August 18, 2024

ஜபம்-பதிவு-1019 மரணமற்ற அஸ்வத்தாமன்-151 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1019

மரணமற்ற அஸ்வத்தாமன்-151

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

கிருஷ்ணன் : அஸ்வத்தாமா!

ஸ்யமந்தகமணி இருந்த வரை தான் உன்னால் சந்தோஷமாக இருக்க முடிந்தது. நோயற்று வாழ முடிந்தது. நோய் உன்னை அண்ட முடியாமல் இருக்க முடிந்தது.

உன் நெற்றியிலிருந்து ஸ்யமந்தகமணி எடுக்கப்பட்ட பிறகு இனி உன்னால் சந்தோஷமாகவே இருக்க முடியாது. சந்தோஷம் உன்னை விட்டு விலகி சென்று விடும்.

 

அது எடுக்கப்பட்ட நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்தபடி தான் இருக்கும். வழிந்து கொண்டே தான் இருக்கும்.

 

அதை உன்னால் நிறுத்தவே முடியாது. நீ கஷ்டத்தில் துன்புறுவாய். வேதனை உன்னை வாட்டும். நோயால் அவதிப்படுவாய். அதை தீர்க்க முடியாமல் கஷ்டப்படுவாய்.

 

இது தான் என்னுடைய சாபம்.

(கடவுள் அஸ்வத்தாமனுக்கு சாபம் இட்டார்.)

 

அஸ்வத்தாமன் : உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தைக்காக மட்டும் கவலைப்படுகிறாயே இந்தப் போரில் எத்தனைப் பேர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாயா? இல்லையே?

கணவனை இழந்து எத்தனை பெண்கள் விதவை ஆகி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாயா? இல்லையே?

தந்தையை இழந்து எத்தனை குழந்தைகள் தவித்து இருப்பார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாயா? இல்லையே?

மற்றவர்களைப் பற்றி உனக்குக் கவலையில்லை. உனக்கு கவலை எல்லாம் உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீது தான்.

உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையை இறக்காமல் காப்பாற்றுவேன் என்கிறாயே

அந்தக் குழந்தையை இறப்பிலிருந்து காப்பாற்றுவேன் என்கிறாயே

அந்தக் குழந்தை இறந்துவிட்டால் அந்த குழந்தைக்கு உயிர் கொடுப்பேன் என்கிறாயே

பாண்டவர்களின் சந்ததியை அழிக்காமல் காப்பாற்றுவேன் என்கிறாயே

ஏன் உத்தரையின் வயிற்றில் வளரும் குழுந்தை தான் பாண்டவர்களின் வாரிசா.

பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகள் இறந்தார்களே. ஏன் அவர்களுக்கு உயிர் கொடுக்கவில்லை. ஏன் அவர்கள் ஐவரும் பாண்டவர்களின் வாரிசுகள் இல்லையா?

பீமனின் மகன் கடோத்கஜன். கடோத்கஜனை சக்தி ஆயுதத்தால் கொல்லச் செய்தாயே ஏன் அவன் பாண்டவர்களின் வாரிசு இல்லையா?

பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன், கடோத்கஜனுக்கும், அகிலாவதிக்கும் பிறந்தவன் பார்பாரிகன். அந்த பார்பாரிகனைக் கொன்றாயே ஏன் அவன் பாண்டவர்களின் வாரிசு இல்லையா?

இவர்கள் அனைவரையும் நீ பாண்டவர்களின் வாரிசாகக் கருதவில்லை. உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையை மட்டும் தான் நீ பாண்டவர்களின் வாரிசாகக் கருதுகிறாய்.

அதனால் தான் அந்தக் குழந்தையை காப்பாற்றத் துடிக்கிறாய். அந்தக் குழந்தை இறந்தாலும் அதற்கு உயிர் கொடுக்கத் துடிக்கிறாய்.

ஏனென்றால் உன்னுடைய தங்கை சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தவன் அபிமன்யு. அந்த அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் பிறக்கப்போகும் குழந்தை உன்னுடைய தங்கையின் வாரிசு,

அதனால் தான் உன் தங்கையின் வாரிசைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாய்.

அதனால் தான் உன்னுடைய தங்கை உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாண்டவர்களின் வாரிசு என்கிறாய்.

இதனால் தான் உனக்கு உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தை மட்டுமே பாண்டவர்களின் வாரிசாகத் தெரிகிறது. வேறு யாரும் பாண்டவர்களின் வாரிசாக உனக்குத் தெரியவில்லை,

இந்த விஷயம் தெரியாமல் இந்த உலகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பாண்டவர்களும் உன்னை நல்லவன் என்று சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கிறார்கள்

இத்தகைய காரணத்தினால் தான் நீ பாஞ்சாலிக்குப் பிறந்தவர்களைக் காப்பாற்றவில்லை. கடோத்கஜனைக் காப்பாற்றவில்லை. கடோத்கஜனின் மகனைக் காப்பாற்றவில்லை.

உன் இரத்தத்தை மட்டும் காப்பாற்ற வருகிறாய். அந்தக் குழந்தையைத் தான் பாண்டவர்களின் வாரிசு என்கிறாய் உனக்கு என்ன ஒரு சுயநலம்

இது தெரியாமல் உன்னை அனைவரும் போற்றுகின்றனர் வணங்கின்றனர்

சூழ்ச்சியின் வடிவமாக இருப்பவன் நீ!

தர்மரை விட்டு பீஷ்மரை எப்படி கொல்வது என்று கேட்டு வரச் சொன்னாய் பெண் எதிரே வந்தாலோ, ஆணிலிருந்து பெண்ணாக மாறியர் வந்தாலோ அல்லது பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர் வந்தாலோ, யார் வந்தாலும் நான் போரிட மாட்டேன் என்று சொன்னதைக் கேட்டு சிகண்டியை வைத்து பீஷ்மரை வீழ்த்தி அவரை இயங்க விடாமல் செய்தாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

தர்மரை வைத்து அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்று பொய் சொல்ல வைத்து திருஷ்டத்யும்னனை வைத்து என் தந்தையாகிய துரோணரைக்  கொன்றாய் அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

தர்மரை வைத்து சல்லியனை பின்னால் இருந்து கொல்ல வைத்தாய் அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

குந்தி தேவியை கர்ணனிடம் அனுப்பி பாண்டவர்கள் ஐவரில் அர்ஜுனனை மட்டும் கொல்ல வேண்டும் மற்றவரை கொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்க வைத்தாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் ஒரு முறைக்கு மேல் விடக்கூடாது என்று குந்திதேவியை கர்ணனிடம் சத்தியம் வாங்கச் சொன்னாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

கர்ணன் ஆயுதம் இல்லாமல் இருந்த போது அர்ஜுனனை விட்டு கர்ணைனைக் கொல்லச் சொன்னாறே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

No comments:

Post a Comment