June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-18


             ஜபம்-பதிவு-510
        (அறிய வேண்டியவை-18)

(அபிமன்யு
அபிமன்யுவின்
மனைவி உத்தரை
ஆகியோர்
அறையில் தனித்து
இருக்கின்றனர்)

அபிமன்யு :
“இந்த உலகத்தில்
உள்ள ஒவ்வொருவரும்
வியூகம் வகுத்துத்தான்
செயல்களைச்
செய்து வருகின்றனர்”

“ஒவ்வொருவருடைய
தன்மைகளுக்கு ஏற்றபடி
வியூகம் வகுக்கும்
முறை வேறுபடுகிறது.”

உத்தரை :
“வியூகத்தைப் பற்றி
தற்போது பேசுவதற்கான
அவசியம் என்ன?”

அபிமன்யு :
“இதுவரை உலகமே
கண்டிராத மாபெரும்
குருஷேத்திரப் போர்
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது
அல்லவா
அதனால் தான்”

உத்தரை :
“வியூகம் என்பது
போரில் மட்டும் தானே
பயன்படுத்தப்படுகிறது”

அபிமன்யு :
“அப்படித்தான்
பெரும்பலானவர்கள்
நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் “

“ஆனால் உண்மை
அதுவல்ல”

“வியூகம் என்பது
போரில் மட்டுமல்ல
ஒவ்வொருவருடைய
வாழ்க்கையிலும்
பயன்படுத்தப்படுகிறது “

“ஒவ்வொருவரும்
தாங்கள் சில
செயல்களைச்
செய்யும் போது
போடுகின்ற
திட்டங்கள்
அனைத்தும்
வியூகம் என்று
தெரியாமலேயே
வியூகத்தை வகுத்துக்
கொண்டு அதை
செயல்படுத்திக்
கொண்டிருக்கின்றனர்.”

உத்தரை :
“அப்படி என்றால்
வியூகம் இந்த
உலகத்தில் பல்வேறு
நிலைகளில் இருக்கிறதா?”

அபிமன்யு :
“இல்லை வியூகம்
இந்த உலகத்தில்
இரண்டே இரண்டு
நிலைகளுக்குள் தான்
இருக்கிறது”

“இந்த உலகத்தில்
உள்ள அனைவராலும்
வகுக்கப்படும்
வியூகங்களை எல்லாம்
இரண்டு நிலைகளுக்குள்
அடக்கி விடலாம்”

உத்தரை :
“அப்படியா ?”

அபிமன்யு :
“ஆமாம்!”

“நல்லவர்கள் நல்ல
செயல்களைச்
செய்வதற்காக
வகுக்கும் வியூகம்
நல்ல வியூகம்
எனவும் ;

கெட்டவர்கள் கெட்ட
செயல்களைச்
செய்வதற்காக
வகுக்கும் வியூகம்
கெட்ட வியூகம்
எனவும்
அழைக்கப்படுகிறது “

“ஒருவர் ஒரு
நல்ல செயலைச்
செய்யும்போது
அந்த நல்ல செயலை
எந்த காலத்தில்
எந்த நேரத்தில்
எந்த சூழ்நிலையில்
எப்படி பயன்படுத்த
வேண்டும்
என்பதையும் ;

“அந்த நல்ல
செயலுக்கு
உதவியாக
யார் இருப்பார்கள்
என்பதையும் ;
அந்த நல்ல
செயலைச்
செய்வதற்கு
உதவியாக
யாரை வைத்துக்
கொள்ள வேண்டும்
என்பதையும் ;
உணர்ந்து - அந்த
நல்ல செயலைச்
செய்வதற்கு
துணையாக
அவர்களை சேர்த்துக்
கொண்டு - அந்த
நல்ல செயலைச்
செய்யும் போது
எதிரியாக யார்
யாரெல்லாம்
இருப்பார்கள் ;
எதிரிகள் யார்
யாரெல்லாம்
உருவாகுவார்கள் ;
என்பதையும் அறிந்து
எதிரிகளை விலக்கி
வைப்பதற்காகவும் ;
எதிரிகள் எதிர்த்தால்
அவர்களை
எப்படி வீழ்த்துவது
என்பதையும் ;
எதிரிகளிடம் இருந்து
எப்படி தப்பிப்பது
என்பதையும் ;
எதிரிகளை எப்படி
நம்முடைய வலையில்
சிக்க வைப்பது
என்பதையும் ;
யோசித்து
திட்டமிட்டு
நல்ல செயலை
செய்வதற்கு
நல்லவர்களால்
வகுக்கப்படும்
வியூகம்
நல்ல வியூகம்
எனப்படும். “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////




No comments:

Post a Comment