May 27, 2020

அறிய வேண்டியவை-பதிவு-6


              ஜபம்-பதிவு-498
        (அறிய வேண்டியவை-6)

“உலகமே இரண்டாகப்
பிரிந்து நடைபெற்ற
குருஷேத்திரப் போரில்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே கடுமையான
போர் நடைபெற்றுக்
கொண்டிருந்தது ;
பிணமலைகள்
குவிந்து கொண்டிருந்தன ;
இரத்த ஆறு ஓடிக்
கொண்டிருந்தது ; “

“கர்ணனை எதிர்த்து போர்
புரிந்தால் ஏற்பட்ட காயம்
தர்மரின் உடல் முழுவதும்
நிரம்பி இருந்தது ;
காயத்தால் ஏற்பட்ட வலி
உடலை வாட்டியது ;
வேதனை மனதை வாட்டியது ;
இதனால் தர்மர் பாசறை
சென்று படுத்து விட்டார் “

“விவரங்களைக் கேள்விபட்ட
அர்ஜுனன் கிருஷ்ணனை
அழைத்துக் கொண்டு
தன்னுடைய அண்ணனான
தர்மரைக் காண
பாசறை சென்றான்”

“கர்ணனுடைய ஆயுதங்களால்
தாக்கப்பட்டு வேதனையால்
அவதிப்பட்டுக் கொண்டிருந்த
தர்மர் கிருஷ்ணனையும்
அர்ஜுனனையும் கண்டார்”

தர்மர் :
“அர்ஜுனா! கர்ணனைக்
கொன்று விட்டாயா ?
கர்ணன் அவனுடைய
ஆயுதங்களால் என்னைத்
தாக்கி என்னை துன்புறச்
செய்து விட்டான் ;
வலியால் என்னை
வேதனைப்படச்
செய்து விட்டான் ;
மிகுந்த வலியால்
துன்புற்றுக் கொண்டு
இருக்கிறேன் ;

நீ அவனைக்
கொன்று விட்டாயா ?
கர்ணன் இறந்து விட்டானா ?
கர்ணன் இறந்து விட்டான்
என்ற செய்தியை என்னிடம்
சொல்ல வந்தாயா ? “

“உன்னுடைய வீரமே வீரம்
உன்னை வெல்வதற்கு
இந்த உலகத்தில்
யாருமே இல்லை “

அர்ஜுனன் :
“கர்ணனை நான் இன்னும்
கொல்லவில்லை - கர்ணன்
இன்னும் இறக்கவில்லை ;
தாங்கள் காயம்
பட்டிருப்பதாகக் கேள்வி
பட்டேன் - அதனால்
பாசறையில் வந்து
தங்களை காண்பதற்காக
ஓடோடி வந்தேன் “

தர்மர் :
“அர்ஜுனா! கர்ணனை
போர்க்களத்தில் சந்திக்காமல்
பாசறையில் என்னை
ஏன் சந்திக்க வந்தாய் ?
நான் உயிரோடு
இருக்கிறேனா அல்லது
இறந்து விட்டேனா என்பதைப்
பார்ப்பதற்காக வந்தாயா ?
கர்ணனின் வீரத்தைப்
பார்த்து பயந்து ஓடி
வந்து விட்டாயா ?
பகைவன் உன்னை விட
வீரம் நிறைந்தவனாக
இருக்கிறான் என்பதைக்
கண்டு போர் செய்ய
முடியாமல் பயந்து 
ஓடி வந்து விட்டாயா? “

“கர்ணனை நானே என்
கையால் கொல்வேன்
என்று சொல்லிக்
கொண்டு திரிந்தாயே !
வீரத்தை வாளால் காட்டாமல்
வாயால் காட்டினாயா ?
உனக்கு காண்டீபம் எதற்கு ?
காண்டீபத்தைக் கையில்
வைத்துக் கொண்டு போர்
புரியாத உனக்கு
காண்டீபம் எதற்கு?”

அர்ஜுனன் :
“என்ன வார்த்தை சொல்லி
விட்டீர்கள் - எத்தகைய
வார்த்தையை சொல்லக்
கூடாதோ - அத்தகைய
வார்த்தையை சொல்லி
விட்டீர்கள் ; - உங்களைக்
கொல்லாமல் விட மாட்டேன்;”

“என்று சொல்லிக் கொண்டே
அர்ஜுனன் கோபத்துடன்
தன்னுடைய வாளை
உருவினான் - தர்மரை
நோக்கி சென்றான் ;
தர்மருடைய தலையை
வெட்டுவதற்கு
வாளை ஓங்கினான் ;
இந்தக் காட்சியைக் கண்ட
கிருஷ்ணன் ஓடிச் சென்று
அர்ஜுனனைத் தடுத்தார் ; “

கிருஷ்ணன் :
“அர்ஜுனா! எத்தகைய
பாவத்தை செய்யத் துணிந்தாய் ; 
எத்தகைய விபரீதமான
செயலைச் செய்ய
துணிந்தாய் ; - என்பதை
யோசித்துப் பார்த்தாயா?”

“தர்மத்தின் காவலனாகவும் ;
தந்தைக்கு நிகராகவும் ;
இருக்கும் உன்னுடைய
அண்ணனைக் கொல்வதற்கு
எப்படி துணிந்தாய்
உன்னுடைய வீரத்தை
இழிவு படுத்தியால்
இத்தகைய செயலை
செய்யத் துணிந்தாயா ?”

“நில் அர்ஜுனா நில் “

அர்ஜுனன் :
“என்னை தடுக்காதே
கிருஷ்ணா - என்னுடைய
வில்லை யார் இகழ்ந்தாலும்
அவரைக் கொல்வதாகச்
சபதம் செய்துள்ளேன் ;
என்னுடைய அண்ணன்
என்னுடைய வில்லை
இகழ்ந்தார் - நான்
என்னுடைய அண்ணன்
மேல் அதிக அளவு
மதிப்பும் மரியாதையும்
வைத்துள்ளேன் ;
என்னுடைய அண்ணனை
நான் தெய்வமாக
மதிக்கிறேன் - உயிரினும்
மேலாக அவரைப்
போற்றுகின்றேன் ;
இதயத்தில் வைத்து
பூஜிக்கிறேன் - ஆனால்
அவர் என்னுடைய
வில்லினை இகழ்ந்துள்ளார் ;
அண்ணன் என்பதற்காக
என்னுடைய சபதத்தை
விட முடியாது ;
என்னுடைய அண்ணன்
என்ற காரணத்திற்காக
அவரை நான் கொல்லவில்லை
என்றால் நான் சத்தியத்தை
தவறியவன் ஆவேன் ;
சத்தியம் தவறியதால்
உண்டாகக்கூடிய
பாவத்திற்கு உள்ளாவேன் ;
இதனால் நான்
நரகத்தை அடைவேன் ;
இப்போது நான் என்ன
செய்வது சொல் பரந்தாமா“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 27-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment