபத்தை ஏற்படுத்திக் கொள் என்கிறார்.

இதை அடிப்படையாகக் கொண்டு
வாழ்க்கைத் தேவைகளை கணக்கில் கொண்டு
குறுகிய கால தேவைகள் ,
நீண்ட கால தேவைகள் ,
உடனே துய்க்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் ,
இன்பத்தை பெற வேண்டிய தேவைகள் ,
துன்பத்தை நீக்கும் தேவைகள் ,
வலியைப் போக்கும் தேவைகள்,
உயர்வைக் கொடுக்கும் தேவைகள் ,
மானத்தைக் காக்கும் தேவைகள் ,
பிணியைப் போக்கும் தேவைகள் ,
மனஅழுத்தத்தைப் போக்கும் தேவைகள் ,
ஆகியவற்றை மனதில் கொண்டு
இறைவனிடம் ஜெபம் பண்ண வேண்டும் .

ஜெபம் பண்ணும் போது ஜெபத்தில் மட்டுமே
முழுமையான கவனம் இருக்க வேண்டும்
ஜெபம் பண்ணுபவரும் ஆண்டவரும்
மட்டுமே இருக்க வேண்டும்.
அதாவது எந்தவித சிந்தனையும் இல்லாமல்
அனைத்தையும் மறந்த நிலையில்
அத்தகைய நிலையில் மட்டுமே
ஆண்டவரை நினைக்க முடியும் .
அப்பொழுது தான் அவரிடம் நமக்கு எவைகள் தேவையோ
அத்தகைய தேவைகளை ஜெபத்தில் கேட்க முடியும் .

பரம்  + மண்டலம்  =  பரமண்டலம்
பரம் என்றால் நேர்  இல்லாதது ; உவமை இல்லாதது ;
அதற்கு இணை என்ற ஒன்று இல்லாதது ;
பரமண்டலம் என்றால்
இணை இல்லாத , ஒப்பிட்டுக் காட்ட முடியாத ,
அதற்கு மேல் எதுவும் இல்லாத ,
புனிதம் நிறைந்த ,
அன்பு தழைத்தோடும் ,
கருணை வழிந்தோடும் ,
இரக்கம் நிறைந்தோடும் ,
எல்லையற்ற விரிந்த
பரந்த வெளி இடம் என்று பொருள் .

அண்ட சராசரங்கள் அனைத்தையும்
ஆக்கி கட்டிக் காத்து இயக்கிக் கொண்டிருக்கும் ,
இயக்க ஒழுங்கு மாறாமல் நடத்திக் கொண்டிருக்கும் ,
எல்லாம் வல்ல பரமண்டலத்தில் இருந்து
எங்களை ரட்சித்து வழி நடத்திக் கொண்டிருக்கும்
எங்கள் பிதாவே !

உம்மை
எங்களை ரட்சிப்பவர் , காப்பாற்றுபவர் ,  வழி நடத்துபவர் ,
இயக்குபவர்  , துன்பங்களை துடைப்பவர்  என்று
பல்வேறு பெயர்கள் இட்டு அழைத்தாலும்
பரிசுத்த உம்முடைய நாமத்தை உச்சரிப்பதன் மூலம்
பரிசுத்தம் இல்லாதவர்  கூட
பரிசுத்தம் அடைவார் .
பரிசுத்தம் உள்ளவர்  முழுமைத்துவம் அடைவார் ;
பூரணத்துவம் பெறுவார் ;

உம்முடைய ராஜ்யம் இந்த உலகத்தில் உள்ள
உயிரினங்களை ரட்சித்து காத்து
வழிநடத்திச் செல்லும் வகையில் இந்த உலகத்தில் ஏற்படட்டும் .

பரமண்டலத்தில் உம்முடைய செயல்கள்
எவ்வாறு நடைபெறுகிறதோ ,
உம்முடைய வழிகாட்டுதல்கள் எவ்வாறு நடைபெறுகிறதோ ,
வகுக்கப்பட்ட உம்முடைய பாதைகள்
எவ்வாறு செயல்படுத்தப் படுகிறதோ ,
அன்பை விதைத்து
இரக்கத்தை வளர்த்து
கருணையை அறுவடை செய்யும்
உம்முடைய செயல் எவ்வாறு நடைபெறுகிறதோ ,
அத்தகைய செயல்கள்
பரமண்டலத்தில் உம் சித்தத்தின் படி நடக்கும் செயல்கள் ,
பூமியிலேயும் செய்யப்பட்டால்
பூமி அறம் நிறைந்த ; நெறி வழுவாத ;
தன்மையுடன் காணப்படும் .
எனவே ,உம் சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல
பூமியிலேயும் செய்யப்பட வேண்டும் .

மனிதனின் அத்தியாவசிய தேவைகள் மூன்று :
உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க இடம்.
பசிக்கொடுமை ஒருவனை தாக்கும் போது ,
பசிக்கொடுமை ஒருவனை வாட்டும் போது ,
பசிக்கொடுமை ஒருவனை வதைக்கும் போது
பசிக்கொடுமை ஒருவனை மீளாத்துயரில் தள்ளும் போது ,
மன வேதனைப்பட்டு
மன உளைச்சலுக்கு ஆளாகி
தன் தேவையை தீர்த்துக் கொள்ள
குற்றச் செயல் செய்ய முயல்கிறான்
குற்றங்களை இழைத்து
தவறான வழியில் மாட்டிக் கொள்கிறான் .
ஆகவே பசிப்பிணி நீங்க எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை
இன்று எங்களுக்குத் தாரும் .
உடலை வளர்க்கத் தேவைப்படும் உணவை
இன்று எங்களுக்குத் தாரும் .

இன்னல் கொடுப்போர் ;
ஏளனம் செய்வோர் ;
தொல்லைகள் கொடுப்போர் ;
துயரங்கள் அளிப்போர் ;
அன்பை கெடுப்போர் ;
இரக்கத்தை கொல்வோர் ;
கருணையை மறப்போர் ;
பண்பை வெறுப்போர் ;
பகைமையை வளர்ப்போர் ;
நன்றியை துறப்போர் ;
கடனை புதைப்போர் ;
அறவழியை பகைப்போர் ;
நேர்வழியை சிதைப்போர் ;
கடுஞ்சொல் தொடுப்போர் ;
கடுஞ்செயல் பதிப்போர் ;

எங்களுக்கு செய்யும் செயல்களை
நாங்கள் மன்னிப்பது போல
அறிந்தும் -  அறியாமலும் ,
தெரிந்தும்  தெரியாமலும்,
உணர்ந்தும் -  உணராமலும் ,
புரிந்தும் -  புரியாமலும் ,
நாங்கள் செய்யும் பிழைகளை மன்னியும்
எங்கள் சர்வ வல்லமையுள்ள பிதாவே !

நம் மேல் பகைமை கொண்டு ,
பொறாமை கொண்டு விரோதம் பாராட்டுவோர் ,
நமக்கு எதிராகச் செய்யும் பழிச்செயல் செயல்கள் ,
அவர்கள் அறியாமையில் வீழ்ந்து
சிந்தனை தடுமாறி செய்யும் செயல்கள் ,
என்பதை மனதில் கொண்டு
அவர்கள் செய்யும் தவறுகளை நாம் மன்னித்தால்
அதே தவறுகளை நாம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில்
மடமையில் வீழ்ந்து செய்யும் தவறுகளை
ஆண்டவர்  மன்னிப்பார்
என்கிறார்  இயேசு .

நாங்கள் சோதனைக்குள் மாட்டி வேதனைப்படாமல் ,
கவலைக்குள் மாட்டி கண்ணீர் சிந்தாமல் ,
தீமைக்குள் மாட்டி எங்கள் வாழ்வு சிதறி விடாமல் ,
எங்களை இரட்சித்து காப்பாற்றி
வழி நடத்திச் செல்லும்.
சர்வ வல்லமையுள்ள எங்கள் பிதாவே !
ஆமேன்  என்று
என்ற வழிமுறையைப் பின்பற்றி
பிரார்த்தனை செய்ய வேண்டும்
என்கிறார்  இயேசு .



அழுகணிச் சித்தர் :

“”எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா
                ஆண்டிருந்தா லாகாதோ””
               
                        ---அழுகணிச் சித்தர்----பெரியஞானக் கோவை--

ஆணவத்திற்கும் , தன்னம்பிக்கைக்கும் வேறுபாடு உள்ளது .
என்னால் அந்த செயலைச் செய்ய முடியும்
என்று சொன்னால் அது தன்னம்பிக்கை .
என்னால் மட்டும் தான் அந்த செயலைச் செய்ய முடியும்
என்று சொன்னால் அது ஆணவம் .

வார்த்தையைப் பயன்படுத்தும் முறையிலிருந்து
ஒருவருடைய  குணநலன்களைத் தெரிந்து கொள்ளலாம் .

வார்த்தைகள் -
எதிராளிகளை யோசிக்க வைக்க ,
எதிராளிகளை திணற வைக்க ,
எதிராளிகளை மிரள வைக்க ,
எதிராளிகளை பதற வைக்க ,
எதிராளிகளை கிறங்க வைக்க ,
எதிராளிகளை மயங்க வைக்க ,
பயன்படுத்தப் படுகிறது .

வார்த்தைகளை பயன்படுத்துவது
கையாள்வது , பிரயோகிப்பது என்பது வேறு .
வார்த்தைகளில் மறைந்து கிடக்கும் ,
ஒளிந்து கொண்டிருக்கும் அர்த்தங்களை
உணர்ந்து கொள்வது என்பது வேறு .

வார்த்தைகளை தன் அறிவுக்கேற்றபடி
அனுபவ விளக்கத்தின் படி
கற்ற நிலைக் கேற்ற படி பயன்படுத்தலாம் .
ஆனால் வார்த்தையில் உள்ள அர்த்தங்களை ,
அதில் பொதிந்துள்ள கருத்துக்களை ,
மறைத்து வைக்கப்பட்ட சூட்சுமங்களை ,
அடக்கி வைக்கப்பட்ட மூல வித்துக்களை ,
புதைத்து வைக்கப்பட்ட ஆதி - அந்த ரகசியங்களை ,
ஒளித்து வைக்கப்பட்ட நித்தியத் தன்மைகளை ,
செதுக்கி வைக்கப்பட்ட மறைபொருள் உண்மைகளை ,
வார்த்து வைக்கப்பட்ட உண்மையின் முழுமைகளை ,
பதித்து வைக்கப்பட்ட கர்மவினையின் கருத்துக்களை ,
பொறித்து வைக்கப்பட்ட ஊழ்வினையின் சின்னங்களை ,
காண வேண்டுமானால் ,
அறிய வேண்டுமானால் ,
உணர வேண்டுமானால் ,
வார்த்தையின் அர்த்தங்கள் தெரிய வேண்டும்
புரிய வேண்டும் .

சில வார்த்தைகள் நேரடியாக
எதை விளக்க வருகிறதோ அதை விளக்கும் .
சில வார்த்தைகள் நேரடியாக விளக்காமல்
மறைபொருளாக விளக்கிக் காட்டும் .
நேரடியாக விளக்கிக் காட்டுபவவைகளை
நாம் உணர்ந்து கொள்ளலாம் .
மறைபொருளாக
உயர்ந்த கருத்துக்களை ,
உயர்ந்த நெறிகளை ,
ஒழுக்க முறைகளை ,
அன்பின் உயர்வுகளை ,
கருணையின் ஏற்றங்களை ,
இரக்கத்தின் மேன்மைகளை ,
உண்மையின் சிறப்புகளை ,
கற்பனையின் வடிவங்களை ,
மந்திரத்தின் ஒலிகளை ,
யந்திரத்தின் வடிவங்களை ,
தந்திரத்தின் வெளிப்பாடுகளை ,
வைத்தியத்தின் முழுமைகளை ,
யோகாசனத்தின் செயல்பாடுகளை ,
வர்மத்தின் சின்னங்களை ,
சோதிடத்தின் நுட்பங்களை ,
மறைத்து வைக்கப்பட்ட வார்த்தைகளை ,
அறிந்து கொள்வது கடினம் .

