May 03, 2020

பரம்பொருள்-பதிவு-227


              ஜபம்-பதிவு-475
             (பரம்பொருள்-227)

“ஞானம் சமாதி
என்ற வரிசையில்
மோட்சம் என்ற
நிலையை அடைவதற்கு
மனிதன் மூன்று
விஷயங்களை அறிந்து
வைத்திருக்க வேண்டும் “

“கடவுள்
நம்முடைய உடலில்
எந்த இடத்தில்
இருக்கிறான்
என்பதையும் ;
அந்த கடவுளை
அடையக் கூடிய
வழி எது
என்பதையும் ;
அந்த கடவுளை
அடைவதற்கு
பயன்படுத்தக்
கூடியது எது
என்பதையும் ;
அறிந்து கொள்ளும்
போது மனிதன்
ஞானம்
பெற்றவனாகிறான் ; “

“இந்த மூன்று
விஷயத்தையும்
பயன்படுத்தி
கடவுளுடன்
தேவைப்படும் சமயத்தில்
இணைந்து விட்டு
திரும்பி வரும் போது
சமாதி நிலை
அடைந்தவனாகிறான்  

“இந்த மூன்று
விஷயத்தையும்
பயன்படுத்தி
கடவுளுடன் இணைந்து
கடவுளாகவே
மாறி விடும் போது 
முக்தி என்ற
மோட்சத்தை
அடைந்தவனாகிறான் “

( என்று சொல்லிக்
கொண்டே கிருஷ்ணன்
மஹாவிஷ்ணுவாக
மாறி தன்னுடைய
விஸ்வரூப தரிசனத்தை
அரவானுக்குக் காட்டினார் )

அரவான் என்னைப் பார் !
நன்றாக என்னைப் பார் !

இந்த பிரபஞ்சமே
நானாக இருப்பதைப் பார்!
நானே இந்த பிரபஞ்சமாக
இருப்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்துப்
பொருட்களிலும்
உயிர்களிலும்
நானே இருப்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்துப்
பொருட்களும்
உயிர்களும் என்னுள்ளே
இருப்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
தோன்றும் அனைத்தும்
என்னுள்ளே தோன்றி
என்னுள்ளே
முடிவதைப் பார் !

இந்த பிரபஞ்சம்
முழுவதையும்
எனக்குள் அடக்கி வைத்து
படைத்தல் காத்தல்
அழித்தல் என்ற
முத்தொழில்களோடு
மறைத்தல் அருளல்
என்ற இரண்டையும்
சேர்த்து மொத்தம்
ஐந்து தொழில்களை
செய்து கொண்டு
இந்த பிரபஞ்சத்தையே
இயக்கிக் கொண்டு
வழி நடத்திக்
கொண்டிருப்பது
நான் தான்
என்பதைப் பார் !

நான் ஆதியும்
அந்தமும் இல்லாதவன் ;
ஆரம்பமும் முடிவும்
இல்லாதவன் ;
பிறப்பும் இறப்பும்
இல்லாதவன் ;
என்பதைப் பார் !

நான் என்றும்
இருப்பவன் !
எனக்கு அழிவென்பதே
கிடையாது
என்பதைப் பார் !

நான் இல்லையென்றால்
இந்த உலகம் இல்லை
ஆனால் இந்த உலகம்
இல்லையென்றாலும்
நான் உண்டு
என்பதைப் பார் !

மனிதனுடைய
பிறப்புக்கும்
இறப்புக்கும்
நானே காரணம்
என்பதைப் பார் !

மனிதனுடைய
செயலுக்கும்
விளைவுக்கும்
நானே காரணம்
என்பதைப் பார் !

மனிதனுடைய
வாழ்வில் விளையும்
இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்
நானே காரணம்
என்பதைப் பார் !

இந்த பிரபஞ்சத்தில்
நிகழ்ந்தவை
நிகழ்ந்து
கொண்டிருப்பவை
நிகழப்போகிறவை
அனைத்திற்கும்
காரணமாக இருப்பது
நான் தான்
என்பதைப் பார் !

நன்றாகப் பார் !
அரவான்
நன்றாக
என்னைப் பார்  !

(என்று சொல்லிய
கிருஷ்ணனை
அரவான் பார்த்தான் )


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment