March 11, 2020

பரம்பொருள்-பதிவு-153


              ஜபம்-பதிவு-401
            (பரம்பொருள்-153)

கிருஷ்ணன் :
"தாங்கள் வாழ வேண்டும்
என்பதற்காக என்னிடம்
வரங்களைப் பெற்று ;
வாழும் காலத்தில்
வாழ்க்கையை
வாழாமல்
வாழ்க்கையைத்
தொலைத்து விட்டு ;
புகழை இழந்து விட்டு ;
மக்கள் மனதில்
இடம் பெறாமல்
காலத்தால் காணாமல்
போனவர்கள் தான் ;
இந்த உலகத்தில் அதிக
எண்ணிக்கையில் உண்டு"

"ஆனால் நீ கேட்ட
வரங்களை - நான் உனக்கு
அளிப்பதன் மூலம்
உன்னுடைய வாழ்க்கை
முடிந்த பிறகும் - இந்த
உலகம் இருக்கும் வரை
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவருடைய
மனதிலும் இடம் பெற்று
காலத்தால் காணாமல்
போகாமல் இறவாப்
புகழுடன் இருக்கக்கூடிய
பாக்கியம் இந்த உலகத்தில்
உனக்கு மட்டுமே
கிடைக்கப் போகிறது "

"பேரறிவே பரிணமித்து
படைப்புகளாகி
இருக்கும் நிலையில்
அந்த படைப்புகளில்
உள்ள பேரறிவை
சாட்சியாக வைத்து
கிருஷ்ணனாகிய நான்
அரவானாகிய உனக்கு
நீ கேட்ட இரண்டு
வரங்களை அளிக்கிறேன் "

“அரவான் நீ
களப்பலி ஆனாலும்
உன்னுடைய வெட்டுப்பட்ட
தலையில் உள்ள
கண்களின் வழியாக
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்ப்பாய் என்ற
முதல் வரத்தை
உனக்கு அளிக்கிறேன் “

“நீ ஒரு பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு அந்த
பெண்ணுடன் ஒரு
இரவு தாம்பத்ய சுகம்
அனுபவிப்பாய் என்ற
இரண்டாவது வரத்தையும்
அளிக்கிறேன் “

"தான் இறக்காமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக பல்வேறு
வார்த்தைகளைப்
பயன்படுத்தி என்னிடம்
வரங்களைக்
கேட்டுப் பெற்றும்
இறந்தவர்கள் தான்
இந்த உலகத்தில் அதிகம்
பேர் இருக்கிறார்கள் "

"ஆனால் இறக்கப்
போகிறோம் என்று
தெரிந்தும் நீ கேட்ட
வரத்தின் மூலம்
நீ இறந்தாலும்
உன்னுடைய புகழ்
இந்த உலகத்தில்
இறக்காமல் வாழ்ந்து
கொண்டிருக்கத் தான்
போகிறது "

"இந்த உலகத்தில்
வாழ்ந்த யாருக்குமே
கிடைக்காத மிகப்
பெரிய புகழ் - நீ
இறந்த பிறகு உனக்கு
கிடைக்கப் போகிறது "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உன்னுடைய புகழ்
அழியாமல் நிலைத்து
நிற்கப்போகிறது "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உன்னை கடவுளாக
வணங்கக் கூடியவர்கள்
இருந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உனக்காக கண்ணீர்
சிந்தி கதறி
அழக்கூடியவர்கள்
இருந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் "

"யாருமே செய்ய
முடியாத மிகப்
பெரிய தியாகத்தைச்
செய்யப்போகும் உனக்கு
இந்த உலகமே
நன்றிக்கடன் பட்டிருக்கிறது
அரவான் நன்றிக்கடன்
பட்டிருக்கிறது "

அரவான்  :
“பரந்தாமா ! நீங்கள் எனக்கு
அளித்த வரங்களும் ;
உங்களுடைய
வார்த்தைகளும் ;
என்னுடைய மனதை
மகழ்வித்தது “

கிருஷ்ணன்  :
“உன்னுடைய மனம்
மகிழ்ந்ததற்கான காரணத்தை
உன்னுடைய தாய்
உலூபியை சந்தித்து
சொல்லி விட்டு ,
களப்பலியாவதற்கு
ஆசிகளைப் பெற்று விட்டு ,
இரவில் வந்து - இந்த
மாளிகையில் தங்கி இரு “

“இன்று இரவு அழகிய
பெண் ஒருத்தி
உன்னைத் தேடி - இந்த
மாளிகைக்கு வருவாள்  ;
அந்த பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு தாம்பத்ய
சுகம் அனுபவிப்பாய் ; “

“இன்று இரவு
இந்த மாளிகையில்
தங்கி இருந்து
உன்னைத் தேடி
வரப்போகும்
அந்த பெண்ணுக்காக
காத்துக் கொண்டிரு
அரவான் “

“காத்துக் கொண்டிரு “

(அரவான்
கிருஷ்ணனுடைய
பாதங்களில் விழுந்தபோது
கிருஷ்ணன் அரவான்
தலையில் கை
வைத்து விட்டு
எதுவும் பேசாமல்
சிறிது நேரம்
அமைதியாக இருந்தார் ;
எதுவும் பேசாமல்
அமைதியாக இருந்த
கிருஷ்ணன் அந்த
அறையை விட்டு
வெளியேறினார்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 11-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment