January 10, 2020

பரம்பொருள்-பதிவு-114


            பரம்பொருள்-பதிவு-114

“அது மட்டுமல்ல
தன்னுடைய உயிரை
களப்பலியாக
கொடுக்கிறேன் என்று
சொன்ன அரவானின்
வார்த்தைகளைக் கேட்ட
துரியோதனன் சற்று
திகைத்துத் தான் நின்றான் ;
உயிரைப் பற்றி
கவலைப்படாத
அரவான் என்ற
மாவீரன் தனக்கு
எதிராக நின்று
கொண்டிருப்பதைக் கண்டு
துரியோதனன்
அதிர்ச்சியில் தான் நின்றான் ;
வீரத்தின் உருவாக
நின்று கொண்டிருந்த
அரவானைக் கண்டு
துரியோதனன்
மலைத்துத் தான் நின்றான் ;
துரியோதனனால்
எதுவுமே பேச முடியாமல்
வார்த்தையின்றித்
தான் நின்றான் ; “

“ஆனால்
எந்தவிதமான
கலக்கமும் இல்லாமல்
கொஞ்சம் கூட
வார்த்தையில் நடுக்கம்
என்ற ஒன்று
இல்லாமல் அரவான்
தொடர்ந்து பேசினான்”

அரவான் :
“பெரியவர்கள் கேட்டு
இந்த சிறியவன்
இல்லை என்று
சொல்ல முடியுமா ?
பெரிய தந்தையே !
அதுவும் பெரிய தந்தை
மகனிடம் யாசகமாக
உயிரையே கேட்கும் போது
உயிரைத் தரமுடியாது
என்று சொல்ல முடியுமா ?
அப்படி நீங்கள்
கேட்டு நான் இல்லை
என்று சொன்னால்
பெரியவர்கள் சொல்லை
தட்டியவன் ஆவேன் ;
பெரியவர்களுடைய
வார்த்தைக்கு மரியாதை
கொடுக்காதவனாவேன் ;
பெரிய தந்தையை
மதிக்காதவனாவேன் ;
நாளை இந்த உலகம்
என்னைப் பார்த்து
அரவான் பெரியவர்களை
மதிக்கவில்லை ;
பெரியவர்கள் சொல்லை
கேட்கவில்லை ;
பெரியவர்கள்  கேட்டதை
அளிக்கவில்லை; - என்று
வசைபாடும் இழிவான
சொற்களுக்கு இலக்காக
நான் விரும்பவில்லை ;”

“யாசகமாக நீங்கள்
கேட்கும் என்னுடைய
உயிரை களப்பலியாக
கொடுப்பதற்கு சம்மதிக்கிறேன்
பெரிய தந்தையே ! “

“என்னுடைய உயிரை
களப்பலியாக கொடுப்பதற்கு
இப்போதே நான்
தயாராக இருக்கிறேன் ;
என்னுடைய உயிரை
தங்களுக்கு களப்பலியாக
தருகிறேன் என்று
வாளை எடுத்தான் அரவான் ; “

துரியோதனன் :
“நிறுத்து அரவான்
நிறுத்து !
களப்பலி கொடுப்பதற்கு
இன்றைய நாள்
தகுந்த நாள் கிடையாது ;
வருகின்ற அமாவாசையே
களப்பலி கொடுப்பதற்கு
தகுந்த நாள் ;
அன்றைய நாளில் தான்
நான் களப்பலி கொடுப்பதற்கு
முடிவு செய்திருக்கிறேன் ;
வருகின்ற அமாவாசை
தினத்தன்று காளியின்
முன்பு உன்னுடைய
உயிரை களப்பலியாக
கொடுத்தால் போதும் “

அரவான்  :
.”ஒன்றே ஒன்றை மட்டும்
நான் சொல்லிக் கொள்ள
கடமைப்பட்டிருக்கிறேன்
பெரிய தந்தையே !
நாளை என்ன
நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாது ;
காலம் என்ன
நினைக்கிறது என்பதும்
யாருக்கும் தெரியாது ;
வருகின்ற அமாவாசை
வரை நான்
உயிரோடு இருந்தால் ;  
என்னுடைய உடல்
பின்னமாகாமல் இருந்தால் ;
நான் கொடுத்த
வாக்குறுதியின்படி
உங்களுக்காக
வருகின்ற அமாவாசை
தினத்தன்று காளியின்
முன்பு களப்பலியாகிறேன்
பெரிய தந்தையே ! “

துரியோதனன் :
“அப்படியே ஆகட்டும்
அரவான் உன்னுடைய
சொல் எனக்கு மிகுந்த
மகிழ்ச்சியை அளிக்கிறது. ;
நீ செய்யப்போகும் இந்த
தியாகச் செயலுக்காக
வருகின்ற அமாவாசையை
எதிர்நோக்கி நான் காத்துக்
கொண்டிருப்பேன் ;”

அரவான் ;
“அப்படியே ஆகட்டும்
பெரிய தந்தையே ! “

(துரியோதனன் அரவானிடம்
விடைபெற்றுச் செல்கிறான்)

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------10-01-2020
//////////////////////////////////////////



January 09, 2020

பரம்பொருள்-பதிவு-113


            பரம்பொருள்-பதிவு-113

துரியோதனன் :
“மகனே அரவான் !
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் இடையே
ஏற்பட்ட பிரச்சினையைத்
தீர்ப்பதற்காக பல்வேறு
வகையானவர்களால் பல்வேறு
நிலைகளில் நடத்தப்பட்ட
அனைத்து சமாதானப்
பேச்சுவார்த்தைகளும்
தோல்வியில் முடிந்துவிட்ட
காரணத்தினால் ,
சமாதானத்தின்
அனைத்து கதவுகளும்
அடைக்கப்பட்டு விட்டது “

“இதனால்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே போர் நடப்பது
என்பது முடிவாகி விட்டது ;
போரை நடத்துவதற்குத்
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
இருவரும் செய்து
கொண்டிருக்கிறார்கள்
என்பது உனக்குத் தெரியும் ;”

“போரில் நான் வெற்றி
பெற வேண்டும்
என்பதற்காக களப்பலி
கொடுப்பதற்கு தீர்மானித்தேன் “

“32 லட்சணங்கள் உள்ளவராக
இருக்க வேண்டும் ;
எதிர்ரோமம் படைத்தவராக
இருக்க வேண்டும்.;
ஆகிய இரண்டு
தன்மைகளையும்  ஒருங்கே
கொண்டவரைத் தான்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும்
என்பதையும்  ;
அத்தகையவரை
களப்பலியாகக்
கொடுத்தால் மட்டுமே
வெற்றி பெற முடியும்
என்பதையும் ;
தெரிந்து கொண்டேன் ”

“களப்பலியாக  கொடுப்பதற்கு
தகுதி பெற்றவர்களில்
சிறந்த ஒருவனாக நீ
இருக்கிறாய் என்பதையும்  ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதி வாய்ந்தவர்களில்
உயர்ந்தவனாகக்
கருதப்படுவதும்
நீ தான் என்பதையும் ;
தெரிந்து கொண்டேன் “

“கேட்பவர் எதிரியாக
இருந்தாலும் ;
கேட்கப்படுவது எதுவாக
இருந்தாலும் ; - எந்தவித
மறுப்பும் சொல்லாமல்
தானம் தரக்கூடிய
உயர்ந்த மனப்பான்மை
கொண்டவன் நீ
என்பதையும் நான்
தெரிந்து கொண்டேன் “

“அதனால் நானே உன்னை
நேரில் சந்தித்து
போரில் நான் வெற்றி
பெறுவதற்காக களப்பலியாக
உன்னுடைய உயிரை
எனக்குத் தருவாயா ?
என்று கேட்டு உன்னுடைய
சம்மதத்தைப் பெறுவதற்காக
உன்னைத் தேடி நானே
நேரில் வந்தேன் ;

“களப்பலியாக உன்னுடைய
உயிரை எனக்குத்
தருவாயா அரவான் ?”

(துரியோதனனின்
வார்த்தைகளைக் கேட்ட
அரவானுக்கு எந்தவிதமான
அதிர்ச்சியும் ஏற்படவில்லை
சர்வ சாதாரணமாக
பதில் அளித்தான்)

அரவான் :
“என்னுடைய உயிரை
களப்பலியாகத் தருகிறேன்
பெரிய தந்தையே  ! “

“களப்பலியாக என்னுடைய
உயிரைத் தருவதற்கு
சம்மதிக்கிறேன்
பெரிய தந்தையே ! “

என்று சொன்ன அரவானின்
வார்த்தைகளைக் கேட்ட
துரியோதனன்………………………!

“ஆயிரம் பேர் சுற்றி
வளைத்து கொல்லத்
துடித்தாலும் அத்தனை
பேர்களையும் கொன்று
குவித்து பகைவர்களை
கதி கலங்கச் செய்வதற்கு
உலகத்திலேயே பெரிய
வீரனாகவும் ;
அஞ்சா  நெஞ்சம்
கொண்டவனாகவும் ;
இருக்கவேண்டிய
அவசியமில்லை “

“போர்க்களத்தில் நின்று
கிழிந்து தொங்கும்
சதையுடனும் ; - அறுந்து
கிடக்கும் நரம்புகளுடனும் ;
உடலில் வழியும்
ரத்தத்துடனும்  ;
எதிரிகளுடன் போரிடுவதற்கு
உலகத்திலேயே பெரிய
வீரனாகவும் ; அஞ்சா
நெஞ்சம் கொண்டவனாகவும் ;
இருக்க வேண்டிய
அவசியமில்லை “

“எங்கிருந்தோ வந்த அம்பு
இதயத்தை கிழித்து
முதுகின் வழியாக
வெளியே வந்து - நின்று
கொண்டிருந்த போதும் ;
அதை எடுத்து தூர
எறிந்து விட்டு தொடர்ந்து
போர் செய்வதற்கு
உலகத்திலேயே
பெரிய வீரனாகவும் ;
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாகவும் ;
இருக்க வேண்டிய
அவசியமில்லை “

“ஆனால் தன்னைத் தானே
களப்பலி கொடுப்பதற்கு
உலகத்திலேயே
பெரிய வீரனாகவும்  ;
உலகத்திலேயே
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாகவும்  ;
கண்டிப்பாக இருந்தே
ஆக வேண்டும் “

“இத்தகைய இரண்டு
தன்மைகளைக்
கொண்டவனால் மட்டுமே
தன்னைத் தானே களப்பலி
கொடுக்க முடியும்  

“களப்பலியாக
என்னுடைய உயிரைத்
தருகிறேன் என்று
அரவான் சொன்ன
வார்த்தையிலிருந்து
அரவான் - உலகத்திலேயே
பெரிய வீரனாகவும்  ;
உலகத்திலேயே
அஞ்சா நெஞ்சம்
கொண்டவனாகவும் ;
இருக்கிறான் என்பதைப்
புரிந்து கொண்டான்
துரியோதனன் “

“விண்ணை முட்டும்
மலையாக உயர்ந்து
நிற்கும் அரவான் முன்பு
தான் ஒரு சிறு குன்றாக
நிற்பதை உணர்ந்து
கொண்டான் துரியோதனன் “

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 09-01-2020
//////////////////////////////////////////

January 07, 2020

பரம்பொருள்-பதிவு-112


           பரம்பொருள்-பதிவு-112

அரவான் :
“உதவியில்
உதவி செய்தவருக்கும் ;
உதவி பெற்றவருக்கும் ;
இடையே தொடர்பு
என்ற ஒன்று எப்போதும்
இருந்து கொண்டே இருக்கும் ;
ஆனால் யாசகத்தில்
யாசகம் அளித்தவருக்கும் ;
யாசகம் பெற்றவருக்கும் ;
இடையே தொடர்பு என்ற
ஒன்று எப்போதும் இருக்காது ;”

துரியோதனன் :
“நீ சொல்வது எனக்கு
புரியவில்லை மகனே !”

அரவான் :
“உதவி கேட்டு
வந்தவருக்கு
நாம் உதவி செய்து
விட்டோம் என்றால்,
என்றாவது ஒரு நாள்
நமக்கு உதவி
தேவைப்படும்போது
உதவி பெற்றவரிடம்
உதவி கேட்கத்
தோன்றும் - அவர் உதவி
செய்யவில்லை எனில்
உதவி பெற்றவரைப்
பார்த்து - அவர் கஷ்டத்தில்
இருக்கும் போது - நாம்
எப்படி உதவி செய்தோம்
நன்றி மறந்து விட்டான்
நன்றி கெட்டவன் என்று
திட்டுவோம் அவரிடம்
கோபம் கொள்வோம்
பகை உணர்வு ஏற்படக்கூட
வாய்ப்புண்டு - இது
உதவி செய்தவர் நிலை ;”

“அதைப்போல  
உதவி பெற்றவர்
உதவி செய்தவருக்கு
உதவி செய்ய வேண்டும்
என்ற எண்ணம் - அவர்
மனதில் இருந்து
கொண்டே இருக்கும் ;
உதவி செய்வதற்கான
காலத்தை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டே இருப்பார்.
உதவி பெற்றவர்
உதவி செய்தவருக்கு
உதவி செய்யும் வரை
உதவி செய்தவரையும்
அவர் செய்த
உதவியையும் நினைத்துக்
கொண்டே இருப்பார் ;”

“அதாவது உதவியில்
உதவி செய்தவருக்கும் 
உதவி பெற்றவருக்கும்
இடையே தொடர்பு என்ற
ஒன்று எப்போதும் இருந்து
கொண்டே இருக்கும் “

“ஆனால் யாசகத்தில்
யாசகம் என்று
கேட்டு வந்தவருக்கு
யாசகம் அளிப்பவர்
அவர் கேட்கும் யாசகத்தை
அளித்து விட்டால்
யாசகம் அளித்தவர்- எந்த
காலத்திலும் தனக்கு
என்ன நேர்ந்தாலும்
யாசகம் அளித்தவர்
யாசகம் பெற்றவரிடம்
எதையும் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்க
மாட்டார் - தான் யாருக்கு
யாசகம் அளித்தோம்
என்பதையும் - என்ன
யாசகம் அளித்தோம்
என்பதையும்
மறந்து விடுவார் “

“யாசகம் பெற்றவரும்
தான் யாரிடம்
யாசகம் பெற்றோமோ
அவரையும் - அவரிடம்
பெற்ற யாசகத்தையும்
மறந்து விடுவார் “

“அதாவது
யாசகம் அளித்தவர்
யாசகம் பெற்றவர்
ஆகிய இருவருக்கும்
இடையே எந்தவிதமான
தொடர்பும் இருக்காது “

“அதனால் தான் கேட்டேன்
பெரிய தந்தையே !
நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்திருப்பது
உதவியையா அல்லது
யாசகத்தையா என்று ?”

துரியோதனன் :
(அரவானின் அற்புதமான
அறிவுத் திறனைக்
கண்டு மலைத்துப் போன
துரியோதனன் வியந்து
போய் நின்றான் )

“அரவான் உன்னுடைய
வீரத்தைக் கேள்விப்பட்டு
மலைத்து நின்றேன் ;
நேரில் உன்னை சந்தித்த
போது உன்னுடைய
பணிவைக் கண்டு
ஆச்சரியப்பட்டு நின்றேன் ;
இப்போது உன்னுடைய
அறிவைக் கண்டு
வியந்து நிற்கிறேன் ;”

“வேறு யாருடனும்
ஒப்பிட முடியாத
தனிச்சிறப்பு பெற்றவனாக
இருக்கிறாய் மகனே ! “

“நீ செய்யக்கூடிய
செயலுக்கு இணையாக
என்னால் எதுவுமே
செய்ய முடியாது “

“உதவி செய்ய வேண்டுமா
யாசகம் தர வேண்டுமா
என்பதை தீர்மானிக்கும்
உரிமை அதைத்
தருபவருக்குத் தான்
இருக்கிறது ; - அதனால்
நான் உன்னிடம் கேட்டுப்
பெற வந்ததை உதவியாக
செய் என்றோ அல்லது
யாசகமாக தா என்றோ
நான் உன்னிடம்
கேட்க முடியாது ?
நீ தான் முடிவு
செய்ய வேண்டும் “

அரவான் :
“நான் ஒருவருக்கு
ஒன்றைக் கொடுத்து
விட்டால்
யாருக்கு கொடுத்தேன் ;
எப்போது கொடுத்தேன் ;
என்ன கொடுத்தேன் ;
என்ன காரணத்திற்காக
கொடுத்தேன் ; என்பதை
எல்லாம் எப்போதும்
என்னுடைய நினைவில்
வைத்துக் கொள்வதே
இல்லை ;”

“நான் யாருக்கு என்ன
கொடுத்தாலும்
அதை யாசகமாகக்
கொடுத்துத் தான்
எனக்குப் பழக்கம் ;”

“நீங்கள் என்னிடம்
கேட்டுப் பெற வந்ததை
நான் உங்களுக்கு
யாசகமாகவே தர
முடிவு செய்து விட்டேன் ;”

“சொல்லுங்கள் தந்தையே !
சொல்லுங்கள் என்னிடமிருந்து
யாசகமாக நீங்கள் எதை
எதிர்பார்க்கிறீர்கள் என்று
சொல்லுங்கள்……………………………? “

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 07-01-2020
//////////////////////////////////////////