பிரம்ம ரகசியங்களை தன்னுள் கொண்ட
ஞான விளக்கங்களை தன்னுள் கொண்ட
வார்த்தைகளை அறிந்து
அதில் உள்ள விளக்கத்தை நாம் பெற வேண்டுமானால்
தான் அவனாக மாற வேண்டும்.
நானே அவனாகவும் ; அவனே நானாகவும் ;
இருக்கிறோம் என்பதை உணர்ந்து , மனம் தெளிந்து ,
நானே அவனாகவும் ; அவனே நானாகவும் ;
மாறக்கூடிய செயல்களுக்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து
நடவடிக்கைகளை மேற்கொண்டு
செயல்களை மேற்கொள்ளும் போது
வார்த்தையில் உள்ள அர்த்தங்கள் பேசும் ;
வார்த்தை உயிர்  பெறும் ;
வார்த்தை நம்மை சிந்திக்க வைக்கும் ;
வார்த்தை நம்மை செயல்பட வைக்கும் ;
வார்த்தை நம்மை இயங்க வைக்கும் ;
வார்த்தை நம்மை செதுக்கி வைக்கும் ;
வார்த்தை நம்மை முறைப்படுத்தி வைக்கும் ;
வார்த்தை நம்மை நேர்வழிப்படுத்தி வைக்கும் ;
வார்த்தை நம்மை உயர்நெறிக்குள் புகுத்தி வைக்கும் ;
வார்த்தை நம்மை அறியாமையை விட்டு விலக வைக்கும் ;
வார்த்தையை உணரும் போது வாழ்க்கை வளம் பெறும் ;

இத்தகைய நிலை அடைய வேண்டுமானால்
தான் அவனாக மாற வேண்டும் .
தான் அவனாக மாறும் வழியைத் தான்
தான் அவனாக மாறினால் கிடைக்கும் உயர்நிலையைத் தான்
அழுகணிச்சித்தர்  தன் பாடலில் குறிப்பிடுகிறார் .

 யீராறுஎன்றால் 2 x 6 = 12 என்று பொருள்.
கால் என்றால் காற்று என்று பொருள் .
யீராறு காலடியோஎன்றால் 12 அங்குலக் காற்று என்று பொருள்.

நாம் ஒருமுறை சுவாசிக்கும் போது  சுவாசக்காற்றானது
வெளியே 12 அங்குலம் செல்கிறது
உள்ளே 8 அங்குலம் மட்டுமே செல்கிறது
உள்ளே 8 அங்குலம் தங்குகிறது
4 அங்குலம் சுவாசக் காற்றானது வீணாகிறது .

இவ்விதம் சுவாசவீதம் தொடர்ந்து நடைபெறும் போது
4 அங்குலம் வீணாவதால் அதாவது
வெளியே 12 அங்குலம் சென்று
உள்ளே 8 அங்குலம் தங்கி
4 அங்குலம் வீணாவதால் தொடர்ந்து
4 அங்குலம் வீணாகிக் கொண்டிருப்பதால்
உடலானது தளர்ச்சியடைந்து , முதிர்ச்சியடைந்து ,
துன்ப நிலை அடைந்து இறப்பை நோக்கி செல்லும்.
உடலானது தளர்வடைவதன் மூலம்
உயிரானது உடலுக்குள் இருக்கும்
வலிமைத் தன்மையை இழக்கிறது .
இதனால் கூட்டை விட்டு குருவி
பிரிந்து செல்லுவதைப் போன்று
உடலிலிருந்து உயிர்  பிரிந்து
செல்லக் கூடிய நிலையை உண்டாக்கி விடும் .
உடலுக்கு இறப்பை ஏற்படுத்தி விடும் .

இந்த நிலை மாற வேண்டுமானால் ,
இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் ,
உடலானது அழிவில்லாத நிலையுடன் இருக்க வேண்டுமானால் ,
இறப்பை எதிர்த்து உடலானது
நித்திய நிலையை அடைய வேண்டுமானால் ,
உயிர்  உடலிலிருந்து பிரிந்து செல்லாமல் இருக்க வேண்டுமானால் ,
உயிர் உடலுடன் பிணைந்து
நித்திய வாழ்வைப் பெற்று இருக்க வேண்டுமானால் ,
சுவாசத்தைக் கட்டுப் படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
வீணாகும் சுவாசத்தை வீணாகாமல்
பார்த்துக் கொள்ள தெரிந்து இருக்க வேண்டும் .

சுவாசத்தை எந்த அளவிற்கு கட்டுப் படுத்தினால் ,
எவ்வளவு அளவு என்பதை உணர்ந்து கட்டுப்படுத்தினால் ,
வீணாகும் சுவாசத்தை வீணாகாமல் இருக்கக்கூடிய
முறையை அறிந்து கட்டுப்படுத்தினால் ,
சுவாச ஓட்டத்தின் தன்மையை அறிந்து கட்டுப்படுத்தினால்,
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத அளவு
எவ்வளவு என்பதை உணர்ந்து கட்டுப்படுத்தினால் ,
உடலுக்கு நன்மையளிக்கும் அளவு
எவ்வளவு என்பதை உணர்ந்து கட்டுப்படுத்தினால் ,
சுவாசத்தை தவறில்லாமல் முறையாக கட்டுப்படுத்தி
பலன் காணும் முறையறிந்து கட்டுப்படுத்தினால் ,
வியத்தகு நன்மை  பெறுவதோடு
சக்திகள் பலவற்றையும் ,
சித்துக்கள் பலவற்றையும் ,
உயர்வுகள் பலவற்றையும் ,
நிரந்தர வாழ்வுக்குரிய திறவுகோலையும் ,
இறவா நிலையுடன் நித்தியத்தையும் பெறலாம் .

புரவிஎன்றால் குதிரை என்று பொருள் .
விரைந்து செல்லும் குதிரையையும்
வேகமெடுத்து ஓடும் குதிரையையும் அடக்கி
நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் ,
நம் கட்டளைக்கு பணிந்து நடக்க வைக்க வேண்டுமானால் ,
நம் இச்சைப்படி செயல்படும்படி இயக்க வேண்டுமானால் ,
கடிவாளம் இட்டு நம் கட்டளைக்கு பணிய வைப்பதன் மூலம்
நாம் எங்கு செல்ல வேண்டுமோ ,
எந்த இலக்கை அடைய வேண்டுமோ ,
அந்த இடத்தை அடையலாம் .

குதிரையை கடிவாளம் இடாமல்
நம் கட்டளைக்கு அடிபணியும் படிச் செய்யாமல்
அதன் போக்கில் விட்டு விட்டால் ,
குதிரை நம்மை இன்னலுக்கு ஆளாக்குவதோடு
பள்ளத்தில் கவிழ்த்து விட்டு துன்பத்திலும் ,
இலக்கை அடைய விடாமல வருத்தத்திலும் ,
இருக்க வைத்து விடும் .

குதிரையை அடக்கி ஆளும் முறையை அறிந்து
அந்த முறையைப் பயன்படுத்தி
குதிரையை அடக்கி ஆளத் தெரிந்தவனால் மட்டுமே
செல்ல வேண்டிய இலக்கை
செல்ல வேண்டிய காலத்தில் செல்ல முடியும் .
குதிரையை அடக்கி ஆளும் முறையை அறியாதவனால்
குதிரையை அடக்கி ஆளத் தெரியாதவனால்
செல்ல வேண்டிய இலக்கை நோக்கி
செல்ல முடியாமல் பரிதவிப்பான் ; துன்பத்தில் உழறுவான் ;

அதைப் போன்று சுவாசத்தைக் கட்டுப்படுத்த
தெரிந்தவனால் மட்டுமே நித்திய வாழ்வை அடைய முடியும்.
சுவாசத்தைக் கட்டுப்படுத்த கட்டுப்படுத்த
தெரியாதவனால் நித்திய வாழ்வை அடைய முடியாது .

வெளியே 12 அங்குலம்
உள்ளே 8 அங்குலம் என தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுவாசவீதத்தில்
வீணாகும் 4 அங்குல காற்றை
வீணாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் .

கால்நாலுஞ்என்றால் 4 அங்குலம் காற்று என்று பொருள்.
தான் மறித்துக் கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
என்றால்
வெளியே செல்லும் 12 அங்குலக் காற்றில்
வீணாகச் செல்லும் 4 அங்குலக் காற்றை
அதிகப் படியாக வெளியே செல்ல விடாமல்
வீணாகாமல் தடுத்தி நிறுத்தி
செய்யப்படும் முறை என்று பொருள்.

உள்ளே 8 அங்குலம் சுவாசம் எப்படி நடை பெறுகிறதோ
அதே அளவு வெளியே 12 அங்குலத்தில்
4 அங்குலம் குறைக்க வேண்டும்
4 அங்குலம் குறைக்கும் முறையறிந்து குறைத்து
வெளியே 8 அங்குலமாக மாற்றி
உள்ளே 8 அங்குலம் ; வெளியே 8 அங்குலம் ;
என்ற அடிப்படையில் சுவாசவீதம்
நடைபெறும் வகையில் அமைக்க வேண்டும் .
இது சுவாசத்தை கட்டுப்படுத்தும் முதல்நிலை .
சுவாசத்தை தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரும் ஒரு நிலை .

மேலும் 8 அங்குல காற்றையும்
படிப்படியாக குறைப்பதன் மூலம்
அஷ்ட கன்மம் ஆடலாம் ;
அஷ்டமா சித்தி அடையலாம் ;
ஆனந்த நீராடலாம் ;
பேரின்ப பெருவெள்ளத்தில் நீந்தலாம் ;
சிற்றின்ப சுவையை சுவைத்து மகிழலாம் ;
வெற்றியின் நீரோடையில் களிக்கலாம் ;
இன்பத்தின் சாளரத்தில் மகிழ்வுகளைப் பெறலாம் ;
வாழ்க்கை நந்தவனத்தை துன்பமின்றி ரசிக்கலாம் ;
ஏற்றத்தின் எழில்களைக் காணலாம் ;
உயர்வின் அரியணையில் அமரலாம் ;
ஆதி - அந்தம் தெரியலாம் ;
கர்மவினை அறியலாம் ;
ஊழ்வினை எரிக்கலாம் ;
பாவவினை புதைக்கலாம் ;
அண்ட சராசரங்களில் ஆடலாம் ;
கண் இமைக்கும் நேரம் துhரம் பல கடக்கலாம் ;

யார்க்கும் கிடைக்காத ,
எளிதில் அடைய முடியாத ,
கற்பனையில் நினைக்க முடியாத ,
எழுத்தில் எழுத முடியாத ,
வார்த்தையில் சொல்ல முடியாத ,
சித்திரத்தில் தீட்ட முடியாத ,
சிற்பத்தால் செதுக்க முடியாத  - உயர்வுகளை
வீணாகும் 4 அங்குல காற்றை வீணாகாமல்
உள்ளும் , புறமும் ஒரே நிலையை ஏற்படுத்தி ,
சுவாசவீதத்தை குறைத்து
சுவாசவீதத்தை மேலும் படிப்படியாக குறைத்து
சுவாசத்தை எங்கிருந்து வந்ததோ  அங்கேயே நிறுத்தி
சுவாசத்தின் மூலத்தை அறிந்து மூலத்தில் நிறுத்தி
அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ;
உயர்வுகள் ; சிறப்புகள் ; மகிமைகள் ;
ஆகியவற்றை அடையலாம் .

அத்தகைய ஒரு நிலை எனக்கு கிடைத்தால் போதும்
அத்தகைய ஒரு உன்னதமான நிலையை அடைவதன் மூலம்
எனக்கு கிடைக்கும் உயர்வுகள் , நித்திய வாழ்வு ,
ஆகியவை எனக்கு கிடைத்தால் போதும்
என்கிறார்  அழுகணிச்சித்தர் .



இயேசு கிறிஸ்து – அழுகணிச்சித்தர் :
இயேசு ,
எந்த வழிமுறையைப் பின்பற்றி
பிரார்த்தனை செய்தால்
ஆண்டவருடன் இணைந்து
ஆண்டவரிடம் இருந்து
நமக்கு தேவையானவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்
என்பதை விளக்குகிறார் .

அவ்வாறே ,
அழுகணிச்சித்தரும் ,
எந்த தவமுறையைப் பின்பற்றி பயிற்சி செய்தால்
ஆண்டவருடன் இணைந்து
ஆண்டவரிடம் இருந்து
நமக்கு தேவையானவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்
என்பதை விளக்குகிறார் .


                “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                       போற்றினேன் பதிவுஐம்பத்துஇரண்டு ந்தான்முற்றே “”
               






No comments:

Post a Comment