December 31, 2023

ஜபம்-பதிவு-946 மரணமற்ற அஸ்வத்தாமன்-78 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-946

மரணமற்ற அஸ்வத்தாமன்-78

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

 

கிருஷ்ணர் : நான் சண்டையிடா விட்டால்

 

அஸ்வத்தாமன் : சண்டையிடா விட்டால் உனக்கு எதற்கு சுதர்சன சக்கரம் எனக்கு தந்து விடு

கிருஷ்ணர் : நான் சண்டையிட்டால் என்னை வீழ்த்த சுதர்சன சக்கரம் வேண்டும் அதைக் கொடு என்கிறாய்,

நான் சண்டையிடாமல் இருந்து விட்டால் என்ன செய்வாய் என்று கேட்டால், நீ தான் சண்டையிடப்  போவதில்லையே எதற்கு உனக்கு சுதர்சன சக்கரம் என்னிடம் கொடுத்து விடு என்கிறாய்

நான் சண்டையிட்டாலும், சண்டையிடாவிட்டாலும் சுதர்சன சக்கரம் வேண்டும் என்கிறாய், உன்னிடம் தந்துவிடச் சொல்கிறாய்.

நீ பேசுவது விசித்திரமாக இருக்கிறது.

சுதர்சன சக்கரத்தை வைத்து நீ என்ன தான் செய்யப் போகிறாய். என்ன காரணத்திற்காகக் கேட்கிறாய்.

அஸ்வத்தாமன் :துரியோதனன் வெற்றி பெற வேண்டும் என்னுடைய நண்பன் வெற்றி பெற வேண்டும்

என்னுடைய நண்பனுக்கு கிடைக்க வேண்டிய நாடு கிடைக்க வேண்டும்,

அவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும்,

அவனுக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்க வேண்டும்,

அதை பெற்றுத் தர வேண்டும் என்ற காரணத்தினால் தான்

 

நான் மரணமற்றவன் இல்லை என்றால்,

என்னுடைய உயிரை துரியோதனனுக்காகக் கொடுத்து விடுவேன்.

 

கிருஷ்ணர் : அஸ்வத்தாமா துரியோதனனின் மேல் நீ வைத்திருக்கும்

நட்டைக் கண்டு நான் வியந்து போகிறேன்.எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதிர்ச்சியில் இருக்கிறேன்.

ஆனால் இந்த உலகம் உண்மையான நட்புக்கு துரியோதனனையும். கர்ணணையும் அல்லவா சொல்கிறது

அஸ்வத்தாமன் : உண்மை தன்னை அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.

உண்மை எப்போதும் தன்னை அனைவருக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்காது. உண்மை தன்னை யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிப்படுத்தும்.

உண்மையை யார் உணர்ந்து கொள்கிறார்களோ அவரால் மட்டுமே உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். உண்மை உணர்ந்தவர்களே அதை உணர்ந்து கொள்வர்.

உண்மைக்கு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் உண்மையை சாதாரண மக்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தங்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ, தங்களுக்கு எது பலனைத் கொடுக்கிறதோ, தங்களுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறதோ அது உண்மை இல்லாமல் இருந்தாலும், பொய்யாகவே இருந்தாலும், அது தான்  மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், காலம் காலமாக அது தான் உண்மை போல் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும், உண்மையை மறைத்து விட்டு பொய்யை மக்கள் மத்தியில் உலாவ விடுகின்றனர். பொய்யும் உண்மை என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு சமுதாயத்தில் உலா வருகிறது.

மக்களும் உண்மை எது? பொய் எது? என்று உணராமல், உண்மைக்கும் பொய்யுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல், பொய்யை உண்மை என்று நம்பிக் கொண்டு அதன் பின்னால் செல்கின்றனர். காலம் காலமாக அதை நம்புகின்றனர். சிந்திக்காமல் இருக்கின்றனர்.

மக்களை குறை சொல்லி பயன் இல்லை. பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்கள் மக்களை சிந்திக்க விடாமல் வைத்து விடுகின்றனர். தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத் தான் மக்களும் நினைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கேற்ற செயல்களைச் செய்கின்றனர்.

அதனால் பொய் தான் இந்த உலகத்தில் அதிக அளவில் உலாவிக் கொண்டு இருக்கிறது.

உலகம் எப்படி வேண்டுமானாலும், இருந்து விட்டுப் போகட்டும். நான் சரியாக இருக்கிறேன். என் நண்பனுக்காக இருக்கிறேன். என் நண்பனுக்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் நண்பனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். என் உடல், உயிர் அனைத்தும் என் நண்பன் துரியோதனனுக்காகத் தான்.

என் நண்பனுக்காக நான் எதையும் செய்வேன். அதற்குத் தடையாக அந்த ஆண்டவனே வந்தாலும் அவனையும் எதிர்ப்பேன்.

இப்போது நீ என் நண்பன் துரியோதனனுக்கு எதிரியாக இருக்கிறாய், எதிர்காலத்திலும் நீ துரியோதனனுக்கு எதிரியாகத் தான் இருப்பாய்.

உன்னை எதிர்க்க எனக்கு சுதர்சன சக்கரம் தேவைப்படுகிறது. அதனால் தான் நான் சுதர்சன சக்கரத்தைக் கேட்கிறேன்.

கிருஷ்ணர் : என்னை துரியோதனனுக்கு எதிரி என்று சொல்லி விட்டாய். எதிர்காலத்திலும் நான் துரியோதனனுக்கு எதிரியாகத் தான் இருப்பேன் என்று சொல்லி விட்டாய்.

என்னை துரியோதனனுக்கு எதிரி என்று சொல்லி விட்டு

துரியோதனனுக்கு எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும் என்னிடமே

என்னை எதிர்ப்பதற்கு எனக்கு சொந்தமான சுதர்சன சக்கரத்தைக் கேட்கிறாய்.

நீ கேட்பது சரியானது தானா?

யோசித்துப் பார்த்துத் தான் கேட்கிறாயா?

நீ செய்வது சரியானது தானா?

 

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

 

 

No comments:

Post a Comment