March 24, 2020

பரம்பொருள்-பதிவு-160


                ஜபம்-பதிவு-408
              (பரம்பொருள்-160)

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
நிம்மதி என்றால்
என்ன என்று தெரிந்து
வைத்திருக்கிறார்களா
என்று தெரியவில்லை
ஆனால்
வருங்கால உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும் நிம்மதியாக
வாழ வேண்டும்
என்றால் நாளை காலை
பாண்டவர்கள் சார்பாக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும் “

“நாளை காலை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கவில்லை என்றால்
பாண்டவர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறவே
முடியாது - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

“நாளைய தினத்தை
தவற விட்டு விட்டால்
நம்மால் களப்பலி
கொடுக்கவே
முடியாது - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

“நாளை காலை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும்
என்றால் இன்று இரவு
அரவானின் ஆசையை
நிறைவேற்ற
வேண்டும் - என்ற
உண்மையை நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும்”

"அரவானுடைய ஆசையை
நிறைவேற்றுவதற்கு
அரவானுக்கு
கண்டிப்பாக-நாம்
ஒரு பெண்ணை
அனுப்பித் தான்
ஆக வேண்டும்
என்ற உண்மையை
நீ தெரிந்து
வைத்திருக்க வேண்டும் “

“நீ இவைகளை
தெரிந்து வைத்துக்
கொள்ளாத காரணத்தினால்
தான் களப்பலி எவ்வளவு
முக்கியமானது
என்பதையும்-நாளை
களப்பலி கொடுப்பதற்கு
செய்ய வேண்டிய
செயல்கள் எவை
என்பதையும் உணர்ந்து
அதை நீ செய்யவில்லை”

தர்மர் :
“எங்களால் முடிந்த
அளவு முயற்சி
செய்தோம் முடியவில்லை “

கிருஷ்ணன் :
“முடிக்க வேண்டிய
விஷயத்தை
முடிக்கவில்லை - எனில்
எத்தகைய தவறான
விளைவுகள் ஏற்படும் என்று
உனக்கு தெரிந்திருந்தும்
முயற்சி செய்தேன்
என்று நீ சொல்வதை
என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை தர்மா “

தர்மர் :
“முயற்சி செய்த
எங்கள் மேல் எந்தத்
தவறும் இல்லை “

கிருஷ்ணன் :
“தவறு உங்கள் மேல்
இல்லை என்றால் - தவறு
பெண்கள் மேல் தான்
இருக்கிறது என்கிறாயா தர்மா “

தர்மர் :
“நான் அவ்வாறு
சொல்ல வரவில்லை
பெண்கள் மனதை
புரிந்து கொள்ள
முடியவில்லை
என்று தான் நான்
சொல்ல வந்தேன் “

கிருஷ்ணன் :
“ஆமாம் பெண்களின்
மனதை புரிந்து கொள்ளவே
முடியாது தான்”

“வருங்கால உலகத்தில்
பெண்கள் அனைவரும்
மானத்தோடு வாழ
வேண்டும் என்பதற்காக
உலூபி என்ற பெண்
தன்னுடைய மகனையே
களப்பலியாகக் கொடுக்க
சம்மதித்தத்தை
நினைக்கும் போது
பெண்ணினத்தை நினைத்து
பெருமைப் படுவதா
(அல்லது)
பெண்களின் மானத்தை
காப்பாற்றுவதற்காக
களப்பலியாகப்
போகும் அரவானை
எந்த ஒரு பெண்ணும்
திருமணம் செய்ய
சம்மதிக்கவில்லை என்பதை
நினைக்கும் போது
பெண்ணினத்தை நினைத்து
வேதனைப்படுவதா
என்று தெரியவில்லை”

“ஆமாம் பெண்களின்
மனதை புரிந்து கொள்ள
முடியவில்லை தான் “

பீமன்  :
“இப்போது என்ன
செய்வது பரந்தாமா? “

கிருஷ்ணன்  :
“மனிதனால்
ஒரு செயலைச் செய்ய
முடியும் என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் நேரில் வரமாட்டார் ;
மனிதனால் - ஒரு
செயலைச் செய்ய
முடியவில்லை என்ற
நிலை வரும்போது தான்
நேரம் பார்த்து
கடவுள் நேரில் வருவார் “

“ஆமாம் இப்போது
என்னுடைய நேரம்  

“ஆமாம் நான் களத்தில்
இறங்க வேண்டிய நேரம் “

பீமன் :
“என்ன செய்யப்
போகிறீர்கள் பரந்தாமா ?“

கிருஷ்ணன் :
 “-----------------------------“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 24-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment