May 27, 2020

அறிய வேண்டியவை-பதிவு-6


              ஜபம்-பதிவு-498
        (அறிய வேண்டியவை-6)

“உலகமே இரண்டாகப்
பிரிந்து நடைபெற்ற
குருஷேத்திரப் போரில்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே கடுமையான
போர் நடைபெற்றுக்
கொண்டிருந்தது ;
பிணமலைகள்
குவிந்து கொண்டிருந்தன ;
இரத்த ஆறு ஓடிக்
கொண்டிருந்தது ; “

“கர்ணனை எதிர்த்து போர்
புரிந்தால் ஏற்பட்ட காயம்
தர்மரின் உடல் முழுவதும்
நிரம்பி இருந்தது ;
காயத்தால் ஏற்பட்ட வலி
உடலை வாட்டியது ;
வேதனை மனதை வாட்டியது ;
இதனால் தர்மர் பாசறை
சென்று படுத்து விட்டார் “

“விவரங்களைக் கேள்விபட்ட
அர்ஜுனன் கிருஷ்ணனை
அழைத்துக் கொண்டு
தன்னுடைய அண்ணனான
தர்மரைக் காண
பாசறை சென்றான்”

“கர்ணனுடைய ஆயுதங்களால்
தாக்கப்பட்டு வேதனையால்
அவதிப்பட்டுக் கொண்டிருந்த
தர்மர் கிருஷ்ணனையும்
அர்ஜுனனையும் கண்டார்”

தர்மர் :
“அர்ஜுனா! கர்ணனைக்
கொன்று விட்டாயா ?
கர்ணன் அவனுடைய
ஆயுதங்களால் என்னைத்
தாக்கி என்னை துன்புறச்
செய்து விட்டான் ;
வலியால் என்னை
வேதனைப்படச்
செய்து விட்டான் ;
மிகுந்த வலியால்
துன்புற்றுக் கொண்டு
இருக்கிறேன் ;

நீ அவனைக்
கொன்று விட்டாயா ?
கர்ணன் இறந்து விட்டானா ?
கர்ணன் இறந்து விட்டான்
என்ற செய்தியை என்னிடம்
சொல்ல வந்தாயா ? “

“உன்னுடைய வீரமே வீரம்
உன்னை வெல்வதற்கு
இந்த உலகத்தில்
யாருமே இல்லை “

அர்ஜுனன் :
“கர்ணனை நான் இன்னும்
கொல்லவில்லை - கர்ணன்
இன்னும் இறக்கவில்லை ;
தாங்கள் காயம்
பட்டிருப்பதாகக் கேள்வி
பட்டேன் - அதனால்
பாசறையில் வந்து
தங்களை காண்பதற்காக
ஓடோடி வந்தேன் “

தர்மர் :
“அர்ஜுனா! கர்ணனை
போர்க்களத்தில் சந்திக்காமல்
பாசறையில் என்னை
ஏன் சந்திக்க வந்தாய் ?
நான் உயிரோடு
இருக்கிறேனா அல்லது
இறந்து விட்டேனா என்பதைப்
பார்ப்பதற்காக வந்தாயா ?
கர்ணனின் வீரத்தைப்
பார்த்து பயந்து ஓடி
வந்து விட்டாயா ?
பகைவன் உன்னை விட
வீரம் நிறைந்தவனாக
இருக்கிறான் என்பதைக்
கண்டு போர் செய்ய
முடியாமல் பயந்து 
ஓடி வந்து விட்டாயா? “

“கர்ணனை நானே என்
கையால் கொல்வேன்
என்று சொல்லிக்
கொண்டு திரிந்தாயே !
வீரத்தை வாளால் காட்டாமல்
வாயால் காட்டினாயா ?
உனக்கு காண்டீபம் எதற்கு ?
காண்டீபத்தைக் கையில்
வைத்துக் கொண்டு போர்
புரியாத உனக்கு
காண்டீபம் எதற்கு?”

அர்ஜுனன் :
“என்ன வார்த்தை சொல்லி
விட்டீர்கள் - எத்தகைய
வார்த்தையை சொல்லக்
கூடாதோ - அத்தகைய
வார்த்தையை சொல்லி
விட்டீர்கள் ; - உங்களைக்
கொல்லாமல் விட மாட்டேன்;”

“என்று சொல்லிக் கொண்டே
அர்ஜுனன் கோபத்துடன்
தன்னுடைய வாளை
உருவினான் - தர்மரை
நோக்கி சென்றான் ;
தர்மருடைய தலையை
வெட்டுவதற்கு
வாளை ஓங்கினான் ;
இந்தக் காட்சியைக் கண்ட
கிருஷ்ணன் ஓடிச் சென்று
அர்ஜுனனைத் தடுத்தார் ; “

கிருஷ்ணன் :
“அர்ஜுனா! எத்தகைய
பாவத்தை செய்யத் துணிந்தாய் ; 
எத்தகைய விபரீதமான
செயலைச் செய்ய
துணிந்தாய் ; - என்பதை
யோசித்துப் பார்த்தாயா?”

“தர்மத்தின் காவலனாகவும் ;
தந்தைக்கு நிகராகவும் ;
இருக்கும் உன்னுடைய
அண்ணனைக் கொல்வதற்கு
எப்படி துணிந்தாய்
உன்னுடைய வீரத்தை
இழிவு படுத்தியால்
இத்தகைய செயலை
செய்யத் துணிந்தாயா ?”

“நில் அர்ஜுனா நில் “

அர்ஜுனன் :
“என்னை தடுக்காதே
கிருஷ்ணா - என்னுடைய
வில்லை யார் இகழ்ந்தாலும்
அவரைக் கொல்வதாகச்
சபதம் செய்துள்ளேன் ;
என்னுடைய அண்ணன்
என்னுடைய வில்லை
இகழ்ந்தார் - நான்
என்னுடைய அண்ணன்
மேல் அதிக அளவு
மதிப்பும் மரியாதையும்
வைத்துள்ளேன் ;
என்னுடைய அண்ணனை
நான் தெய்வமாக
மதிக்கிறேன் - உயிரினும்
மேலாக அவரைப்
போற்றுகின்றேன் ;
இதயத்தில் வைத்து
பூஜிக்கிறேன் - ஆனால்
அவர் என்னுடைய
வில்லினை இகழ்ந்துள்ளார் ;
அண்ணன் என்பதற்காக
என்னுடைய சபதத்தை
விட முடியாது ;
என்னுடைய அண்ணன்
என்ற காரணத்திற்காக
அவரை நான் கொல்லவில்லை
என்றால் நான் சத்தியத்தை
தவறியவன் ஆவேன் ;
சத்தியம் தவறியதால்
உண்டாகக்கூடிய
பாவத்திற்கு உள்ளாவேன் ;
இதனால் நான்
நரகத்தை அடைவேன் ;
இப்போது நான் என்ன
செய்வது சொல் பரந்தாமா“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 27-05-2020
//////////////////////////////////////////

May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-5


             ஜபம்-பதிவு-497
        (அறிய வேண்டியவை-5)

குந்தி :
“நாங்கள் செய்ததில்
எந்த செயலை
தவறான செயல்
என்கிறாய்”

கிருஷ்ணன் :
“நீங்கள் அனைவரும்
செய்த செயல்
தவறான செயல்”

“பிஷையில் கிடைத்தது
பொருளாக இருந்தால்
மட்டுமே அதை
பிஷை என்று
சொல்ல வேண்டும்;
உயிருள்ள
திரௌபதியை
பிஷை என்று
சொன்னது
பாண்டவர்களாகிய
நீங்கள் அனைவரும்
செய்த தவறு “

“ஒரு தாயானவள்
தன்னுடைய
பிள்ளைகளுக்கு
அழியாத அன்பை
மட்டுமே
சமமாக பிரித்துக்
கொடுக்க முடியும்;
அழியக்கூடிய
எந்த ஒன்றையும்
சமமாக பிரித்துக்
கொடுக்க முடியாது ;
ஒருவருடைய
கர்ம வினைப்
பயனால் தான்
ஒருவருக்கு
என்ன கிடைக்க
வேண்டுமோ ?
அது அவருக்கு
கிடைக்கும் ;
என்பதை உணர்ந்து
இருக்க வேண்டும்
பெற்ற பிள்ளைகள்
வாழ்வில் அடையும்
உயர்வும் தாழ்வும்
அவரவர் செய்த
கர்ம வினைப்பயனால்
தான் என்பதை
பெற்ற தாயான
அத்தை நீங்கள்
தெரிந்து வைத்து
இருக்க வேண்டும்”

“ஆனால் இத்தகைய
விஷயங்கள் எதையும்
நீங்கள் தெரிந்து
வைத்துக் கொள்ளாமல்
ஐவரும் சமமாக
பிரித்துக்
கொள்ளுங்கள் என்று
சொன்னது அத்தை
உங்களுடைய தவறு”

“கடவுளிடம்
என்ன வரத்தைக்
கேட்க வேண்டும் ;
எப்படி
கேட்க வேண்டும்
என்று தெரியாமல்
தவறாகக் கேட்டது
திரௌபதியின் தவறு“

“ஆக நீங்கள்
அனைவரும்
உங்களுடைய
நிலையை மறந்து
எத்தகைய தவறான
செயலைச்
செய்யக் கூடாதோ
அந்த செயலைச்
செய்துவிட்டீர்கள் “

“எந்த ஒரு
செயலைச் செய்தாலும்
அதற்கு விளைவு
என்ற ஒன்று
உண்டு - அந்த
விளைவிலிருந்து யாரும்
தப்பிக்க முடியாது “
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்”

“இனி ஏற்படப் போகும்
விளைவுகளை நீங்கள்
அனைவரும்
ஏற்றுக் கொள்ளத்
தயாராக இருங்கள் “

குந்தி :
ஏற்படப் போகும்
விளைவுகளை தடுத்து
நிறுத்த முடியாதா
நீ தடுத்து நிறுத்த
மாட்டாயா கிருஷ்ணா

கிருஷ்ணன் :
“கடவுளே என்றாலும்
மனிதனுக்கு
ஏற்படக்கூடிய
விளைவை தடுத்து
நிறுத்தக் கூடாது
தடுத்து நிறுத்தவும்
முடியாது - ஆனால்
விளைவின் தாக்கத்தை
குறைக்க முடியும் “

குந்தி :
“கிருஷ்ணா ! நீ
எங்களுடன் இருந்தாலே
விளைவானது எங்களை
தாக்காதே கிருஷ்ணா “

கிருஷ்ணன் :
“இப்போது தான்
உண்மை என்றால் என்ன
என்று உணர்ந்து
இருக்கிறீர்கள் அத்தை “

(என்று சொல்லி விட்டு
கிருஷ்ணன் அங்கிருந்து
சென்று விடுகிறார்)

“இந்தக் கதையில்
உள்ள அறிய
வேண்டிய
உண்மைகளை
அறிந்து கொண்டாலே
அறிய வேண்டியவை
எவை என்பதை
உணர்ந்து
கொள்ள முடியும் “

“இந்த பிரபஞ்சத்தில்
அறிய வேண்டியவைகள்
கணக்கிலடங்காத
எண்ணிக்கையில்
இருக்கிறது - அறிய
வேண்டியவைகளை
அறிந்து கொள்ள
வேண்டாமா ?
அறிய வேண்டியவை
எவை என்று
பார்ப்போமா ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-4


              ஜபம்-பதிவு-496
          (அறிய வேண்டியவை-4)

மேலும் சிவபெருமான்
“நீ கேட்ட குணங்கள்
அனைத்தையும் ஒருங்கே
கொண்ட மனிதன்
இந்த உலகத்தில்
கிடைப்பது என்பது
இயலாத காரியம்
எனவே இந்த
உலக நடைமுறைக்கு
சாத்தியமற்றவைகளைக்
கேட்காமல் இந்த
உலக நடைமுறைக்கு
சாத்தியமான
வரங்களைக்
கேட்பாயாக “ என்றார்

அதற்கு திரௌபதி
“எத்தகைய விளைவுகள்
வந்தாலும் அதை நான்
பார்த்துக் கொள்கிறேன்
எனக்கு வரங்களை
அருளுங்கள்” என்றாள்

“சிவபெருமானும்
வரத்தை
அளித்து விட்டார்
திரௌபதியும்
அந்த வரத்தை
சென்ற ஜென்மத்தில்
பெற்று விட்டாள் “

“சென்ற ஜென்மத்தில்
திரௌபதி
கேட்ட வரங்கள்
இந்த ஜென்மத்தில்
இயக்கத்திற்கு
வந்து விட்டது  ;
அதாவது
நடைமுறைக்கு
வந்து விட்டது ;”

“சென்ற ஜென்மத்தில்
தொட்டு விட்டு
விட்டு விட்டு வந்தது
இப்போது திரௌபதியை
தொற்றிக் கொண்டது “

“இப்போது
இந்த உலகத்திலேயே
சிறந்த தர்மவானாக
இருப்பது – தர்மர்
சிவன் அருளிய
முதல் வரம்”

“இப்போது
இந்த உலகத்தில்
யாராலும்
வெல்ல முடியாத
ஆஞ்சநேயரைப் போன்று
சிறந்த பலசாலியாக
இருப்பது – பீமன்
சிவன் அருளிய
இரண்டாவது வரம் “

“இப்போது
இந்த உலகத்தில்
யாராலும்
வீழ்த்த முடியாத
பரசுராமனைப்
போன்ற சிறந்த
வில் வித்தை வீரனாக
இருப்பது – அர்ஜுனன்
சிவன் அருளிய
மூன்றாவது வரம் “

“இப்போது
இந்த உலகமே
நின்று மயங்கி
வேடிக்கை பார்க்கும்
அளவுக்கு அழகு
நிறைந்தவராய்
இருப்பது – நகுலன்
சிவன் அருளிய
நான்காவது வரம் “

“இப்போது
இந்த உலகத்தில்
பொறுமைக்கு ஒரு
எடுத்துக் காட்டாய்
வாழ்ந்து கொண்டு
இருப்பது – சகாதேவன்
சிவன் அருளிய
ஐந்தாவது வரம் “

“இப்போது சொல்லுங்கள்
திரௌபதி
சிவபெருமானிடம்
சென்ற ஜென்மத்தில்
கேட்ட வரங்களின்படி
இப்போது இந்த
உலகத்தில்
ஐவரும் இருக்கிறார்கள் ;
இப்போது
இந்த உலகத்தில்
பாண்டவர்களாக
இருக்கும் ஐவரையும்
திரௌபதி திருமணம்
செய்யலாமா
வேண்டாமா என்பதை
அத்தை நீங்களும்
திரௌபதி
பாண்டவர்கள்
ஆகிய அனைவரும்
தான் முடிவு
செய்ய வேண்டும் “

குந்தி :
“முடிவு எடுக்கும்
பொறுப்பை ஏன்
எங்களிடமே ஒப்படைத்து
விட்டாய் கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“மனிதன் எந்த
ஒரு செயலைச்
செய்யும் போதும்
ஒன்றுக்கு பலமுறை
யோசித்து தான்
செய்ய வேண்டும் ;
அவ்வாறு செயலைச்
செய்யும் போது
தான் செய்யும் செயல்
நல்ல செயலா
அல்லது
தவறான செயலா
என்பதை யோசித்துப்
பார்த்துத் தான்
செய்ய  வேண்டும் ;
யோசித்த பிறகே
எந்த ஒரு செயலையும்
செய்ய வேண்டும்  ; “

“ஏனென்றால்
எந்த ஒரு செயலுக்கும்
விளைவு உண்டு ;
ஒரு செயலைச்
செய்து விட்டு
செய்த செயலுக்குரிய
விளைவிலிருந்து
யாரும் தப்ப
முடியாது என்பதை
உணர்ந்து செயலைச்
செய்ய வேண்டும் ;”

“ஆனால், நீங்கள்
அனைவரும்
செயலைச்
செய்வதற்கு முன்னர்
யோசிக்கவே இல்லை ;
செய்யும் எந்த
ஒரு செயலுக்கும்
விளைவு உண்டு
என்பதையும் ;
செயலைச்
செய்து விட்டு
விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதையும் l
யோசிக்காமல்
தவறான செயலைச்
செய்து இருக்கிறீர்கள் “

“செய்யக் கூடாத
தவறுகள்
அனைத்தையும்
செய்து விட்டு
முடிவுகளை மட்டும்
நான் எப்படி
எடுக்க முடியும் ;
முடிவை நீங்கள்
அனைவரும் தான்
எடுக்க வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////