February 05, 2020

பரம்பொருள்-பதிவு-125


           பரம்பொருள்-பதிவு-125

(கிருஷ்ணன் உலூபியை
சந்திக்கச் செல்கிறார்.
கிருஷ்ணனைக் கண்ட
உலூபி கிருஷ்ணனின்
கால்களில் விழுகிறாள்)

உலூபி :
"என்னை ஆசிர்வதியுங்கள்
அண்ணா ! "

கிருஷ்ணன் :
"அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய புகழும்
இந்த உலகத்தில்
இருக்கும் ;
நீடுழி வாழ்க !
என் அன்புத் தங்கை
உலூபி ! "

(கிருஷ்ணன் உலூபியை
ஆசிர்வதிக்கிறார்)

"எழுந்திரு உலூபி "

(உலூபி எழுந்திருக்கிறாள்)

உலூபி :
"நீங்கள் வாழ்த்தியதின்
அர்த்தம் எனக்குப்
புரியவில்லை அண்ணா ! "

கிருஷ்ணன் :
“அரவானுக்குக்
கிடைக்கக்கூடிய புகழ்
இந்த உலகம் என்று
வரை இருக்குமோ
அன்று வரை இருக்கும் ;
அதைப்போல ,
அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரை
உன்னுடைய
புகழும் இருக்கும் ;”

உலூபி :
“இந்த உலகம்
இருக்கும் வரை
அரவானின் புகழ் இருக்க
வேண்டுமென்றால்  
யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலை
அல்லவா அரவான்
செய்ய வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“ஆமாம் “

“யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலைத்
தான் அரவான்
செய்யப் போகிறான் “

“அதனால் தான் நானே
அரவானைப் பார்த்து
விட்டு வந்தேன் “

உலூபி :
“அரவானைப் பார்த்தீர்களா ?”

கிருஷ்ணன்  :
“அரவானை மட்டுமல்ல
அர்ஜுனனையும்
பார்த்து விட்டுத்
தான் வந்திருக்கிறேன் “

உலூபி :
“அனைவரும் நலமாக
இருக்கிறார்களா அண்ணா !”

கிருஷ்ணன் :
“அனைவரும் நலம் “

உலூபி :
“தாங்கள் என்னைக்
காண வந்ததின்
காரணத்தை நான் தெரிந்து
கொள்ளலாமா அண்ணா ! “

கிருஷ்ணன் :
“நான் ஏற்கனவே எடுத்த
முடிவு ஒன்றிற்கு ஒப்புதல்
பெறுவதற்காக உன்னைக்
காண வந்தேன் “

உலூபி :
“அண்ணா நீங்கள்
எந்த முடிவு எடுத்தாலும்
அந்த முடிவு சரியான
முடிவாகத் தானே இருக்கும் “

“உங்கள் முடிவு
எப்போதும் தவறான
முடிவாக இருந்ததில்லையே !”

“நீங்கள் எப்போதும்
தவறான முடிவை
எடுத்ததே இல்லையே “

“உங்கள் முடிவை தவறு
என்று சொல்வதற்கு
தகுதி படைத்தவர்கள்
இந்த உலகத்தில்
யார் இருக்கிறார்கள் “

“நீங்கள் எடுத்த முடிவிற்கு
ஒப்புதல் அளிக்கும்
அளவிற்கு நான்
ஒன்றும் பெரிய ஆள்
இல்லையே அண்ணா ! “

கிருஷ்ணன் :
“முடிவு என்னுடையது
என்றாலும் அதை
ஏற்றுக் கொண்டு
ஒப்புதல் அளித்தது
உன் மகன் அரவான் “

“உன்னுடைய ஒப்புதலும்
தேவைப்படுகிறது என்ற
காரணத்தினால் தான்
உன்னுடைய ஒப்புதலைப்
பெறுவதற்காக
உன்னைக் காண வந்தேன் “

உலூபி :
“என்ன ?
என் மகனா ?
என் மகன் அரவானா ? “

“ஒப்புதல் அளித்தானா ?”

“உங்களுடைய முடிவுக்கு
ஒப்புதல் அளித்தானா ?”

“எந்த முடிவுக்கு
ஒப்புதல் அளித்தான் “

“எந்த முடிவைச் சொல்லி
அரவானிடம் ஒப்புதல்
பெற்றீர்கள்“

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 05-02-2020
//////////////////////////////////////////

February 04, 2020

பரம்பொருள்-பதிவு-124


           பரம்பொருள்-பதிவு-124

கிருஷ்ணன்  :
"உன்னுடைய
ஒப்புதலை மட்டுமே
வைத்துக் கொண்டு
களப்பலி கொடுக்க
முடியாது என்பதையும் ;
அனைவருடைய
ஒப்புதலையும்
பெற்று தான்
களப்பலி கொடுக்க
வேண்டும் என்பதையும் ;
இப்போது நீ தெளிவாக
புரிந்து கொண்டிருப்பாய் "

அரவான் :
"நன்றாகப் புரிகிறது ;
ஆனால் நீங்கள் செய்யும்
செயல் தான் எனக்குப்
புரியவில்லை “

கிருஷ்ணன்  :
“எதைச் சொல்கிறாய்
அரவான்…………………………? ”

அரவான் :
“நான் பாண்டவர்களுக்காக
களப்பலியானால் - நீங்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் பெறலாம் ;"
ஆனால் ,
வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் தானே
நான் பாண்டவர்களுக்காக
களப்பலி ஆக முடியும் ?"

"அப்படி இருக்கும் போது
அனைவரிடமும் ஒப்புதல்
பெற வேண்டியது
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்கள் தானே…………….?
அவரே யாரிடமும் சென்று
ஒப்புதல் பெறாத போது
நீங்கள் மட்டும் ஏன்
அனைவரின்
ஒப்புதலையும் பெற
வேண்டும் என்று
இப்போதே முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள் "

கிருஷ்ணன் :
"துரியோதனனுக்கு
களப்பலி
கொடுப்பதற்கென்று
உள்ள விதிமுறைகள்
பற்றி தெரியுமா அல்லது
தெரியாதா என்பது
பற்றி எல்லாம்
எனக்குத் தெரியாது
ஆனால்,
களப்பலி
கொடுப்பதற்கென்று
உள்ள விதிமுறைகள்
பற்றி எனக்குத் தெரியும்
என்ற காரணத்தினால் தான்
நான் அனைவரிடமும்
இப்போதே சென்று
ஒப்புதல் வாங்கி
வைத்துக் கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக - நீ
களப்பலியாகும் போது
அந்த சமயத்தில் சென்று
நான் அனைவரிடமும்
ஒப்புதல் பெற
முடியாது அல்லவா ?
அதனால் தான் - நான்
இப்போதே அனைவரிடமும்
சென்று ஒப்புதல் வாங்கி
வைத்துக் கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன்"

அரவான்  :
"பரந்தாமா நீங்கள்
எதைப் பற்றி
சிந்திக்கிறீர்கள் ?
எதைப் பற்றி
பேசுகிறீர்கள் ?
எதை செயல்படுத்தப்
போகிறீர்கள் ? - என்பது
புரியாத புதிராகவே
இருக்கிறது "

"புரிந்து கொள்ள
முயற்சி செய்கிறேன்
என்னால் புரிந்து
கொள்ளவே முடியவில்லை "

"வருங்காலத்தில் என்ன
நடக்கும் என்பதை
என்னால் கணிக்கவே
முடியவில்லை "

கிருஷ்ணன் :
"அரவான் வருங்காலத்தில்
என்ன நடக்கும் என்பதை
கணிக்க முயற்சி செய்தால்
நிகழ்காலத்தை
இழந்து விடுவாய் "

"நிகழ்காலத்தில் நிம்மதி
இழக்காமல் இருக்க
வேண்டுமானால்
வருங்காலத்தைப் பற்றி  
யோசிக்காதே ! ""

"எது எப்போது
எப்படி நடக்க வேண்டுமோ ?
அது அப்போது
அப்படி நடக்கும்
என்பதை மட்டும்
நினைவில் கொள் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
உன்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்காக
உன்னுடைய
தாய் தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களுடைய
ஒப்புதலை பெறுவதற்காக
அவர்களை
சந்திக்கச் செல்கிறேன்

அரவான் :
"முதலில் யாரை
சந்திக்கப் போகிறீர்கள் "

கிருஷ்ணன் :
"வேறு யார் உன்
தாய் உலூபியே தான் ! "

"அனைவருடைய
ஒப்புதலையும் பெற்ற
பிறகு மீண்டும் வந்து
உன்னை நான் சந்திக்கிறேன்
அப்படி சந்திக்கும் போது
நீ ஏதேனும் என்னிடம்
கேட்க விரும்பினால்
அதை கேட்கலாம் "

"இப்போது நான்
உன்னிடமிருந்து
விடை பெறுகிறேன் ! "

"வருகிறேன்
அரவான் வருகிறேன் "

(கிருஷ்ணன்
அரவானிடம் இருந்து
விடை பெற்றுச்
சென்றார் )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 04-02-2020
//////////////////////////////////////////


February 03, 2020

பரம்பொருள்-பதிவு-123


                 பரம்பொருள்-பதிவு-123

கிருஷ்ணன் :
"உன்னுடைய ஒப்புதலை
மட்டும் வைத்துக் கொண்டு
உன்னை களப்பலி
கொடுப்பதற்கு
களப்பலியை என்ன
சாதாரணமான விஷயம்
என்று நினைத்து
விட்டாயா அரவான்?"

"களப்பலி எவ்வளவு
உயர்ந்த விஷயம் என்பது
உனக்குத் தெரியுமா ?"

"எப்படி வேண்டுமானாலும்
பலி கொடுக்கலாம்
என்பதற்கு இது ஒன்றும்
சாதாரணமான
பலி அல்ல களப்பலி "

"களப்பலி என்றால்
என்ன என்பதையும் ;
அதனுடைய முழு
விவரங்கள் எவைகள்
என்பதையும் ;
அறிந்தவர்கள் யாருமே
களப்பலியை சாதாரணமான
விஷயமாக எடுத்துக்
கொள்ள மாட்டார்கள் ;
அவர்களுக்கு மட்டுமே
களப்பலி எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது
என்பது தெரியும் "

“போரில் வெற்றி
பெற வேண்டும் என்பதற்காக
போர் தொடங்குவதற்கு
முன் செய்யப்படும்
சடங்கிற்குப் பெயர்
தான் களப்பலி “

"போரில் வெற்றி பெறவே
முடியாது என்ற நிலையில்
இருப்பவர்களும் - போர்
தொடங்குவதற்கு முன்னர்
களப்பலி கொடுத்தால்
வெற்றி பெற முடியும்
என்ற சிறப்பைக் கொண்டது
தான் களப்பலி “

“களப்பலி கொடுப்பதற்கு
என்றே சில விதிமுறைகள்
இருக்கிறது - அந்த
விதிமுறைகளைப்
பின்பற்றித்  தான் களப்பலி
கொடுக்க வேண்டும் - அந்த
விதிமுறைகளைப்
பின்பற்றாமல் களப்பலி
கொடுக்கவும் கூடாது ;
களப்பலி கொடுத்தாலும்
எந்தவிதமான
பயனும் கிடைக்காது ; “

“யாராலும் மதிப்பிட
முடியாத இத்தகைய
மதிப்பு வாய்ந்த
களப்பலியைப் பற்றி - நீ
அறிந்து இருந்தாலும்
நான் சொல்லப்போகும்
சில விஷயங்களையும்
மனதில் நிறுத்திப்
பார்த்தாயானால்
களப்பலி எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது
என்பது உனக்குத் தெரியும் “

“கேள் அரவான் கேள் “

“களப்பலி என்றால்
என்ன என்று - நான்
சொல்லப் போவதை
நன்றாகக் கேள் “

“களப்பலியுடன் நீ
சம்பந்தப்பட்டவன் என்பதால்
களப்பலி என்றால்
என்ன என்பதை
நான் உனக்கு விளக்கி
சொல்கிறேன் கேள் “

“போரில் வெற்றி பெற
வேண்டும் என்பதற்காக
போருக்கு முன்னால்
களப்பலி கொடுப்பதற்கு
உரிய நாளை சோதிடத்தை
சரியான முறையில்
கணிப்பவர் மூலம்
தேர்ந்தெடுக்க வேண்டும் “

“களப்பலியாகக் கூடிய நபர்
எத்தகைய தன்மைகளைப்
பெற்று இருக்க வேண்டும்
என்பதை முதலில்
தெரிந்து கொள்ள வேண்டும்.”

“களப்பலியாகப் போகிறவர்  
எத்தகைய தன்மைகளைப்
பெற்று இருக்க வேண்டும்
என்பது ஏற்கனவே
உனக்குத் தெரியும் ;
இருந்தாலும் நான்
சொல்கிறேன் கேள்.
32 லட்சணங்கள்
கொண்டவராகவும் ;
எதிர் ரோமம்
படைத்தவராகவும் ;
இருப்பவரைத் தான்
களப்பலியாகக் கொடுப்பதற்குத்
தேர்ந்தெடுக்க வேண்டும் ;”

“தேர்ந்தெடுக்கப் பட்ட
களப்பலியாகப்
போகிறவரின் ஒப்புதலைப்
பெற வேண்டும் ;
களப்பலியாகப் போகிறவரின்
ஒப்புதலைப் பெற்றால்
மட்டும் போதாது ;
களப்பலியாகப் போகிறவரின்
தாய், தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்கள் ஆகியோரின்
அனுமதியையும்
பெற்ற பின்பு தான்
களப்பலியாகப் போகிறவரை
களப்பலியாகக் கொடுக்கலாம்
என்ற முடிவை
எடுக்க வேண்டும் ”

“களப்பலி கொடுக்கக்
கூடிய நாளன்று
களப்பலியாகப் போகிறவரின்
தாய், தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களில்
யாரேனும் ஒருவர்
களப்பலியாகப் போகிறவரின்
தலையை வெட்டி
அந்த தலையை காளி
தேவிக்கு படைக்க வேண்டும்”

“தாய் , தந்தை மற்றும்
இரத்த சம்பந்தம்
உடையவர்களில் யாரும்
களப்பலியாகப் போகிறவரின்
தலையை வெட்ட
முன்வரவில்லை என்றால்
களப்பலியாகப் போகிறவரே
தன் தலையை தானே
வெட்டி காளி தேவிக்கு
படைக்க வேண்டும் “

“இவைகள் அனைத்தையும்
முறைப்படி செய்தால்
காளிதேவி நேரில் தோன்றி
போரில் வெற்றி பெறுவதற்கான
வரத்தை அளிப்பாள்”

இது தான் களப்பலி”

“இப்போது புரிகிறதா
அரவான் - நான் ஏன்
அனைவரிடமும் ஒப்புதல்
பெற வேண்டும் - என்று
கூறினேன் என்று “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 03-02-2020
//////////////////////////////////////////

February 02, 2020

பரம்பொருள்-பதிவு-122


                 பரம்பொருள்-பதிவு-122

அரவான்  :
"யோசித்தால் நல்ல
முடிவை
எடுக்கலாம் அல்லவா?"

கிருஷ்ணன் :
"யோசித்தால் நம்மால்
முடிவைத் தான்
எடுக்க முடியும் "

"அது நல்ல முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை நம்மால்
எப்படி தீர்மானம்
செய்ய முடியும் "

"ஒருவருக்கு நல்ல
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு - கெட்ட
முடிவாகத் தெரியும் "

"ஒருவருக்கு கெட்ட
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு - நல்ல
முடிவாகத் தெரியும் "

"யோசித்து
முடிவு எடுக்கும்
உரிமை மட்டுமே
நம்மிடம் இருக்கிறது
அது நல்ல முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை தீர்மானிக்கும்
உரிமை நம்மிடம்
இல்லை - அது
இந்த சமுதாயத்திற்கு
மட்டுமே இருக்கிறது "

அரவான்  :
"அப்படி என்றால்
யோசிக்க வேண்டாம்
என்கிறீர்களா ?"

கிருஷ்ணன்  :
"துரியோதனனுக்காக
களப்பலி ஆகாதே ;;
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு
என்று நான்
கேட்டிருந்தால்
நீ யோசித்திருக்கலாம் "

"நான் அவ்வாறு
கேட்கவேயில்லையே "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா
என்று தானே கேட்டேன் "

"நான் கேட்டதில்
ஏதேனும் தவறு
இருக்கிறதா யோசிக்க
வேண்டும் என்கிறாய் "

அரவான்  :
"பரந்தாமா !
நீங்கள் கேட்டதில்
எந்தவிதமான
தவறும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை "

"நீங்கள் சொல்வது
அனைத்தும்
சரியானதாகவே
எனக்குப் படுகிறது "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் - நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாவதன்
மூலம் நான் பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களுக்கு செய்து
கொடுத்த வாக்கை
மீறியவன் ஆக மாட்டேன் "

"வாக்குத் தவறியவன்
ஆக மாட்டேன் "

"நான் சம்மதிக்கிறேன் "

"நான் களப்பலியாவதற்கு
சம்மதிக்கிறேன் "

"வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக் கேட்டு
வந்தால் அவருக்காக
களப்பலியாகிறேன்  ;
பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
சம்மதிக்கிறேன் ;"

கிருஷ்ணன்  :
"அரவான் ! - நீ
களப்பலியாக
சம்மதித்ததை
ஏற்றுக் கொள்கிறேன் ;
ஆனால்,
உன்னுடைய சம்மதத்தை
மட்டுமே வைத்துக்
கொண்டு உன்னை நான்
களப்பலி கொடுப்பதற்கான
முடிவை எடுக்க முடியாது "

"உன்னுடைய தாய்
தந்தை மற்றும் உன்னுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
அனுமதி பெற்ற
பிறகே வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
உன்னை களப்பலி
கொடுப்பதற்கான
முடிவை எடுப்பேன் "

"அவர்களுடைய சம்மதம்
பெறாமல் உன்னை
நான் களப்பலி
கொடுக்க மாட்டேன் "

அரவான் :
"ஏன் அனைவரிடமும்
ஒப்புதல் பெற வேண்டும் ;
என்னுடைய அனுமதி
மட்டும் இருந்தால்
போதாதா………………………………..? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 02-02-2020
//////////////////////////////////////////