December 31, 2023

ஜபம்-பதிவு-944 மரணமற்ற அஸ்வத்தாமன்-76 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-944

மரணமற்ற அஸ்வத்தாமன்-76

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : நான் பாண்டவர்களுடன் சேரக்கூடாது என்று சொன்னால் சேராமல் விட்டு விடுவாயா?

(அல்லது)

கௌரவர்களுடன் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்து நில் என்று சொன்னால் சேர்ந்து தான் நிற்கப் போகிறாயா?

கௌரவர்கள் உன் சொந்தம் கிடையாது.

ஆனால், குந்தி உன் சொந்த அத்தை, பாண்டவர்கள் உன் சொந்த அத்தையின் மகன்கள் அதனால் நீங்கள் அவர்கள் பக்கம் தான் நிற்பாய்.

இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.

எதிர்காலத்தில் இது தான் நடக்கப் போகிறது, அதை இந்த உலகமும் பார்க்கத் தான் போகிறது.

கிருஷ்ணர் : நீ பாண்டவர்களுடன் நிற்க மாட்டாயா?

அஸ்வத்தாமன் : துரியோதனன் என் நண்பன். நான் அவன் பக்கம் தான் நிற்பேன்.

கிருஷ்ணர் : நீ மட்டும் உன் நண்பன் பக்கம் நிற்கலாம். நான் என் சொந்தத்தின் பக்கம் நிற்கக் கூடாதா?

 

அஸ்வத்தாமன் : துரியோதன்ன் என்னுடைய நண்பன். நான் நண்பன் பக்கம் நிற்கிறேன் என்று இந்த உலகத்திற்கே தெரியும்.

 

ஆனால், நீ சொந்தத்தின் பக்கம் நிற்கிறேன்.

சொந்தங்களுக்காக நிற்கிறேன்,

குந்தி அத்தைக்காக குந்தியுடன் நிற்கிறேன்,

குந்தியின் மகன்களான பாண்டவர்களுக்காக பாண்டவர்களுடன் நிற்கிறேன்

என்று சொல்லி விட்டு நிற்கமாட்டாய் அல்லவா?

 

நான் என் சொந்த அத்தைக்காக அவர்களுடன் நிற்கிறேன்,

என்னுடைய சொந்த மைத்துனர்களுக்காக நிற்கிறேன்,

என்று சொல்லி விட்டு நிற்பாயா?

 

உன்னால் முடியாது.

 

நீ தர்மத்தின் பக்கம் நிற்கிறேன் என்று சொல்லி விட்டுத் தான் நிற்பாய்.

 

உன் சூழ்ச்சியை இந்த உலகம் புரிந்து கொள்ளாது. புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாது.

 

கிருஷ்ணர் : சகுனியை விடவா நான் சூழ்ச்சி செய்கிறேன்.

 

அஸ்வத்தாமன் : சகுனி சூழ்ச்சி செய்யவில்லை.

 

கிருஷ்ணர் : வேறு என்ன செய்கிறார்?

 

அஸ்வத்தாமன் :  ராஜ தந்திரம்.

 

கிருஷ்ணர் : சூழ்ச்சிக்கு மறுபெயர் தான் ராஜதந்திரமா?

அஸ்வத்தாமன் : இல்லை.

சகுனியும் ராஜதந்திர செயல்களைத் தான் செய்கிறார். நீயும் ராஜதந்திர செயல்களைத் தான் செய்கிறாய்.

ஆனால், நீ கடவுள் என்ற நிலையில் வைத்து போற்றப்படுகிறவன். அதனால், நீ செய்யும் சூழ்ச்சிகளை கடவுள் செயல் என்கிறார்கள்.

சகுனி மனிதன் என்பதால், சகுனி செய்வது சூழ்ச்சி என்கிறார்கள்.

செய்யும் செயல் ஒன்று தான், செய்பவர்கள் வேறுபடுகிறார்கள்.

பார்ப்பவர்கள் பார்வை வேறுபடுகிறது, அதனால் வார்த்தைகள் மாறுபடுகிறது.

பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர், இவர்களுடன் நீயும் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்தும், கௌரவர்கள் இன்னும் அழியாமல் இருக்கிறார்கள் என்றால், சகுனி என்பவர் கௌரவர்கள் பக்கம் இருக்கின்ற காரணத்தினால் தான்.

சகுனி மட்டும் இல்லை என்றால் நீங்கள் அனைவரும் சேர்ந்து எப்போதோ கௌரவர்களை அழித்து இருப்பீர்கள்.

நாட்டை எப்போதோ பாண்டவர்களிடம் கொடுத்து இருப்பீர்கள்.

சகுனி இருக்கின்ற காரணத்தினால் தான் உங்கள் அனைவராலும் கௌரவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சகுனி உங்கள் எண்ணத்திற்குத் தடையாக இருக்கின்ற காரணத்தினால் தான்,

பாண்டவர்களுக்கு அரியணையைத் தருவதற்கு சகுனி தடையாக இருக்கிறார் என்ற காரணத்தினால் தான்,

நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தும் சகுனியை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கோபத்தினால் தான்,

உங்கள் அனைவரையும் சகுனி என்ற ஒற்றை மனிதர் தன்னந்தனியாக சமாளிக்கிறார் என்ற காரணத்தினால் தான்,

அவர் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியினால் தான்,

அவர் மேல் உள்ள கோபத்தினால் தான்,

அவர் மேல் உள்ள வெறுப்பினால் தான்,

அவர் மேல் உள்ள பொறாமையினால் தான்,

சகுனியை கெட்டவன் என்கிறீர்கள்

சூழ்ச்சிகாரன் என்கிறீர்கள்.

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment